இரு சகோதரர்கள்
மத்தேயு 21 : 28 -32
மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.
அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார்.
அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” என்றார்.
விளக்கம்:
இயேசு இந்த உவமையை யூதர்களைப் பார்த்துக் கூறுகிறார். யூதர்கள், தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினம் என்றும், விண்ணக வாழ்க்கை என்பது அவர்களுடைய உரிமை என்றும் நம்பிக்கொண்டிருந்தனர். அதனால் அவர்களால் திருமுழுக்கு யோவானையோ, இயேசுவையோ ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. தங்களது நீதியே தங்களைக் காப்பாற்றும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.
இந்த சூழலில் தான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார். யூதமக்கள் கடவுளின் குரலை முதலிலேயே கேட்டவர்கள். செய்கிறேன் என சொல்லிவிட்டு செய்யாமல் போன மக்கள். இறைவாக்கினர்கள் மூலமாக தொடர்ந்து இறைவன் இந்த மக்களோடு பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவர்களோ இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல், பெயரளவுக்கு வாழ்பவர்கள். பாரம்பரீயச் சடங்குகளும், வெளிப்புறமான செயல்களும் தங்களை மீட்கும் எனும் தவறான எண்ணம் கொண்டவர்கள்.
பிற இன மக்கள் அழைப்பை எதிர்பாராதவர்கள். அவர்களுக்கு அழைப்பு வந்தபோது அதை முதலில் எதிர்க்கின்றனர். பின்னர் மனம் மாறி இறைவனை நாடுகின்றனர். அவர்கள் இறையரசில் நுழைவார்கள் என்கிறார் இயேசு.
இந்த உவமை, பல உண்மைகளை நமக்கு விளக்குகிறது.
1. இரண்டு விதமான மக்களைப் பற்றி இயேசு பேசுகிறார். இருவருக்குமே அழைப்பு தனித்தனியே விடப்படுகிறது. இருவரையும் தனித்தனியே சென்று அழைக்கிறார் தந்தை. இருவருமே அழைப்புக்கு பதில் சொல்கின்றனர். ஒருவர் சரி என்கிறார், இன்னொருவர் இல்லை என்கிறார். அழைப்பு விடுக்கப்படும் போது நாம் அழைப்பை கேட்பவர்களாகவும், அதற்கு பதில் சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும். நமக்கான அழைப்பு நமக்கு தனியே கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வேண்டும்.
2. என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ( மத்தேயு 7:21) என்கிறார் இயேசு. வெறும் வார்த்தைகளால் இறைவனை திருப்திப் படுத்த முடியாது. நமது செயல்களினால் மட்டுமே அவரை மகிமைப்படுத்த முடியும். செயலற்ற வார்த்தைகள் செத்த வார்த்தைகளே.
3. இன்னும் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. மூன்றாவது வகையினர் அழைப்பைக் கேட்டு “நான் போக விரும்பவில்லை” என்பார். அவர் போகவும் மாட்டார். அதாவது இறைவனை நிராகரிப்பவர். தனது பதில் இறைவனை வருத்தத்தில் ஆழ்த்தினாலும் கவலையில்லை என நினைப்பவர். இவருக்கு இறைவிசுவாசமும், அன்பும் துளியும் இல்லை. இந்த வகை மனிதர்கள் விண்ணரசில் நுழைவதில்லை.
4. நான்காவது வகையினராக, “நான் போகிறேன் ஐயா” என்று சொல்லிவிட்டு, அதன் படி போகிறவரை எடுத்துக் கொள்ளலாம். அழைப்பைக் கேட்டதும், “இதோ போகிறேன்” என்று புறப்பட்ட ஆபிரகாமைப் போலவோ, அழைப்பை ஏற்று ‘இதோ ஆண்டவரின் அடிமை’ என தன்னைத் தாழ்த்திக் கொண்ட மரியாவாகவோ இந்த வகையினரை நினைக்கலாம். அழைப்பை ஏற்பதும், அதன்படி பணிசெய்வதும் உன்னதமான நிலை. இது ஆன்மீகத்தின் உயர்நிலை எனலாம்.
