நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
லூக்கா 18:1-9
அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
“ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய்,
‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்
======
இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும், முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே.
இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத, உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.
இந்த உவமை சொல்லும் பாடங்களில் முக்கியமான சிலற்றைப் பார்ப்போம்.
1. இந்த உவமை, “மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்” எனும் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. மனம் தளராமல் இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகத்தின் அடிப்படை என்பதால் இயேசு அதை மிகத் தெளிவாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார்.
2. எதற்காக இறைவனிடம் வேண்ட வேண்டும் ? எனும் தெளிவு நமக்கு இருக்க வேண்டும். இந்த உவமை ஆன்மீகத் தேவைகளையே பேசுகிறது. “நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியச் செய்கின்ற இறைவன்” நம்முடைய உலகத் தேவைகளை நிறைவேற்றுகிறார். ஆனால் இறைவனுக்கு ஏற்புடையவை எதுவோ அவற்றை நாம் முதலில் தேட வேண்டும். அதுவும் மனம் தளராமல் தேட வேண்டும்.
3. நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் பாவங்கள் தான் நமது காலைச் சுற்றிக் கொள்ளும் நாணல் கொடிகள் போல நம்மை சேற்றுக்குள் இழுக்கின்றன. மீண்டும் மீண்டும் நம்மை தாக்குபவை பாவ சிந்தனைகளே. “இந்த பாவத்திலிருந்து என்னால் விடுபட முடியாது” மனம் தளராமல் இறைவனிடம் மன்றாடவேண்டும். நமது ஆன்மீக வாழ்க்கையை அவர் செழிப்படைய வைப்பார்.
4. நீதியிலிருந்து நம்மை விலகச் செய்பவை முக்கியமாக இரண்டு காரியங்கள். 1. கடவுளுக்கு அஞ்சுவதில்லை. 2. மனித நேயம் கொண்டிருப்பதில்லை. இந்த இரண்டு விஷயங்களும் தான் நம்மை நீதியற்ற செயல்களைச் செய்ய வைக்கின்றன. நமது ஆன்மீக வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நாம் ஆண்டவருக்கு அஞ்ச வேண்டும், மனிதரையும் மதிக்க வேண்டும்.
5. அந்த விதவைப் பெண் யாரிடம் சென்றால் தனக்கு நீதி கிடைக்கும் என்பதை அறிந்து கதவைத் தட்டுகிறாள். இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார். தவறான இடத்தில் தட்டிக் கொண்டிருப்பது தீர்வைத் தராது. குளத்தில் தொலைத்த பொற்காசை, நிலத்தில் தேடி எடுக்க முடியாது. எனவே நமது தேவைகளுக்காக நாம் இறைவனிடம் மட்டுமே செல்ல வேண்டும் எனும் அடிப்படை தெளிவைக் கொண்டிருக்க வேண்டும்.
6. செபம் கவலைகளைத் அழிக்க வேண்டும். கவலை செபங்களை அழிக்கக் கூடாது ! அந்த விதவைப் பெண், தனது சோகத்தை நினைத்து வீட்டிலேயே அமந்து சோகத்தால் அழுது கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தீர்வு கிடைக்காமலேயே போயிருக்கும். ஆனால் அவரோ நடுவரைத் தேடிச் சென்று தனக்கு நீதி வேண்டும் என்கிறார். நாமும் கவலைகளை செபங்களால் வெல்லும் மன உறுதியைப் பெற வேண்டும்.
7. நடுவர் நீதியற்றவர் ஆனாலும் இடைவிடாத வேண்டுதலாம் மனம் மாறி நீதி செய்ய முடிவெடுக்கிறார். அவர் அந்தப் பெண்ணை அழிக்க வேண்டுமென்றோ, விரட்ட வேண்டுமென்றோ நினைக்காமல் நீதியை வழங்க முடிவெடுக்கிறார். தன் மகன் மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கும் தந்தை இல்லை. உலகத்திலுள்ள தந்தையே இப்படி இருந்தால், உலகத்துக்கே தந்தையான நம் ஆண்டவர் இயேசு எப்படி இருப்பார் ? நமது விண்ணப்பங்களை அவர் நிராகரிக்கவே மாட்டார். இந்த எண்ணத்தை மனதில் கொண்டிருப்போம்.
8. விதவைப் பெண் வேண்டும் போது, தனக்கு “என்ன” நீதி வேண்டும் என கேட்கவில்லை. எதிராளியை தண்டித்து தனக்கு நீதி வழங்கச் சொல்கிறார். பிள்ளைகளுக்கு எதை தர வேண்டும், எப்படி தரவேண்டும், எப்போது தர வேண்டும் என்பது இறைவனுக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே “பாவத்திலிருந்து என்னை மீட்டருளும்” எனும் மனமுருகும் பிரார்த்தனை போதுமானது, எப்படி நம்மை அதிலிருந்து விடுவிப்பது என்பதை இறைவன் அறிவார்.
9. முடிவு கிடைக்கும் வரை போராடிச் செபிப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. இச்சைப் பார்வையோ, கோபப் பேச்சோ, பெருமை குணமோ, பொறாமை சிந்தனையோ ஒரே இரவில் கழுவப்படும் என்று சொல்ல முடியாது. மீண்டும் மீண்டும் விழுந்தாலும் மீண்டு எழும்ப நமக்குத் தேவை இறைவனின் வல்ல கரம். இறைவனின் நல்ல கரம். அந்த கரத்தை வரமாய்ப் பற்றினால் மட்டுமே வெளியேற முடியும். எனவே முடிவு கிடைக்கும் வரை செபிக்க வேண்டும். இடையில் சோர்ந்தால் விடையைப் பெற முடியாது.
10. அல்லும் பகலும் செபிக்க வேண்டும் என இயேசு கூறுகிறார். அதாவது நமது வாழ்க்கையின் ஒரு பாகமல்ல செபம், வாழ்க்கையே செபத்தின் பாகமாய் இருக்க வேண்டும். செபம் என்பது இறைவனோடான உரையாடல். இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வது. நமது செயல்கள் ஒவ்வொன்றிலும் இறைவனோடான உரையாடல் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும். அப்போது தான் நமது ஆன்மீக வாழ்க்கை செழிப்படையும். இறைவன் விரும்பிய வாழ்க்கை நமக்குக் கிடைக்கும்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
செபத்தில் நிலைத்திருப்போம்.
No comments:
Post a Comment