அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, March 8, 2018

திருப்பலி விளக்கம் - தொடக்கச் சடங்கு

முன்னுரை :
திருப்பலி இருபெரும் பகுதிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய ஆக்க கூறுகளாலானது திருப்பலி. இன்னும் சற்று விரிவாக பார்த்தோமானால் திருப்பலி தொடக்க வழிபாடு, வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு, முடிவு வழிபாடு ஆகியவற்றைக் கொண்டிருப்பது எனலாம்.
இருபெரும் பகுதிகளை எடுத்துக் கொள்வோமானால் அவை ஒவ்வொன்றுக்கும் தயாரிப்பும், முடிவும் உண்டு என்றும் சொல்லலாம்.
இதுவரை திருப்பலிப் பற்றிய அடிப்படை கோட்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்தோம். (பிப்ரவரி ‡ ஜீன்). இனித் திருப்பலியில் இடம்பெறும் ஒவ்வொரு செயல், செபம் போன்றவைகளுக்கு விளக்கம் கொடுக்க முற்படுவோம்.

தொடக்கச் சடங்கு :
தொடக்கச் சடங்கு திருப்பலி முழுவதிற்கும் நுழைவாயிலைப் போன்று அமைந்திருக்கிறது. இந்த தொடக்கச் சடங்கு, வருகைப் பவனியில் தொடங்கி திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. திருப்பலியில் நமது பங்கேற்பு முழுமையாக அமையவும், அதன் விளைவாகப் பலன்களை நாம் நிறைவாகப் பெறவும், இச்சடங்கு நம்மைத் தயாரிக்கிறது. திருப்பலியின் இறுதி பயனாகிய இறை ‡ மனித உறவின் சிகரத்திற்கு அச்சாரமாகவும், அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது இத்தொடக்கச் சடங்கு. எனவே இத்தொடக்கச் சடங்கில் இடம்பெறும் ஒவ்வொரு செபமும், செயலும் இத்தயாரிப்புக்கு எப்படி உறுதுணையாக விளங்குகிறது என இங்கு பார்ப்போம்.

வருகைப் பவனி :
பொதுவாகத் திருப்பலி கொண்டாட்டம் வருகைப் பவனியுடன் தொடங்கும். பீடப்பணியாளர்கள் முன்செல்ல (பாடல் திருப்பலியாக இருந்தால் சிலுவை, தூபத்துடன்) திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திருவுடை அணிந்து பின்செல்கிறார். இந்தப் பவனி கோவிலின் முன் நடுவாயிலிருந்து தொடங்கும். இப்பவனி கொண்டாடப்படும் விழாவில் தரத்திற்கேற்ப நீண்டதாகவோ, சுருங்கிய அளவுடையதாகவோ இருக்கலாம். பீடப்பணியாளர்களைத் தவிர்த்து, திருத்தொண்டர், வாசகர், விளக்கவுரையாளர் இப்பவனியில் இடம் பெறலாம். திருத்தொண்டரோ அல்லது வாசகரோ, வாச நூலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அருள்பணியாளர் முன்செல்வர்.

வருகைப்பாடல் :
“கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பை வளர்க்கவும், வழிபாட்டுக் காலத்தின் அல்லது திருநாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனி இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்” (பொது படிப்பினை எண் 47).
ஒவ்வொரு நாளின் கொண்டாட்டத்தின் உணர்வுகளில் நுழைய இந்த வருகைப்பாடல் நம்பிக்கையாளர்கள், அருள்பணியாளர் மற்ற பணியாளர்களின் மனதைத் திறக்கிறது. அன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியை அதற்கேற்ற திருப்பாடலுடன் பாடுவது அன்றைய கொண்டாட்டத்தின் மையக்கருத்தையும், உணர்வையும் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பாடலை பாடலாம் என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் (எண் 48) குறிப்பிட்டிருந்தாலும் இன்று பாடப்படுகின்ற பாடல்கள் எல்லாம் இத்தகைய தகுதியைப் பெற்றிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகிறது. மேலும் உரோமை படிக்கீத நூலில் அல்லது சாதாரணப் படிக்கீத நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் வருகை பல்லவியையும், திருப்பாடலையும் பாடுவதுதான் சாலச்சிறந்தது என்று சொல்லிவிட்டு, ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட இதற்கிணையான பாடலையும் பாடலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பிந்திய அனுமதியே வழக்கமாக மாறியிருப்பது விந்தையாகவுள்ளது. இதைச் சமநிலைக்குக் கொண்டுவர ஒவ்வொரு மறைமாவட்ட திருவழிபாட்டு பணிகுழுவும், ஆயரும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். இது நடைபெறுமா?
வருகைப்பாடலைப் பாடவில்லை என்றால், நம்பிக்கையாளர் அனைவரும் அல்லது அவர்களுள் ஒருசிலர் திருப்பலி நூலில் கண்டுள்ள வருகைப் பல்லவியை வாசிப்பார்; இல்லையயனில் அருள்பணியாளரே அதைத் தொடக்க அறிவுரை போன்று தழுவி அமைப்பார் (பொது பாடம் எண் : 48). இதை அவர் நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக் கூறியபின் வாசிப்பார் (பொது பாடம் எண் : 48)

