அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, November 21, 2017

‘இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்’

‘இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்’ - மத்தேயு 5: 1-12

ஒருநாள் ஒரு வயதான பாட்டியும் தாத்தாவும் இன்னும் ஒருசில நாட்களில் வரவிருந்த தங்களுடைய பேரனுடைய பிறந்த நாளுக்காக பரிசு பொருகள் வாங்கிவருவதற்காக ஒரு கடைக்குச் சென்றார்கள்.

கடையில் நிறைய பரிசு பொருட்கள் இருந்தன. ஆனால் எதுவும் அவர்களைக் கவரவில்லை. அவர்கள் இருவரும் ஒவ்வொரு பரிசு பொருளாக பார்த்துக்கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கப்பானது இருந்தது. அதைப் பார்த்து வியப்படைந்த பாட்டி, “எத்தனையோ பரிசு பொருட்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட இந்த தேநீர் கப்பைப் போன்ற அழகான பொருளை நான் எங்கேயும் கண்டதில்லை” என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த தேநீர் கப்பானது, “நான் இந்த நிலையை அடைவதற்கு நிறைய வேதனைகளை அனுபவித்திருக்கின்றேன்... தொடக்கத்தில் எல்லாராலும் அருவருத்து ஒதுக்கப்பட்ட சாதாரண கணிமண்ணாகத்தான் இருந்தேன். யாரோ ஒருவர்தான் என்னைப் பிடித்து வடிவம் கொடுத்து, பின்னர் தீயிலே நன்றாகக் காய வைத்து, இப்போது நான் இருக்கக்கூடிய நிலைக்கு என்னைக் கொண்டுவந்தார். ஒருவேளை நான் மட்டும் தீயில் காட்டினால் வேதனையாக இருக்கும் என நினைத்திருந்தால், இப்போது இருக்கின்ற நிலையை நான் அடைந்திருக்க மாட்டேன். நான் அனுபவித்த வேதனைகளும் கஷ்டங்களும்தான் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது” என்றது.

தேநீர் கப்பானது இவ்வாறு சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்த அந்த வயதான பாட்டி, மனித வாழ்க்கையில் துன்பங்கள், வேதனைகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்துகொண்டார்.

ஆம், பாடுகளை அனுபவிக்கும் ஒருவரால்தான் பரலோகமும், சிலுவையைத் துணிவோடு ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் சிம்மாசனத்தையும் பெற முடியும் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். அம்மனிதர் கேட்கக் கூடிய கேள்வியைப் பார்க்கும்போது யூதர்களுக்கு மட்டும்தான் கடவுள் தரும் மீட்பு உண்டு, வேறு யாருக்கும், குறிப்பாக புறவினத்தாருக்கு அது கிடையவே கிடையாது என்கிற தொனியில் இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவர் கேட்கின்ற கேள்விக்கு நேரடியாக பதில்கூறாமல், வேறுவிதமாகப் பதில் கூறுகின்றார். “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமல் போகும்” என்கின்றார். இவ்வாறு இயேசு மீட்பினைப் பெறுவதற்கான முதலாவது வழியை – பாடுகள் வழியாக பரலோகம் அடைவதை – எடுத்துரைக்கின்றார்.

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய பலர் துன்பமே இல்லாமல் வாழ நினைக்கின்றார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ துன்பங்கள் நிறைந்த, பாடுகள் நிறைந்த வழியே மீட்பினைப் பெற்றுக் கொள்வதற்கான வழி என்று எடுத்துரைக்கின்றார். ஆகையால், யார் ஒருவர் இயேசுவுக்காகவும், அவருடைய விழுமியங்களுக்காகவும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுப்பவிக்கின்றாரோ அவர்தான் மீட்பினைப் பெற்றுக்கொள்வார் என்பது உண்மையாக இருக்கின்றது.

மீட்பினைப் பெறுவதற்கு ஆண்டவர் இயேசு முன்மொழிகின்ற இரண்டாவது வழி இயேசுவின் போதனையைக் கேட்டு, அதன்படி வாழ்வதாகும். நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், “வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் என்று கேட்பீர்கள். அவரோ ‘நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், “நீங்கள் எவ்விடத்தவரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்” என்கிறார். யூதர்கள் தாங்கள் தேர்ந்துதெடுக்கப்பட்ட மக்கள், அதனால் தீர்ப்பிடுகின்ற இறைவன் தங்களுக்கு சலுகை காட்டி விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வர் என்று நினைத்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ, மீட்புப் பெறுவதற்கு அது ஒரு காரணமல்ல, இறைவார்த்தையின் படி நடக்கின்றவரே மீட்பு பெறுவர் என்கிறார்.

மீட்புப் பெறுவதற்கு ஆண்டவர் இயேசு முன்மொழிகின்ற மூன்றாவது வழி தாழ்ச்சி. கடைசியானவர் முதன்மையாவார். முதன்மையானோர் கடைசியாவார்’ என்ற இயேசுவின் வார்த்தைகளில் இதை நாம் அறிந்துகொள்ளலாம். தாழ்ச்சியே மேன்மையடைவதற்கான வழி என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, யார் தன்னுடைய உள்ளத்தில் தாழ்ச்சியைக் கொண்டு வாழ்கின்றாரோ அவரே மீட்படைவார் எனது உண்மை.

எனவே, கடவுள் தருகின்ற மீட்பு எல்லாருக்கும் உண்டு என்பதை உணர்வோம் (1 திமோ 2:4), பாடுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வோம், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போம், உள்ளத்தில் தாழ்சியைக் கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறைவன் தரும் மீட்பினைக் கொடையாகப் பெற்று மகிழ்வோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

No comments:

Post a Comment