இறை இரக்க கட்டுரைகள்
கட்டுரை-8 - பொன்விதி
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
பகைவர்களிடம் அன்பு காட்டுதல் என்ற
மையக் கருத்தை வைத்து, இயேசு இறை இரக்கத்தின் பொன் விதியை
இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு கூறுகின்றார்:
பிறர் உங்களுக்கு என்ன செய்ய
விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச்
செய்யுங்கள் (லூக் 6:31).
மேற்கூறப்பட்டுள்ள பொன்விதியைப் பல
மதங்களின் கொள்கைத் திரட்டுகளிலும் பார்க்கின்றோம். உன்னைப் புண்படுத்தும் எதையும்
நீ மற்றவருக்குச் செய்யாதே என்கிறது மோசேயின் சட்டம்.
கி.பி. 235
ஆம் ஆண்டில் உரோமையில் அலெக்சாண்டர் செவேர என்பவரின் மாளிகையில் பல இடங்களில்
கீழ்வரும் பொன்விதி எழுதப்பட்டிருந்தது: பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று
நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை அவர்களுக்கு நீங்களும் செய்யுங்கள்
மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய
வேண்டாம் என்பதை நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை
மற்றவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டாம் என்கிறார் கன்பூசிய என்ற மாமேதை.
தனக்கு எது தீமையை விளைவிக்கும் என்று
ஒருவர் கருதுகிறாரோ அதை மற்றவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டாம். இது தர்மத்தின்
விதி என்கிறது மகாபாரதம்.
சட்டத்தின், இறைவாக்கினர்களின்
போதனையின் சுருக்கம், கருப்பொருள் என்ன என்பதை இயேசு
கீழ்வருமாறு விவரிக்கின்றார்: ஆகையால், பிறர்
உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச்
செய்யுங்கள். இறைவாக்குகளும், திருச்சட்டமும் கூறுவது இதுவே (மத் 7:12).
இந்தப் பொன்விதிக்கு இயேசு விளக்கவுரை
கொடுப்பதை லூக்கா நற்செய்தியில் நாம் காண்கின்றோம்: உங்கள் பகைவரிடம் அன்பு
கூருங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி
கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு
கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்களுடைய
மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப் பார்த்தால்
அவரைத் தடுக்காதீர்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய
பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே
நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும்
தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே! உங்களுக்கு நன்மை
செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே! திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என
எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில் முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன்
பாவிகளும், பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே!
நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செய்யுங்கள்., அவர்களுக்கு
நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.
அப்போது உங்கள் கைமாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னதக் கடவுளின் மக்களாய்
இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும், பொல்லாதோருக்கும்
நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம்
உள்ளவர்களாய் இருங்கள் (லூக்கா 6:27-36).
மிகவும் சவாலான ஓர் அறிவுரை தான்.
இவற்றைச் இந்த தவக்காலத்தில் செய்ய முயற்சி செய்வோம். நம் வாழ்வில் மகிழ்ச்சியும்,
அமைதியும் வந்தடையும். --ஆமேன்
தொடரும்
No comments:
Post a Comment