அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 23, 2020

இறை இரக்கத்தின் பக்தி

இறை இரக்கத்தின் பக்தி
முன்னுரை:
உலகின் தொடக்கத்திலிருந்தே இறைவன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள இரக்கத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்சிகள் மூலமும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து மூலமும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகின்றது. ஆண்டவரை அன்பு செய்கிறவர்களுக்கு அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதென்று அன்னை மரியா தனது புகழுரையில் கூறுகிறார். சமீப காலத்தில் பாவிகளுக்குத் தமது நிலையான அன்பின் புதுத் தன்மைகளை அறிவித்து இறை இரக்கத்தின் பக்தியை ஏற்படுத்த ஆண்டவர் பல அடியார்களுக்கு காட்சி தந்துள்ளார். இந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் சகோதரி தெரேசாள் (இறப்பு 1897), சகோதரி பெனினா கோண்சொலாட்டா (இறப்பு 1916), சகோதரி சோபியா மென்டஸ் (இறப்பு 1923), சகோதரி மரிய பவுஸ்தீனா கோவல்ஸ்கா (இறப்பு 1938), சகோதரி பெத்ரோன் (இறப்பு 1946) ஆகியோராவர். இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணி சகோதரி பவுஸ்தீனாவிடம் குறிப்பாக அளிக்கப்பட்டது.

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா:
srfustina
மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1905ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் நாள் போலந்து நாட்டின் க்ராகோவ் என்னுமிடத்தில் உள்ள க்ளோகோவெய்க் கிராமத்தில் பிறந்தார். அவருடைய பெற்றொர் ஏழையர். அவர் கன்னியர் மடத்தில் சேர விரும்பியும் பெற்றோர் மும்முறை அனுமதி மறுத்துவிட்டனர். இறுதியாகத் தனது 20ம் வயதில் இறை இரக்க அன்னையின் சகோதரிகள் நடத்தும் துறவற சபையில் சேர்ந்தார். வார்சாவில் துறவறப் படிப்பை முடித்து விட்டு 1928ல் முதல் வார்த்தைப்பாட்டைப் பெற்றார். போலந்திலுள்ள பல மடங்களில் தன் படிப்பு குறைவு (மூன்றாம் வகுப்பு வரை) என்ற காரணத்தால் பல தாழ்ந்த வேலைகளைச் செய்து மறைந்த வாழ்வு வாழ்ந்து, தாழ்ச்சிக்கும் கடின உழைப்புக்கும் உதாரணமாக விளங்கினார். 1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இந்த எளிய சகோதரிக்குத் தோன்றி, எல்லா மனித குலத்திற்கும் இரக்கமுள்ள ஒரு அருமையான நற்செய்தியைக் கொண்டு வந்தார். சகோதரி பவுஸ்தீனா இந்த தேதியில் அவரது நாட்குறிப்பில் கீழே உள்ளவாறு கூறியுள்ளார்:

இன்று மாலை வேளையில், நான் என் அறையில் இருந்தபோது, வெண்ணிற ஆடை அணிந்திருந்த ஆண்டவராகிய இயேசுவைக் கண்டேன். அவரது ஒரு கரம் ஆசீர்வதித்தபடி உயர்த்தியும், மற்ற கரம் மார்பின் ஆடை பகுதியைத் தொட்டபடியும் இருந்தது. மார்பு ஆடையின் திறப்பிலிருந்து இரண்டு பெரிய ஒளிக்கதிர்கள், ஒன்று சிவப்பு நிறத்திலும் மற்றது வெளிர் நிறத்திலும், வெளிவந்தன. நான் மௌனமாக ஆண்டவரைப் பார்த்த வண்ணம் அப்படியே ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். என் ஆன்மா பயம் கலந்த மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் இயேசு என்னை நோக்கி: ‘நீ இப்போது காணும் இந்த உருவத்தை, “இயேசுவே! நான் உம்மை நம்புகின்றேன்” என்ற சொற்களோடு அப்படியே வரைந்திடு.’ என்றார்.

இரக்கத்தின் அரசரான இயேசு இவருக்குப் பலமுறை காட்சி தந்தார். இக்காட்சிகள் 1930லிருந்து 1938 வரை நீடித்தன. இறை இரக்கத்தின் பக்தியைக் குறித்து இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினர். தமது வார்த்தைகளை பவுஸ்தீனா அவர்களின் கையேட்டில் எழுதிக்கொள்ளுமாறு பணித்தார். அவர்களது 600 பக்கங்களை கொண்ட நாட்குறிப்பிலிருந்தே இக்காட்சிகள் பற்றிய பல தகவல்களை அறியக் கூடியதாய் இருக்கிறது. ஏனெனில் தமது ஆன்ம குருவையும் மடத்தலைவியையும் தவிர வேறு எவருக்கும் இந்தக் காட்சிகள் பற்றிய செய்தியை அவர் அறிவிக்கவில்லை. இந்த நாட்குறிப்புகள் ஆங்கில, இத்தாலிய, ஜெர்மன், இஸ்பானிய, பிரஞ்சு, அரேபிய, ரஷ்ய, ரூமேனிய, செக், ஸ்லோவாக்கிய, மலையாளம், கன்னட, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சகோதரி மரிய பவுஸ்தீனா காச நோயால் பாதிக்கப்பட்டு மிகத் துன்புற்றார். தன்னுடைய துன்பங்களை பாவிகளுக்காக ஒப்புக்கொடுத்தார். தமது 33ம் வயதில் க்ராகோவ் எனும் ஊரில் 1938ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 1966ம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மடத்தின் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது போலந்தில் கர்தினாலாக இருந்த கரோல் வைத்தீவோ (பின்நாளில் திருத்தைந்தையான 2ம் ஜான் பவுல்) 1968ல் முக்திப்பேறு பட்டத்திற்கான அலுவலை ஆரம்பிக்க அனுமதி வழங்கினார். 1993ம் ஆண்டு ஏப்பல் 18ம் நாள் திருத்தைந்தை 2ம் ஜான் பவுல் சகோதரி மரிய பவுஸ்தீனாவை முக்திப்பேறு பெற்றவர் என அறிவித்தார். பின்னர் 2000ம் ஆண்டு ஏப்ரல் 30ம் நாள் திருத்தைந்தை 2ம் ஜான் பவுல், சகோதரி மரிய பவுஸ்தினாவை “தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா” வாக அறிவித்தார்.

