இயேசு கிறிஸ்து எப்போது, எங்கு பிறந்தார் என்பதை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் எடுத்துரைக்கின்றனர். இயேசு பிறந்த ஊர் பெத்லகேம் என்று இருவரும் கூறுவது போன்றே, அவர் கி.மு.4க்கு முன்பு பிறந்தார் என்பதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர்.
பொதுவான சந்தேகம்
இயேசு பிறந்தபோது யூதேயாவை ஆட்சி செய்ததாக மத்தேயு நற்செய்தி கூறும் ஏரோது அரசன், கி.மு.4ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டதாக அறிகிறோம். “சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அதன்படி, யோசேப்பும் மரியாவும் பெயரைப் பதிவு செய்ய பெத்லகேமுக்கு சென்றபோதே இயேசு பிறந்தார்” என்று லூக்கா (2:2-7) எழுதுகிறார். ஆனால், கி.பி.6ஆம் ஆண்டில்தான் சிரியாவின் ஆளுநராக குரேனியு நியமிக்கப் பெற்றார் என்பது வரலாறு. இதன் காரணமாக, மத்தேயு, லூக்கா நற்செய்திகளுக்கு இடையில் பத்து ஆண்டுகள் இடைவெளி காணப்படுவதாக நினைப்பதே பலரின் பிரச்சனை. இரண்டு நற்செய்திகளையும் சரியாக வாசித்தால், குரேனியு பற்றிய தகவலை சேர்த்தது வரலாற்றுக் குழப்பத்தில் லூக்கா செய்த சிறிய பிழையே என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஏரோது அரசன்
அர்க்கெலாவின் தந்தையான பெரிய ஏரோது யூதேயாவில் ஆட்சி செய்த வேளையில் இயேசு பிறந்தார் என்று மத்தேயு நற்செய்தியில் (2:1) காண்கிறோம். யூதர்களின் அரசராக பிறந்த குழந்தையைக் கொலை செய்ய ஏரோது வீரர்களை அனுப்பியதாகவும், அப்பொழுது இயேசுவுக்கு ஏறக்குறைய இரண்டு வயது என்றும் மத்தேயு குறிப்பிடுகிறார். யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்றே லூக்கா நற்செய்தி நூலிலும் (1:5) எழுதப்பட்டுள்ளது. ஆகவே பெரிய ஏரோது இறக்கும் முன்பே, இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்பது உறுதியாகிறது. ஏரோது அரசன் கி.மு.4ஆம் ஆண்டு இறந்தான் என வரலாறு உறுதி செய்வதால், அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.
விண்மீன் அடையாளம்
இயேசு பிறந்த வேளையில் விண்மீன் அடையாளம் ஒன்று தோன்றியதாகவும், அதைக் கண்டு கீழ்த்திசை ஞானிகள் சிலர் அவரை வணங்க வந்ததாகவும் மத்தேயு (2:1-2) குறிப்பிடுகிறார். இத்தகைய விண்மீன் அடையாளம் கி.மு.7 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தோன்றியதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கி.மு.7ஆம் ஆண்டில் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்ததால், விண்மீன் போன்ற தோற்றம் ஏற்பட்டது. கி.மு.5ல் வால்நட்சத்திரம் ஒன்று எழுபது நாட்கள் பூமிக்கு அருகில் வந்ததாக சீன வரலாற்று குறிப்புகளில் உள்ளது. புதிய விண்மீனை அரச பிறப்புக்கு அடையாளமாக காணும் கிரேக்க சோதிடர்களின் மரபு, இயேசு பிறந்த காலத்தில் பல நாடுகளிலும் பரவியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆதலால், கி.மு.5ல் ஏற்பட்ட விண்மீன் தோற்றத்திற்கு முன்பே இயேசு பிறந்து விட்டார் என்று அறிகிறோம்.
அகுஸ்து சீசர்
அகுஸ்து சீசர் கட்டளைப்படி ரோமப் பேரரசு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற வேளையில் இயேசு பிறந்ததாக லூக்கா நற்செய்தி (2:1-7) கூறுகிறது. ரோமப் பேரரசில் கி.மு.28, 8 மற்றும் கி.பி.14ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்கிறது. கி.மு.8ல் அகுஸ்து சீசர் (கிமு.63-கி.பி.14) பிறப்பித்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையை யூதேயாவில் செயல்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.மு.6ல் அங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்ந்த வேளையில், இயேசு பிறந்திருக்க வேண்டும். மூன்றாம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இரு ஆண்டுகள் முன்பு சிரியாவின் ஆளுநராக குரேனியு இருந்ததால், அவரது பெயரை லூக்கா தவறுதலாக இணைத்துள்ளார்.
No comments:
Post a Comment