அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, August 26, 2018

இறைத்திட்டத்தில் இயேசு

அனைத்தும் படைக்கப்படும் முன்பே, கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசு கிறிஸ்து இடம் பெற்றிருந்தார். ஆகவேதான், கிறிஸ்துவை ‘படைப்பனைத்திலும் தலைப்பேறு’ (கொலோசையர் 1:15) என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். கடவுளின் வாக்காக இருந்து, அவரது உருவமாக இவ்வுலகில் தோன்றிய இறைமகன் இயேசுவில் நம்பிக்கை கொள்வதே நிலைவாழ்வைப் பெறுகின்ற மீட்பின் வழி.

தொடக்க பாவம்

முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறியதே தொடக்க பாவம் என்று விவிலியம் உருவகமாக கூறுகிறது. படைப்பின் காரணரான கடவுளைப் புறக்கணித்து, படைப்பு பொருட்கள் மீது பற்று வைக்கத் தூண்டும் பாவ நாட்டத்தையே இது சுட்டிக் காட்டுகிறது. தொடக்க பாவத்தின் விளைவாக, மனச்சான்றில் ஒலிக்கும் கடவுளின் வார்த்தையைப் புறக்கணித்து, அலகையின் தூண்டுதலுக்கு பணிந்து பாவம் செய்யும் வகையில் மனித இயல்பு கறைபடிந்தது. ஆகவேதான், அலகையாகிய பாம்பை நசுக்கும் பெண்ணின் வித்தாக (தொடக்க நூல் 3:15) மீட்பரை அனுப்புவதாக கடவுள் வாக்களித்தார் என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

எதிர்பார்ப்புகள்

மனித குலம் தொடக்க பாவத்தால் வீழ்ந்திருந்தாலும், உண்மை கடவுளை அறியும் ஆர்வம் அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றது. இயற்கையையும் சிலைகளையும் மனிதர்கள் தெய்வங்களாக வணங்கினாலும், மதம் சார்ந்த பல்வேறு கதைகளில் கடவுளை பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கின்றன. கடவுள் மனிதராக இந்த உலகத்தில் பிறக்க வேண்டும், கடவுளிடமும் பிற மனிதர்களிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை மக்களுக்கு அவர் போதிக்க வேண்டும், மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தம்மையே அவர் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனைகளை அவற்றில் காண்கிறோம். தொடக்க நூல் குறிப்பிடும் கடவுளின் வாக்குறுதி, மனிதரின் மனங்களில் தொடர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறலாம்.

இஸ்ரயேலர்

கடவுள் மனிதராக பிறப்பது குறித்து மனிதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஆபிரகாம் வழியாக ஓர் இனத்தை தேர்ந்தெடுத்து, தமது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற கடவுள் களமிறங்கினார். ஆபிரகாமின் வழிமரபிலேயே உலக மீட்பர் தோன்றுவார் என்று கடவுள் வாக்களித்தார்: “உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” (தொடக்க நூல் 22:18). ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற குலமுதுவர்களின் வழியாக தேர்ந்தெடுக்கப் பெற்ற மக்களினமாக இஸ்ரயேலர் உருவாயினர். இருக்கின்றவராகிய ஒரே கடவுளை வழிபட்டு, அவரால் வழிநடத்தப் பெற்ற மக்களிடம் இருந்தே இறைமகன் இயேசு உலக மீட்பராக தோன்றுவது கடவுளின் திட்டமாக இருந்தது.