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா கையேட்டுக் குறிப்புகள்:
நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், கடவுள் நம்மை, நம் அனைவரையும், அன்பு செய்கிறார் என்பதே இரக்கத்தின் நற்செய்தி. அவருடைய இரக்கம் நம் பாவங்களைவிடப் பெரியது என்பதை நாம் உணர்வதற்காக, நாம் அவரை நம்பிக்கையுடன் அழைத்து, அவருடைய இரக்கத்தைப் பெற்று, நம் வழியாக மற்றவர்களோடு அதைப் பகிர்ந்து மகிழ விரும்புகிறார். கீழுள்ள எளிய விதத்தில் நாம் இந்த நற்செய்தியை நம் மனத்தில் கொள்ளலாம்.

அ – அவரது இரக்கத்தை நாடுங்கள்.
நம் பாவங்ளுக்காக நாம் மனந்திரும்பவும், நம் மீதும் அகில உலகின் மீதும் அவரது இரக்கத்தைப் பொழியவும், நாம் தொடர்ந்து அவரை மன்றாடிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

இ – இரக்கம் உள்ளவர்களாயிருங்கள்.
நாம் அவரது இரக்கத்தைப் பெற்று, அது நம் வழியாக மற்றவர்களிடம் சென்றடையப் பகிர்ந்து மகிழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார். மேலும், நாமும் அவரைப் போல அன்பையும் மன்னிப்பையும் மற்றவர்களிடம் பரப்ப வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

உ – உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.
அவருடைய இரக்கத்தின் அருட்கொடை நம் நம்பிக்கையை சார்ந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார். நாம் இயேசுவில் அதிகமாக நம்பிக்கையை வைத்தால் நாம் அதிகமாகப் பெறுவோம்.

கடவுள் எல்லாரையும் அன்பு செய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிட முடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் போது கடவுளின் அளவிட முடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். நம் பாவங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. “ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடு. எனெனில், எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன். எல்லா ஆன்மாக்களுக்காகவும் எனது இரக்கத்தின் ஊற்று சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது . நான் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பது போல் நீங்களும் பிறர் குற்றங்களை மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் எல்லா ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அவர்களை அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித் தருவேன்” என்று நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இறைவனின் இரக்கத்தைப் பெற சிறப்பான வழிகள்:
1. இறை இரக்கத்தின் படம்
2. இறை இரக்கத்தின் திருநாள்
3. இறை இரக்கத்தின் நவநாள்
4. இறை இரக்கத்தின் செபமாலை

இறை இரக்கமுள்ள இயேசுவின் படம்:
Divine-Mercy-image1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் சகோதரி மரிய பவுஸ்தினாவிற்கு இயேசு காட்சி அளித்தபோது அவர் வெண்ணிற ஆடை அணிந்திருந்தவராகத் தோன்றினார். அவரது ஒரு கரம் ஆசீர்வதித்தபடி உயர்த்தியும், மற்ற கரம் மார்பின் ஆடை பகுதியைத் தொட்டபடியும் இருந்தது. மார்பு ஆடையின் திறப்பிலிருந்து இரண்டு பெரிய ஒளிக்கதிர்கள், ஒன்று சிவப்பு நிறத்திலும் மற்றது வெளிர் நிறத்திலும், வெளிவந்தன. ‘நீ இப்போது காணும் இந்த உருவத்தை, “இயேசுவே! நான் உம்மை நம்புகின்றேன்” என்ற சொற்களோடு அப்படியே வரைந்திடு.‘ என்று இயேசு அவருக்குக் கூறினார். அந்த இரு ஒளிக்கதிர்களுக்கு விளக்கம் கேட்டபோது அவை தமது இதயத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும் தண்ணீரையும் குறிக்கின்றன என்றும், வெளிர் நிறக் கதிர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தண்ணீருக்கும், சிவப்பு நிறக் கதிர் ஆன்மாவின் உயிரான அருளுக்கும் அடையாளமாக இருக்கின்றன என்றும் விளக்கிய இயேசு “இந்தக் கதிர்கள் என் தந்தையின் கோபத்திலிருந்து உங்கள் ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. இதன் அடைக்கலத்தில் வாழ்பவன் பேறு பெற்றவன். எனெனில் இறைவனின் நீதிக்கரம் அவனை ஒருபோதும் தீண்டாது” என்று கூறினார். சகோதரி மரிய பவுஸ்தினாவின் வர்ணனைக்கு ஏற்றபடி ஒரு நல்ல ஓவியரைக் கொண்டு இப்படம் வரையப்பட்டது. இயேசு கேட்டுக் கொண்டபடியே அப்படம் மடத்து கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது.

