மனிதர்கள் அன்பில், உறவில் இணைந்து வரும் அமைப்பே அன்பியம் ஆகும். அன்பை நிஜமாக்கும் அமைப்பு அன்பியம். கிறிஸ்தவத்தின் அச்சாணியான அன்பு ‘ஆகாப்பே’ என்ற சொல்லை குறிக்கும். இது ஒரு சமூக அன்பு, மக்களின் பல்வேறு கரிசணைகளில் சமூக வடிவம் பெற வேண்டும். அன்பு சமூக வடிவம் பெறும் போது அன்பியம் ஆகிறது.
அன்பியம் - குட்டித் திருச்சபை
மூவொரு கடவுள் செயல்படும் தளம்
அக்கம் பக்கம் வாழும் கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு
இறைவார்த்தை ஒளியில் இறைசித்தத்தை அறியும் இடம்
சான்று பகரும் திருச்சபை
இயேசுவின் சீடர்களை உருவாக்கும் தளம்
அன்பியத்தின் நான்கு முக்கிய கூறுகள்:
1. அருகருகே வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்று சேரும் இறை சமூகம்.
2. இறைவார்த்தைப் பகிர்வே அன்பியங்களின் அடிப்படையாகும்.
3. அன்பியத்தில் உள்ளவர்கள் நம்பிக்கையினால் உந்தப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படுதல்.
4. அன்பியங்கள் பங்குத் திருச்சபையோடும் அகில உலகத் திருச்சபையோடும் இணைந்து செயல்படுதல்.
தொடக்ககால திருச்சபையும் அன்பியமே!!!!
தொடக்ககால திருச்சபையினர் சிறு சமுக வாழ்வு வாழ்ந்தனர். மக்கள் மைய திருச்சபையாக திகழ்ந்தனர். இல்லத்திருச்சபையாக திகழ்ந்தனர். திப 2: 42-47; 4: 32-36 பகுதிகளிலும், மற்றும் பவுலின் கடிதங்களிலும் அன்பியத்தின் அடிப்படைக் கூறுகள் வெளிப்படுத்தப்படுகின்றகன. அவை::
1. மகிழ்வுடன், நட்புறவுடன், உயிர்த்த கிறிஸ்துவை மையப்படுத்தி வீடுகளில் கூடினர். (திப 26: 30,31; உரோ. 16: 23)
2. மூவொரு கடவுளின் உடனிருப்பை உணர்ந்து புகழ்ந்து போற்றினர். (2 கொரி 13: 13; திப 2: 47)
3. திருத்தூதர்களின் போதனைகளில், ஆண்டவர் இயேசுவின் போதனைகளையும், செயல்களையும் கேட்டனர், தியானித்தனர், பகிர்ந்தனர். (1 யோவா 1: 1-4)
4. தங்களுக்குள்ள அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
5. இறையாட்சியை நிலைநாட்ட நற்செய்தி அறிவிப்பு செயல்பாடுகளைத் திட்டமிட்டு, பணிப்பகிர்வு செய்தனர். (திப 6: 1-3)
6. இறைவேண்டலில் நிலைத்திருந்து, இறைவனுக்கு நன்றி கூறினர். (எபே 3: 21, 6-18)
7. அப்பத்தை பிட்டு, மகிழ்வுடன் வீடுகளில், நட்புறவுடன் உணவைப் பகிர்ந்து கொண்டனர். (திப 2: 42-47)
, தொடக்ககால திருச்சபை ஒர் அன்பியமாகவே எண்ணிக்கையளவிலும், செயல்பாட்டளவிலும் இருந்தது. எருசலேமில் கூடிய இந்தக் குட்டித் திருச்சபையானது திருத்தூதர் பவுலின் முயற்சியால், புத்துயிர் சிந்தனையால் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. இக்காலக்கட்டத்தில் பல இடங்களில் திருச்சபை இல்லங்களில் கூடும் திருச்சபையாகவே இருந்தது. இதற்குறிய விவிலிய பகுதி:-
எருசலேம் : திப 2: 22, 6: 15, 7: 54 – 8: 4, 15: 1-31
அந்தியோக்கு : திப 11: 19-30, 13: 1-3, 1: 21-28; கலா 2: 11
எபேசு : திப 18: 19-28, 19: 1-40, 20: 16-38; எபே 1: 1-12; 1 கொரி 15: 32, 16: 8; 1 திமொ 1: 3-4;
திவெ 2: 1-7
பிலிப்பி : திப 16: 11-24; பில 1: 3-14, 2: 25-30, 4: 14-23,
கொரிந்து : திப 18: 1-11, 19: 1; 1 கொரி 1: 10-31, 3: 3-9, 3: 16-23, 4: 1-21, 5: 1-12, 6: 5, 8: 13, 9: 1: 7, 9: 11-16, 10: 14-22, 11: 17-34, 12: 4-31, 13: 1: 13, 14: 1-33; 2 கொரி 1: 12-24.
