வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.- சங்கீதம். 119 : 9
பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும்
தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி பைபிள் படித்துக்கொண்டே இருப்பார்.
இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை
கவனித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்,
" தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே... இதை எத்தனைநாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,
" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்
இருக்கும்".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு
முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு
மூலையில் கொட்டினார். பல நாட்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.
பெரியவர் சொன்னார், " தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக்
கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்"
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால்
எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா
நீரும் தரையில் ஒழுகிப்போனது.
பெரியவர் சொன்னார்,
" இன்னும் ஒரு முறை" .
இளைஞன் மீண்டும் முயன்றான். ஆனால்
மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்? மீண்டும்
சிந்திப் போனது.
பெரியவர் கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை
மட்டும்" இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது? " தண்ணீர்
பிடித்தான். வழக்கம் போலவே எல்லாத்தண்ணீரும் தரையில்.
" தாத்தா, இந்தாங்க
உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க?" என்றான்.
அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது?"
என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது "
"இப்போ பார்" என்றார்.
தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்
உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ
கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை
நிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை
சுத்தமாயிடிச்சு. அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு பைபிளும் மனப்பாடம்
ஆயிடும்னு சொல்ல முடியாது.
ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளத்திற்குள்ளே
இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே
இருக்கும்" என்றார்.
இளைஞனுக்குள்ளே என்னென்னவோ செய்தது.
"தாத்தா, எனக்குள்ளேயும்
நிறைய அழுக்கு இருக்குது. எனக்கும் இந்தப் பைபிள் கிடைக்குமா" என்றான்.
" நிச்சயமாப்பா!" என்றபடி தாத்தா
வீட்டுக்குள்ளிருந்து ஒரு பைபிளை எடுத்து வர எழுந்தார்.
📖📖📖📖📖📖📖📖
*வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்
பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக்
காத்துக்கொள்ளுகிறதினால்தானே.- சங்கீதம். 119 : 9*
📖📖📖📖📖📖📖📖
No comments:
Post a Comment