"இயேசு, 'உங்களுள்
பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்' என்றார்" (மத்தேயு 23:11)
-- பணிசெய்வதையே தம் வாழ்க்கைக்
குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை;
பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல்
அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ பிரும்பவுமில்லை. மாறாக, இயேசு
தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார். எனவே, உண்மையான
சிறப்பு நாம் பிறருக்குத் தொண்டாற்றுவதிலிருந்து பிறக்கவேண்டும். ரபி (போதகர்),
தந்தை, ஆசிரியர் போன்ற பட்டங்கள் தம்மிலே தவறு
என இயேசு கூறவில்லை. ஆனால் இத்தகைய பெயர்களைச் சொல்லி மக்கள் நம்மை அழைக்கிறார்கள்
என்பதால் தற்பெருமை கொள்வதோ அதனால் பிற மனிதரைவிடவும் நம்மை உயர்ந்தவர்களாகக்
கருதுவதோ தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு விடுத்த எச்சரிக்கை
திருச்சபைக்கும் திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் தனிப்பட்ட
விதத்தில் பொருந்தும். மத்தேயு காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம் இதை
அறிந்திருந்தது.
-- இன்றைய திருச்சபையும் பணிசெய்யும்
சமூகமாகத் திகழவேண்டும். திருச்சபை பல பணிகளை ஆற்றுவது உண்மைதான். என்றாலும்
அப்பணிகளில் ஈடுபடும்போது இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். கடவுளின்
ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருப்பதை அறிவித்த இயேசு அந்த ஆட்சியில் நாம் புக
வேண்டும் என்றால் பணிசெய்யும் மனநிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என நம்மிடம்
கேட்கின்றார்,
மன்றாட்டு
இறைவா, பிறருக்குப்
பணியாற்றும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.
No comments:
Post a Comment