இறை இரக்கத்தின் திருநாள்:
தனது உயிர்ப்புப் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிறு, இறை இரக்கத்தின் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென “அந்நாளில் எனது ஆழ்ந்த இரக்கத்தை அனைவரும் அடையக் கூடியதாய் இருக்கும். எனது இரக்கத்தின் ஊற்றை நாடி வரும் ஆன்மாக்கள் மீது எனது அருட்பெருக்கை கடல் அலை போலத் திறந்து விடுவேன். அந்நாளில் ஒப்புரவு செய்து திவ்விய நற்கருணை பெறுவோர் தமது பாவங்களிலிருந்தும் அவற்றுக்குரிய தண்டனை அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர்” என்று நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இறை இரக்கத்தின் நவநாள்:
இந்த நவநாளை எப்போதும் செய்யலாம். ஆயினும், சிறப்பாக இறை இரக்கத்தின் திருநாளுக்குத் தயாரிப்பாகச் செய்யப்படுவதை ஆண்டவர் விரும்புகிறார். அதாவது, பெரிய வெள்ளியன்று தொடங்கி இறை இரக்கத்தின் திருநாளுடன் இந்த நவநாள் முடிவடையும். இந்த நவநாளைக் கடைப்பிடிக்கும் முறையையும் இயேசு கிறிஸ்து தாமே சகோதரி மரிய பவுஸ்தினாவிற்குக் கற்பித்தார்.

ஒன்பது நாட்களிலும் எனது இரக்கத்தின் ஊற்றுக்கு ஆன்மாக்களை அழைத்து வர வேண்டும். அவர்கள் வாழ்வின் சோதனைகளின் போது, சிறப்பாக, இறப்பின் வேளையில் அந்த ஊற்றிலிருந்து பலமும், உற்சாகமும் பெறுவதோடு தமக்குத் தேவையான எல்லா அருள்வரங்களையும் அடைந்து கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆன்மாக்களை அழைத்து வந்து, எனது இரக்கக் கடலில் மூழ்க விடு. ஒவ்வொரு நாளும் இந்த ஆன்மாக்களுக்குத் தேவையான அருள்வரங்களை எனது கசப்பான பாடுகளின் வழியாகத் தந்தையிடம் இரந்து கேள்.“

1ம் நாள் : உலக மக்கள் மற்றும் பாவிகள் அனைவருக்காகவும்
2ம் நாள் : அருட்பணியாளர்கள், கன்னியர், துறவரத்தார் அனைவருக்காகவும்
3ம் நாள் : நம்பிக்கையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்காகவும்
4ம் நாள் : கடவுளைப் பற்றி அறியாதவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்காகவும்
5ம் நாள் : நம்மை விட்டுப் பிரிந்த சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும்
6ம் நாள் : குழந்தைகள் மற்றும் சாந்தமும் தாழ்ச்சியுமுள்ளவர் அனைவருக்காகவும்
7ம் நாள் : இறைவனின் இரக்கத்தைச் சிறப்பாக மதித்து ஆராதிப்பவர்கள் அனைவருக்காகவும்
8ம் நாள் : உத்தரிக்கும் தளத்தில் உள்ள ஆன்மாக்கள் அனைவருக்காகவும்
9ம் நாள் : வெதுவெதுப்பாயுள்ள ஆன்மாக்கள் அனைவருக்காகவும்

இறை இரக்கத்தின் வாக்குத்தத்தம்:
கால தாமதத்திற்கு முன் விரைந்து தன்னிடம் மக்கள் வரும்படி அழைப்பு விடுத்து இயேசு கூறியது: ‘நான் நேர்மையான நடுவராய் வருவதற்கு முன், முதலில் நான் எனது கருணை என்னும், இரக்கம் என்னும் கதவை அகலத் திறப்பேன். இந்தக் கதவு வழியாகச் செல்லாதவர், எனது நீதி என்னும் கதவு வழியாகச் செல்வர். எனது இந்தத் திரு உருவத்தை வணங்கும் எந்த ஆன்மாவும் அழிவுறாது என்றும் வாக்களிக்கிறேன்.’ மேலும் உலகில் பகைவருக்கு எதிராக வெற்றியை, சிறப்பாக இறப்பின் வேளையில் அளிப்பதாகவும், தானே அந்த ஆன்மாக்களை தனது மகிமைக்காகப் பாதுகாப்பதாகவும் வாக்களித்தார். ஒவ்வொரு நாளும், சிலுவையில் தான் இறந்த 3 மணிக்கு ஆராதிக்கப்பட வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். 3 மணிக்கு என்னுடைய துயரத்தில், குறிப்பாக நான் கைவிடப்பட்ட அந்தப் பெருந்துயர வேளையில் சிறு கண நேரம் மூழ்கி எனது இரக்கத்திற்காக மன்றாடுங்கள். அகில உலகத்திற்கும் அது மகா இரக்கத்தின் வேளை. அந்த நேரத்தில் எனது பெருந்துயரின் நிமித்தம் என்னிடம் மன்றாடும் எவருக்கும், எந்த ஆன்மாவுக்கும் நான் எதையும் மறுப்பதில்லை. இயேசுவில் நம்பிக்கையும், பிற மனிதரிடம் இரக்கம் கொள்வதுமே இந்தப் பக்தி முயற்சியின் ஆன்மீகமாகும். இரக்கச் செயல்கள், உயர்ந்த கிறிஸ்தவ வாழ்வின் நீண்டப் பாரம்பரியத்தின் பகுதியாகும்.