மேற்சொன்ன நகரங்களில் கூடிய தொடக்ககாலத் திருச்சபைகள் இல்லத் திருச்சபைகளாக, சமூகத் திருச்சபைகளாகத் தான் இயங்கின.
அவர்கள் சமத்துவம், சகோதரத்துவம், ஒன்றித்த உள்ளம் இவைகளின் வழியாக இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் “திருச்சபை என்பது இறைமக்களின் சமூகம்” என வலியுறுத்துகிறது. பொதுநிலையினர் திருச்சபைக்குள் பல்வேறு பணிகளை ஆற்றவும், முடிவுகள் எடுப்பதில் பங்கேற்கவும் ஆரம்பித்தனர். எனினும் அடித்தட்டு மக்களுக்கு “நாங்களும் திருச்சபையின் அங்கங்களே” என்ற சுய உணர்வைக் கொடுத்தது அன்பியங்களே. அன்பியத்தின் வழியாக திருச்சபையானது, பொதுநிலையினரின் பங்கேற்புத் திருச்சபையாக மாற்றம் காண்கிறது. அன்பியங்களில் பொதுநிலையினர் விவிலியத்தை வாசித்துத் தியானிப்பதாலும், அதன் அடிப்படையில் முடிவுகள எடுப்பதாலும், அவர்களுடைய நம்பிக்கையும், இறையுணர்வும் ஆழப்படுத்தப்படும்.
அன்பியத்தின் இலக்கணம் மூவொரு இறைவன்
திருச்சபையின், உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றிணைந்த ஒரு குடும்பமாக வாழ வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். “அனைத்துலகத் திருச்சபை, தந்தை, மகன், தூய ஆவி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமையோடு ஒன்றினைந்த ஒரு மக்கள் குலம், போல் திகழ்கிறது.” என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஏடு (திருச்சபை – எண் 4) கூறுகிறது.
ஆகவே இறைவன் ஓர் அன்புக் குடும்பமாய், அன்புச் சமுகமாய்த் துலங்குகிறார். தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவருக்கும் இடையே ஒற்றுமை, அன்புப பரிமாற்றம், ஒன்றித்துத் திட்டமிட்டுச் செயல்படுதல், சிந்தித்தல், வல்லமையில் சமத்துவம் ஆகிய பண்புகளைக் காண்கிறோம். மூன்று இறை ஆட்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான கூட்டுக் குடும்பமாய் விளங்குகின்றனர். இறைக் குடும்பத்தை ஒரு சிறந்த அன்பியம் என்று சொல்லலாம். மூவொரு இறைக் குடும்பத்தில் பளிச்சிடும் அத்தனை பண்புகளும், மனித சமூதாயத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். “தூய தந்தையே நாம் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.” (யோவ 17: 11; 21: 23) என்று இயேசு மன்றாடினார்.
எனவே, அன்பியத்தின் மேல்வரிச்சட்டமாக, மூவொரு இறைவன் விளங்குகிறார். இதனால்தான், “கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.......... அவர் ஒளியில் இருப்பது போல், நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்” (1 யோவன் 1: 5-7) என திருத்தூதர் யோவன் கூறுகின்றார்.
திருச்சபையின் மையமே அன்பியம்:
மக்களின் வாழ்வை மையமாக வைத்து ஆலயம் அல்லது ஏதோ பொது இடங்களில் அல்ல, மாறாக அவர்கள் அன்பியத்தில் யாராவது ஒருவர் இல்லத்தில் கூடிவரும் அமைப்பே அன்பியங்கள். திருமுழக்கு பெற்ற ஒவ்வொருவரும் அன்பியத்தின் அங்கத்தினர்கள். இதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை.
நற்செய்தியை மையமாக வைத்து அன்பியத்தில் வாசித்து தி யானித்து கருத்துகளைப் பகிர்ந்து, நற்செய்தியின் ஒளியில் தங்கள் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை கலந்து பேசி திட்டமிட்டு செயல்படவேண்டும். போதிய பயிற்சி, அனுமதியில்லாமல் நற்செய்திக்கு மறையுரை போன்று
விளக்கம்கொடுக்க முயற்ச்சிக்க கூடாது. அதற்கு குருக்கள் இருக்கிறார்கள். அன்பியம் செபக்கூட்டமும் இல்லை. நற்செய்தி கூட்டமும் இல்லை. மிகத் தேவயான ஆரம்ப முடிவு செபமும், செபமாலையுடன் ஆவியானவர் பாடலுடன் ஆயர் பேரவையின் வாழிகாட்டுதலின் படியும் பங்கு தந்தையின் அறிவுறுத்தலின் படியும் கருத்து பகிர்வும் பரிமாற்றமும் இருத்தல் ஆவசியம். இந்த கருத்து பகிர்வு கத்தோலிக்க திருச்சபையின் அடிப்படை போதனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவாதாகவும் செபம் செய்வது எப்படி, விவிலியம் எப்படி வாசித்து எப்படி வாழ்வாக்குவது, சமுக அரசியல் விழிப்புணர்வு கொடுப்பது, அன்பியத்தில் உறவை வளர்த்துக் கொள்ளுவது, பங்கு தளத்துடன், மறைவட்ட – மாவட்டத்துடன் ஒன்றித்து செயல்படுவதாகவும் இருக்கலாம்.