பீடவணக்கமும், குழுமியுள்ள மக்களுக்கு வாழ்த்தும்:
பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளம்; நற்கருணை குழுமத்திற்கு மையம். இதைச் சுற்றிதான் கிறிஸ்தவ குடும்பம் நற்கருணை பலி உணவு கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்கிறது.
திருப்பலி பீடத்தை அனுகியதும், அருள்பணியாளரும், திருத்தொண்டர் மற்றும் கூட்டுபலி அருள்பணியாளர்கள் இருந்தால், அவர்களும் பீடத்துக்கு முன் பணிந்து வணக்கம் செலுத்துவர். அதன்பின் இவ்வணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பீடத்தை முத்தமிடுவர் அல்லது இந்திய முறைப்படி பீடத்தை இருகைகளாலும் தொட்டு நெற்றியில் வைத்து மரியாதையை வெளிப்படுத்துவர். பின் பீடத்திற்கும், சிலுவைக்கும் தூபம் காட்டுவார்.
பீடத்தை முத்தமிடுவதும், அதற்குத் தூபம் காட்டுவதும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதையை வெளிப்படுத்துகிறது. இச்செயல் குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு செப சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
பீடத்திற்கு வணக்கம் செலுத்தியபின், அருள்பணியாளர் தமது இருக்கைக்குச் செல்கிறார். வருகைப்பாடல் முடிந்ததும் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் தம்மீது சிலுவையடையாளம் வரைந்து, “தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே” என்று சொல்லுவார். குழுமி இருக்கும் நம்பிக்கையாளர்களும் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து “ஆமென்” என்று பதில் கூறுவர். இந்த சிலுவை அடையாளம் நமது மீட்பின் உன்னத சின்னம். மூவொரு கடவுளின் மூவா மறைபொருள். கிறிஸ்தவ சமயத்தின் தனியயாரு முத்திரை. நாம் எதிர்பார்த்திருக்கும் பேரின்ப காட்சியின் முன் சுவை.
அதன்பின் ஆண்டவரின் உடனிருப்பை வாழ்த்துரை வழியாகத் திருக்குழுமத்திற்கு உணர்த்துவார். மக்கள் கூடிவரும்போது ஒருவர் ஒருவரை வாழ்த்துவது பொதுவான ஒரு பழக்கம். திருப்பலி கொண்டாட்டத்திற்குக் கூடிவரும் மக்களுக்கு வாழ்த்துக்கூறுவது முறையானதாகும். தொடக்கச் சடங்கில் இது ஒரு முக்கிய செயலாகும். இந்த வாழ்த்துரை வழியாக அருள்பணியாளருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே உறவு உருவாக்கப்படுகிறது.
திருப்பலி நூலில் மூன்று வாய்ப்பாடுகள் இந்த வாழ்த்துதலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்:

1. ‘நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’ (2 கொரி 13 : 13).

2. ‘நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும், அருளும், சமாதானமும் உங்களோடு இருப்பதாக ‘ (உரோ 1 : 7).

3. ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’ (லூக் 1 : 28
மறை ஆயர் பலியில் : அமைதி உங்களோடு இருப்பதாக (லூக் 24 : 36)

இந்த மூன்று வாழ்த்துக்களிலும் வார்த்தைகள் பலவாறாயினும் கருத்துப் பொருத்தம் கொண்டிருப்பதைக் காணலாம்.

“நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருள்:
அருள்” என்பது இறைவனுடைய அன்பிலிருந்து புறப்படுவது. அருளும், அன்பும் இறைவனையே குறிக்கும். இந்த அன்பும், அருளும் இயேசுகிறிஸ்துவில் ஆள் உருபெற்றன. “மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமானார்” (தீத்து 2 : 11) என்று பவுல் குறிப்பிடுகிறார். எனவே ஆண்டவரை அணுகுவது அருளைப் பெறுவதற்குச் சமம். இவராலன்றி நாம் அருளைப் பெறமுடியாது. அருளோடிப்பவர்கள்தாம் இந்தத் திருப்பலியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள். எனவேதான் அருள்பணியாளர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

கடவுளின் அன்பும்:
இறைவன் அன்பு மயமானவர். “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1 யோவா 4 : 16) என்று யோவான் குறிப்பிடுகிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர், கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளுடைய இந்த அன்பை வழிபாட்டில் உணரமுடிகிறது.

