குவாதலூப்பே அன்னை
நாள்: டிசம்பர் 12
வகை: விருப்ப நினைவு
பின்னணி
1531 டிசம்பர் 9 முதல் 12ந்தேதி வரை மெக்சிகோவின் குவாதலூப்பே பகுதியில், வாழ்ந்த யுவான் தியெகோ என்ற விவசாயிக்கு அன்னை மரியா காட்சி அளித்தார். “வாழ்வளிக்கும் உண்மை இறைவனின் கன்னித்தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் தாய்க்குரிய அன்பையும் கனிவையும் பொழிவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்” என அன்னை மொழிந்தார்.
அன்னையின் வேண்டுகோளை மெக்சிகோ ஆயரிடம் கொண்டு சென்ற யுவான் தியெகோவிடம், ஓர் அடையாளம் வேண்டுமென ஆயர் கேட்டார். ஆயரின் கோரிக்கையை தியாகோ கூறியதும், அங்கு பூத்திருந்த சில மலர்களை பறித்து செல்லுமாறு அன்னை மரியா பதிலளித்தார். அந்த மலர்களை பறித்து தமது தில்மாவில் (துண்டு) எடுத்து சென்ற தியெகோ, ஆயர் முன்பு கொட்டினார். அப்போது, அன்னையின் அழகிய உருவம் தியாகோவின் தில்மாவில் பதிந்திருந்த அற்புதத்தை இருவரும் கண்டனர்.
வரலாறு
அன்னை மரியாள் தியெகோவுக்கு காட்சி அளித்தது குறித்து கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி மக்கள், அந்த இடத்திற்கு திருப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். 1648ல் மிகுவேல் சான்கெஸ் என்ற மெக்சிகோ குரு, இந்த காட்சி குறித்த நூலை அச்சிட்டு வெளியிட்டார். மரியன்னை காட்சி அளித்த இடத்தில் 1622ஆம் ஆண்டு முதல் ஆலயம் கட்டப்பட்டது. 1754 மே 25ந்தேதி, இந்த காட்சி நம்பகத்தன்மை உடையது என திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அங்கீகாரம் வழங்கினார்.
திருத்தந்தை 13ம் லியோ வெளியிட்ட ஆணைக்கு ஏற்ப, 1895 அக்டோபர் 12ந்தேதி குவாதலூப்பே அன்னை உருவத்துக்கு மணிமுடி சூட்டப்பட்டது. இதையடுத்து அவர் ‘மெக்சிகோவின் அரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார். 1966 மார்ச் 25ந்தேதி திருத்தந்தை 6ம் பவுல், குவாதலூப்பே அன்னைக்கு தங்க ரோசா மலரை காணிக்கை செலுத்தினார். திருத்தந்தை 2ம் யோவான் பவுல், குவாதலூப்பே அன்னையை ‘அமெரிக்காக்களின் பாதுகாவலி’ என்றும், ‘லத்தீன் அமெரிக்காவின் பேரரசி’ என்றும் அறிவித்த்தார்.
No comments:
Post a Comment