அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 26, 2017

உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.

உன் கடவுள் மீது அன்பு செலுத்து. உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.

அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார்.

அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இறையன்பு, பிறரன்பு

 ஒருமுறை பில்லிகிரகாம் என்ற போதகரிடத்திலே பத்திரிக்கையாளர் ஒருவர், “விவிலியத்திலே உங்களுக்கு பிடித்தமான பகுதி என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “1கொரிந்தியர் 13 ஆம் அதிகாரம்” என்று பதிலளித்தார். உடனே அந்த பத்திரிக்கையாளர், “உங்களுக்கு ஏன் அந்த அதிகாரம் பிடித்திருக்கிறது என்ற காரணத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டதற்கு அவர், “விவிலியம் முழுமைக்கும் அன்பைக் குறித்துச் சொல்லப்பட்டாலும், அன்பிற்காக ஒரு அதிகாரம் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது 1 கொரிந்தியர் 13 ம் அதிகாரமே. அதனால் அந்தப் பகுதி எனக்கு பிடித்திருக்கிறது” என்று பதிலளித்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “போதகரே! அனைத்திலும் முதன்மையான கட்டளை என்ன என்று கேட்கிறபோது இயேசு மறுமொழியாக, “உன் கடவுளாகிய ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக எனது இதற்கு இணையான கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல் முழுமைக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைந்திருக்கின்றன” என்று பதிலளிக்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் இறையன்பு, பிறரன்பு இவைதான் முதன்மையான, முழுமையான கட்டளை என்பது இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

இயேசுவை எப்படியெல்லாமோ தங்களுடைய வலையில் சிக்கவைக்கலாம் என்று சூழ்ச்சி செய்த பரிசேயக் கட்சியினருக்கு இயேசுவின் பதில் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனென்றால் கடவுள் இஸ்ரேயல் மக்களுக்கு சீனாய் மலையிலே தந்த பத்துக் கட்டளைகளை யூத மத குருமார்கள் பெருக்கிப் பெருக்கி 3600 கட்டளைகளாகத் தொகுத்து வைத்திருந்தார்கள். எனவே அதிலே எது தலை சிறந்த கட்டளை என்று இயேசுவிடம் கேட்டால் அவர் நிச்சயமாக மாட்டிக்கொள்வார் என்ற எண்ணத்தோடுதான் இயேசுவை அணுகுகிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவர்களுடைய கேள்விக்குத் தெளிவாய்ப் பதிலளித்து அவர்களை வாயடைக்கச் செய்கிறார்.

விவிலியத்தின் அடிநாதமாக இருக்கக்கூடிய இறையன்பு, பிறரன்பு என்ற இந்தக் கட்டளைகளை நாம் நமது அன்றாட வாழ்க்கையிலே கடைப்பிடிக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலவேளைகளில் இறைவேண்டல், நோன்பு போன்ற பக்தி முயற்சிகளின் வழியாக இறைவனை அன்புசெய்ய முயல்கின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, அயலாரை அன்பு செய்ய மறுக்கின்றோம். இறையன்பும், பிறரன்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

வாழ்க்கையிலே மிகவும் கஷ்டப்பட்ட தந்தை ஒருவர் தன்னுடைய மகனை ஒரு பெரிய கலைக்டராக (மாவட்ட ஆட்சியராக) ஆக்கிக்காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படியே தன்னுடைய மகனுக்காக இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்து அவனை மாவட்ட ஆட்சியராக மாற்றிக்காட்டினார்.

ஒருநாள் நகரத்திலே இருக்கக்கூடிய தன்னுடைய மகனை – மாவட்ட ஆட்சியரைப் – பார்க்க இனிப்புப் பண்டங்களை ஒரு மூட்டையில் காட்டிக்கொண்டு புறப்பட்டார். அவர் சென்ற நேரத்தில் மகன் உயர் அதிகாரிகளோடு பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய தந்தை அவனைப் பார்ப்பதற்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி காவலாளி வழியாக அவனிடம் சொல்லப்பட்டதும், அவன் வெளியே வந்தான். தன்னுடைய தந்தை மேலே சட்டை போடாமலும், காலில் செருப்பது அணியாமலும், மிகப்பரிதாபமாக இருந்ததைப் பார்த்துவிட்டு காவலாளியிடம் அவன், “இது என்னுடைய வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரன். இந்தா ஐநூறு ரூபாய், இதை அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் போகச் சொல்” என்று கட்டளையிட்டான். இதையெல்லாம் தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய தந்தை மிகவும் வருந்தினார். உடனே அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு போகிற வழியில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது கற்பனைக் கதையாக இருந்தாலும் இன்றைக்கும் தங்களுடைய பெற்றோர்களை, உடன்பிறப்புகளை அவர்கள் ஏழ்மையில், வறுமையில் இருக்கிறார்கள் என்பதற்காக அன்பு செய்யாத பிள்ளைகள் ஏராளம். கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்புசெய்யும் நாம் கண்முன்னால் இருக்கும் மனிதர்களை அன்பு செய்ய மறுக்கிறோம். 1பேதுரு 4:8 ல் வாசிக்கின்றோம், “எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்”.

எனவே நாம் கடவுளை முழுமையாய் அன்பு செய்வோம், அதே போன்று நம்மோடு வாழும் மனிதர்களையும் அன்பு செய்வோம். இறையருள் பெறுவோம்.

No comments:

Post a Comment