நாள்: ஜூலை 16
வகை: விருப்ப நினைவு
கர்மேல் துறவி ஒருவருக்கு அன்னை மரியாள் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் ஜூலை 16ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.
இறைவாக்கினர் எலியா வாழ்ந்த கர்மேல் மலைப் பகுதியில், சிலுவைப் போர் நடைபெற்ற காலத்தில் துறவிகள் சிலர் தஞ்சமடைந்தனர். பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த கர்மேல் துறவிகள் அன்னை மரியாளின் பாதுகாப்புக்காக மன்றாடினர். இந்நிலையில், அவர்களது சபைத் தலைவரான புனித சைமன் ஸ்டோக் 1251 ஜூலை 16ந்தேதி அன்னை மரியாளின் காட்சியைக் கண்டார். ‘பழுப்பு உத்தரியம்’ என்று அழைக்கப்படும் ‘கர்மேல்’ உத்தரியத்தை அவருக்கு அறிமுகம் செய்த அன்னை, அதை அணிவோர் பாதுகாப்பு பெறுவார்கள் என்று வாக்களித்தார்.
வரலாறு
ஆன்மாக்களின் மீட்புக்கும் கர்மேல் உத்தரியம் உதவும் என்று அன்னை உறுதி கூறியதால், அந்த பக்தி வேகமாக பரவியது. கர்மேல் உத்தரியத்தை அணிவோர், இறந்தவுடன் முதலில் வரும் சனிக்கிழமைக்குள் உத்தரிப்பிட வேதனையில் இருந்து விடுபடும் வகையில் ஞானப்பலன் பெறுவர் என்று திருத்தந்தை 22ம் யோவான் ஆணை வெளியிட்டார். இதையொட்டி, 1383ல் கர்மேல் உத்தரிய விழா கொண்டாடும் வழக்கம் உருவானது. இந்த திருநாள், 1726ஆம் ஆண்டு கர்மேல் அன்னை விழா என பெயர் மாற்றம் பெற்றது. 1969ல் சீரமைக்கப்பட்ட திருச்சபை நாள்காட்டியில், கர்மேல் அன்னை திருநாள் விருப்ப நினைவாக உள்ளது.
No comments:
Post a Comment