அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, July 25, 2024

முத்தும், வணிகரும்.

 முத்தும், வணிகரும்.

மத்தேயு 13 :45, 46


வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

மத்தேயு 13 :44,45

மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்
இயேசு தனது போதனைகளை எப்போதுமே சாமான்யர்களின் வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுக்கிறார். அவருடைய உவமைகள் ஏனோ தானோ என இருப்பதில்லை. ஒவ்வோர் தேர்வுக்குப் பின்னும் ஆழமான அர்த்தம் உண்டு.

முத்து உவமையும் அப்படி விரிவான விளக்கங்களை நமக்குத் தருகிறது. விலையுயர்ந்த முத்தைத் தேடிச் செல்லும் வணிகராக இறைமகன் இயேசு இருக்கிறார். ஒரு வணிகருக்குத் தான் தெரியும் முத்துகளில் எது சிறப்பானது, எது உண்மையானது, எது போலியானது எனும் சகல விஷயங்களும். உள்ளங்களை அறிய மனிதர்களால் முடிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தின் அழகு ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

முத்து என்பதை ஏன் இயேசு பயன்படுத்துகிறார் ? அது மட்டும் தான் ஒரு உயிரினமான சிப்பியின் வயிற்றிலிருந்து கிடைக்கின்ற விலையுயர்ந்த பொருள். அது உருவாகும் விதமும் கவனிக்கத் தக்கது. சிப்பியின் வயிற்றுக்குள் நுழைந்து விடுகின்ற மணல் அங்கேயே தங்கி விடுகிறது. அது சிப்பியின் வயிற்றுக்கு ஒரு உறுத்தலாகவே எப்போதும் இருக்கிறது. மெல்ல மெல்ல அந்த மணலின் இயல்பு மாறத் துவங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் நிகழ்கிறது. அடுக்கடுக்காய் அதன் பளபளப்பு அதிகரிக்கிறது. கடைசியில் அந்த முத்தானது முழுமை அடைகிறது. முழுமை அடையாத முத்து வியாபாரியை வசீகரிப்பதில்லை.

நமது வாழ்க்கையில் நேர்கின்ற சோதனைகள் நமது இதயத்தில் மணல் துகளைப் போல, நெருஞ்சி முள்ளைப் போல உறுத்திக் கொண்டே இருக்கின்றன‌. அந்த சோதனைகளை இறைவனின் துணையுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வரும்போது நாம் ஆன்மீகத்தில் பலம் பெறுகிறோம். சோதனைகளைக் கண்டு விலகி ஓடாமல், சோதனைகளை சந்திக்கப் பயந்து அதை புறந்தள்ளாமல் தொடர்ந்து போரிட வேண்டும்.

நம்மை பாவத்திற்குள் விழவைக்கின்ற சோதனைகள், பிறரை பாவத்துக்குள் விழத் தூண்டும் சோதனைகள் அனைத்தையும் தூய ஆவியின் துணையுடன் நாம் எதிர்க்கும் போது நாம் இயேசுவைப் போல மாறத் துவங்குகிறோம். கடைசியில் சிப்பி உடையும்போது, தனது வாழ்க்கையை ஒப்படைக்கும் போது, அந்த அழகிய முத்து வெளிப்படுகிறது. அந்த அழகிய மாற்றத்தையே இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நமது வாழ்க்கை முத்தைப் போல பிரகாசிக்கிறதா ? நாம் சிப்பியாய் இருந்த போதே நம்மைத் தேர்ந்து கொண்ட இறைவனுக்கு நாம் முத்தைப் பரிசளிக்க ஆயத்தமாய் இருக்கிறோமா ? அந்த முத்துக்காக இறைமகன் எவ்வளவோ ஆவலாய் இருக்கிறார்.

இறைமகன் எனும் மகிமையை, விண்ணக வாழ்வின் ஆனந்தத்தை, தந்தையுடனே இணைந்திருக்கும் பரவசத்தை, புனிதரான அவருடைய தூய்மையை எல்லாவற்றையும் விட்டுத் தர தயாராய் இருந்தார். நமது பாவங்களை சுமந்து, நமது குற்றங்களுக்காக அவர் பாவியாகவே உருவம் எடுத்தார். எல்லாவற்றையும் இழந்து அவர் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நமது வாழ்க்கை முத்தைப் போல இருக்க வேண்டும் என்பதை !

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது.

வெறும் சிப்பியாய் வாழ்ந்து முடித்தால் விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் நிராகரிக்கப்படுவோம். நிலைவாழ்வு கிடைக்காமலேயே போய்விடும். பிறருடைய பார்வைக்கு மட்டும் முத்து இருப்பவர்களைப் போல நடித்து நடந்தாலும் இறைவனால் புறக்கணிக்கப்படுவோம். காரணம், இயேசு மட்டுமே அறிகிறார் முத்தின் உண்மையான தரத்தை.

இயேசுவின் உவமை நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறது.

1. பரிசுத்த ஆவியின் துணையுடன் நமது வாழ்க்கையை ஒரு விலையுயர்ந்த முத்தாக மாற்றுவோம்.
2. இறைவன் தந்த வாழ்க்கையை அவருக்கே ஒப்படைப்போம்.

விலையுயர்ந்த அந்த முத்தை இறைமகன் இயேசுவுக்கு ஒப்பிடுவோரும் உண்டு. எல்லாவற்றையும் விற்றும், எல்லாவற்றையும் விட்டும், இயேசுவைப் பற்றிக் கொள்ளும் மனம் வேண்டும் என்பதே அவர்கள் தரும் விளக்கம். உவமைகள் தரும் விளக்கத்தில் எது சரி, எது தவறு என்பது இல்லை. இறை வசனத்தை தூய ஆவியானவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விளக்குகிறார் என்று புரிந்து கொள்வதே சரியானது.

No comments:

Post a Comment