இரனேயு அல்லது இரனேயுஸ் அல்லது லியோன் நகர புனித இரனேயுசு (/aɪrəˈniːəs/; கிரேக்கம்: Εἰρηναῖος) (2ஆம் நூற்றாண்டு – கி.பி 202), என்பவர் உரோமைப் பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய காவுல் (தற்போது லியோன், பிரான்சு) என்னும் நகரின் ஆயராக இருந்தவர் ஆவார். இவர் துவக்ககால திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும் கிறித்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் துவக்ககால கிறித்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் யோவானின் சீடரான புனித பொலிகார்ப்புவின் சீடராவார்.
தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக ஏற்பாடு (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.
கி.பி. 185ஆம் ஆண்டளவில், இவர் ஞானக் கொள்கை என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி வாலண்டைன் (Valentinus) என்பவரின் படிப்பினையை தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினை சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
மரியாளியலினைப் பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.
"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியா தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." - புனித இரனேயு
கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூன் 28 ஆகும். லூதரனியமும், அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது. மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள் 23 ஆகஸ்ட் ஆகும்.
No comments:
Post a Comment