அன்பியத்தின் முலம் மக்கள் மத்தியில் தோழமை வளர்க்கவும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யவும் பிற குழுக்களுடன் ஒன்றித்திருந்து சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயலவேண்டும்.
அன்பியத்தின் தோற்றம்:
பிரேசிலில் அன்பியம்:
நமக்கு போதுமான அளவுக்கு குருக்கள் இருக்கிறார்கள். ஆனால், பிரேசிலில் போதுமான குருக்கள் இல்லாத காரணத்தால் கிறிஸ்து பிறப்பு நாளில் கூட திருப்பலி நடைப்பெறுவது இல்லை. 1956 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாளன்று ஒரு சாதாரண மூதாட்டி “அருட்பணியாளர் இல்லாத காரணத்தினால் ஏன் திருச்சபைக்குள் அனைவரும் செயலிழந்து போக வேண்டும்” என புலம்பினார். இந்த புலம்லின் விளைவே ஆஞ்சலோ ரோசி என்ற அருட்பணியாளரை “சமுக மறைக்கல்வி இயக்கம்” ஆரம்பிக்கத் தூண்டியது. இந்த இயக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட பொதுநிலையினர் பங்குத் தளங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் இவ்வழிபாடு அருட்பணியாளர் இல்லாத திருப்பலி என்றழைக்கப்பட்டது. இதில் மறைக்கல்வியே சமூகத்தின் மையமாக விளங்கியது. ஆலயங்களுக்கு பதிலாக சமூதாய கூடங்களில் செபவழிபாடு, மறைக்கல்வி, சமூகப் பிரச்சனைக்ளுக்குத் தீர்வுகாணும் அமர்வுகள், பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பரிணாம வளர்ச்சியாகத் தான் அன்பியங்கள் தோன்றின. நீதியையும், உண்மையான அமைதியையும், ஏழைகள், இளைஞர்கள் வளர்ச்சியையும் நிலைப்பாடாகக் கொண்டு பெண்களின் மேம்பாட்டிற்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் அன்பியங்கள் செயல்படுவாதால் பாமர மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு வளர்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் அன்பியங்கள்:
1971 ஆம் ஆண்டு உரோமையில் நடைப்பெற்ற ஆயர்கள் மாமன்ற அமர்வின் போது ஆப்பிரிக்க ஆயர்கள் தங்களது மறைமாவட்டங்களில் அன்பியங்கள் தோன்றியிருப்பதாகத் தெரிவித்தனர்.
சாம்பிய நாட்டில் மக்கள் ஆட்சி ஏற்பட அன்பியங்கள் பெருமளவில் செயல்பட்டுள்ளன. 1993 ல் கென்யாவில் தேர்தல் நடந்தபோது அன்பியங்களில் உள்ள சாதாரண மக்களை அரசியல் தலைவர்கள் தேடி சென்று ஆதரவு திரட்டினர்.
1971 ஆம் ஆண்டு உரோமையில் நடைப்பெற்ற ஆப்பிரிக்க ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் பேசிய யோடோ சிலோத்தோ என்ற ஆயர் “அன்பியங்களைப் புறக்கனிக்கும் திருச்சபை எதிர்காலம் இல்லாத திருச்சபை” என்று கூறினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அன்பியங்கள்:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அன்பியங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் துறவறச் சகோதரிகளின் துணிச்சலான செயல்பாடுகளாகும். இவர்கள் அன்பியங்கள் வழியாக கொடுத்த விழிப்புணர்வால் தான் சர்வாதிகார ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் அன்பியங்கள்:
செங்கை மறைமாவட்ட எல்லைக்குட்பட்ட தாம்பரம் பங்கில், 1975 முதல் 1987 வரை பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜோசப் தைப்பரம்பில் அடிகளார், “சான்று பகரும் சிறு சமுகங்கள்” என்று பங்கை பல சமுகங்களாக பிரித்து மக்களை வழிநடத்தியது மட்டுமல்லாது பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
1979 ம் ஆண்டு அருட்தந்தை எட்வின் அடிகளார் கோட்டாறு மறைமாவட்டத்தில் கோடி முனை என்ற பங்கில் அன்பியங்களை கட்டியழுப்பி அந்த மறைமாவட்டம் முழுவதும் அன்பியங்கள் பரவக் காரணமாய் அமைந்தார்.
தமிழகத்தில் “புதுவாழ்வு – 2000” என்ற திட்டத்தின் வழியாக அன்பியங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில், மதுரைப் பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையவர்கள் முனைப்புடன் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக ஆயர் பேரவை நமது மேய்ப்புப் பணியில் அன்பியம் முதன்மையான இடத்தை பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டதன் விளைவாக, தமிழகத்திலுள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் அன்பியங்கள் உருவாக்கப்பட்டதுடன் பங்கு மேய்ப்புப் பணி பேரவையும் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment