இயேசு கிறிஸ்து தம் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை செய்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசுவின் இறைத்தன்மையைப் பறைசாற்றும் அற்புதங்களை, புதுமைகள், அரும் அடையாளங்கள் என்ற சொற்களால் நற்செய்தியாளர்கள் அழைக்கின்றனர். நலமளிக்கும் அற்புதங்கள், வாழ்வளிக்கும் அற்புதங்கள், இறைமாட்சியின் அற்புதங்கள் என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
நலமளித்தவை
இயேசு, பார்வையற்றோருக்கு பார்வை அளித்தார், பேச்சிழந்தோரை பேச வைத்தார், காது கேளாதவரை கேட்க வைத்தார். கூன் முதுகையும், கை சூம்பியவரையும், இரத்தப்போக்கால் வருந்திய பெண்ணையும், முடக்குவாதத்தில் துன்புற்றோரையும், தொழுநோயாளரையும் நலமாக்கினார். இவ்வாறு பலவித உடல் குறைபாடுகளாலும், பிணிகளாலும் துன்புற்ற மக்களுக்கு, இயேசு விடுதலை வழங்கிய செயல்களையே ‘நலமளிக்கும் அற்புதங்கள்’ என்று கூறுகிறோம்.
“ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.”
(மத்தேயு 8:8)
வாழ்வளித்தவை
முற்கால மக்களால் தீய ஆவியின் பாதிப்புகளாக உணரப்பட்ட மனநிலை பாதிப்பு, வலிப்பு நோய், நாட்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து இயேசு புதுவாழ்வு அளித்தார். அது மட்டுமின்றி, யாயிரின் மகள், நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன், பெத்தானியாவைச் சேர்ந்த இலாசர் ஆகிய மூவரும் இறந்த பிறகு, அவர்களை இயேசு உயிர்த்தெழச் செய்தார். இந்த நிகழ்வுகளை, ‘வாழ்வளிக்கும் அற்புதங்கள்’ என்று அழைக்கிறோம்.
மாட்சிக்குரியவை
இயேசு கடல் மீது நடந்தார், புயலை அடக்கினார், தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார், அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். அவற்றிலும் மேலாக, சீடர்கள் முன்பாக உருமாற்றம் அடைந்து இறைமாட்சியை வெளிப்படுத்தினார், இறந்த மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்தார். இவ்வாறு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராக, தமது இறைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இயேசு செய்த செயல்களையே ‘இறைமாட்சியின் அற்புதங்கள்’ என குறிப்பிடுகிறோம்.
No comments:
Post a Comment