அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 19, 2017

மன்னிப்பதற்கு எல்லை இல்லை!

இறை இரக்க கட்டுரைகள்

 கட்டுரை-5  - மன்னிப்பதற்கு எல்லை இல்லை!

அருட்தந்தை தம்புராஜ் சே.ச.

புனித பேதுரு, இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: எனக்குத் தீங்கு இழைத்தவரை எத்தனை முறை நான் மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா? என்று. யூதர்களின் சட்டப்படி நாம் ஒருவருக்கு மூன்று முறைக்கு மேல் மன்னிக்கக் கடமை இல்லை. ஆனால், இயேசு பேதுருவிடம், ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை என்று பதில் கூறுகின்றார். அதாவது, ஒருவரை மன்னிப்பதற்கு அளவோ, எல்லையோ இல்லை என்கின்றார்.

இதற்கு விளக்கம் தருவதற்காக இயேசு ஓர் உவமையைச் சொல்கின்றார். ஓர் அரசர் தன்னிடம் பட்ட கடன் பெரும் தொகையாயிருந்தும், தனது பணியாளன், சிறிது அவகாசம் கொடுங்கள். நான் கடனை அடைத்து விடுகிறேன் என்று கெஞ்சிக் கேட்கின்றான். அரசனும், அவன்மீது இரக்கம் கொண்டு அப்பணியாளனின் கடனை முற்றிலும் தள்ளுபடி செய்து, அவனுக்கு இரக்கம் காட்டுகின்றார். ஆனால், அதே பணியாளன் தனது சக பணியாளன் கடன்பட்டத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு அவனைத் தண்டித்து அவனையும் அவனது மனைவி, மக்களையும் சிறையடைக்கின்றான். இதைக் கேள்வியுற்ற அரசன் அப்பணியாளனைக் கடிந்து கொண்டு, தண்டனை கொடுத்துச் சிறையில் அடைக்கின்றான்.

இவ்வுமையின் பாடமாக, இயேசு உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். முதல் பணியாளன் கடன்பட்ட தொகை, 10,000 தாலந்துகளே. ஒரு தாலந்து வெள்ளி 6000 திராக்கு மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். ஒரு தாலந்து பொன் 1,80,000 திராக்குமா அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். இரண்டாவது, சக பணியாளன் கடன்பட்டது வெறும் 100 தெனாரியம் மட்டும்தான். இந்த இருவருடைய கடனையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டாம் பணியாளனின் கடன் தொகை - மதிப்பு, முதலாம் பணியாளன் பட்ட கடன் தொகையில் ஐநூறு ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

இறைவனிடமிருந்து மன்னிப்பு, இரக்கம் பெற வேண்டுமென்றால் நாம் முதலில் நமது அயலானுக்கு இரக்கம் காட்டவேண்டும். இதைத்தான் கர்த்தர் கற்பித்த செபம் என்று சொல்லப்படும் உன்னதமான செபத்தில் நமக்கு வலியுறுத்துகின்றார். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல் எங்கள் குற்றங்களையும் மன்னியும். இதுதான் இயேசு நம் கண்முன் வைக்கும் நிபந்தனை.

இயேசு தமது மலைப்பொழிவில், இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்(மத் 5:7) என்று கூறுகின்றார். பகைவரிடம் அன்பு, இரக்கம் காட்டுவதைப் பற்றி இயேசு விளக்கும் பொழுது, கீழ்வருமாறு கூறுகின்றார்: உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6:36) என்கிறார். இந்த வசனத்தைத்தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்க யூபிலி ஆண்டின் மையக்கருத்தாக நமக்குக் கொடுக்கின்றார்.

மனிதன் பாவத்தினால் இறைவனுக்குக் கடன் பட்டுள்ளான். இதை எவராலும் தீர்க்க முடியாது. ஆனால் இறைத் தந்தை நமது பாவம் என்ற கடனைத் தள்ளுபடி செய்ய தமது ஒரே பேறான மகனை சாவுக்குக்கூட கையளிக்கத் தீர்மானித்தார். இதனால் நமக்கு இரக்கமும், வாழ்வும், மீட்பும் வந்தடைந்தது. நாமும் பிறரது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு, இரக்கம் காட்டி மன்னிப்போம். இறைவனின் இரக்கத்தின் கருவிகளாகச் செயல்பட்டு, இறைவனின் மறுபெயர் இரக்கம் என்பதை இந்த தவக்காலத்தில் நிரூபித்துக் காட்டுவோம்.

ஆமேன்

No comments:

Post a Comment