இறையன்னை மரியா, கன்னியாக இருந்தபோதே தாய்மைப்பேறு அடைந்ததாக நற்செய்திகள் குறிப்பிடுகின்றன. தூய ஆவியாரின் வல்லமை நிழலிட்டதால், கன்னி மரியா இறைமகனை கருவில் தாங்கினார். மனிதராய் தோன்றிய மகனாகிய கடவுள் அற்புதமான விதத்தில் தம் அன்னை மரியாவிடம் கருவாகிப் பிறந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
நாசரேத்தில் மரியா
யூத வழக்கப்படி, மண ஒப்பந்தமே இல்லற வாழ்வில் இணைவதற்கு போதுமானது என்றாலும், மண ஒப்பந்தம் செய்த ஓராண்டிற்கு பிறகே திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆகவே மரியாவை நாசரேத்து அழைத்துச் சென்ற யோசேப்பு, அங்கு வாழ்ந்த செக்கரியாவின் உறவினர் வீட்டில் மரியாவை ஒப்படைத்தார். பின்னர் நாசரேத்தில் தங்கி தச்சுத் தொழில் செய்து வந்த அவர், அவ்வப்போது மரியாவை சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.
இந்நிலையில், எருசலேம் கோவிலுக்கான மதிப்புமிகு துணிகளைப் புதிதாக நெய்யும் பணியை ஒரு கன்னியிடம் ஒப்படைக்க குருக்கள் முடிவு செய்தனர். அவர்கள் திருவுளச்சீட்டு போட்டபோது மரியாவின் பெயர் வரவே, அவரை எருசலேம் கோவிலுக்கு வரவழைத்து அந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர். கடவுளுக்காக அப்பணியை நிறைவேற்ற மரியாவும் முழுமனதோடு ஒப்புக்கொண்டார். கடவுளைத் துதித்துக் கொண்டே, திருத்தூயகத் திரைச்சீலைகள் உட்பட கோவிலில் பயன்படுத்தும் புனித துணிகள் அனைத்தையும் அவர் நெய்து வந்தார்.
சிறிது காலத்துக்கு பிறகு, குரு செக்கரியா கோவிலுக்குள் தூபம் காட்டிய வேளையில் தோன்றிய ஆண்டவரின் தூதர், அவருக்கு ஒரு மகன் பிறக்கப்போவதாக முன்னறிவித்தார். வானதூதரின் வார்த்தைகளை நம்ப மறுத்ததால், அது நிகழும் வரை செக்கரியா பேச்சற்றவராய் வாழும் நிலை ஏற்பட்டது. செக்கரியா வீடு திரும்பிய பின்பு, அவரது மனைவி எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.
ஆண்டவரின் அடிமை
ஆறாம் மாதத்தில், கட்டட வேலை ஒன்றுக்காக எருசலேம் அருகிலுள்ள ஓர் ஊருக்கு யோசேப்பு சென்றார். அந்நேரத்தில் வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு தோன்றி, “அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
யோசேப்பு ஏற்றல்
இதையடுத்து, எலிசபெத்துக்கு உதவிபுரிய ஆவல் கொண்ட மரியா, கோவில் துணிகளின் இறுதிப் பணிகளை விரைவாக முடித்து தம்முடன் எடுத்துக் கொண்டார். உறவினரின் வீட்டில் இருந்து விடைபெற்றுக் கொண்டு, எருசலேம் கோவிலுக்கு சென்ற மரியா, தாம் நெய்திருந்த துணிகளை குருக்களிடம் ஒப்படைத்தார். பின்னர் யூதேய மலைநாட்டில் இருந்த செக்கரியாவின் வீட்டிற்கு சென்ற மரியா, மூன்று மாதம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் மரியா கருவுற்றிருந்தது யோசேப்புக்கு தெரியவந்தது. அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அப்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” என்றார். யோசேப்பு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்கு பணித்தவாறே மரியாவை ஏற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment