அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, August 30, 2017

பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

நூல் - 1  பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

1  தி. மொ 1 : 5 நான் ஒரு பாவி என்று எண்ணுவது.

1  யோ 1 : 8 நாம் பாவம் செய்யவில்லை என்றால் நம்மை ஏமாற்றுகிறோம்.

1  யோ 1 - 10  நம்முடைய பாவங்களை ஒப்புகொள்ளுதல்.

1  தி.மொ 1 - 15 பாவிகளை மீட்க மீட்பர் இயேசு வந்தார்.

மத் 9‡13 நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

லூக் 19 - 10    இழந்துபோனதை தேடி மீட்க வந்தேன்

யாக் 5: 15, 16 ஒருவர் மற்றவரிடம் பாவ அறிக்கை செய்துகொள்ளுதல்

1 யோ  2 : 1 - 2  நமது பாவத்துக்கு கழுவாய இயேசு

யோ 1 - 29 இவரே கடவுளின் ஆட்டுகுட்டி

1  யோ 1 : 7 - 10  இயேசுவின் ரத்தம் சகலவித பாவத்தைப் போக்கும்


நூல் - 2  ஏன் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?


மலா 2 : 7 குருவானவர் ஆண்டவரின் பிரதிநிதி ‡ மருத்துவர், வழக்கறிஞர்

லேவி 4 : 26 குரு பாவ கழுவாய் பலியை நிறைவேற்றுபவர், எபி 9 = 14, :22; 10:9-10

2  சாமு 12 - 13 தாவீது ‡ நாத்தானிடம் பாவம் அறிக்கை செய்தான்

மத் 18 - 18 இயேசுவுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உண்டு

லூக் 19 - 5 சக்கேயு தம் பாவத்தை அறிக்கையிட்டான்

திபா 32 : 3 பாவத்தை அறிக்கையிட்டு  விட்டு விடாதவரை உடல் வியாதி  உண்டு

லூக் 15 : 21 ஊதாரி மகன் தன் பாவத்தை அறிக்கையிட்டான்


நூல் - 3 பாவத்துக்குரிய பட்டியல்

கலா 4 - 10  நாள், கிழமை, மாதம் பார்த்தல் பாவம்

2  தீ.மொ 3:2-4 கடவுளுடைய காரியங்களைவிட உலக காரியங்களை விரும்புவது

கொல 3 : 5  பேராசை சிலை வழிபாட்டுக்கான தூண்டுதல்

2 தெச 3 : 6  பெற்றுக்கொண்டதை மற்றவருடன் பகிர்ந்து  நூல் ‡ 1



எறும்பிடமும் பாடம் கற்கலாம்

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை
ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு
நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டி
ருந்தார்

அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு
ஒருசிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான
ஒருஇலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது
மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது

செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம்
மேலும் தரையில் ஒருபிளவைப்பார்த்தவுடன் அது
சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக
வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை
இழுத்துச் சென்றது
மேலும் பலதடங்கல்கள்
அது தன் திசையைச் சற்றே மாற்றி
வெற்றிகரமாக முன்னேறியது

ஒருமணிநேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம்
செய்தது
அவர் வியந்துபோனார்
ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது
கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து
அதிசயித்தார்
ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன

எறும்பு இறுதியில் தனது இருப்பிட.இலக்கை
அடைந்தது
அது எறும்புப்புற்று எனப்படும் ஒரு சிறிய ஆனால்
ஆழமான குழி அருகே வந்தது
எறும்பால் அந்த இலையுடன் குழியினுள்
செல்ல.இயல வில்லை
அதுமட்டுமே செல்ல முடிந்தது

தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழி யருகே விட்டுத்தான்
செல்ல வேண்டியதாயிற்று
இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!

மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும்
சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை
ஏற்படுத்திக்கொள்கிறான்

அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப்பலப்பல
இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில்
அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத்தான்
செல்ல வேண்டும்

எறும்பிடமும் பாடம் கற்கலாம்
வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம்
எதுவும் நம்மோடு வரப்போவதில்லை

புரிந்தால் மதி
புரிந்துகொள்ள மறுத்தால் விதி⁠⁠⁠⁠

Sunday, August 27, 2017

எழுநூறு ஆண்டுகள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்க தீர்ப்பிடப்பட்ட ஒரு ஆன்மா, செபமாலை வழியாக விண்ணக வாழ்வை அடைந்தது

 எழுநூறு ஆண்டுகள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்க தீர்ப்பிடப்பட்ட ஒரு ஆன்மா,  செபமாலை வழியாக விண்ணக வாழ்வை அடைந்தது

அலெக்ஸாண்ட்ரியா என்ற புண்ணிய தலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புனித சாமிநாதரால் எவ்வாறு அற்புதமாக மனமாற்றம் அடைந்து, செபமாலை சபையினில் சேர்ந்தார்  என்பதனைக் குறித்து எழுத்தாளர் ப்ளம்மின் மற்றும் பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவளது இறப்பிற்குப் பின்னர், அவள் ஒருநாள் புனித சாமிநாதருக்குத் தோன்றி, இவ்வுலகில் அவள் புரிந்த பாவங்களுக்காகவும், அவளது உலக போக்கில் உள்ள நடத்தையினால் பலருக்கு துன்மாதிரியாக இருந்து அவர்கள் பாவங்களில் விழ காரணமாக இருந்ததாலும், தனக்கு எழுநூறு வருடங்களுக்கு உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து சுத்திகரணம் செய்யப்படவேண்டுமென்று தீர்ப்பிடப்படுள்ளது என்று கூறினார்.

ஆகையினால் அவள், புனிதரை அவரது செபங்களினாலும் செபமாலை சபையில் உள்ள உறுப்பினர்களின் செபங்களினாலும் தனது உத்தரிக்க ஸ்தல வேதனைகளை குறைவதற்காக மன்றாடுமாறு வேண்டிக்கொண்டாள். புனிதரும் அவ்விதமே செய்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவள் மீண்டும் புனிதருக்குத் தோன்றியபோது, சூரியனை விட பிரகாசமாக காணப்பட்டாள். புனிதர் மற்றும் செபமாலை சபையின் உறுப்பினர்களின் செபங்களினால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து மிகவும் விரைவாக விடுவிக்கப்பட்டாள்.

அவள் மேலும் புனித சாமிநாதரிடம், உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் சார்பாக வந்ததாகவும், இன்னும் அதிகமாக செபமாலையைக் குறித்து போதிக்கவும் வேண்டிக்கொண்டாள். உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மக்களின் செபமாலைகளை ஒப்புக்கொடுக்க வேண்டியும், அதன் மூலம் அந்த ஆன்மாக்கள் விண்ணக வாழ்வை அடையும் போது, தனக்காக வேண்டிக்கொண்டவர்களுக்கு அபரிமிதமான கொடைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து பெற்றுத்தருவார்கள் என்றும் கூறினாள்.

*சிந்தனை*

மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க முடியாது, ஆனால் இப்புவியில் வாழும் நாம் அவர்களுக்காக பல ஒறுத்தல் முயற்சிகள், செபங்கள் செய்யலாம். தனக்காக செபிக்க முடியாத நமது சகோதர சகோதரிகளுக்காக நாம் இறைவனிடம் இறைஞ்சி வேண்டும் பொழுது, நமது செபங்களுக்காக, அவற்றின் வாயிலாக அவர்கள் விண்ணக வாழ்வை அடைவார்கள்.

நாம் அவர்களுக்காக செய்யக்கூடியவை, 1, திருப்பலி ஒப்புக்கொடுத்தல், 2, நமாதண்டவரின் சிலுவைப்பாடுகளின் தியானம், 3, செபமாலை செபிப்பது.

இவ்வுலகில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திருப்பலியின் வழியாக, எண்ணற்ற ஆன்மாக்கள் ஈடேற்றம் பெறுகின்றன. நாமும் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்தும், திருப்பலிகளில் பங்கெடுத்தும் உதவலாம். இதன் மூலம் பலன் பெரும் ஆன்மாக்கள் நமது ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல தந்தையிடம் பரிந்து பேசுவார்கள் என்பது திண்ணம்.

நமதாண்டவர், மானிடர் அனைவருக்காகவும் பாடுகள் பட்டு உயிர்த்தெழுந்து, சாவின் கொடுக்கை வென்று, நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். அவரது பாடுகளை தியானித்து அவற்றை உத்தரிக்கும் ஆன்மாகளின் ஈடேற்றத்திற்கு ஒப்புக் கொடுக்கும் பொழுது, நமதாண்டவர் அவற்றை நிறைவேற்றுகின்றார்.

செபமாலை வாயிலாக நமது அன்னையின் சக்தி வாய்ந்த பரிந்துரையை நாடும் பொழுது, நமதன்னை, இறைவனின் தாய், அந்த ஆன்மாகளுக்கு தனது மைந்தனின் வழியாக விண்ணக வாழ்வைப் பெற்றுத்தருகின்றார்கள். தனது கீழ்படிதலால் எல்லாம் வல்ல தந்தைக்கு அறிய மகளாகவும், தனது கற்பினை காத்து பரிசுத்த ஆவிக்கு பாசமுள்ள மனையாட்டியாகவும், உலக மீட்பரை உலகுக்கு தந்து அவரது பாடுகளில் பங்கேற்றதால் இணை இரட்சகியாகவும் இருக்கும் நமதன்னையின் பரிந்துரையை பரிசுத்த தமத்திருத்துவம் உடனடியாக நிறைவேற்றுவார்கள்.

ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் நாம்,” சகல ஆன்மாக்களையும் குறிப்பாக உமது இரக்கம் யார் யாருக்குத் தேவையோ அவர்களை மோட்ச இராட்சியதிற்கு சேர்த்தருளும்” என்று நமதாண்டவரிடம் அன்னையின் வழியாக மன்றாடுகிறோம்.

உத்தரிக்க ஸ்தல ஆன்மாக்களுக்காக, நம்மால் இயன்ற அளவு திருப்பலிகளில் பங்கேற்றும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்தும், தினமும் ஒரு செபமாலையையாவது அவர்களுக்காக ஒப்புக்கொடுத்தும் அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கு உதவலாமா???

உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக மாதாவிடம் காணிக்கைச் செபம்

மிகவும் பரிசுத்த கன்னி மரியாயே!/ உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் பேரில்/ இரக்கம் மிகுந்த தேற்றரவு மாதாவே!/ அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில்/ சாஷ்டாங்கமாக விழுந்து/ பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும்/ காணிக்கை என்னவென்றால்/ என் அனுதினக் கிரியையினாலே/ நான் அடையக் கூடிய பூரண பேறு பலன்களையும்/ என் மரணத்திற்குப் பிறகு/ எனக்காக ஒப்புக்கொடுக்கும் செபதவப் பலன்களையும்/ தேவரீருக்கு கொடுக்கிறேன்./

மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காக/ தேவரீர் சித்தம் போல்/ அவைகளை பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்./ தற்காலத்திலும் பிற்காலத்திலும் / எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களை எல்லாம்/ சுயநல நாட்டமின்றி/ தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே/ முழுவது ஒப்படைத்து விடுகிறேன்./

உமது திருக்குமாரனாகிய ஆண்டவர்/ தமது கிருபை இரக்கத்திற்கு அல்லது நீதிகேற்றவாறு/ உமது திருக்கரங்கள் வழியாய்/ அடியேனுக்கு நியமித்தனுப்பும்/ நன்மை துன்பங்களை எல்லாம்/ மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக்கொள்கிறேன்./

ஆமென்.
 
இயேசுவுக்கே புகழ்!!! மாமரித்தாயே வாழ்க!!!

செபமாலை வாயிலாக தாய்மைப்பேறடைந்து, புனிதரை மகனாகப் பெற்ற பிரான்ஸ் தேசத்து இராணி

* நமதாண்டவளின் செபமாலை வாயிலாக தாய்மைப்பேறடைந்து, புனிதரை மகனாகப் பெற்ற பிரான்ஸ் தேசத்து இராணி*

புனிதத்தன்மை பொருந்திய காஸ்டில்லேவின் ப்ளஞ்சே, பிரான்சின் ராணி, தனது திருமணமாகி பன்னிரண்டு ஆண்டு காலமாகியும் குழந்தையில்லாமல் இருந்ததால் மிகவும் மனம் நொந்து வருந்திக்கொண்டிருந்தார்.

