புனித லீனுஸ் (St. Linus), திருச்சபையின் 2வது திருத்தந்தையாக போற்றப்படுகிறார். கி.பி. 68 முதல் 79 வரை ரோமின் ஆயராக பணியாற்றிய இவர், திருச்சபையின் தலைவராகவும் திகழ்ந்தார்.
திருவிழா : 23 செப்டம்பர்
முன் வாழ்வு
இத்தாலியின் தூசியா பகுதியைச் சேர்ந்த லீனுஸ், திருத்தூதர் பேதுருவால் மனந்திருப்பப் பெற்று கிறிஸ்தவராக மாறியவர். பேதுருவின் சீடரான இவருக்கு, பவுலோடும் தொடர்பு கொண்டிருந்ததாக (2 திமொத்தேயு 4:21) அறிகிறோம். பேதுரு வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரிந்த காலங்களில், ரோமில் அவரது பணிகளை லீனுஸ் தொடர்ந்து செய்து வந்தார்.
லீனஸ் (பண்டைக் கிரேக்கம்: Linus; இலத்தீன்: Linus) என்னும் பெயர் கிரேக்கத்தில் "விண்ணப்பம் செய்பவர்" என்று பொருள்படும்.
திருத்தந்தையாக
திருத்தந்தை பேதுருவின் இறப்புக்குப் பின்னர் கி.பி. 68ல், ரோம் நகரின் ஆயராக லீனுஸ் பொறுப்பேற்றார். பேதுரு சிறையில் இருந்தபோது, இவரைத் தமது வாரிசு ஆயராக நியமித்தார். இவரது காலத்தில், நீரோ, கால்பா, ஒட்டோன், வித்தேலியுஸ், வெஸ்பாசியன் ஆகிய ஐந்து பேரரசர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்தனர். ரோமப் பேரரசின் சமயத் துன்புறுத்தல்களுக்கு நடுவில், ஏறக்குறைய பன்னிரு ஆண்டுகள் இவர் திருச்சபையை வழிநடத்தினார். நற்செய்தியாளர்களான மாற்கு, லூக்கா ஆகியோர் இக்காலத்தில் மறைசாட்சிகளாக இறந்தனர்.
முதலாம் கிளமெண்ட் என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லீனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.
இவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித இரனேயுஸ் என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:
“இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் (பேதுருவும் பவுலும்) திருச்சபையை நிலைநாட்டி, கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லீனஸிடம் ஒப்படைத்தனர்.”
3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும், “உரோமைத் திருச்சபைக்குப் பொறுப்பைப் புனித பேதுருவுக்குப்பின் லீனஸ் ஏற்றார்” என்று குறிப்பிடுகிறார்.
லீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.
திருவழிபாட்டு நேரத்திலும் புனித இடங்களிலும், பெண்கள் தலையில் முக்காடு அணிய வேண்டுமென்று இவர் ஆணையிட்டார். செரீனிய கொள்கை, ஞான உணர்வுக் கொள்கை ஆகிய தப்பறைகள் இக்காலத்தில் தோன்றின. இறுதியாக கி.பி. 79ல் ரோமப் பேரரசன் வெஸ்பாசியன் ஆட்சியின்போது, எதிரிகளால் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார். இவரது உடல் பேதுருவின் கல்லறை அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment