கன்னி மரியாவின் குழந்தைப் பருவம் குறித்த தகவல்களை விவிலியம் நமக்கு வழங்கவில்லை. கி.பி. 150ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’ என்ற திருமுறைப் புறநூலில் இருந்து இதுகுறித்த செய்திகளை அறிந்து கொள்கிறோம். வாய்மொழி மரபுகளின் அடிப்படையில் புனிதர்கள் வழங்கிய போதனைகளும் இறையன்னையின் குழந்தைப் பருவத்தை நாம் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
மரியாவின் பிறப்பு
பாலஸ்தீன் நாட்டின் எருசலேம் நகரில், யோவாக்கிம் என்னும் தாவீது குல செல்வந்தர் ஒருவர் இருந்தார். பெத்சாய்தா குளத்தின் அருகில் அவரது வீடு இருந்தது. அவருக்கு இளம் வயதிலேயே, ஆரோனின் வழிமரபைச் சேர்ந்த அன்னாவுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்கள் வருவாயை ஆண்டவரின் பணிக்கும், ஏழை, எளியவர்களுக்கும் தாராள மனதுடன் செலவழித்து வந்தனர். இவ்வாறு யோவாக்கிமும் அன்னாவும் கடவுளுக்கு உகந்தவர்களாய் திகழ்ந்தாலும், இருபது ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர்.
ஒருமுறை யோவாக்கிம் தமது வழக்கப்படி, எருசலேம் கோவிலுக்கு காணிக்கை செலுத்தச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த ரூபன் என்பவன், “குழந்தைப்பேறு இல்லாத நீ ஆண்டவருக்கு காணிக்கை கொடுக்கத் தகுதியற்றவன்” என்று கிண்டல் செய்தான். இதனால் மனமுடைந்த யோவாக்கிம், அருகில் இருந்த பாலை நிலத்துக்கு சென்று தமக்கு குழந்தை இல்லாததை நினைத்து கடவுளை நோக்கி அழுதார். கணவரின் வேதனையை அறிந்த அன்னாவும், தமது இயலாமையை நினைத்து வருந்தினார். இருவரின் கண்ணீர் நிறைந்த மன்றாட்டுக்கு இரக்கத்துடன் ஆண்டவர் செவிசாய்த்தார்.
அன்னாவிடம் கடவுள் அனுப்பிய தூதர், மரியாவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பை வழங்கினார். இந்த செய்தியை அறிந்த யோவாக்கிம், பாலை நிலத்தில் இருந்து திரும்பி வந்து அன்னாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். அன்னா கருவுற்றதும், பிறக்கும் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பதாக இருவரும் வாக்குறுதி அளித்தனர். தொடக்கப் பாவத்தின் கறைகளில் இருந்து அக்குழந்தையை கடவுள் பாதுகாத்தார். அன்னா குழந்தையைப் பெற்றெடுத்ததும், வானதூதர் அறிவித்தபடியே அதற்கு ‘மரியா’ என்ற பெயரை சூட்டினர்.
கோவிலில் மரியா
கடவுள் அளித்த பரிசான மரியாவின் அழகையும் அறிவையும் கண்டு அவளது பெற்றோர் மெய்சிலிர்த்தனர். யோவாக்கிம் – அன்னா தம்பதியரின் முதிர்ந்த வயதில், அவர்களது மனக்குறையைப் போக்கும் மருந்தாக அவள் திகழ்ந்தாள். மரியாவின் புன்னகையில் அவர்களது கவலைகள் அனைத்தும் மாயமாய் மறைந்தன. அனைத்துக்கும் மேலாக கடவுளை அன்பு செய்யவும், எந்த நேரத்திலும் அவரைத் துதிக்கவும், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவும் அவளுக்கு அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
மரியாவுக்கு மூன்று வயதானதும், அவளை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். மரியாவை எருசலேம் கோவிலுக்கு அழைத்து சென்ற பெற்றோர், அதன் முற்றத்தில் நின்று கொண்டிருந்த தலைமைக் குருவிடம் மரியாவை காணிக்கையாக ஒப்படைத்தனர். சாலமோன் அரசர் காலம் முதலே நடைமுறையில் இருந்த வழக்கப்படி, இந்த பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டியதும் பெற்றோர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவர். தலைமைக் குரு மரியாவைக் கோவிலின் மூன்றாவது படியில் விட்டதும், அவள் தானாகவே மற்றப் படிகளில் ஏறிச் சென்று கடவுளுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள்.
தங்கள் கடமைகளை முடித்ததும் யோவாக்கிமும் அன்னாவும் வீடு திரும்பினர். மரியா பெற்றோரிடம் இருந்து பிரிந்து கோவிலில் வளர்ந்தாலும், எவ்வித வருத்தமும் இன்றி ஆண்டவரில் மகிழ்ந்திருந்தாள். கோவிலின் குருக்கள் அவள் இறை ஞானத்திலும் மறை அறிவிலும் வளர உதவி செய்தனர். இறைவனும் தம் மகனுக்கு ஏற்ற சிறந்த தாயாக மரியாவைத் தயார் செய்தார். மரியா ஆண்டவரைப் பற்றி சிந்திப்பதில், தனது நினைவுகளைத் தூயதாக காத்துக் கொண்டாள். மரியாவின் சொற்களும் செயல்களும் அவளது புனிதத்தைப் பறைசாற்றின. எருசலேம் கோவிலில் வளர்ந்த மற்ற சிறுமிகளும் ஆண்டவரில் மகிழ்ந்திருக்க மரியா தூண்டுதலாகத் திகழ்ந்தாள்.
No comments:
Post a Comment