நாள்: செப்டம்பர் 12
வகை: விருப்ப நினைவு
பின்னணி
கடவுள் அனுப்பிய வானதூதர் கன்னி மரியாளை, “அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” (லூக்கா 1:28) என்று வாழ்த்துகிறார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; என் ஆண்டவரின் தாய்” (லூக்கா 1:42) என்று குறிப்பிடுகிறார். ‘மரியாளிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு’ (மத்தேயு 1:16) என நற்செய்தி எடுத்துரைக்கிறது. இத்தகைய பெருமைக்குரிய இறையன்னை மரியாளின் பெயரை இந்த திருநாள் மகிமைப்படுத்துகிறது.
வரலாறு
கி.பி.1513 செப்டம்பர் 15ந்தேதி, ‘மரியாளின் தூய பெயர்’ விழா ஸ்பெயின் நாட்டின் குயென்கா பகுதியில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. 1587ஆம் ஆண்டு, திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் இந்த விழாவை செப்டம்பர் 17ந்தேதிக்கு மாற்றினார். 1622ல், தொலெடோ உயர்மறைமாவட்டம் முழுவதும் மரியாளின் தூய பெயர் விழாவை சிறப்பிக்க திருத்தந்தை 15ம் கிரகோரி அனுமதி அளித்தார். 1671ஆம் ஆண்டு, ஸ்பெயின் அரசுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இவ்விழா கொண்டாடப்பட்டது.
1683ல் துருக்கியருக்கு எதிராக நடைபெற்ற வியன்னா போரில், அன்னை மரியாளின் உதவியால் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதற்கு நன்றியாக, திருத்தந்தை 11ம் இன்னொசென்ட் இந்த திருநாளை விழாக்களின் நாள்காட்டியில் இணைத்தார். மரியாளின் பிறப்பு விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கும் வகையில் அவர் ஏற்படுத்திய விழாவை, 1911ல் திருத்தந்தை புனித 10ம் பியுஸ் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றினார். 1969ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் நீக்கம் செய்த இந்த விழாவை, 2002ல் புனித 2ம் யோவான் பவுல் விருப்ப நினைவாக மீண்டும் இணைத்தார்.
No comments:
Post a Comment