இறை இரக்கத்தின் செபமாலை
ch
1. தொடக்கச் செபம்:
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.

முத: இயேசுவே, நீர் என்னைச் சுகமாக்கக் காயப்பட்டீர், உம் காயங்களால் என்னைச் சுகமாக்கும். நீர் சிந்திய இரத்தத்தால் என் பாவங்களையும் என் முன்னோரின் பாவங்களையும் மன்னியும். உம் உயிர்ப்பின் வல்லமையால் தூய ஆவியை என்னில் பொழிந்தருளும். ஆண்டவரே என்னையும் என் குடும்பத்தாரையும் எனக்கு நெருக்கமானவர்களையும் நற்கருணை நாதர் இயேசு கிறிஸ்துவின் இதயத்திற்கும் அன்னை மரியாவின் அமலோற்பவ இதயத்திற்கும் ஒப்புக்கொடுக்கிறேன். எங்கள் வாழ்வைத் தூய்மைப்படுத்தி, புதுப்பித்து, சுகமாக்கி, எங்களுக்கு பல அற்புதங்களைச் செய்தருளும்.
எல்: ஆமென்.

முத: இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் காண முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.

முத: இயேசுவின் திரு இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே!
எல்: நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

கர்த்தர் கற்பித்த செபம்:
முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்:
முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

நம்பிக்கை அறிக்கை:
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(“பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

செபிக்க வேண்டியாக் கருத்துக்கள்:
1. ஆண்டவரே, குருக்கள், கன்னியர்கள் மற்றும் இறை ஊழியர்கள் அனைவருக்காகவும் இப்போது மன்றாடுகிறோம். இவர்கள் தங்கள் அர்ப்பண வாழ்வை வளர்த்துக் கொள்ளவும், அவர்கள் கொடுத்த உறுதிமொழியை ஒழுக்கமான முறையில் பாதுகாக்கவும், அவர்கள் மேற்கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளை நல்ல மனதோடு ஏற்று, அவர்களை நாடி வருவோருக்குத் தகுந்த முறையில் உதவி செய்யவும், அவர்கள் என்றும் இயேசுவின் சீடர்களாக நடக்க இறை அன்பை ஊற்றும் படியாக செபிக்கிறோம். இவர்களுக்காக உமது அன்பு மகனிடம் பரிந்து பேசும் தாய் மரியே.
2. ஆண்டவரே, இந்த இடத்தில் கூடி செபிக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் குடும்பத்தை வாட்டி வதைக்கும் தீய சக்திகளையும், அவர்களின் வெறுப்பு, எரிச்சல், கோபம், அகங்காரம், பொறாமை, உடல் நோய்கள், அனைத்தையும் தீர்த்து, இறை அன்பை ஊற்றும்படியாக மன்றாடுகிறோம். இவர்களுக்காக  உமது அன்பு மகனிடம் பரிந்து பேசும் தாய் மரியே.
3. ஆண்டவரே, உடல் நோயால் அவதிப்படும் ஒவ்வொருவருக்காகவும் இப்போது செபிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் ஐந்து காயங்களின் வல்லமையாலும், கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தின் வல்லமையாலும், எங்களை வாட்டி வதைக்கும் நோய்கள், கட்டுகள், பாவங்கள் மற்றும் சாபங்கள் அனைத்தையும் கழுவி, இறை அன்பைப் பொழியும் படியாக உம்மை மன்றாடுகிறோம். இவர்களுக்காக உமது அன்பு மகனிடம் பரிந்து பேசும் தாய் மரியே.
4. வெளிநாட்டில் பணி புரியும் ஒவ்வொருவருக்காகவும் இப்போது செபிக்கிறோம். இவர்கள் குடும்பச் சூழ்நிலையால் தங்கள் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களைப் பிரிந்து கஷ்டத்தோடும் வேதனையோடும் செபிக்கும் பிள்ளைகளைக் கண்நோக்கிப் பாரும் ஆண்டவரே. இவர்கள் வேலை செய்யும் இடத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே. இங்கு செபிக்கும் பிள்ளைகளின் குடும்பங்களை இறை அன்பினால் நிரப்பியருளும். இவர்களுக்காக உமது அன்பு மகனிடம் பரிந்து பேசும் தாய் மரியே.
5. உலகில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், தொண்டு செய்யும் ஊழியர்கள் அனைவருக்காகவும் இப்போது செபிக்கிறோம். அவர்கள் மக்களுக்குப் பயன் தரும் வகையில் நல்ல செயல்களைச் செய்யும் மன நிலையைத் தந்தருள உம்மை மன்றாடுகிறோம். இவர்களுக்காக உமது அன்பு மகனிடம் பரிந்து பேசும் தாய் மரியே.

