1. இறையியல் பார்வையில் அருங்காட்சிகள்
அருங்காட்சிகள் பற்றிய ஐயப்பார்வை
அருங்காட்சிகள் என்றவுடன் இரு வித்தியாசமான நிலைப்பாடுகள் நம் எண்ணத்திற்கு வருகின்றன.
ஏழை, எளிய, வெகுஜன மக்கள் அருங்காட்சிகளை வெகுவாக நம்புகிறார்கள். அத்தகைய அருங்காட்சித் திருத்தலங்களுக்கு லட்சக்கணக்கில் திருப்பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தக் காட்சித் தலங்களில் தங்களையே மறந்து செபிக்கிறார்கள். அக்காட்சித் திருத்தலங்களில் தரப்பட்டுள்ள செய்திகளை தங்கள் வாழ்வுச் செய்தியாக ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய எளிய மக்களின் மனநிலை, ஆன்மீக உணர்வு மிகுந்த இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமன்று, 'கடவுள்' காட்சிப் பொருளாகிக் கொண்டிருக்கக் கூடிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் அன்னையின் அருங்காட்சித் திருத்தலங்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். பேராலயங்களெல்லாம் கண்காட்சிக் கூடமாக மாறிக் கொண்டிருக்கின்ற ஐரோப்பிய நாடுகளில் லூர்துநகர், பாத்திமா போன்ற அன்னையின் காட்சித் திருத்தலங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏழை, எளிய மக்களின் புகலிடங்களாக அன்னையின் காட்சித் திருத்தலங்கள் காட்சி தருகின்றன.
அதே சமயம் இத்தகைய காட்சித் திருத்தலங்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளும், செய்திகளும் பல சிந்தனையாளர்கள் மற்றும் இறையியலார்களிைேடயே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. விமர்சனக் கண்ணோட்டத்தோடு நோக்கும் சிந்தனையாளர்கள் நாத்திக மனப்பான்மையின் காரணமாக அவ்வாறு செய்வதில்லை. மாறாக, விசுவாசப் பார்வையே அவர்களை சற்று விமர்சனக் கண்ணோட்டத்தோடு உற்று நோக்க வைக்கிறது. இவர்களது விமர்சனக் கேள்விகளுக்கு ஒருசில அடிப்படைக் காரணங்கள் உண்டு. அருங்காட்சிகள் பற்றிய அறிவியல் உண்மை , அருங்காட்சித் திருத்தலங்களில் காணப்படும் பரவசமூட்டும் பக்தி முயற்சிகள், விவிலிய மரியாவின் மரியா பற்றிய மரியியல் ஆகியவை இவர்களை
இவர்களை அருங்காட்சிகளை ஐயக் கண்கொண்டு பார்க்க வைக்கின்றன.
எனவே அருங்காட்சிகள் பற்றிய அறிவியல், விசுவாச உண்மைகளை முதலில் அறிந்து கொள்வது அருங்காட்சிகளை உரிய விதத்தில் மதிப்பிட உதவியாக அமையும்.
புதிய ஏற்பாட்டில் காட்சிகள்
பொதுவாக அறிவுத்திறனை வளர்த்து, அறிவின் வழி உலகை உற்று உரத்தம் பண்பு கொண்டோர்க்கு காட்சி அனுபவம் கிடைக்கப்படாது. கட்சி காணும் பேறு குழந்தை உள்ளம் கொண்டோர்க்கும், காணமலேயே நம்பும் பேறு பெற்றோர்க்கும் (யோவா 20:29) கிடைக்கும் பேறு ஆகும்.
ஒழுக்க இறையியல் காட்சிகளை மறுக்கிறது. காட்சி அனுபவ இறையியல் (Mystical Theology) காட்சிகளை ஏற்கிறது. காட்சி அனுபவ இறையியல் காட்சி அனுபவத்தை ஆழ்ந்த விசுவாசத்தின் கனியாகக் கருதுகிறது. நம்பிக்கை (விசுவாசம்) என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை ” (எபி 11:1).
மத்தேயு, லூக்கா நற்செய்தியாளாகள் குழந்தைப் பருவ நிகழ்ச்சியுரைகளில் யோசேப்பு, மரியா, சக்கரியாஸ் ஆகியோர் காட்சி கண்டதாகக் கூறுகின்றனர். இயேசு, . சாத்தான் மின்னல் போல விழக் கண்டார். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியை உடன் இருந்த திருத்தூதர்கள் கண்டார்கள். இயேசுவின் உயிர்ப்புக் காட்சிகளையும் அவருடைய சீடர்கள் கண்டார்கள். பவுலின் மனமாற்றம் காட்சியின் வழியாக நிகழ்ந்ததாக திருத்தூதர்பணி (அலகு 9) கூறுகிறது. புறவினத்தாருக்கும் கிறிஸ்தவம் உரியது என்ற உண்மையை கடவுள் ஒரு காட்சி வழியாக (திப 10) பேதுருவுக்கு உணர்த்துகிறார். இவ்வாறு புதிய ஏற்பாடு பல்வேறு காட்சிகள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்கின்றது.
