நாள்: ஆகஸ்ட் 15
வகை: பெருவிழா
பின்னணி
“ஆண்டவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்” (லூக்கா 1:48-49) என்ற கன்னி மரியாளின் வார்த்தைகள், கடவுளின் அருளால் அவர் பெற்றுள்ள மாட்சியை எடுத்துரைக்கின்றன.
அன்னை மரியாளின் இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்த திருத்தூதர்கள் எருசலேமுக்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றனர். இதையடுத்து, மரணம் அடைந்த அன்னையின் உடலை, திருத்தூதர்கள் யூத முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தனர். தாமதமாக எருசலேம் சென்ற தோமாவுக்காக அன்னையின் கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் அங்கு இல்லை. பின்பு திருத்தூதர் தோமாவுக்கு காட்சி அளித்த அன்னை மரியாள், தாம் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருப்பதை உறுதி செய்தார். இந்நிகழ்வையே இந்த பெருவிழா சுட்டிக் காட்டுகிறது.
வரலாறு
கி.பி.370ஆம் ஆண்டு அந்தியோக்கு நகரில், ‘மரியாளின் நினைவு நாள்’ சிறப்பிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. 400ல் எருசலேமுக்கு பரவிய இந்த விழா, 500ஆம் ஆண்டுக்கு முன்பே பாலஸ்தீன் முழுவதும் ஆகஸ்ட் 15ந்தேதி கொண்டாடப்பட்டது. ‘மரியாள் துயில் கொண்ட’ விழா என்ற பெயரில் 6ஆம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் சிறப்பிக்கப்பட்டது. அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைத் திருச்சபைக்கு பரவிய இந்த திருநாள், ‘விண்ணகப் பிறப்பு’ விழா என்று பெயர் பெற்றது. 580களில் பைசாந்திய பேரரசு முழுவதும், ஆகஸ்ட் 15ந்தேதி மரியாளின் விண்ணகப் பிறப்பு விழாவை கொண்டாட பேரரசர் மவுரிஸ் ஏற்பாடு செய்தார். 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புனித வில்லிபிரார்ட் நாள்காட்டியில், மரியாளின் விண்ணகப் பிறப்பு விழா காணப்படுகிறது.
8ஆம் நூற்றாண்டில் மரியாளின் விண்ணேற்பு விழா என்று பெயர் பெற்ற இந்த திருநாளை, திருத்தந்தை முதலாம் ஆத்ரியன் திருச்சபை முழுவதற்கும் அறிமுகம் செய்தார். 799ல் கூடிய சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதியிலும் இந்த விழா இடம் பிடித்துள்ளது. 847ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 4ம் லியோ, மரியாளின் விண்ணேற்பு விழாவிற்கான எண் கிழமையை திருவழிபாட்டில் இணைத்தார். 1950 நவம்பர் 1ந்தேதி, மரியாளின் விண்ணேற்பை ‘விசுவாசக் கோட்பாடு’ என்று திருத்தந்தை 12ம் பியுஸ் அறிவித்தார். 1969ல் சீரமைக்கப்பட்ட திருச்சபை நாள்காட்டியில், இது பெருவிழாக்களின் வரிசையில் இடம் பிடித்தது.
No comments:
Post a Comment