5. போகமாட்டேன் என சொல்லிவிட்டுச் செல்பவர், பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். அதற்கு முக்கியக் காரணம் அவர் தனது தந்தையின் அன்பைப் புரிந்து கொண்டது தான். தனது அன்பான தந்தையின் மனதை காயப்படுத்த வேண்டாம் என நினைத்து தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவர் பணிக்குச் செல்கிறார். அதுவரை தனக்கு முக்கியம் என நினைத்திருந்த மற்ற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தந்தையின் பணியைச் செய்யச் செல்கிறார். இந்த மகன் இறைவனின் பார்வையில் ஏற்புடையவனாய் இருக்கிறார். காரணம், இயேசுவின் அழைப்பு அவரை பணி செய்யத் தூண்டுகிறது. இயேசுவின் அழைப்பு மற்ற பணிகளை ஒதுக்கி வைக்க தூண்டுகிறது.
6. போகிறேன் என சொல்லி விட்டுப் போகாமல் இருப்பவர் அழைப்பை அலட்சியப்படுத்துபவர். அவருக்கு தந்தையின் பணியை விட தனது சொந்த பணியே முக்கியமாய் இருக்கிறது. விண்ணகத் தேடலை விட மண்ணகத் தேடலே முதன்மையாய் இருக்கிறது. தந்தையை மேம்போக்காக நேசிப்பவர் இவர். வேறு எந்த வேலையும் இல்லாவிட்டால் போய் தந்தையின் வேலையைச் செய்யலாம் என நினைப்பவர் இவர். இத்தகைய மக்கள் இறைவனை மகிமைப்படுத்துவதில்லை. இறைவனுக்கு ஏற்புடையவர் இவர் அல்ல.
7. இறைவன் தனது மக்களை நேசிக்கிறார். அதே வேளையில் அவர்கள் தனது தோட்டத்தில் பணி செய்ய வேண்டும் என விரும்புகிறார். ஏதோ ஒரு பணியைச் செய்வதல்ல நமக்கான அழைப்பு. இறைவனின் தோட்டத்தில் பணி செய்வது. அவரது வார்த்தைக்குக் கட்டுப்படுவதும், அவர் அமைத்த இறையரசுப் பணிகளில் நாம் ஈடுபடுவதுமே தேவையானது.
8. எளியவர்கள் என நாம் யாரையும் ஒதுக்கக் கூடாது. நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதாலேயே நாம் விண்ணரசுக்கு தகுதி உடையவர்கள் ஆவதில்லை. அல்லது, அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாலேயே நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. அந்த அழைப்பைக் கொண்டு எப்படி செயலாற்றுகிறோம் என்பதை வைத்தே நமது வாழ்க்கை அளவிடப்படும்.
9. உலக வழக்கத்தின்படி “சொன்ன பேச்சைக் காப்பாத்தணும்” என்பார்கள். இயேசு புதிய போதனையைச் சொல்கிறார். சொன்ன பேச்சு மீறப்படுவது நல்லது. அந்த மீறுதல், இறைவனுக்கு ஏற்புடைய செயலைச் செய்வதற்காய் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
10. இறைவனின் அழைப்பு உடனடியாய் செயல்பட வேண்டிய அழைப்பு. “இன்று” திராட்சைத் தோட்டத்திற்குப் போய் வேலை செய் என்கிறார். அழைப்பு என்பது ஆறப் போடுவதல்ல. நமது விருப்பமான நேரத்தில் செய்வதல்ல. உடனடியாய் செயல்படுத்துவது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம். இறைவனின் அழைப்பை ஏற்று அவர் பணிகளில் ஈடுபடுவோம்.
No comments:
Post a Comment