திருச்சபை மரபில் காட்சிகள்
திருச்சபையின் வரலாற்றில் பல்வேறு காலக் கட்டங்களில் இயேசு, புனிதர்களின் அருங்காட்சிகள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காட்சிகளில் அதிகம் அறிமுகமானவை மரியன்னையின் காட்சிகள். இருப்பினும், தூய மார்க்கரீத் மதியாபுக்கு இயேசு தந்த காட்சி, பிரான்சிஸ் அசிசியார் கண்ட காட்சிகள், குழந்தை தெரசா கண்ட காட்சி, புனித யோசேப்பு கொடுத்த காட்சிகள் போன்றவை பற்றியும் செய்திகள் உள்ளன. இக்காட்சிகளில் திருச்சபையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை மரியன்னையின் காட்சிகள் என்றால் அது மிகையாகாது. மரியன்னை கொடுத்ததாகச் சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் திருச்சபையால் அங்கீகரிக்கப்படவில்லை. நீண்ட ஆழ்ந்த ஆய்விற்குப் பிறகே காட்சிகள் திருச்சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. காட்சிகளைப் பொறுத்த அளவில் திருச்சபை தொடக்கம் முதல் மிகுந்த நிதானத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது.
காட்சிகள் மதிப்பிழப்பிற்கான காரணங்கள்
இரண்டாவது நூற்றாண்டில் காட்சி காணும் கொடை பெற்றிருந்தவர்கள் தங்களின் காட்சிகளினால் கிறிஸ்தவச் செய்தியின் ஒருமைப்பாட்டு தன்மையைப் பாதித்தனர்.
பல்வேறு சமயங்களில் திருச்சபையின் அதிகாரம் காட்சியாளர்கள் முன் வைக்கும் செய்திகளால் பாதிப்பிற்குள்ளாகலாம். ஆன காட்சியாளர்களும் திருச்சபை அதிகாரிகளை விமர்சித்து உள்ளனர். காட்சியாளர்கள் அதிகாரம் பெறும்போது, மக்களிடையே நிறுவனத் திருச்சபையின் அதிகாரம் குறைய வாய்ப்புள்ளது' என்று கார்ல் ரானர் குறிப்பிட்டுள்ளார்.
காட்சி தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்போது அவை கட்டுப்பாடின்றி பரவக்கூடிய வாய்ப்புள்ளது. காட்சியாளர்களின் ஒழுக்க நேர்மையைக் கணிக்கும் வாய்ப்பில்லாததால் அவை தவறான நபர்களிடமிருந்து வர வாய்ப்பிருக்கிறது.
மேற்கூறப்பட்ட காரணங்களோடு சில தத்துவங்களும், தங்கள் தத்துவப் பின்னணியின் அடிப்படையில் காட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை. பகுத்தறிவுவாதம் விண்ணகம், மண்ணகத்திற்கிடையே உள்ள தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. அதன் காரணமாக அங்கு காட்சிக்கு இடமில்லை. அதேபோன்று அறிவியல்வாதம் காட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவை காட்சிகளை - மாயக் காட்சி அல்லது மருட்சி என்று குறிப்பிடுகின்றன.
அருங்காட்சிகள் பற்றிய உண்மை நிலை
அறிவியல், தத்துவ இயல்கள் அருங்காட்சிகள் குறித்து எதிர்மறையிலோ, ஐயுறவிலோ தரும் பதில்கள் அருங்காட்சிகள் பற்றிய இறுதிப் பதிலாக அமைய இயலாது. அருங்காட்சிகள் விசுவாசம், இறையியல் சார்ந்த ஒரு சிந்தனைப் பொருள். இறையியல் மற்ற அறிவியல்களோடு முற்றிலும் முரண்படாத வகையில் தனது ஆய்வுப் பொருளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் தனது துறை சார்ந்த சிந்தனைப் பொருளைத் தனது அளவுகோல் கொண்டு கணித்து வழங்கவேண்டும்.
பழைய ஏற்பாட்டில் யோவேல் இறைவாக்கினர் “உங்கள் புதல்வரும், புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையம் காண்பார்கள் (யோவே 2:28) என்று அறிவித்தார். புனித பவுல் "தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளை புறக்கணிக்க 'வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள்' (1 தெச 5:19-21) என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அறிவியல், இறையியல் ஆய்வுகளின் அடிப்படையில் அருங்காட்சிகள் நிகழ்வது சாத்தியமே. அவை இறை மனித உறவின் சந்திப்புகள். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வோ, செய்தியோ இயற்கையாவது அல்லது இயல்பாவது அருங்காட்சியாகும்.
மரியன்னையின் காட்சிகள்
பெனே லொரந்தன் என்ற சிறந்த சிந்தனையாளர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மரியன்னையின் அருங்காட்சிகள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்கிறார். அன்னையின் காட்சிகள் வழியாக இயேசு உலகில் தம் ் அன்னைக்குரிய இடத்தை வெளிப்படுத்துகிறார். அன்னையின் கென் அங்கீகாரம் பெறுவதற்கு அக்காட்சிகள் ஒரு சில முக்கிய அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.