தூய ஆவியாரின் நட்பும்:
நட்புறவு என்பது புதிய ஏற்பாட்டில் ஒப்புரவைக் குறிக்கும். இந்த சொல் ஆழ்ந்த பொருளுடையது. இது இருவரிடையே உண்டாகும் ஒன்றிப்பையும், அவர்கள் தங்களுக்குப் பொதுவான செல்வத்தை பகிரும் செயலையும் குறிக்கும்.

இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரு இனமாக்கப்படுகின்றார்கள். இவர்களிடையே இருக்கும் ஒற்றுமை உயர்வானது. இத்தகைய ஒன்றிப்பை இன்று செயலாக்கி காத்து வருகின்றவர் தூய ஆவியார் ஆவார். எனவே தூய ஆவியாருக்கும் நட்புறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த நட்புறவானது வேண்டுமென்று அருள்பணியாளர் வாழ்த்துகிறார்.

முதல் வாழ்த்து வாய்ப்பாட்டில் சிலர் ‘நட்புறவும்’ என்பதற்க்குப் பதிலாக ‘தோழமையும்’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள். கிரேக்கத்தில் இருக்கும் ‘கோயினோனியா’ என்ற சொல் ‘நட்புறவு’ என்று தான் 2கொரி 13:13 இல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறாக, இயேசுகிறிஸ்துவின் அருளைப் பெற்று, இறைதந்தையின் அன்புக்கு இலக்காகி, மூவொரு கடவுளின் திருசமூகத்தோடு உறவுகொண்டு வாழ்கிறவர்கள்தான் கிறிஸ்தவ திருசமூகம். இத்திருப்பலியில் பங்குபெற வந்திருக்கும் கிறிஸ்தவ திருசமூகத்திற்கு இந்த வாழ்த்துதல் வழியாக இவ்வுண்மை நினைவூட்டப்படுகிறது.

சகோதர அன்புறவுக்கும், சமாதானத்திற்கும் காரணம் இயேசுகிறிஸ்து. அவரில் தான் ஒப்புரவு உருவாகிறது. அவரே நம் சமாதானம். அவர் நம்மோடிருந்தால் அருளும். சமாதானமும் நம்மோடிருக்கும் என்பது திண்ணம். “அருள் நிறைந்த மரியே” என்று வாழ்த்திய வானதூதர் அதற்குக் காரணம் காட்டுவது போல் “ஆண்டவர் உம்மோடிருக்கிறார்” என்கிறார்.

இறை அருளின் ஆள் உருவாக்கிய ஆண்டவர் உங்களோடு இருந்து இறையன்பை உருவாக்கி வளர்த்து, இது பிறர் அன்பாகவும், சமாதானமான நட்புறவாகவும் மலர செய்வார் என்று திருச்சமூகம் இரண்டாவது வாய்ப்பாட்டில் வாழ்த்தப் பெறுகிறது.

முதல் இரண்டு வாழ்த்துரை பாடங்கள் கீழ்த்திருச்சபையில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்பொழுது இலத்தின் திருஅவை இவற்றை வாழ்த்துரைக்குப் பயன்படுத்துகிறது.
வரவேற்பிற்குப் பொருத்தமான வேறு வாழ்த்துரைகள் புனித பவுலின் மடல்களில் நிறைய உள்ளன (காண் உரோ 16 : 20; கலா 6 : 18;1 கொரி 16 : 23; எபே 6 : 23, 24). இவற்றில் ஏதாவது ஒன்றை மூன்றாவது வாழ்த்து பாடமாகப் பயன்படுத்தலாம்.

இந்த வாழ்த்துரைகளின் ஆழ்ந்த கருத்துகளை அடிக்கடி சிந்திப்போம். மேலே கொடுக்கப்பட்ட விளக்கவுரை இதற்குத் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.


சுருக்கமான முன்னுரை:
அருள்பணியாளர் மக்களை வாழ்த்திய பின், அவரோ, திருத்தொண்டரோ அல்லது பொதுநிலையினரில் ஒருவரோ மிகச்சுருக்கமான முன்னுரையை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரைத் தயார் செய்கிறார்.
(பொது பாடம் 50 : 124)
The Priest (or antother minister) may very briefly introduce the faithful to the mass of the day. (ordo Missae cum Populo, p.3)

குறிப்பு :
வேண்டுமென்றே மேலே உள்ள மேற்கோல் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுகிறது. இது நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும். மொழிபெயர்த்தால் மேலே தமிழில் கொடுத்த திருப்பலி நூலின் பொது படங்களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றாது.

