சலேத் நகர்
பிரான்ஸ் நாட்டில் லா சலேத் என்னும் சிற்றூரில் 1846ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19 ஆம் நாள் மாக்ஸிமின் ஜீரோ (வயது 11), மெலானி மத்தியூ (வயது 14) ஆகிய இரு சிறுவர்கள் மரியன்னையைக் காட்சியில் காண்கிறார்கள். அழகிய ஒளியால் சூழப்பட்ட அழகிய நாயகி ஒரு கல்மேல் அமர்ந்து அழுது கொண்டிருக்கின்ற காட்சியைக் காண்கிறார்கள். ஆறாத் துயரத்தில் அமர்ந்திருந்த அன்னை மக்கள் தங்கள் பாவங்களால் அவரது திருமகனின் கரத்தைக் கடினப்படுத்துவதாகவும், இந்நிலை மாறாவிட்டால் மனுக்குலத்திற்கு பெரிய அழிவு ஏற்படும் என்றும் எச்சரித்தார். அன்னை சுட்டிக் காட்டிய பாவங்கள் - ஞாயிற்றுக் கடனை அனுசரிக்காமை, கெட்ட வார்த்தைகளால் இறைவனைப் பழித்து ஆணையிடுதல், தபசுகால சுத்த போஜனக் கடனைக் கடைப்பிடியாமை ஆகியவை ஆடும் இப்பாவங்களினால் ஏற்கனவே பசியாலும் பட்டினியாலும் தண்டிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி மக்கள் உடனே மனந்திரும்ப சலேத் நாயகி அறைகூவல் விடுக்கிறார். மக்கள் மனந்திரும்புவார்களேயானால் பாறைகள் கோதுமைக் குவியல்களாக மாறும். பயிர் செய்யாமலே உருளைக்கிழங்குகள் விளையும் என்று ஆறுதல் வார்த்தைகளையும் வழங்கினார். காட்சி பெற்ற பிள்ளைகளை மக்கள் மனந்திரும்ப அவர்கள் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
சலேத் நாயகியின் செய்தி
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது: மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற் 1:15) என்ற இயேசுவின் பொதுப்பணி முழக்கமே சலேத் நகரில் காட்சி தந்த அன்னையின் செய்தியாகவும் அமைகிறது. மனந்திரும்பாவிடில் அழிந்துபோவீர்கள் என்ற இயேசுவின் எச்சரிக்கை அவருடைய அன்னை வழியாக திரும்பவும் நமக்குத் தரப்படுகிறது. பாவம் மூன்று வகை அந்நியமாக்குதலை நிகழ்த்துகிறது. பாவத்தின் காரணமாக மனிதன் இறைவனிடமிருந்தும், பிறரிடமிருந்தும் தன்னிடமிருந்தும் அந்நியப்படுத்தப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுதல் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு. உறவற்ற வாழ்வு, செத்த வாழ்வு, உயிருள்ள வாழ்வு வாழ்ந்திட, வாழ்வை நிறைவாய்ப் பெற்றிட மனிதன் பாவத்தை விட்டொழித்து புண்ணியரான இறைவனின் நெறிமுறைகளில் நடந்ததாக வேண்டும். அது நிறைவேறும் வரை சலேத் நாயகி துயர் நிறைந்தவராக, ஆறுதல் பெற விரும்பாதவராக, அழுது கொண்டிருப்பவராகக் காட்சி தருகிறார்.
No comments:
Post a Comment