அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, July 25, 2024

விதைப்பவன் உவமை


 

விதைப்பவன் உவமை

மாற்கு 4 : 26-29

"கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி. பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது" என்றார்.

இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள், மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும். இந்த உவமையும் அப்படியே, விதைகளையும், விதைப்பவனையும் இயேசு களமாக தேர்ந்தெடுக்கிறார்.

விதை, இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களை கண்கள் காண்பதில்லை இறைவனே காண்கிறார். அதன் பலனை நமக்கு இறைவன் அளிக்கிறார்.

1. விதை இருப்பது அவசியம்.

விதைக்க வேண்டுமெனில் முதல் தேவை, கைவசம் விதைகள் இருப்பது. இன்று இறைவார்த்தை பைபிள் வழியாக நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே முதல் தேவையாக இறைவார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

2. விதைத்தல் அவசியம்

விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது. அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

இறைவனுடைய வார்த்தைகளை நமது இதயத்திலும், பிறருடைய இதயங்களிலும் விதைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

3. நிலங்கள் அவசியம்

விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை. எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை. விதைகள் தான் வீணாகும். எனவே நிலங்களைப் பக்குவப்படுத்தி வைப்பது அவசியம்.

4. காலம் அவசியம்.

விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மூடத்தனம். விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும். அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

5. கட்டாயப்படுத்த முடியாது.

சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும். நம்முடைய அழுத்தங்கள் விதைகளையும், நிலத்தையும் பாழ்படுத்தலாமே தவிர எந்த பயனையும் செய்யாது. எனவே விதைத்தபின் அந்த விதைகளின் மீதோ, நிலத்தின் மீதோ தேவையற்ற அழுத்தங்களை வைக்க வேண்டாம்.

6. விதை முளைப்பது தெரிவதில்லை.

எந்தக் கணத்தின் விதையின் தோடுடுடைத்து முதல் வேர் வெளிக்கிளம்பியது ? எந்த கணத்தில் முதல் இதழ் மெல்ல விரிந்தது ? எந்தக் கணத்தில் மண்ணைக் கீறி முளை வெளியே வந்தது ? யாரும் அறிவதில்லை. இறைவன் ஒருவரே அதை அறிகிறார். எனவே இறைவார்த்தைகளை நாம் விதைத்தபின் அது எப்போது முளைக்கும் என்பது இறைவனின் சித்தத்தையும், நிலத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமே.

7. மூன்று நிலைகள்.

முளையாக, கதிராக, கதிருக்குள் தானியமாக என மூன்று நிலைகளில் விதைகளின் வளர்ச்சி இருக்கும். முளையாக இருப்பது வார்த்தைகளைக் கேட்டு அதை கொஞ்சமாய் வெளிப்படுத்துவது. ஆனால் அந்த முளையினால் பிறருக்கு எந்த பயனும் இல்லை.

இரண்டாவது கதிர். கதிர் பார்வைக்கு பயனளிப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் எதுவும் இருக்காது. ஒருவகையில் வெளிவேடமான வாழ்க்கை என சொல்லலாம். வார்த்தைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொள்வதுடன் நின்று விடும். பயனளிக்கும் அந்த கடைசி நிலையை எட்டாமல் போய்விடும்.

மூன்றாவது தானியம் நிரம்பிய கதிர். இது தான் கடைசி நிலை. இது தான் தேவையான நிலை. உள்ளுக்குள் முழுமையடைந்து பிறருக்கு பயனளிக்கும் நிலை. இதுவே நல்ல நிலத்தின் அடையாளம். இத்தகைய நிலைக்கு உயரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

8. பயனளிப்பது நிலம்

விதைகளை நிலத்தில் போடுகிறோம். விதை தானே பயனளிக்க வேண்டும் ? இங்கே நிலம் பயனளிக்கிறது. இறைவனின் வார்த்தைகள் விழுந்த மனிதர்கள் தான் பயனளிக்கத் துவங்குகிறார்கள். வார்த்தைகள் இருக்கும் இதயங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதைப் பிரதிபலித்து பயனளிக்கின்றனர். விதையை நிலத்தின் போட்டாலும், நிலமே பயனளிக்கிறது என்பதை கவனத்தில் கொள்வோம். நமது இதயமெனும் நிலத்தை கவனமாய் பாதுகாப்போம்.

9. அறுவடை பயன்

மனங்கள் பயனளிக்க ஆரம்பிக்கும் போது அந்த விதைகளை விதைத்தவர்கள் பயனடைகின்றனர். நமது இதயமெனும் நிலம் பண்படும் போது அந்த பயன் நமக்குக் கிடைக்கிறது.

விளைச்சலில் காலம் வராவிட்டால் அதனால் பயனில்லை. விதைகள் வளர்ந்து தானியமாய் ஆகும்போது அந்த பயன் இறைவார்த்தைகளைச் சொன்னவனுக்குக் கிடைக்கும்.

10 தூய ஆவியெனும் விதை.

நமது நிலமெனும் மனதில், இறைவார்த்தையெனும் விதைகளைப் போல பரிசுத்த ஆவி எனும் விதைகளை நடுவதையும் இந்த உவமை விளக்குகிறது. தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது இதயத்தைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

தூய‌ ஆவியானவர் நம்மிடம் வந்து தங்குவதற்குரிய வகையில் நமது இதயத்தைச் செவ்வையாக வைத்திருந்தால் தூய ஆவியார் வந்து பயனளிக்கும் நிலமாய் நம்மை மாற்றுவார். அப்போது நாம் முழுமையான கனியைக் கொடுக்க முடியும்.

No comments:

Post a Comment