இறை இரக்க கட்டுரைகள்
கட்டுரை-3 - நானும் தீர்ப்பிடேன்!
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
மறைநூல் அறிஞரும், பரிசேயரும் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒரு பெண்ணை
இயேசுவின் முன் நிறுத்துகின்றனர். மோசேயின் சட்டப்படி இவள் கல்லால் எறிந்து
கொல்லப்பட வேண்டும் என்று கொக்கரிக்கின்றனர்.
இயேசு குனிந்து தரையில் எதையோ
எழுதுகின்றார். சிறிது தாமதித்தால், இக்கொடூர
எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு. ஆனால்,
மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் இயேசுவை விட்டபாடில்லை.
தொடர்ந்து அவள் கொல்லப்பட வேண்டும் என்று நிலையாய் நின்றனர். மேலும், அவர்களுடைய எண்ணத்தில் ஒரு சூழ்ச்சியிருந்தது. அவரை எப்படியாவது
தங்கள் சூழ்ச்சியில் சிக்கவைக்க வேண்டுமென்று எண்ணினர்.
அப்பெண்ணைக் கொல்லக்கூடாது என்று இயேசு
சொன்னால், அவர் மோசேயின் சட்டத்திற்கும், உரோமை அரசின் சட்டத்திற்கும் மாறாகச் செயல்படுகின்றார் என்று குற்றம்
சாட்டப்பட முடியும். அவளைக் கொல்ல வேண்டுமென்று இயேசு சொன்னால், இரக்கம் நிறைந்த இந்தப் போதகரின் அணுகுமுறை, அவர்
மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களின் கண்ணில் மண்வாரியது போல் இருக்கின்றது என்று
இயேசுவின்மீது குற்றம் சாட்டக் காத்திருந்தனர். இயேசுவோ, மீண்டும்
குனிந்து தரையில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். குற்றம் சாட்டியவர்களின் பாவப்பட்டியலைத்
தரையில் எழுதிக் கொண்டிருந்தார் இயேசு என்ற கருத்தை புனித அகுதினார் நம் கண்முன்
வைக்கின்றார்.
இரண்டாம் முறை இயேசு தாமதிக்கின்றார்.
அப்படியாவது அவர்களது மனம் உருகும், கற்களை
எறிந்துவிட்டு அவளுக்கு விடுதலை அளிப்பார்கள் என்று இயேசு எதிர்பார்க்கின்றார்.
அவர்கள் மனம் இளகுவதாகத் தெரியவில்லை.
இயேசு நிமிர்ந்து அவர்களைக் கோபத்துடன்
பார்த்து, உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில்
இப்பெண்மேல் கல் எறியட்டும் என்று சவால் விடுக்கின்றார். அவர் சொன்னதைக் கேட்டதும்
முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து
அகன்றுவிடுகின்றனர்.
அவர்கள் எல்லாரும் மாயமாய் மறைந்தவுடன்
இயேசுவும், அப்பெண்ணும் மட்டும் தனித்து
விடப்படுகின்றனர்.
இந்த ஓர் உருக்கமானக் காட்சியைப் பற்றி
புனித அகுதினார் கீழ்வருமாறு விவரிக்கின்றார்: இரக்கமும், பாவமும்
ஒன்றையொன்று நேருக்கு நேராகச் சந்திக்கின்றன.
இயேசு அப்பெண்ணைப் பார்த்து நானும்
தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் என்கிறார்.
இறைவன் பாவத்தை வெறுக்கின்றார். ஆனால்
பாவியை மன்னிக்கின்றார், அன்பு செய்கின்றார்.
திருத்தந்தை பிரான்சி கூறுவது போல
தீர்ப்பளிக்க நான் யார்? (Who am I to Judge?) என்ற
மனநிலையோடு இந்த தவகாலத்தில் பிறரைத் தீர்ப்பிடாமல், நமக்குத் தீமை இழைப்பவர்களைக் கூட அன்பு செய்து மன்னிப்போம். பிறரை
மன்னிக்கும் பொழுது இறைவனின் இயல்பால் நாம் நம்மையே போர்த்திக்கொள்கின்றோம்.
தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்குள்ளாகமாட்டீர்கள்
என்ற வேதவாக்கு நம் மனத்தில் ஆழமாக விதைக்கப்படட்டும். இறை இரக்க இயல்பை நம்மில்
வளர்த்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க
No comments:
Post a Comment