புனித சாமிநாதர் ராணியைக் காண சென்றபோது, தாய்மைப்பேற்றிர்க்காக இறைவனின் இரக்கத்தை வேண்டி தினமும் செபமாலை செபிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தினார். புனிதரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு இராணி அதனை உண்மையுடன் கடைப்பிடித்து வந்தார்.

1213 ஆம் ஆண்டில் இராணி, பிலிப் என்ற பெயருடைய  தனது தலைமகனை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை மழலைப் பருவத்திலேயே இறந்துபோனதால், இராணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமதாண்டவளின் உதவியை நாடினார். மேலும் அரசவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அரசாட்சிக்குட்பட்ட பல நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கும் செபமாலை கொடுத்து, நிறைவான தாய்மைப்பேற்றினை தனக்கு தந்து ஆசிர்வதிக்க வேண்டுமென் இறைவனிடம் மன்றாடுமாறு கூறினார்கள்.

1215 ஆம் ஆண்டு இந்த பேறு அவருக்கு அருளப்பட்டது, பிரான்ஸ் தேசத்தின் மகிமையாகவும், கிருஸ்துவ அரசர்க்கெல்லாம் முன்மாதிரியாகவும் விளங்கப்போகும் இளவரசர் புனித லூயிஸ் பிறந்தார்.

*சிந்தனை*

“மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே!!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”

நமதாண்டவளின் அன்னைக்குரிய குணநலன்களில் தாயன்பு மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த தாயன்பே, கானாவூர் திருமணத்தில் யாரும் கேட்காமலே உதவி செய்யவும்,  எலிசபெத்தம்மாளுக்கு உதவவும் விரைந்தது.

நாமும் நமது வாழ்வில் அனைத்து கதவுகளும் அடைபட்டு, திக்கு தெரியாமல் தள்ளாடும் வேளையில் தனது தாயன்பினால் நமக்காக இரிவனிடம் பரிந்து பேசி நமக்கு வேண்டிய வரங்களை பெற்றுத்தரும் மத்தியஸ்தி நமதன்னை.

நாம் எவ்வளவு அன்பு செய்கின்றோமோ அதை விட அதிகமாக நமதாண்டவள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கின்றார். உலக மாந்தரின் மீட்பரை உலகிற்கு பெற்றுத்தந்த நமதன்னை, மீட்பின் வழியில் அவரோடு தோள் கொடுத்து நின்று எந்த தாயாலும் தாங்க முடியாத வியாகுலங்களை நமக்காக ஏற்றுக்கொண்டார். அனைத்தும் நம்மேல் கொண்ட அன்பினால் மட்டுமே!!! அந்த அன்னைக்கு நாம் தருவது என்ன?? நம்மையே நாம் அவளிடம் ஒப்படைத்து அவள் வழியாக இறைவனின் பதம் சென்றடைந்தால் எத்துணை நலம்!!!

இயசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!⁠⁠⁠⁠

கர்த்தர் கற்பித்த செபம்

கர்த்தர் கற்பித்த செபம்

இஸ்ரயேல் நாட்டில் இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு சீடரை இனம் கண்டு கொள்ள வேண்டுமென்றால், அவர் எத்தகைய செபத்தைச் செபிக்கிறார் என்று பார்ப்பார்கள். இச்செபத்தை வைத்தே இவர் இன்னாருடைய சீடர் என்று கண்டு கொள்வார்கள். ஒவ்வொரு போதகரும் - குருவும் தன்னுடைய சீடர்களுக்குத் தனித்தன்மையான, சிறப்பான ஒரு செபத்தைக் கற்றுக்கொடுப்பார். ஆகவே தான் இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, யோவான் தம் சீடர்க்கு இறைவனிடம் வேண்ட கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்"என்றனர்.(லூக் 11:1)

இயேசுவும் மிக நேர்த்தியான ஒரு செபத்தைக் கற்றுக் கொடுக்கின்றார். அது மட்டுமல்ல, தமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து தம் சீடர்க்கு எப்படி செபிப்பது என்றும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்

கர்த்தர் கற்பித்த செபம்.
கர்த்தர் கற்பித்த செபம் ஓர் உன்னதமான செபம். இதில் செபத்துக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அமைந்துள்ளன. புகழ், ஆராதனை, விண்ணரசின் விழுமியங்கள், அன்றாட தேவை, மன்னிப்பு, சோதனையிலிருந்து விடுபடல் போன்ற சிறந்த அம்சங்கள் இச் செபத்தில் உள்ளன.

