அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் - லூக்கா 18: 1-8

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலையடிவாரக் கிராமத்தில் கார்முகில், வணங்காமுடி என்ற இணைபிரியா தோழர்கள் இருவர் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் சோம்பேறியாக சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடும் சுறுசுறுப்பாகவும் எந்த வேலையையும் மிக அழகாக செய்து முடிக்க கூடியவன்.

ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஓர் இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் ஒரு கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக்காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கலப் பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம், எனக்கு பிள்ளை குட்டிகளென்று யாரும் கிடையாது. எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று, அந்தப் புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார்.

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம். இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம்” என்று கூறினான். அதற்கு வணங்காமுடி "புதையலை கண்டறியத்தானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைத்தனம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் “உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது” என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல், அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான்.

பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியைத் தொடங்கினான். வழியில் ஒரு கடைக்காரரிடம் மலையில் இருக்கும் கோயிலை பற்றி விசாரித்தான். அதற்கு அந்த கடைக்காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும், அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார்.
அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது. ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் “மலையில் கோயிலை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அந்த சிறுவன் “ஓ நன்றாக தெரியுமே... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான்.

கோவிலுக்குச் சென்ற அவன், அதற்கு எதிரே இருந்த அரசமரத்தின் அடியில் குழி தோண்டினான். இறுதியில் புதையலையும் கண்டுகொண்டான்.

தன்னம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு மலைமீது ஏறியதன் பலனாக அந்த புதையல் வணன்காமுடிக்குக் கிடைத்தது. ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுகோ எதுவும் கிடைக்காமல் போனது. தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஒரு செயலைச் செய்தால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனந்தளராமல் இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு நேர்மையற்ற நடுவர், கைம்பெண் உவமையைச் சொல்கிறார். நடுவரோ யாருக்கும் ஏன் கடவுளுக்குக் கூட பயப்படாதவர். நிச்சயம் அவர் ஒரு உரோமை அரசாங்கத்தின் நடுவராகவே இருந்திருக்க வேண்டும். யூத நடுவர்கள் அப்படி கடவுல்க்குப் பயப்படாமல் இருக்கமாட்டார்கள். அவரிடத்திலிருந்து நீதி கிடைக்கவேண்டும் என்று யாதொரு துணையும் இல்லாத கைம்பெண் போராடுகின்றார். நேர்மையற்ற நடுவர் யாருக்கும் பயப்படதவராக இருந்தாலும், அக்கைம்பெண்ணின் தொல்லையின் பொருட்டு அவர் அவருக்கு நீதியை வழங்குகின்றார்.

இந்த உவமையைச் சொல்லிவிட்டு இயேசு, “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ” என்கின்றார். இறைவன் தன் மக்கள்மீது பேரன்பு கொண்டிருப்பவர். அவர் தம்மிடத்தில் மனந்தளராது மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயம் செவிகொடுப்பார் என்பதே உண்மை.

எனவே, நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் மனந்தளராது மன்றாடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

No comments:

Post a Comment