விளக்கவுரையாளர்:
இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலி கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும், சுருக்கமாகவும் தயாரிக்கப்படவேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக்கூடாது (பொது பாடம் எண் 105 / ஆ).

இன்று நடைமுறைகளில் நடப்பதற்கும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்குமிடடையே முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே திருப்பலியின் முன்னுரையைச் சரியா புரிதல் அவசியமாக இருக்கிறது.

திருப்பலிக்கு முன்னுரை வழங்குவதும், விளக்கவுரை அளிப்பதும் வெவ்வேறு பணிகள். இதனால் தான் இவர்களுக்குரிய தகுந்த இடம் வெவ்வேறானது. திருப்பலிக்கு முன்னுரை கொடுக்கும் அருள்பணியாளர் தமக்கென்று குறிக்கப்பட்ட இருக்கையில் இருப்பார். அவர் பொதுநிலையினராக இருந்தால் பலிபீட முற்றத்திலிருக்கும் அறிக்கை மேடையில் இருப்பார். ஆனால் விளக்கவுரையாளர் இரண்டாவது மாதிரி படிவத்தின் (Second Typical Edition 1975) பொது படிப்பினைப்படி பலீபீட முற்றத்திற்கு (Sanctuary) வெளியே நிற்பார். இந்த குறிப்பு சற்று மாற்றப்பட்டு திருத்தப்பட்ட மூன்றாவது மாதிரி படிவத்தின் (Revised Third Typical Edition 2008) பொது படிப்பினைப்படி “மக்கள் முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தக்க இடம் பலிபீட முற்றத்திற்கு வெளியேயும் இருக்கலாம். விளக்கவுரை மேடை என்று நாம் குறிப்பிட்டுள்ள இடமாகவும் இருக்கலாம் என்பது எமது கருத்து. நாம் இங்கு கவனிக்கக் கூடியது திருப்பலிக்கு அளிக்கப்படும் முன்னுரையும், திருப்பலி தொடக்கத்திற்குக் கொடுக்கப்படும் விளக்கவுரையும் வெவ்வேறு பணிகள் ஆகும். குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

நாம் மேலே கொடுத்த மேற்கோள்களிலிருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், திருப்பலிக்கு முன்னுரையாக இருந்தாலும் சரி, அன்றைய திருப்பலிக்க விளக்கவுரையாக இருந்தாலும் சரி அவை மிகச்சுருக்கமானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். மறையுரையாக மாறிவிடக்கூடாது. பல சமயங்களில் மக்களையும், அருள்பணியாளர்களையும் அமரச்செய்துவிட்டு எழுதி வைத்திருக்கும் பல பக்கங்கள் அடங்கி அடுக்கு மொழி உரையை வாசிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த முன்னுரை அன்றைய விழாவில் மையமாக இழையோடிக் கொண்டிருக்கும் மையக்கருத்தை (நன்றி, துக்கம், மகிழ்ச்சி, மனத்துயர்) துல்லியமாகச் சுட்டிக்காட்டி குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை உசிப்பிவிட்டு உணர்வோடும் (உலிஐவிஉஷ்லிற்வி), செயல்முறையிலும் (ழிஉமிஷ்ஸe) பங்குபெற உதவும் விதமாக அமைய வேண்டும். வெள்ளி, பொன் விழாவாகக் கொண்டாடும் நாயகர்களையோ, வார்த்தைப்பாடு புதிப்பித்தபின் நன்றி செலுத்தும், இருபால் துறவிகளையோ அடக்கத் திருப்பலியில் இறந்தவரைப் பற்றியோ புகழாரம் சூட்டும் நேரமல்ல இது. இத்தகைய செயல் அறவே அகற்றப்பட வேண்டும். இது திருப்பலிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

மனத்துயர்ச் சடங்கு :
தொடக்ககால திருஅவையில் கொண்டாடப்பட்ட வழிபாடு பற்றிய தகவல்களை நமக்குத் தொகுத்துக் கொடுப்பது “திதாக்கே” (ம்ஷ்dழிஉஜுe) என்னும் நூலாகும். இதில் மனத்துயர் சடங்கு பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆண்டவர் நாளில் ஒன்றுகூடி அப்பத்தைப் பகிர்ந்து நன்றி கூறுங்கள். ஆனால் முதலில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; இவ்வாறு உங்கள் பலி தூய்மையானதாகும்” (14 : 1)

எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டுமானாலும் ‘தயாரிப்பு’ தேவை. திருப்பலியில் பங்குபெற தயாரிப்பு தேவைப்படுகிறது. ஆண்டவரோடு உறவுக்கொள்ள மனத்தூய்மை வேண்டும். மக்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தி அழுது, தீய வழியை விட்டகல அழைக்கப்படுவதும், அதற்கேற்ப அவர்கள் மனம்மாறி இறைவன் பக்கம் திரும்புவதும் விவிலியத்தில் பரவலாகக் காண்கின்ற நிகழ்வாகும். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன (காண் யோவே 1 : 13 ‡ 15; நீதி 10 : 10 - 15).

