நாள்: நவம்பர் 21
வகை: நினைவு
பின்னணி
நெடுங்காலமாக மகப்பேறின்றி இருந்த மரியாளின் பெற்றோர், தங்களுக்கு குழந்தை பிறந்தால் அதை கோவிலுக்கு அர்ப்பணிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படியே, தங்களுக்கு பிறந்த மரியாளை மூன்று வயதில் எருசலேம் கோவிலில் அவர்கள் அர்ப்பணித்தனர். தலைமைக் குரு மரியாளைத் தூக்கி கோவிலின் மூன்றாவது படியில் விட்டதும், அவளே மற்றப் படிகளில் தானாக ஏறிச் சென்று கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்தாள். “நான் ஆண்டவரின் அடிமை” (லூக்கா 1:38) என்ற மரியாளின் வார்த்தைகள் இங்கு சரியாக பொருந்துகின்றன. இந்நிகழ்வையே இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.
வரலாறு
கி.பி.543ல் எருசலேம் கோவில் இடிபாடுகளின் அருகே, பைசாந்தியர்கள் மரியன்னைக்கு ஆலயம் கட்டிய வேளையிலேயே இந்த திருநாள் சிறப்பிக்கப்பட்டதாக அறிகிறோம். அதன்பிறகு, 1166ஆம் ஆண்டு ‘விழாக்களின் கையேடு’ என்ற ஆவணத்தில், மரியாளைக் கோவிலில் அர்ப்பணித்த விழா பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா, 1371ல் திருத்தந்தையின் இருப்பிடமாக இருந்த அவிக்னன் நகருக்கு பரவியது. 1472ஆம் ஆண்டு, இந்த விழாவை திருப்பலி நூலில் சேர்த்த திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ், 1476ல் அதற்கான திருப்புகழ்மாலை செபத்தையும் அறிமுகம் செய்தார்.
1568ஆம் ஆண்டு திருத்தந்தை புனித 5ம் பியுஸ், இந்த திருநாளை விழாக்களின் பட்டியலில் இருந்து நீக்கினார். இதனால், திரெந்து பொதுச்சங்கத்தின் பரிந்துரையில் உருவான நாள்காட்டியில் இந்த விழா இடம் பெறவில்லை. 1585ல், கன்னி மரியாளின் அர்ப்பண விழாவை திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் விழாக்களின் நாள்காட்டியில் மீண்டும் இணைத்தார். 1597ஆம் ஆண்டு, திருத்தந்தை 8ம் கிளமென்ட் இந்த விழா கொண்டாட்டத்தை இரட்டை நிலைக்கு உயர்த்தினார். 1969ல் சீரமைக்கப்பட்ட திருச்சபை நாள்காட்டியில், ‘கன்னி மரியாளின் அர்ப்பணம்’ பொது நினைவாக உள்ளது.
No comments:
Post a Comment