இறை இரக்க கட்டுரைகள்
கட்டுரை-10 ஏழைகளுக்கு இரக்கம்
அருட்தந்தை தம்புராஜ் சே.ச.
மத்தேயு நற்செய்தியின் இறுதிப்
பகுதியில் நாம் விண்ணகம் செல்ல ஒரே ஒரு நிபந்தனைதான் உண்டு என்று இயேசு ஆணித்தரமாக
விளக்கிக் கூறுகின்றார்:
பின்பு அரியணையில் வீற்றிருக்கும்
அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, என்
தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல்
உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப்
பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள்
உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன். என் தாகத்தைத் தணித்தீர்கள். அன்னியனாக
இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள். நான்
ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்.
நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்.
சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்.
இயேசுவின் வாக்கைத் தன் வாழ்வாக
வாழ்ந்து காட்டியவர் அன்னை தெரசா! நாம் எவ்வளவுதான் பக்தி முயற்சிகளை மேற்கொண்டு
செய்திருந்தாலும் ஏழை எளியவருக்கு நாம் உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் நாம்
விண்ணகத்தில் நுழைய முடியாது.
கடவுளின் கட்டளைகளை, திருச்சபையின் கட்டளைகளைக் கைப்பிடிப்பது எளிது. ஆனால், எசாயா சொல்வது போல், உங்கள் எரிபலிகள்மீது எனக்கு நாட்டம்
இல்லை. உங்கள் கனிவிரக்கத்தையே விரும்புகிறேன். அன்னை தெரசாபோல நான் எப்படி இத்தனை
பேருக்கும் இரக்கம் காட்டுவது என்று நாம் தயங்கலாம். ஆனால் அந்த அன்னையே சொல்லி
இருக்கின்றார்: நாம் அசாதாரணமான காரியங்களைச் செய்யத் தேவையில்லை. சாதாரண சிறிய
காரியங்களை அன்போடு நாம் செய்யலாமே. மேலும், நூறு
பேருக்கு உங்களால் உணவு அளிக்க முடியவில்லை என்றாலும், ஒரு
நபருக்கு உணவளிக்கலாமே! என்றும் கூறியுள்ளார்.
நான் ஒருமுறை அன்னை தெரசாவை நோக்கிக்
கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்: அன்னையே, உதவி கேட்டு
எத்தனையோ பேர் என்னிடம் வருகிறார்கள். யாருக்குக் கொடுப்பது? எப்படிக் கொடுப்பது? எங்கேயிருந்து தொடங்குவது என்று
எனக்குக் குழப்பமாய் இருக்கிறதே? என்றேன். அதற்கு அன்னை அவர்கள் time
- ஒரு நேரத்தில் ஓர் ஆளுக்கு உதவி செய்யுங்கள்.
நான் என் பணியைத் தொடங்கிய பொழுது, கல்கத்தாவில் ஒருவரை சாக்கடையிலிருந்து
தூக்கி எடுத்தேன். இப்பொழுது சுமார் 4000 பேர்களைத்
தெருவோரத்திலிருந்து தூக்கி எடுத்திருக்கிறேன். அதில் பாதிப் பேர் எங்கள் மடியில்
இறந்து இறைவனைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். ஒரு நாளில் ஒருவருக்கு உதவி
செய்யுங்கள். என்று பதில் கூறினார்கள்.
ஆகவே, நாமும்
பெருந்திரளாக மண்டிக்கிடக்கும் ஏழைகளின் கூட்டத்தைப் பார்த்து பயந்து விடாமல்,
தயங்காமல் உணவு அல்லது பணம் ஓர் ஏழைக்குக் கொடுக்கலாமே! நம்
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டால், ஒரு துளியாவது மனுக்குலத்தில் வேதனையுறுவோரின் கண்ணீரைத்
துடைக்கலாம். இந்த தவக்காலத்தில் ஏதாவது ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுத்து
கனிவிரக்கச் செயலைச் செய்வோம்.
ஏழைகளின் கண்ணீரில் இயேசுவைப்
பார்ப்போம். இயேசுவும் நம்மை உண்மைச் சீடராகப் பாவித்து நமது நூறு மடங்கிற்கு மேல்
தமது அருள் வளங்களைப் பொழிவார். --ஆமேன்
No comments:
Post a Comment