இறைவனோடு ஒப்புரவாக இது இன்றியமையாதத் தேவை. எனவே பலி தொடங்குமுன் சிறிது மெளனமாகயிருந்து நாம் பாவிகள் என அவர் திருமுன் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதுவே மனமாற்றத்துக்கு முதற்படி; மன்னிப்பு கோருவதற்கும் அடிப்படை; நட்புறவை உருவாக்கி வளர்ப்பதற்கு அடித்தளம்.

எப்பொழுது இம்மனத்துயர் சடங்கு நடைபெறவேண்டும் என்பதைப் பற்பல வழக்கங்களையும், கருத்துக்களையும் ஆராய்ந்து, திருப்பலியின் தொடக்கத்திலேயே இடம் பெறுவது நல்லது என முடிவு செய்யப்பட்டது. பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவன்பால் உள்ளத்தைத் திருப்பி, அவரோடும், அயலாரோடும் ஒப்புரவான நிலையில் இறைவார்த்தையைக் கேட்கவும், காணிக்கை செலத்தவும், திருவிருந்து அருந்தவும் இது நம்மை தகுதியுடையவராக்குகிறது.

நம்பிக்கையாளர்களை பாவங்களுக்கு மனம் வருந்த அழைத்து சிறிது மெளனத்திற்குப் பின் பாவ அறிக்கைக்க மூன்று வித பாடங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வகை “எல்லாம் வல்ல இறைவனிடமும்” என்று தொடங்கும் பாவ அறிக்கையாகும். இது முடிந்தது அருள்பணியாளர் எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக என்று சொல்கிறார். இது “ஒப்புரவு அருள் அடையாளத்தில் சொல்லப்படும் வாய்ப்பாட்டுக்கு சமமானதல்ல; இந்த செபத்திற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது” (எண் 51) என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் கூறப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. எனவே மக்கள்மீது கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு இதை சொல்வது நல்லதல்ல. இது எதிர்விளைவை நாளடைவில் கொண்டுவரும். இந்த செபம் மூன்று வகை பாவ அறிக்கைக்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வகை பாவ அறிக்கை மிகச் சுருக்கமானது.
அ. ப : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ. ப : ஆண்டவரே எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும்.
பலருக்கு இது புதிதாகத் தோன்றலாம். ஏனெனில் இதுபற்றி கேள்விப்படவில்லை. திருப்பலியில் பயன்படுத்தியதுமில்லை. அவ்வப்போது இந்த முறையையும் அருள்பணியாளர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாவது வகை பாவ அறிக்கை பின்வருவாறு :
அ. ப : உள்ளம் நொருங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே இரக்கமாயிரும்.
பதில் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ. ப : பாவிகளை தேடிவந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அ. ப : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

குறிப்பு: இதே போன்று மற்றும் நான்கு வகை பாவ அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கலாம். இவை இலத்தீன் மாதிரி படிவத்தில் காணப்படவில்லை. எனவே புதிதாக வெளிவர இருக்கும் திருப்பலி நூலிலும் இவை விடப்பட்டிருக்கும்.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ (Kyrie):

“பாவத்துயர்ச் சடங்கில் ஏற்கனவே இடம் பெறாவிடில், “ஆண்டவரே, இரக்கமாயிரும்” என்னும் இறைவேண்டல் இப்பொழுது சொல்லப்படும்” (திருப்பலி நூல் எண் 7).

‘ஏற்கனவே இடம் பெறாவிடில்’ என்பது முதல், இரண்டாவது வகை பாவ அறிக்கைகளைக் குறிக்கின்றது. எனவே அருள்பணியாளர் பாவ மன்னிப்பு செபத்தைச் சொல்லிய பின் இதைச் சொல்ல வேண்டும்.

ஒருசில அருள்பணியாளர் பாவ அறிக்கைக்குப் பின் மன்னிப்பு மன்றாட்டு சொன்னபின் ஏன் மீண்டும் ஆண்டவரின் இரக்கத்தை கேட்கவேண்டும் என்று கேட்பதோடில்லாமல் இதைவிட்டு விடவும் செய்கிறார்கள். இது சரியல்ல.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ என்னும் பாடல் இரு வகையாக திருப்பலியில் இடம் பெறுகிறது. ஒன்று மனம் மாற்ற முயற்சியின் இறுதியில் அதன் மலர்ச்சியாக இப்பாடல் எழலாம்; அல்லது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே அதை அமைத்துக் கொள்ளலாம். இங்கு இது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே இடம் பெறுகிறது.

