கோவிலில் தங்குதல்
பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த யோசேப்பும் மரியாவும், இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது அவரையும் அழைத்துச் சென்றனர். விழா நாள்கள் முடிந்து உறவினர்களுடன் அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு பெற்றோருக்குத் தெரியாமல் எருசலேமிலேயே தங்கிவிட்டார். பயணிகள் கூட்டத்தில் உறவினர்களுடன் இயேசு இருப்பார் என யோசேப்பும் மரியாவும் நினைத்தனர். ஒருநாள் பயணம் முடிந்த பின்பும் அவர் தங்களிடம் வந்து சேராததால், உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே அவர்கள் அவரைத் தேடினர்; எனினும் இயேசுவைக் கண்டுபிடிக்க முடியாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
அங்கே இயேசு போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டும் இருந்தார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும், அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது இயேசுவின் தாய் மரியா அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படி செய்தாய்? உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். இயேசு சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தச்சரின் மகனாக
பின்பு இயேசு தம் பெற்றோரோடு நாசரேத்துக்கு சென்று, அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடர்ந்தது. இயேசு உடல் வலிமையிலும் இறை ஞானத்திலும் வளர யோசேப்பும் மரியாவும் துணை நின்றார்கள். கடவுளின் மீட்புத் திட்டம் இயேசுவில் நிறைவேற அவர்கள் முழுமையாக தங்களைக் கையளித்தார்கள். யோசேப்பும் மரியாவும் செய்த வேலைகளில் உதவி செய்து வந்த இயேசு, எபிரேய மறைநூல் சார்ந்த பாடங்களையும் அவர்களிடம் கற்றுக் கொண்டார். இறைமகன் இயேசுவின் ஞானமுள்ள வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அவர்கள், அவரது விருப்பத்துக்கு முற்றிலும் பணிந்து நடந்தார்கள்.
யூத சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திருக்குடும்பம் வாழ்ந்து வந்தது. கடவுளின் கட்டளைகளை வாழ்வில் செயலாக்குவதில் மரியாவும் யோசேப்பும் இயேசுவுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். யோசேப்பு, மரியாவுடன் இயேசு மேற்கொண்ட பயணங்கள், இயற்கைச் சூழல்கள் மற்றும் பல மக்களின் பழக்க வழக்கங்களையும் பற்றி இயேசு அறிந்துகொள்ள உதவியாக இருந்தன. இயேசு வளரவளர யோசேப்புடன் சேர்ந்து, தாமும் தச்சு வேலை செய்யத் தொடங்கினார். யோசேப்பும் இயேசுவும் மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட வீட்டுக்குப் பயன்படும் பொருட்களையும், உழவர்களுக்குத் தேவையான கலப்பைகளையும், நுகங்களையும் உருவாக்கி கொடுத்தனர். இவ்வாறு, இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
யோசேப்பின் இறப்பு
நாசரேத்தில் வாழ்ந்த ஏழை, எளிய மக்களுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட பொருட்களை இயேசுவும் யோசேப்பும் இருவரும் இலவசமாகவே செய்து கொடுத்தனர். இதனால் திருக்குடும்பத்தின் மீதான மதிப்பு அப்பகுதியில் அதிகரித்தது. யூத சமூகத்தில் நிகழ்ந்த அநீதிகளைக் குறித்து யோசேப்பின் தச்சுக் கூடத்தில் நடைபெற்ற விவாதங்களில், இயேசுவும் ஆர்வமுடன் பங்கேற்றார். அவற்றுக்கான தீர்வுகள் குறித்த மறைநூல் பகுதிகள் குறித்து, வளர்ப்புத்தந்தை யோசேப்பு, தாய் மரியா ஆகியோருடன் அவர் கலந்து பேசினார். கடவுளின் அன்பு மகனான இயேசு, யோசேப்பிடமும் மரியாவிடமும் அதே அன்பை உணர்ந்தார்.
கடவுளின் இரக்கத்தையும் நீதியையும் யோசித்தபடி இயேசுவின் இளமை பொலிவு பெற்றுக் கொண்டிருந்த வேளையில், யோசேப்பு முதுமை அடைந்தார். யோசேப்பின் உள்ளம் ஆர்வத்துடன் இருந்தாலும், அவரது உடலோ அடிக்கடி சோர்ந்து போனது. அவரது பணிகள் அனைத்தையும் இறைமகன் இயேசுவே ஏற்று செய்து வந்தார். இதனால், தச்சரின் மகனாக வாழ்ந்த இயேசுவை ‘தச்சர்’ என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். இறைமகன் இயேசுவுக்காகவும் அவரது தாய்க்காகவும் ஓய்வின்றி உழைத்து வந்த யோசேப்பு, நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் படுக்கைக்கு ஆளானார். அன்னை மரியா அருகிருக்க, இறைமகன் இயேசுவின் மார்பில் தலைசாய்த்து பேறுபெற்ற இறப்பை சந்தித்தார் யோசேப்பு.
No comments:
Post a Comment