முன்னறிவிப்புகள்

அருட்பொழிவு பெற்ற அரசராக இறைமகன் உலகில் தோன்றுவார் என்று இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் போதித்தனர். வலிமைமிகு இறைவனே அமைதியின் அரசராக பிறப்பார் என்று இறைவாக்கினர் எசாயா (9:6) முன்னறிவித்தார். இஸ்ரயேலை கடவுளின் சார்பாக ஆளப்போகின்றவர் பெத்லகேமில் பிறப்பார் என்று மீக்கா (5:2) இறைவாக்கு உரைத்தார். அவர் கலிலேயா நாடு ஆகிய பகுதியின் சுடரொளியாக விளங்குவார் (9:2), அவர் ஒரு போதகராக மக்களை வழிநடத்துவார் (30:20), அற்புதங்கள் செய்வார் (35:5), மனிதர்களின் குற்றங்களுக்காக தம்மை பலியாக்குவார் (53:5) என்று எசாயா நூலில் காண்கிறோம். ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என்ற தாவீதின் திருப்பாடல் (22:16) வார்த்தைகளும் இறைமகனின் பாடுகளை முன்னறிவிக்கின்றன. இறைவாக்கினர்கள் ஆமோஸ் (8:9-10), செக்கரியா (12:10) ஆகியோரும் இயேசுவைப் பற்றிய இறைத்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மனிதரான கடவுள்

“கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கே இயேசு கிறிஸ்துவில் மனிதரானார்; அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் மாட்சியைப் பெற்றிருந்தார்” என்று திருத்தூதர் யோவான் (1:1,14) குறிப்பிடுகிறார். கடவுள் மனிதராக பிறந்தார் என்பதன் பொருள் என்ன? “கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்” (பிலிப்பியர் 2:6-7) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். அதாவது, மகனாகிய கடவுள் தமது மாட்சியைத் துறந்து, மனித நிலைக்குத் தம்மையே தாழ்த்தினார் என்பதே இதன் பொருள். கடவுளின் வாக்கானவர் தமது இறை பொருள்மையில் இருந்தபோதே, தூய ஆவியாரின் வல்லமையால் மனித உடலை ஏற்றார். ஆகவே, இயேசு கிறிஸ்து என்ற ஒரே ஆளில், இறைத்தன்மை, மனிதத்தன்மை என்ற இரு இயல்புகளும் எவ்வித குறைவுமின்றி முழுமையாக உள்ளன. கடவுளைப் புறக்கணித்ததால் விளைந்த தொடக்க பாவம், கடவுளின் உருவமாகிய இயேசுவில் நம்பிக்கை கொள்வதால் நீக்கப்படுகிறது.

இறை மீட்பர்

இவ்வுலகில் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற கடவுளின் உருவமாக தோன்றிய இயேசு கிறிஸ்து, “மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்” (மாற்கு 10:45) என்று கூறினார். முதலில் சீடர்களால் புரிந்து கொள்ளப்படாத இந்த வார்த்தைகள், இயேசு இறந்து உயிர்த்த பிறகே உண்மையாக ஏற்கப்பட்டன. மகனாகிய கடவுள் வழியாக படைக்கப்பட்ட இந்த உலகம், அவர் வழியாகவே மீட்கப்பட வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பமாக இருந்தது. ஆகவேதான், “இவ்விறுதி நாள்களில் கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களில் இருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” (எபிரேயர் 1:2-3) என்று விவிலியம் கூறுகிறது.

அரசாட்சி

இஸ்ரயேலில் தோன்றிய இறைவாக்கினர்கள் முன்னறிவித்த அருட்பொழிவு பெற்ற அரசர் (மெசியா) இயேசுவே என்று அவரது சீடர்கள் நம்பினர். இயேசுவின் உயிர்ப்பே அவரது அரசாட்சியின் தொடக்கமாக அமைந்தது. “நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” (திருப்பாடல்கள் 110:1) என்ற ஆண்டவரின் வார்த்தைகள் இயேசுவைக் குறித்த இறைத்திட்டமே. கடவுளின் அரசை இவ்வுலகில் நிறுவும் பணியைத் தம் சீடர்களிடம் வழங்கிய தலைவர் இயேசு, அது நிறைவேறும் வரையில் தந்தையாம் கடவுளின் மாட்சியில் இருக்கிறார். உலக முடிவில் அவர் மீண்டும் வரும்போது, மனித குலம் முழுவதையும் ஆட்சி செய்யும் மாவேந்தராக இருப்பார். அப்பொழுது, புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் தோன்றும். அவரது ஆட்சிக்கு முடிவே இராது.

No comments:

Post a Comment