மேலும் இது இறைவனின் இரக்கத்தைக் கோரும் மன்றாட்டு மட்டுமல்ல, அவரைப் போற்றலும் ஆர்ப்பரித்தலுமாகும். முற்காலத்தில் திருப்பலியின் தொடக்கத்திலிருந்த தொடர் பிரார்த்தனையின் தொடக்கமே இது. இதுபற்றி திருப்பலி நூலின் பொது படிப்பினை சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. “இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும்” (எண் 52). இறைவனைப் புகழ்வது என்றமுறையில் இது வானவர் கீதத்துக்கு முன்னோடியாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.

முடிவுரை:

மனத்துயர் முயற்சியின் பயனாக அற்ப பாவங்கள் மற்றும் குறைபாடுகள் (imperfections) நீங்குகின்றன; உள்ளம் இறைவழிபாட்டிற்குப் பக்குவமடைகிறது. கூடியிருக்கும் நம்பிக்கையாளர் அனைவரோடும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றித்து திருப்பலியை ஒப்புக் கொடுக்க தயாராகிறார்கள்.

தீர்த்தம் தெளித்தல் :
மனத்துயர் வழிபாட்டின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தம் மந்திரித்து தெளிக்கும் சடங்கு நடைபெறலாம். இச்சடங்கு இடம்பெறும்போது தண்ணீர், உப்பு இவற்றை மந்திரிக்க அவற்றிற்குரிய செபம் சொல்லப்பட வேண்டும்.

இங்கு சில குறைபாடுகள் இடம்பெற வாய்ப்பு உண்டு. முந்திய ஞாயிறு மந்திரிக்கப்பட்ட உப்பில் மீதம் இருக்கலாம். அடுத்த ஞாயிறு அதே உப்பை மந்திரிக்க கொண்டு வருவதுண்டு. இது பொருளற்றது. இது நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தீர்த்தம் மந்திரிக்க தேவையான தண்ணீர், உப்பு, தீர்த்த செம்பு முதலிவற்றைப் பலி பீடத்தின் மேல் வைக்கக்கூடாது. பீடம் பலியை ஒப்புக் கொடுக்க மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அதை ஒரு சுமைதாங்கியாகப் பயன்படுத்தக்கூடாது. தண்ணீர், உப்பு, தீர்த்த செம்பு இவற்றை வைக்க ஒரு சிறிய மேசையைப் பயன்படுத்த வேண்டும்.

வானவர் கீதம் :
தூய ஆவியாரால் ஒன்று கூட்டப்பெற்ற திருஅவை வானவர் கீதத்தைப் பாடி இறைத்தந்தையையும், திருச்செம்மறியையும் மாட்சிப்படுத்தி இறைஞ்சி மன்றாடுகிறது. மிகவும் பழைமையானதும், வணக்கத்துக்குரியதுமான இந்தப் பாடலின் பாடத்திற்குப் பதிலாக வேறு எந்த பாடத்தையும் பயன்படுத்தக்கூடாது (பொது படிப்பினை எண் 53).

திருவருகைக்காலம், தவக்காலம் தவிர்த்து ஞாயிற்று கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும் இன்னும் சிறப்புக் கொண்டாட்டங்களிலும் இது பாடப்பெறும் அல்லது சொல்லப்படும். ‘சிறப்புக் கொண்டாட்டங்கள்’ பங்கின் பாதுகாவலரின் விழா, துறவற சபையை நிறுவியவரின் விழா போன்றவைகளைக் குறிக்கும். இதிலுள்ள சொற்றொடர்கள் எல்லாம் விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

இது “வானவர் கீதம்” என்று அழைக்கப்படுகிறது. காரணம், இயேசு பாலன், பெத்லகேமில் பிறந்த இரவில், ஊரை அடுத்துத் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு வானவர் படைத் தோன்றி உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக! உலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக என்று பாடின, அதனால் இப்பெயர்.

தந்தைக்கு மகிமை :
“அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என் பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்” (எசே 3 : 12) என எசேக்கியல் இறைவாக்கினர் கூறியுள்ளார். இதேபோன்று “அவருடைய மகிமை வானத்தை மூடியுள்ளது”, (அபாக் 3 : 8) என்றும், “வானங்களையும்விட இம்மகிமை உயர்ந்தது” என்றும் (திபா 112 : 4), “நீர் வாழ்த்தும், மகிமையும் பெறுவீராக” என்றும் தெளிவாக இறைவனின் மகிமையை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த மகிமையைத்தான் வானவர்கீதம் எதிர் ஒலிக்கின்றது.

