இறை இரக்க கட்டுரைகள்
கட்டுரை-4 - காணாமற்போன ஆடு!
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
லூக்கா நற்செய்தி 15 ஆம் அதிகாரத்தில் இயேசு மூன்று இரக்கத்தின் உவமைகளைத் தம் சீடருக்கு
அளிக்கின்றார்: 1. காணாமற்போன காசு 2. காணாமற்போன ஆடு 3. காணாமற்போன மகன்.
ஆட்டை மேய்ப்பவன் ஆயன். ஆயனுக்கும்,
ஆடுகளுக்குமிடையே உள்ள பிணைப்பை, பாசத்தை,
அன்பை இவ்வுமை நமக்கு விளக்கிக் காட்டுகின்றது.
இஸ்ரயேல் நாட்டின் உன்னதத் தலைவர்களில்
பல பேர் ஆயர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக, ஆபிரகாம்,
மோசே, தாவீது, அபக்கூக்கு
மற்றும் பலர். இவர்களுடைய அன்பையும், பரிவையும்,
பாசத்தையும், பராமரிப்பையும் சுவைத்த இஸ்ரயேல்
மக்கள் இறைவனையே ஓர் உன்னதஆயனாகக் கருதினர். விவரித்தனர். விளக்கம் கொடுத்தனர்.
உதாரணமாக, திருப்பாடல் 23. கடவுளைத்
தங்கள் ஆயனாகவும், அவரது அன்புச் செயலை அதிகம் மதித்து
அவரைப் புகழ்கின்றனர்.
அவரது இரக்கச் செயல்களைப் பற்றி ஒரு
பட்டியலையே நமக்குக் கொடுக்கின்றனர் - பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச்
செய்வார் - அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார் - புத்துயிர்
அளிப்பார் - நீதி வழி நடத்திச் செல்வார் - சாவின் இருள்சூழல் பள்ளத்தாக்கில் நான்
நடந்தாலும், அவர் என்னோடு இருந்து எனது அச்சத்தை
நீக்குவார் - அவரது கோலும், கழியும் என்னைத் தேற்றும். என்னைப்
பாதுகாக்கும் - என் வாழ்நாள் முழுதும் அவரது அருள்நலமும், பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்!
இத்தகைய ஓர் ஆயனைப் பற்றிதான் இயேசு
தமது உவமையில் விளக்கம் கூறுகின்றார். ஓர் ஆயனிடமிருந்த நூறு ஆடுகளில் ஒன்று
காணாமற் போனவுடனே, தனது தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும்
விட்டு விட்டு, காணாமற்போன ஆட்டைக் கரிசனையோடு
தேடுகின்றார். கண்டடையும்வரைத் தேடுகின்றார்.காணாமற் போன ஆட்டைக் கண்டுபிடித்ததும்,
அவர் அதனைத் தூக்கி அரவணைத்து, அன்போடு
தனது தோளில் சுமந்து கொண்டு, வீடு திரும்பியதும், தன் நண்பர்களோடு மகிழ்ந்து நடனமாடுகின்றார்.
இயேசு தம்மையே ஒரு நல்ல ஆயனாகச்
சித்தரித்து ஆட்டுக்கொட்டில் பற்றிய உவமையை யோவான் எழுதிய நற்செய்தியில் 10 அதிகாரத்தில் விவரிக்கின்றார்: நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்
பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு
வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரையே கொடுப்பார்
(யோவான் 10:10-11) என்று கூறுகின்றார். நானும்
அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் (யோவா 10:15) என்கிறார்.
நாமும், தவறான
பாதையில் செல்பவர்களுக்கு ஆலோசனை தந்து அவர்களைத் தீர்ப்பிடாமல், திருச்சபை என்ற ஆட்டுக்கொட்டிலில் சேர்க்கும் இரக்கச் செயலைச்
செய்வோம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருச்சபை
எவ்வாறு இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றார்: இரக்கத்தின், நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்ந்து, எல்லாரையும்
வரவேற்று, அணைத்து அன்பைப் பொழிந்து, மன்னிக்கும் வீடாகத் திகழட்டும் நம் திருச்சபை!
இந்த தவக்காலத்தில் நம்மாலான இரக்கச்
செயல்களைப் புரிந்து, நமது அயலாரை அன்பு செய்வோம். இயேசுவின்
இரக்கத்தை அனுபவரீதியாக உணர மக்களை வழிநடத்துவோம்.
ஆமேன்
No comments:
Post a Comment