உலக மீட்புக்காக மூன்று ஆண்டுகள் மட்டுமே இறையாட்சிப் பணியை செய்தார். அதற்கு முன்னதாக, யோசேப்புக்கும் மரியாவுக்கும் மகனாக அவர் வாழ்ந்தார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை மரியாவோடு செலவிட்டார் என்பதே அந்த தாயின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது.
அன்புள்ள அன்னை
மரியாவையும் குழந்தை இயேசுவையும் உடனிருந்து பாதுகாக்கும் எண்ணத்துடன், யோசேப்பு வீட்டிலேயே தச்சுக்கூடம் ஒன்றை உருவாக்கினார். மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை அன்புடனும் அக்கறையுடனும் பராமரித்து வளர்த்து வந்தனர். அவர்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதிலும், அவரைப் புகழ்ந்துப் போற்றுவதிலும், நாள்தோறும் மூன்று வேளை இறைவேண்டல் செய்வதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். இயேசுவும் அவர்களிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டார்.
மரியா இயேசுவுக்கு சிறந்த தாயாகவும், யோசேப்புக்கு உற்றத் துணையாகவும் வாழ்ந்து வந்தார். மரியா திருக்குடும்பத்தின் தலைவி என்ற முறையில், யோசேப்பையும் இயேசுவையும் அன்புடன் பராமரித்து அவர்களுக்கு பணிவிடை புரிந்தார். இயேசு உடல் வலிமையிலும் இறை ஞானத்திலும் வளர மரியாவும் யோசேப்பும் துணை நின்றார்கள். கடவுளின் மீட்புத் திட்டம் இறைமகன் இயேசுவில் நிறைவேற அவர்கள் முழுமையாக தங்களைக் கையளித்தார்கள்.
இறைமகனைத் தேடி
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்.
இயேசுவைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு யோசேப்பும் மரியாவும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே இயேசு போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது இயேசுவின் தாய் மரியா அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பின்பு இயேசு தம் பெற்றோரோடு நாசரேத்துக்கு சென்று, அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
யோசேப்பின் மரணம்
யூத சமூகத்தின் சவால்களை இயேசு எதிர்கொள்ள, மரியாவும் யோசேப்பும் அவருக்கு நல்ல வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். வசதி படைத்தவர்களும் சமயத் தலைவர்களும் ஏழை மக்களை கசக்கிப் பிழிந்தது அவர்கள் மனதைப் புண்படுத்தியது. அவர்களிடம் இருந்து இயேசு பல்வேறு சமூகப் பாடங்களைக் கற்றுக்கொண்டார். இயேசுவில் நிறைவேற இருந்த இறைத்தந்தையின் மீட்புத் திட்டத்தில், மரியாவும் யோசேப்பும் முழுமையாகத் துணை நின்றனர். கடவுளின் கட்டளைகளை வாழ்வில் செயலாக்குவதில் மரியாவும் யோசேப்பும் இயேசுவுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.
யோசேப்பும் மரியாவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் காண்பதற்காக, இயேசுவுடன் பல ஊர்களுக்குச் சென்றனர். இத்தகைய அனுபவங்கள் பல்வேறு இயற்கைச் சூழல்களையும், அங்கு வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களையும் பற்றி இயேசு அறிந்துகொள்ள உதவியாக இருந்தன. இயேசு வளரவளர யோசேப்புடன் சேர்ந்து தச்சுவேலை செய்ய கற்றுக்கொண்டார். ஏழை, எளியவர்களுக்குத் தேவையானப் பொருட்களை இருவரும் இலவசமாகவே செய்து கொடுத்தனர். இயேசு, நாசரேத்து தொழுகைக் கூடத்திற்குச் சென்று யூத மறைநூலைக் கற்பதிலும் தீராத ஆர்வம் கொண்டிருந்தார்.
யோசேப்பு முதுமை அடைந்த வேளையில், அவரது பணிகள் அனைத்தையும் இயேசுவே ஏற்று செய்யத் தொடங்கினார். நோயால் பாதிக்கப்பட்ட யோசேப்பை, மரியா அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். சரியான நேரத்தில் உணவும் மருந்தும் கொடுத்து, அக்கறையுடன் அவரைப் பராமரித்தார். யோசேப்பின் இறுதி நாட்கள் நெருங்கியதும், இயேசுவும் யோசேப்புக்கு உள்ளன்புடன் பணிவிடை செய்தார். இறையன்னை மரியா உடனிருக்க, இறைமகன் இயேசுவின் மார்பில் தலைசாய்த்து கடவுளைப் புகழ்ந்தவாறே யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார். அப்போது இயேசுவுக்கு வயது இருபத்தேழு.
No comments:
Post a Comment