நன்மனத்தோர்க்கு அமைதி :
இக்கருத்தையும் விவிலியத்தில் பரவலாகக் காணலாம். “அவருக்கு அஞ்சி நடப்போருக்கு .... நீதியும் அமைதியும் ஒன்றையயான்று அரவணைக்கும்” (தி பா 85 : 9 ‡ 11). “தீயோர்க்கு அமைதி இல்லை என்கிறார் ஆண்டவர்” (எசா 48 : 22). மெசியாவின் வருகையால் இந்த அமைதி பிறக்கிறது. “‘அவர் .... அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படுவார்” (எசா 9 : 6). “அவரே அமைதியை அருள்வார்” (மீக் 5 : 5). “அவரது காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக .... சமாதானம் நிலவுவதாக” (தி பா 72 : 7). ஆகவே “நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும், மாண்பும், அமைதியும் கிடைக்கும்” (உரோ 2 : 10). எனவே “கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் அçதியும், இரக்கமும் உரித்தாகுக” (கலா 6 : 16) எனப் புனித பவுல் வாழ்த்துகிறார்.

பரம தந்தைக்கு மகிமை :
வானத்தூதர் சொற்களைக் கொண்ட இம்முன்னுரைக்குப்பின், இப்பாடல் இருபெரும் பகுதிகளாகத் தொடர்கிறது. முதல் பகுதி பரமதந்தையைப் போற்றி புகழ்கின்றது. இந்த சொற்களை திருபாடல்களில் காணலாம்.
உம்மை புகழ்கிறோம் - 148, 150
உம்மை வாழ்த்துகிறோம் - 103, 104
உம்மை ஆராதிக்கின்றோம் - 3 : 7
உம்மை மகிமைப்படுத்துகின்றோம் - 29 : 2
உமது மேலான மாட்சியின் பொருட்டு 72 : 19

கடவுள் ‘ஆண்டவர்’ என்றும், ‘தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு நன்றி செலுத்தப்படுகிறது. அவர் எல்லா வல்லமையும் உடையவர் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.

இயேசுவுக்குப் புகழ் :
வானவர்கீதத்தின் மறுபகுதியில் இயேசு கிறிஸ்துவின் புகழுரைகள் தொடர்கின்றன. இவற்றிக்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரம் காணலாம்.

ஏக மகனாகச் செனித்தவர் :
மூவொரு கடவுளின் இரண்டாவது ஆளாகிய மகன் ‘வாக்கு’ என யோவான் நற்செய்தியில் அழைக்கப்படுகிறார். தொடக்கத்திலேயே கடவுளோடு, கடவுளாக இருந்த இந்த வாக்கு மனிதராகி நம்மிடையே குடிகொண்டார். தந்தையிடமிருந்து அவர் பெற்ற மாட்சிமை ஒரே பேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே (யோவா 1 :1, 14, 17, 18 காண்க).

ஆண்டவர், இயேசு கிறிஸ்து :
விவிலியம் கடவுளை ‘ஆண்டவர்’ என்று குறிப்பிடுகிறது. புதிய ஏற்பாட்டில் இயேசுவையும் ‘ஆண்டவர்’ என்று அழைத்து அவருடைய இறை இயல்பை
வலியுறுத்துகிறது இப்பாடல். உயிர்த்த இயேசுவை “என் ஆண்டவரே, என் கடவுளே” என்று விளித்த புனித தோமா தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். “இவரே அனைவருக்கும் ஆண்டவர்” (திபா 10 : 36) என்று பேதுருவும், “ஆண்டவர் ஒருவர்தான்; அவர் இயேசுகிறிஸ்துவே” (1 கொரி 8 : 6) என்று பவுலும் கூறுகின்றனர். “ஆண்டவராகிய இயேசு” என்னும் சொற்றொடர் பவுலின் திருமடல்களில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டவராகிய இறைவா :
அனைத்திலும் தந்தைக்குச் சரிசமமான இறைவனாக இருக்கிறார் இயேசு. அவர் மனிதனாயினும், இறைவனாக இருக்கிறார் என இச்சொற்றொடரில் அறிக்கையிடுகிறோம். ஏனெனில் “கடவுள் வடிவில் விளங்கிய அவர் .... தம்மையே வெறுமையாக்கி ... மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு ... தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே ... அனைவரும் மண்டியிட தந்தையாம் கடவுளின் மாட்சிமைக்காக ‘இயேசு ஆண்டவர்’ என எல்லா நாவும் அறிக்கையிடும்” (பிலி 2 : 5 -11).

உலகின் பாவங்களைப் போக்குபவர் :
“இதோ, இறைவனின் செம்மறி! இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்” என்று இயேசுவைச் சுட்டிக் காட்டினார் திருமுழுக்கு யோவான். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்” (எசா 53 : 4 ‡ 5) என்று எசாயா இறைவாக்கினர் இவருடைய பாவம் போக்கும் வல்லமையைச் சுட்டிக் காட்டினார்.