2. பெரிய மணியில்:
நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவரும் உமது அன்பு மகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும் அகில உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

3. சிறிய மணிகளில்:
முத: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக…
எல்: அப்பா பிதாவே! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். (10 முறை)

4. பத்து மணி முடிவில்:
தூய இறைவனே! தூய  வல்லவரே! தூய அழிவில்லாதாவரே! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். (3 முறை)

(2, 3, 4ம் படிகளை செபமாலையின் மறை உண்மைகளைத் தியானிப்பது போல 5 முறை சொல்லவும்)

5. இறுதி செபம்:
முத: நித்தியப் பிதாவே, முடிவில்லாத இரக்கமும், குறைவில்லாத மனதுருக்கமுடையப் பெட்டகமே, எம்மைக் கருணைக் கண் நோக்கி, உம் இரக்கத்தை மிகுதியாக்கும். துன்ப நேரங்களில் நாங்கள் துவண்டு விடாமல், மிகுந்த மன உறுதியேடு, உம்முடைய சித்தத்திற்கு எம்மை அர்ப்பணிக்க அருள் புரியும். அதுவே உமது அன்பும் இரக்கமும் ஆகும்.
எல்: ஆமென்.

இறை இரக்கத்தின் நவநாள்
முதல் நாள்
“இன்று மனுக்குலம் முழுவதையும், சிறப்பாகப் பாவிகள் அனைவரையும் என்னிடம் கூட்டி வந்து, என் இரக்கக் கடலில் முழ்க வை. இதன் மூலம் ஆன்மாக்களின் இழப்பினால் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்.”

மனுக்குலம் முழுவதும், குறிப்பாகப் பாவிகள் இறைவனின்
இரக்கத்தை அடைய வேண்டுமென்று செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே! எமது பாவங்களைப் பாராமல் உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக் கொள்ளும். எவரும் அதிலிருந்து பிரிந்து போக விடாதேயும். மூவொரு இறைவனில் தந்தையோடும் தூய ஆவியாரோடும் உம்மைப் பிணைக்கும் அன்பினால் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்திலே நம்பிக்கை வைத்துள்ள மனுக்குலத்தின் மீதும் உமது கருணைக் கண்களை திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பார்த்து எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும். எல்லாம் வல்ல உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக.
எல்: ஆமென்.

இரண்டாம் நாள்
“இன்று குருக்கள், துறவியரின் ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக் கொள்ள எனக்கு சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக எனது இரக்கம் மனுக்குலத்தின் மேல் பாய்கிறது.”

இறைவனின் இரக்கம் மனுக்குலத்தின் மீது பெருகுவதற்கு வழியாயிருக்கும்
அருட்பணியாளர்கள், துறவியர் அனைவருக்காவும் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! உம்மிடமிருந்தே எல்லா நன்மையும் வருகின்றன. குருக்கள், துறவியர், கன்னியர்களின் ஆன்மாக்களில் உமது அருட்கொடைகள் பெருகச் செய்யும். அதனால் அவர்கள் தமது பணிகளை தக்கவிதமாகவும், பயன்தரக்கூடியதாகவும் நிறைவேற்றி தமது சொல்லாலும், வாழ்வாலும் அனைவரையும் இறை இரக்கத்தில் பக்தி வணக்கம் கொள்ளச் செய்வார்களாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திராட்சைத் தோட்டததிற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள், கன்னியர், துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருக்குமாரனின் விஷுச அன்புக்குப் பாத்திரமான இவர்களை உமது ஆசீரால் உறுதிப்படுத்தி பிறரை மீட்பின் பாதையில் வழிநடத்தும் ஞானத்தையும், உமது இரக்கத்தை நோக்கி அவர்களை ஈர்க்கின்ற சக்தியையும் அளித்தருளும்.
எல்: ஆமென்.

மூன்றாம் நாள்
“இன்று பக்தி பிரமாணிக்கமுள்ள அனைத்து ஆன்மாக்களையும் அழைத்து வந்து, என் இரக்க சமுத்திரத்தில் மூழ்கவை. என் சிலுவையின் பாதையில் இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தார்கள். கசப்பான துயரக்கடலின் நடுவில் எனக்கு கிடைத்த ஒரு துளி ஆறுதல் இவர்கள்தான்”

பிரமாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்காகவும் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! உமது இரக்கக் கருவூலத்திலிருந்து எல்லாருக்கும் உமது அருளை ஏராளமாக பொழிகின்றீர். இரக்கத்தின் இருப்பிடமாகிய உமது இதயத்தினுள் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஏற்றருளும். அங்கிருந்து அவர்கள் பிரிந்து போகவிடாதேயும். ஆவியோடும் உம்மைப் பிணைக்கும் அன்பில் பேரால் உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருமகனின் வாரிசுகளாகிய விசுவாசிகள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம் நிறைந்த அவரது திருப்பாடுகளின் பெயரால் இவர்களுக்கு உமது ஆசிரை வழங்கி, உமது இடைவிடாத பராமரிப்பால் இவர்களை அரவணைத்துக் கொள்ளும். இதனால் அவர்கள் உம்மீது கொண்ட அன்பையும், தமது விசுவாசத்தையும் ஒருபோதும் இழக்காமல் தேவதூதர் புனிதர் சேனைகளுடன் உமது எல்லையில்லா இரக்கத்தை நித்தியத்திற்கும் மகிமைப்படுத்துவார்களாக.
எல்: ஆமென்.

