இயேசுவின் மகிழ்ச்சியில் மட்டுமின்றி, துன்பங்களிலும் பங்கேற்றவர் அன்னை மரியா. இறையாட்சியை மண்ணில் செயல்படுத்தும் இயேசுவின் லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்த மரியா, சிலுவை வரையிலும் அவரை பின்தொடர்ந்தார். இந்த பிரமாணிக்கத்துக்கு பரிசாகவே, தமது சீடர்கள் அனைவருக்கும் மரியாவைத் தாயாக வழங்கினார் இறைமகன் இயேசு.
சிலுவை அடியில்
இறுதி பாஸ்கா விழாவுக்காக இயேசு எருசலேம் சென்றபோது, மரியாவும் உடன் சென்றிருந்தார். இயேசு நற்கருணையை ஏற்படுத்தியபோது, ஒரு பெண் சீடராக பணிவிடை புரிய மரியாவும் உடனிருந்தார். பிறகு கெத்சமனி தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்டதை, திருத்தூதர் யோவான் மூலம் அன்னை மரியா அறிந்து கொண்டார். தாய்க்குரிய அன்போடும், பதற்றத்தோடும் தம் மகனைக் காண சென்ற மரியா, இயேசு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு மரியா வேதனையுற்றார்.
பிலாத்துவின் முன்னிலையில் இயேசு விசாரணைக்கைதியாய் நின்றதையும், அவர் சாட்டையால் நொறுக்கப்பட்டு முள்முடி சூட்டப்பட்டதையும் கண்டு மரியா வேதனையால் துடித்தார். பாதகரின் கையில் சிக்கித் துன்புற்ற தம் மகனை காப்பாற்ற முடியாத இயலாமையை நினைத்து அவர் மனம் வருந்தினார். இயேசு மரணத்துக்கு தீர்ப்பிடப்பட்டு சிலுவையை சுமந்துகொண்டு கல்வாரி நோக்கிச் சென்றபோது, மரியாவும் அந்த துயரப்பாதையில் வழிநடந்தார். அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு குற்றவாளியாக, இரத்தக் காயங்களுடன் சிலுவை சுமந்துசென்ற இயேசுவைக் கண்டபோது, மரியாவை மாபெரும் துயர் ஆட்கொண்டது.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில், மரியாவும் அங்கு இருந்தார். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் மரியாவைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். (யோவான் 19:26-27) “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி உயிர்துறந்த இயேசுவின் விலாவில் படைவீரர் ஈட்டியால் குத்தியபோது, சிமியோன் முன்னறிவித்தது போன்றே மரியாவின் உள்ளத்தில் ஒரு வாள் ஊடுருவிப் பாய்ந்தது. இயேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட வேளையில், இந்த உலகமே இருளில் மூழ்கியது போன்று மரியா கலங்கித் தவித்தார்.
சீடர்களோடு மரியா
அன்னை மரியாவின் துன்பம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு, முதலில் தம் தாய்க்கு தோன்றி அவரது துயரத்தை நீக்கினார். கடவுளின் மாட்சி இயேசுவில் ஒளிவீசியதைக் கண்டு அன்னை மரியா பேரானந்தம் அடைந்தார். அவரது மனக்காயங்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் மறைந்துபோயின. தம் மகனை மீண்டும் உயிரோடு காணச்செய்த தந்தையாம் கடவுளைப் போற்றினார். இயேசு தம் தாய் மரியாவிடம், சீடர்கள் அனைவரையும் விசுவாசத்தில் வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். தம்மைப் பின்பற்றும் அனைவருக்கும் தாயாக செயல்பட மரியாவைப் பணித்தார்.
இயேசு விண்ணகத்திற்கு சென்ற வேளையில், அன்னை மரியாவும் சீடர்களோடு இருந்தார். அவரது விண்ணேற்றத்துக்குப் பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். (திருத்தூதர் பணிகள் 1:14) சீடர்கள் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவரோடு ஒன்றித்து வாழ அன்னை மரியா அவர்களுக்கு வழிகாட்டினார். இறைவேண்டலில் நிலைத்திருந்து, கடவுளைப் புகழ அவரே சீடர்களுக்கு கற்பித்தார். பெந்தக்கோஸ்து நாளில் அன்னை மரியா மீதும் சீடர்கள் மீதும் தூய ஆவியார் நெருப்பு நாவு வடிவில் இறங்கி வந்தார்.
பேதுரு தலைமையில் நற்செய்தி அறிவித்த திருத்தூதர்கள், அன்றே மூவாயிரம் பேரை மனந்திருப்பினர். இயேசுவை மீட்பராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மரியா அன்னையாகத் திகழ்ந்தார். பலரும் அவரை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றுச்சென்றனர். சீடர்கள் பலர் இயேசுவின் வாழ்வில் நடந்தவற்றை அன்னையின் வாய்மொழியாக கேட்டு மகிழ்ந்தனர். அன்னை மரியா, இயேசுவின் அருஞ்செயல்களையும் கடவுளின் மீட்புத் திட்டத்தையும் மக்களுக்கு எடுத்துக்கூறி நற்செய்தியின் தூதுவராக விளங்கினார்.
No comments:
Post a Comment