1. அன்னையின் காட்சிகள் இயேசுவிடமிருந்து ஒரு செய்தியை வழங்க வேண்டும்.
2. இயேசுவோடு அல்லது மீட்புத்திட்டத்தோடு சம்பந்தம் அற்றவையாய் இருக்கக்கூடாது.
3. மீட்புத் திட்டத்தின் தொடர்ச்சியை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
4. வரலாற்றுத் திருப்பத்தைச் சுட்டிக் காட்டி உலகையும், மனுக்குலத்தையும் இயேசுவிடம் இட்டுச் செல்பவையாக இருக்க வேண்டும்.
5. கிறிஸ்தவ அடிப்படை விசுவாசக் கூறுகளுக்கு முரண்பட்டவைகளாக அமைதல் கூடாது.
6. இறுதியாக, இலை செய்தியற்ற காட்சிகளாகவோ, மக்களை மாயை அல்லது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்பவையாகவோ அமைதல் கூடாது.
இந்த நிபந்தனைகளை சரியாகப் பூர்த்தி செய்து, திருச்சபையின் மீட்புத் தொடர் பணிக்கு துணை செய்வதாக அமையும் காட்சிகள் திருச்சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. அருங்காட்சிகளின் அங்கீகாரத்திற்கு அரும் அடையாளங்கள் தேவைப்படுவது அக்காட்சி இறை செயல்பாட்டின் விளைவு என்பதனை நிரூபிப்பததற்காகவே.
திருச்சபையால் வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அருங்காட்சிகள் அனைத்தும் மேலே கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளன. மரியன்னை வழங்கியுள்ள காட்சிகள் கிறிஸ்தவ விசுவாச அடிப்படையிலும், இறையியல் - விசுவாச விமர்சனத் திறனாய்வு அடிப்படையிலும் மனுக்குலத்தின் மீட்பிற்கு உதவும் இறை - மனித சந்திப்பின் சின்னங்களாகவும், திருச்சபையை அலங்கரிக்கும் அணிகலன்களாகவும் அமைந்துள்ளன.
2. அன்னையின் அருங்காட்சித் திருத்தலங்கள்
மரியன்னை மக்கள் வாழ்வில் கொண்டுள்ள தாக்கத்தைத் துல்லியமாக னைவரும் உணரச் செய்யும் இடங்கள் அவரது திருத்தலங்கள், பொதுவாக கத்தோலிக்கக் கோவிலை மாதா கோவில்கள் என்றே பிறர் அழைத்து அடையாளம் காட்டும் நிலை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. கத்தோலிக்க ஆலயங்களில் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஆலயங்களே ஏராளம். இவற்றில் அன்னையின் திருத்தலங்கள் மக்களை அன்றாடம் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் ஈர்ப்பதைக் காண்கிறோம். அன்னையின் திருத்தலங்களை மூன்று வகைப்படுத்தலாம்
(1) அன்னையின் திருவுருவம் போற்றும் திருத்தலங்கள்;
(2) அன்னையின் காட்சி திருத்தலங்கள்
(3) காட்சி நினைவுத் திருத்தலங்கள்.
திருவிவிலியம், கிறிஸ்தவ மரபு இவற்றைவிட மக்கள் மத்தியில் மரியாவை இனம் காட்டி எளிய முறையில் அவரின் பக்தியை அதிகம் உருவாக்கியிருப்பது அவருடைய காட்சிகள். 19,20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காட்சிகள் அதிகமாக மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிரான்ஸ் நாட்டில் சலேத் நகர் (1846), லூர்து நகர் (1858), போந்துமென் (1871); போர்த்துகல் நாட்டில் பாத்திமா (1917); பெல்ஜியத்தில் போரெங் (1932) மற்றும் மெக்சிகோவில் குவாதலூப்பே (1531). இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்றுள்ள அன்னையின் காட்சித் திருத்தலம் வேளாங்கண்ணி. இது மற்றத் திருத்தலங்களை விட காலத்தால் பழமையானதாகவும் பிற சமயத்தவரை அதிகம் ஈர்க்கின்ற திருத்தலமாகவும் சிறந்து விளங்குகிறது.
மரியன்னையின் காட்சிகள் மரியா பக்தியைப் பெரிதும் வளர்ப்பவை. அக்காட்சித் திருத்தலங்களில் மக்களின் மன்றாட்டுக்கள் கேட்கப்படுவதும், அவர்கள் உடல், உள்ள பிணிகளிலிருந்தும் சுகம் பெறுவதும், மரியா பக்தி வளர்வதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மரியாவின் காட்சிகள் அடிப்படையில் அவரின் திருமகன் இயேசுவோடும், திருச்சபையோடும் தொடர்புள்ள செய்திகளை வழங்குவதற்காகவே அமைந்த காட்சிகளாக உள்ளன. மனித குல மீட்பில் மரியா கொண்டுள்ள தொடர் ஈடுபாட்டை இக்காட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.
அருட்பணி. மதுரை ஆனந்த்
No comments:
Post a Comment