நான்காம் நாள்
“இன்று என்னை விசுவசியாதவர்களையும் இன்னும் என்னை அறியாதவர்களையும் என்னிடம் அழைத்துவா. எனது கசப்பான பாடுகளின்போது இவர்களையும் நினைத்துக்கொண்டேன். என்னை அறியவேண்டுமென்ற இவர்களது எதிர்கால ஆர்வம் என் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தது. என் இரக்கமாகிய மாபெரும் கடலில் இவர்களை ஆழ்த்திவிடு.”

இறைவனின் இரக்கத்தை இன்னும் அறியாத மக்களுக்காகச் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நீரே உலகின் ஒளி. உம்மை இன்னும் அறியாத மக்கள் இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது அருட்கதிர்கள் இவர்களுக்கு ஒளியூட்ட இவர்களும் எம்மோடு இணைந்து நித்தியத்திற்கும் உமது அற்புதமான இரக்கத்தைப் போற்றுவார்களாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது திருக்குமாரனும் எமதாண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த இதயத்தை விசுவசியாதவர்கள் மீதும் இன்னும் அறியாத மக்கள் மீதும் கருணைக் கண்நோக்கியருளும். இவர்களை நற்செய்தியின் ஒளிக்கு இழுத்தருளும். உம்மை அன்பு செய்வது எத்துணை இன்பம் என்பதை உணர்ந்து, இவர்களும் உமது இரக்கத்தை ஊழியுள்ள காலமும் வாழ்த்த வரமருளும்.
எல்: ஆமென்.

ஐந்தாம் நாள்
“இன்று பிரிந்து போன சகோதரர்களின் ஆன்மாக்களைக் கொணர்ந்து என் இரக்கப் பெருங்கடலில் அமிழ்த்து. என் கசப்பான பாடுகளின் போது எனது உடலையும், உள்ளத்தையும் இவர்கள் கிழித்தவர்கள். திருச்சபையின் ஒற்றுமைக்கு இவர்கள் திரும்பி வந்து சேர்ந்தால்தான் என் காயங்கள் குணமாகும். இதன் வழியாக என் பாடுகளின் அகோரத்தை தணிப்பார்கள்.”

நம்பிக்கையில் தவறுவோருக்காகச் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நன்மையின் உருவே! உம்மிடம் ஒளியைத்த தேடும் எவரையும் நீர் மறந்ததில்லை. பிரிந்துபோன எம் சகோதரர்களை இரக்கத்தின் உறைவிடமாகிய உமது இதயத்தினுள் ஏற்றருளும். திருச்சபையின் ஒன்றிப்பில் இவர்கள் இணைய உமது ஒளியை இவர்களுக்கு அளித்தருளும். அவர்களும் எம்மோடு சேர்ந்து நித்தியத்திற்கும் உமது இரக்கக் கொடைகளை வணங்குவார்களாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! பிரிந்துபோன எமது சகோதரர்களின் ஆன்மாக்கள் மீது சிறப்பாக உமது கருணைக்கண்களைத் திருப்பியருளும். அவர்களது குறைகளைப் பாராமல் ‘அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று தமது மரணத்திற்கு முந்திய நாள் உம்மை உருக்கமாக வேண்டிய உமது திருக்குமாரனின் அன்பையும், அவர் அனுபவித்த கசப்பான பாடுகளையும் பார்த்தருளும். இவர்கள் மீண்டும் அந்த ஒன்றிப்பில் இணைந்து நித்திய காலத்திற்கும் உமது இரக்கத்தைப் போற்றுவார்களாக.
எல்: ஆமென்.

ஆறாம் நாள்
“இன்று சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும், சிறுகுழந்தைகளின் ஆன்மாக்களையும் என்னிடம் அழைத்துவா. என் இரக்கத்தில் மூழ்க வை. இவர்கள் என் இதய கசப்பான வேதனையின் போது எனக்குச் சக்தியளித்தவர்கள். இவர்கள் எனது பீடங்களின் அடியில் கண்விழித்துக் காத்திருக்கும் உலக வானதூதர்களாக இவர்களைக் காண்கிறேன். இவர்கள் மேல் என் அருளைப் பொழிகின்றேன். தாழ்மையான ஆன்மாக்கள் மட்டுமே எனது அருளைப் பெற முடியும். இவர்கள் மட்டுமே என் நம்பிக்கைக்கு உரியவர்கள்.”

