அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, August 15, 2018

இறைமகனின் அன்னை

இறைமகன் இயேசு, தாவீதின் ஊராகிய பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. கி.மு.8ஆம் ஆண்டில் அகுஸ்து சீசர் ஆணையிட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யூதேயாவில் நடைபெற்ற வேளையில், இயேசு பிறந்ததாக நற்செய்தியாளர் லூக்கா (2:1-7) குறிப்பிடுகிறார்.

இயேசுவின் பிறப்பு
இறைவாக்கினர் மீக்காவின் இறைவாக்கு நிறைவேறும் விதத்தில், நிறைமாத கர்ப்பிணியான மரியாவை கோவேறு கழுதை மீது அமர்த்திக் கொண்டு யோசேப்பு பெத்லகேமுக்கு சென்றார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்காததால், மாட்டுத் தொழுவம் ஒன்றில் தங்கினர். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் பெற்றெடுத்த பிள்ளையை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. விண்ணகத் தூதர் பேரணி, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது. மரியாவுக்கும் குழந்தைக்கும் தேவையான இதமானச் சூழலை யோசேப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதையறிந்த அப்பகுதி இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

மரியா இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். யோசேப்பு விரைவிலேயே ஒரு வீட்டை ஏற்பாடு செய்து, குழந்தையுடன் மரியாவை அங்கு அழைத்துச் சென்றார். செய்தி அறிந்த உறவினர்கள் பெத்லகேமுக்கு வந்து யோசேப்பையும் மரியாவையும் வாழ்த்தினர். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு, குழந்தைக்கு ‘இயேசு’ என்று யோசேப்பு பெயரிட்டார்.
மெசியாவின் தாய்
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது, யோசேப்பும் மரியாவும் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். ‘ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை’ என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
சிமியோன் கோவிலுக்கு வந்து குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என்றார். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார். அன்னா என்னும் இறைவாக்கினரும் அந்நேரத்தில் அங்கு வந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றி பேசினார்.

எகிப்தில் மரியா
பின்னர் பெத்லகேம் திரும்பிய யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் மகிழ்ச்சியாக நாட்களை செலவிட்டார்கள். அக்காலத்தில் கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவர் பெத்லகேமில் பிறப்பார் என்ற இறைவாக்கை அறிந்து ஞானிகளிடம் கூறிய ஏரோது, விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி அவர்களிடம் விசாரித்து உறுதிசெய்து கொண்டான்.
இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் போய், குழந்தையை தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பியோடிச் செல்லும்படி கூறினார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார். ஞானிகள் தன்னிடம் திரும்பி வராததால் சீற்றம் கொண்ட ஏரோது, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை கொன்றான். இதனிடையே எகிப்தை அடைந்த திருக்குடும்பம், ஒரு தச்சரின் வீட்டில் சுமார் ஏழு மாதங்கள் தங்கியிருந்தது.

No comments:

Post a Comment