தந்தையின் வலபக்கம் வீற்றிருப்பவர் :
இறைவனும் மனிதனுமாகிய இயேசு கடவுளுக்குச் சரிநிகராக இருப்பதை இச்சொற்றொடர் குறிக்கிறது. “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலதுப்புறத்தில் வீற்றிருப்பதை ... காண்பீர்கள்” (மத் 26 : 64) என்று இயேசு கூறியுள்ளார், “உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!” (உரோ 8 : 34) என்று புனித பவுலும் குறிப்பிடுகிறார். ஆகவே நமது மன்றாட்டை ஏற்றருள வேண்டுகிறோம்.

ஆர்ப்பரிப்புகள் :
இவ்வாறாக இயேசுகிறிஸ்துவைப் போற்றி புகழ்ந்தபின் சில வாழ்த்துரைகள் இடம் பெறுகின்றன. ‘நீர் ஒருவரே தூயவர், நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்’.

மனித தன்மையில் தூயவர் எனப் போற்றுதற்குரியவர் இயேசு ஒருவரே. “பிறக்கும் குழந்தை தூயவர், கடவுளுடைய மகன் எனப்படும்” (லூக் 1 : 35) என வானதூதர் அறிவித்தார். அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன் “நீர் கடவுளின் தூயவர்”, என அறிக்கையிடுகிறான். “நமக்கு ஏற்ற .... இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர்” (எபி 7 : 26) என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வாசிக்கிறோம்.

இயேசு “உன்னதரின் மகன் எனப்படுவார்” என கபிரியேல் வானத்தூதர் இவரைப் பற்றி குறிப்பிட்டார். “இயேசுவே உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை” என்று பேய் பிடித்தவன் கத்தினான் (மாற் 5 : 7).

இறுதியில் மூவொரு கடவுளின் புகழுரையோடு இப்பாடல் முடிகிறது. “தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே”. முதல் மறைசாட்சியாகிய ஸ்தேவான் “கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டார்” (தி ப 7 : 55). “அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக, ஆமென்” (2 பேதுரு 3 : 18).

திருக்குழும மன்றாட்டு :
வானவர்கீதம் முடிந்தவுடன் அருள்பணியாளர், மன்றாட, நம்பிக்கையாளர்களை அழைக்கிறார். அதன்பின் அருள்பணியாளரோடு சேர்ந்து இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணரவும், தங்கள் கருத்துக்களை மனதில் நினைவு கூரவும் சிறிது நேரம் அமைதியாக இருப்பார். இந்த மெளனம் கட்டாயமானது என பீட்டர் கைளப்ளன் (Peter Coughlan) என்னும் திருவழிபாட்டு வல்லுநர் கூறுகிறார்.

சிறிது நேர மெளத்திற்குப்பின் அருள்பணியாளர் மன்றாட்டைச் சொல்கிறார். இதுவரை இந்த மன்றாட்டு ‘சபை செபம்’ என்று அழைக்கப்பட்டது. புதிய திருப்பலி நூல் தமிழாக்கத்தில் இது “திருக்குழும மன்றாட்டு” என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இது ‘கலெக்ட்’ (Collect) என்று அழைக்கப்படுகிறது. அதாவது திருப்பலிக்காக குழுமி இருக்கும் நம்பிக்கையாளர்களின் கருத்துக்களையும், செபங்களையும் ஒன்றாகத் திரட்டி அருள்பணியாளர் மன்றாடுகிறார் எனப் பொருள்படுகிறது. இந்த மன்றாட்டில் கொண்டாட்டத்தின் பண்பு வெளிப்படுத்தப்படுகிறது. இது இறைதந்தையை நோக்கி, கிறிஸ்து வழியாக, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்று வழக்கமாக சொல்லப்படுகிறது. திருப்பலியில் ஒரே ஒரு மன்றாட்டு மட்டுமே சொல்லப்படுகிறது. இந்த ஒழுங்கு முறைக்கு எந்த விதிவிலக்கும் கிடையாது (பொது படிப்பினை எண் 54).

இம்மான்றாட்டு மூவொரு கடவுளைக் குறிப்பிடும் நீண்ட முடிவுரையைக் கொண்டிருக்கும். அவை பின்வருமாறு :

அதாவது இம்மான்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால் “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்” என முடியும்.

தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால் “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்” என முடியும்.

திருமகனை நோக்கி சொல்லப்பட்டால், “தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம்” என முடிவுறும்.

மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, ‘ஆமென்’ எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வார்

No comments:

Post a Comment