சிறு குழந்தைகளுக்காகவும் அவர்களைப் போல் ஆகியவர்களுக்காகவும் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! “நான் சாந்தமும் இதய தாழ்ச்சியும் உள்ளவன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று நீர்தாமே சொல்லியிருக்கிறீர். சாந்தமும் தாழ்ச்சியுமுள்ள ஆன்மாக்களையும் சிறு குழந்தைகளின் ஆன்மாக்களையும் இரக்கம் மிகுந்த உம் இதய வீட்டில் ஏற்றருளும். இவர்கள் வானுலகைப் பரவசத்தில் ஆழ்த்தி உமது பரலோக தந்தையின் அரியாசனத்தின் முன் மணம் வீசும் மலர்களாக விளங்குவார்கள். உமது திரு இருதயத்தில் நிலையான இடம் கொண்டு இறைவனின் இரக்கத்தை இடையறாது போற்றுவார்களாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! சாந்தமும் தாழ்ச்சியும் உள்ள உம் அடியார்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் உமது திருக்குமாரனின் சாயலை மிகவும் ஒத்திருக்கிறார்கள். இவ்வான்மாக்களில் நறுமணம் மண்ணுலகிலிருந்து எழுந்து உமது அரியணையை அடைகிறது. இரக்கத்தின் தந்தையே! இந்த ஆன்மாக்கள் மட்டில் உமக்குள்ள அன்பையும் இவர்களில் உமக்குள்ள மகிழ்ச்சியையும் இட்டு, எம்மையும் உலகம் முழுவதையும் ஆசீர்வதித்தருளும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உமது இரக்கத்தை என்றென்றும் போற்றுவோமாக.
எல்: ஆமென்.

ஏழாம் நாள்
“இன்று எனது இரக்கத்தைச் சிறப்பாக மகிமைப்படுத்தி வணங்கும் ஆன்மாக்களை அழைத்து வந்து என் இதய இரக்கத்தில் மூழ்கச்செய். இவர்கள் என் பாடுகளை எண்ணி வருந்தி என் ஆன்மாவோடு ஆழ்ந்து ஒன்றித்திருக்கிறார்கள். எமது இரக்கமுள்ள இதயத்தின் உயிருள்ள சாயல்கள் இவர்கள். இவ்வான்மாக்கள் மறுவாழ்வில் சிறப்பான ஒளியோடு துலக்குவார்கள். ஒருவரும் நரக நெருப்பிற்கு ஆளாக மாட்டார்கள். மரணவேளையில் இவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பேன்”

இறை இரக்கத்தில் பக்தி கொண்டு அதனை பரப்புவதன் மூலம் இயேசுவின் இரக்கம்
நிறைந்த இதயத்தின் உயிருள்ள சாயலாக விளங்குவோருக்காகச் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! அன்பையே இதயமாகக் கொண்ட  இறை இரக்கத்தின் மேன்மையை சிறப்பாகப் போற்றி வணங்கும் ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்துள் ஏற்றுக் கொள்ளும். இவர்கள் இறைவனிடமிருந்தே தமது சக்தியை பெறுகின்றனர். துன்பதுரிதங்களின் நடுவே நீர் மனுக்குலத்தற்காகப் பட்ட பாடுகளில் பங்கு கொள்ள விழைகின்றார்கள். மென்மேலும் பெருகும் இரக்கத்தால் அவர்களை அரவணைத்து விடாமுயற்சி, திடம், பொறுமை ஆகிய புண்ணியங்களை அவர்களுக்கு அளித்தருளும்.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உமது ஆழங்காணமுடியாத இரக்கத்தை உருக்கமாக போற்றி வணங்கும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இவர்கள் சொல்லாலும் செயலாலும் உம்மை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வான்மாக்கள் நற்செய்தியன் படி வாழ்பவர்கள். உமது இரக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் உம்மீதும் உமது வாக்குறுதிகளிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்கேற்ப இவர்களுக்கு மேலான இரக்கத்தை காட்டுமாறு உம்மை வேண்டுகிறோம். உமது சொந்த மகிமையயைப் போன்று இவர்களது வாழ்விலும் விஷுசமாக இறுதி வேளையிலும் இவர்களைப் பாதுகாத்தருளும்.
எல்: ஆமென்.

எட்டாம் நாள்
“இன்று உத்தரிப்பு ஸ்தலத்தில் சிறைப்பட்டுள்ள ஆன்மாக்களை கொணர்ந்து என் இரக்கத்தின் ஆழத்தில் அமிழ்த்து. என் உதிரப்பெருக்கு, இவர்களைச் சுட்டெரிக்கும் தீயை குளிரச்செய்யட்டும். இவ்வான்மாக்கள் என்னால் அதிகம் அன்புசெய்யப்பட்டவர்கள். என் நீதிக்கு பரிகாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு விடுதலை அளிப்பது உன் கையில் இருக்கிறது. என் திருச்சபை அளிக்கும் எல்லா பலன்களையும் எடுத்து இவர்களுக்கு ஒப்புக்கொடு. இவர்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்ப்பாய். “

