அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று

‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று’

‘தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை’ என்ற புகாருடன் ஒரு துறவியை தேடிப்போனார் இளைஞர் ஒருவர்.

“சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். இளைஞரும் துறவியைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது வழியில் மரமொன்றை இறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்தம் மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்று அலறி ஆர்ப்பாட்டம் செய்தார். அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். ஆனால் துறவியோ மரத்தை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டார்.

குழப்பமடைந்த இளைஞர் துறவியிடம், “இது என்ன குழந்தைத்தனமாக அல்லவா இருக்கின்றது. மரத்தை நீங்கள் பிடித்துக்கொண்டு, மரம் என்னை விடமாட்டேன் என்கிறது என்று சொல்கிறீர்களே?” என்றார். “மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களை கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி. அப்போதுதான் யார், எதைப் பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மை இளைஞருக்குத் தெளிவாக விளங்கியது.

பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவர் அல்லது பாவத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒருவர், தான் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராதவரை பாவத்திலிருந்து விடுபட முடியாது என்பது நிதர்சன உண்மை.

நற்செய்தி வாசகத்தில் பாவத்தில் வாழ்ந்துவந்த சக்கேயு, தான் பாவத்தில்தான் வாழ்ந்து வருகின்றோம் என்ற உண்மையை உணர்ந்த பின்பு மனமாற்றம் அடைகின்றார். சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு எத்துணை சிறப்பானது என்று இப்போது பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு பாடுகள் படுவதற்கு எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். அப்படி அவர் போகும் வழியில், எரிக்கோ நகர் வழியாகப் போகின்றார். அந்நகரானது வளம் கொழிக்கக்கூடிய ஒரு நகர். அப்படிப்பட்ட இடத்தில்தான் சக்கேயு என்னும் ஒருவர் இருக்கின்றார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.

சக்கேயுவைக் குறித்து அறிந்துகொள்ள முற்படும்போது மூன்று  காரியங்களை அறிந்துகொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

ஒன்று சக்கேயு மிகப் பெரிய செல்வந்தராக இருந்தும், மன அமைதி இல்லாமல் இருந்தார் என்பதாகும். சக்கேயுவிடம் ஏராளமான சொத்துக்கள், உடமைகள் இருந்தன. அப்படியிருந்தும் அவரிடம் மன நிம்மதி இல்லாமல் போனது துரதிஸ்டம்தான். யூதர்கள் வரிதண்டுபவர்களை நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு இணையாகக் கருதியதால், அவர்களோடு யாரும் பேசவும் இல்லை, பழகவும் இல்லை. இப்படி எல்லாராலும் தனிமைப்பட்ட வாழ்க்கையைத்தான் வரிதண்டுபவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்நேரத்தில்தான் வரிதண்டுபவர்களுக்குத்தான் தலைவராகிய சக்கேயு, ‘இயேசு பாவிகளையும் கைவிடப்பட்டவர்களையும் அரவணைக்கின்றார்; அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கின்றார் என்று கேள்விப்படுகின்றார்.

இரண்டு, சக்கேயு இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பார்க்கவும் விரும்புகின்றார். சக்கேயுவோ உயரம் அதிகமில்லாதவர்; மிகவும் குட்டையானவர். எனவே, கூட்டத்தோடு இருந்தால் இயேசுவைப் பார்க்க முடியாது  என்பதை உணர்ந்து, ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொள்கின்றார். அவ்வழியாக வரக்கூடிய இயேசு, சக்கேயு அத்திமரத்தின் மேலே இருந்துகொண்டு தன்னைப் பார்ப்பதற்காக ஆவல் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து, “சக்கேயு விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்கின்றார்.

மூன்று, தான் மனம்மாறிவிட்டேன் என்பதை செயலில் காட்டிய சக்கேயு. தன்னுடைய வீட்டில் இயேசு தங்கப் போகின்றார் என்று சொன்னதைக் கேட்டு சக்கேயு தான் உண்மையிலே மனமாறியவன் என்பதை மக்களுக்கு அறிவிக்கின்றார். “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன்” என்கின்றார். யூதர்களின் வழக்கத்தின் படி ஒருவர் மற்றவர்மீது பொய்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், அந்தப் பணத்தையும், அந்தப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதியையும் பாதிக்கப்பட்டவருக்குத் திரும்பிச் செலுத்தவேண்டும் (லேவி 6:5), ஆனால் சக்கேயுவோ உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகச் சொல்வதோடு மட்டுமல்லாமல், பொய்க்குற்றம் சுமத்தி கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திரும்பித் தந்துவிடுகிறேன் என்கின்றார். இவையெல்லாம் சக்கேயு முழுமையாக மனம்மாறிவிட்டார் என்பதை எடுத்துக்கூறுகின்றது.

சக்கேயு இவ்வாறு சொன்னதைக் கேட்ட இயேசு, “இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்கின்றார். அது மட்டுமல்லாமல் இழந்து போனதைத் தேடிமீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார் என்கின்றார். நாம் நம்முடைய பாவத்தை விட்டு முற்றிலுமாக மனந்திரும்பி வாழ்கின்றபோது இறைவனின் ஆசிரை அளவு கடந்த விதமாய் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. அதற்கு சக்கேயுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

எனவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்றிருக்கும் நாம், அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

No comments:

Post a Comment