இறை நீதிப்படி உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காகச் செபிப்போமாக.
இரக்கமுள்ள இயேசுவின் திரு இரத்தம் அவர்களின் வேதனையைத் தணிப்பதாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! ‘என் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்’ என்று மொழிந்தீரே. இறைவனுடைய நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்களை இரக்கம் நிறைந்த உமது இதயத்தினுள் ஏற்றருளும். உமது இதயத்திலிருந்து பீறிட்டு வரும் உதிரமும் நீருமாகிய அருவிகள் இவர்களைச் சுத்திஇருக்கும் அனற்பிழம்புகளை அணைக்கட்டும். இதனால் எங்கும் உமது இரக்கத்தின் வல்லமை போற்றப்படுவதாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகன் இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் பெயராலும் அவரது திருஇருதயத்தில் நிறைந்த துயரத்தின் பெயராலும் உம்மை மன்றாடுகிறோம். உமது நீதியின் தீர்ப்பினால் வேதனைப்படும் இவ்வான்மாக்களுக்காக உமது இரக்கத்தை காட்டியருளும். உமது திருமகன் இயேசுவின் இரக்கம், அவரது நீதியைவிட மேலோங்கி நிற்பதால் அவரது திருக்காயங்களின் வழியாக இவர்களை நோக்கியருளுமாறு உம்மை வேண்டுகிறோம்.
எல்: ஆமென்.

ஒன்பதாம் நாள்
“இன்று வெதுவெதுப்பான ஆன்மாக்களை என்னிடம் அழைத்து வந்து எனது இரக்கத்தில் மூழ்கவிடு. இவ்வான்மாக்கள் என் உள்ளத்தை மிகவும் நோகச் செய்கிறார்கள். இந்த ஆன்மாக்களாலேயே நான் ஜெத்சமனிப் பூங்காவில் பங்கர வேதனைகள் அனுபவித்தேன். பிதாவே உமக்குச் சித்தமானால் இக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் என்று நான் கூறியதற்குக் காரணம் இவர்கள்தாம். என் இரக்கத்தை நோக்கி ஓடி வருவதுதான் இவர்களது மீட்பின் கடைசி நம்பிக்கை.”

ஒலிவத் தோப்பில் இயேசு கிறிஸ்துவுக்குப் பயங்கர வேதனை ஏற்படக்
காரணமாக இருந்த வெதுவெதுப்பான ஆன்மாக்களுக்காகச் செபிப்போமாக.

முத: இரக்கம் நிறைந்த இயேசுவே! நீர் நன்மையே உருவானவர். ஒலிவத் தோப்பில் உமக்கு மிகுந்த வேதனையும் அருவருப்பும் உண்டாக்கிய நடைப்பிணங்களைப் போன்ற வெதுவெதுப்பான இந்த ஆன்மாக்களை உமது இரக்கம் நிறைந்த இதயத்தினுள் ஏற்றருளும். உமது தூய அன்பின் அக்கினிச்சுவாலையில் இவர்களை மூழ்கச் செய்யும். இதனால் இவர்கள் உமது எல்லையற்ற கருணையை என்றென்றும் புகழ்வார்களாக.
எல்: ஆமென்.

(கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், மூவொரு இறைவன் புகழ்)

எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! வெதுவெதுப்புள்ள இந்த ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். உமது திருமகனும் எமதாண்டவருமான இயேசு கிறிஸ்துவின் கசப்பான பாடுகளின் பெயராலும் சிலுவையில் மூன்று மணிநேரமாக அவர் அனுபவித்த வேதனைகளின் பெயராலும் இந்த ஆன்மாக்களுக்கு, உமது மகிமையின் மீது ஒரு புதிய ஆசையை ஊட்டுமாறு உம்மை இரந்து மன்றாடுகிறோம். அவர்கள் உள்ளத்தில் அன்பு பெருகச் செய்தருளும். இதனால் உயிருட்டப் பெற்ற இவர்கள், உலகில் இரக்கச் செயல்களைப் புரிந்து, என்றென்றும் உமது இரக்கத்தைப் போற்றி புகழ்வார்களாக.
எல்: ஆமென்.

இறை இரக்கத்தின் மன்றாட்டு மாலை
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(பதில் – உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்)

முத: உலகிலுள்ள அனைத்தையும் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: வான தூதர்களைப் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: கடவுளின் எல்லா வல்லமைகளையும் மனிதருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உலகம் முழுவதையும் ஆண்டு நடத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: மூவொரு இறைவனின் தூய மறை உண்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: எங்களை தினமும் தூய்மைப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: எங்களுக்கு நிலைவாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுத் தூக்கி எடுக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: மனித அவதாரத்தையும், பாடுகளையும், இறப்பையும் ஏற்றுக் கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: எல்லாருக்கும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உதவி அளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: தெய்வீக மறை உண்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உண்மையானத் திரு அவையை நிறுவிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: திருமுழுக்கிலும் ஒப்புரவிலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தைத் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: பாவிகளை மனம் திருப்புவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: நேர்மையாளர்களின் வாழ்வின் தூய்மையில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உமது திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உமது மிகத் தூய்மையான திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களைத் தூய்மைப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: இரக்கத்தின் தாயாகியக் கன்னி மரியாவை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: கலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: இறந்தோரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: எல்லாப் புனிதர்களின் விண்ணகப் பேரின்பமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: மீட்கப்பட்டவர்களின் விண்ணகப் பேரின்பமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…
முத: அற்புதங்களின் வற்றாத ஊற்றாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே…

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: ஆண்டவருடைய இரக்கம் அவருடைய எல்லா படைப்புகளிலும் உள்ளது.
எல்: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை நான் என்றென்றும் பாடுவேன்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள் கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

No comments:

Post a Comment