இச்செபம் எவ்வளவு புனிதமாக்க கருதப்பட்டதென்றால், இதை ஆதிகாலத் திருச்சபையில் எழுத்து வடிவில் எழுதி வைக்கத் தயங்கினர். எழுத்து வடிவில் உருவாக்கினால் இதன் புனிதத்தன்மையை இழக்க நேரிடும் என்று வாய்மொழியாகவே பிறருக்குக் கற்றுக் கொடுத்தனர். மேலும் இதை யாரும் சுலபமாகப் பயன்படுத்த முடியாது. இயேசுவைத் தங்கள் வாழ்க்கையின் மையமாக, இயேசுவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் இச்செபத்தைச் செபிக்க வேண்டியிருந்தது. இதிலிருந்து இச்செபம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதை நாம் யூகிக்க முடிகிறன்றது. நான்கு வடிவ நற்செய்தியில் இரண்டு நற்செய்தியாளர்கள் இச்செபத்தை நமக்கு எழுத்து வடிவில் கொடுத்துள்ளார்கள். மத்தேயுவும் (மத் 6:9-13) லூக்காவும் (லூக் 11:2-4)

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கர்த்தர் கற்பித்த செபத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு உள்ளன. இறைத் தந்தைக்குப் புகழ்ச்சி, இவ்வுலகில் அவரது அரசின் வருகை, நமது அன்றாடத் தேவைகளுக்கான மன்றாட்டு, அன்றாடப் பிரச்சனைகளுக்கு, சோதனைகளுக்குத் தீர்வு காணல். நாம் இதைச் செபிக்கும்பொழுது எந்த மனநிலையோடு செபிக்கின்றோம்? நமது வாழ்வுக்கு வழிகாட்டியாக இச்செபத்தைச் செபிக்கின்றோமா என்று ஆராய்ந்து பார்ப்பது நமக்கு நன்மை பயக்கும். இச்செபம் இறைத் தந்தையை போற்றிப் புகழ்வதோடு தொடங்குகிறது.

"பரவோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!"
இறைத் தந்தையை நாம் புகழ வேண்டும். "கடவுள் மனிதனைப் படைத்ததே அவரைப் போற்றிப் புகழ்ந்து, ஆராதித்து அவருக்குப் பணிபுரியவே" என்கின்றார் புனித லொயோவா இஞ்ஞாசியார். "தந்தையே" என்ற வார்த்தை இறைவனோடு நாம் கொண்டிருக்கும் நெருக்கமான உறவை எடுத்துக் காட்டுகின்றது. அன்பொழுகும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் நெருக்கமான உறவை எடுத்துக் காட்டுகின்றது. பாராமுகமாய் ஏதோ விண்ணகம் என்ற நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஓரு இடத்தில் இருக்கும் கடவுள் அல்ல நம் கடவுள். நமது அன்புக்குப் பாத்திரமானவர் அவர். நம்மை என்றும் எப்பொழுதும் அன்பு செய்யும் ஒரு தந்தை அவர். அவரது நாமம் புனிதமானது. ஆகவே நாம் எத்துணை வணக்கத்தோடு, அன்போடு, மரியாதையோடு அவரது நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பது தெளிவாகின்றது

"உமது அரசு வருக"
இறைவனின் அரசு இயேசுவின் அரசு. இவ்வுலகத்திற்று அடுத்தான உலகார்ந்த வகையிலுள்ள ஓர் அரசு இல்லை. மாறாக ஒவ்வொருவருடைய உள்ளத்தையும், ஆன்மாவையும் ஆளும் அரசு. யூதர்கள் எதிர்பார்த்ததுபோல, உரோமையரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் அரசு. அரசியல் சார்ந்த ஓர் அரசு அல்ல.

"ஆபிராகாமுக்கு வாக்களிக்கப்பட்ட ஓர் அரசு இது. கிழக்கிலும் மேற்கிலிருந்தும்பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்"

"இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் துறையில் வராது. இதோ இங்கே! அல்லது அதோ அங்கே? எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாடசி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது" என்றார்(லூக்கா 17:21). இயேசுவின் அன்பில் விசுவாசம் கொள்பவர்களின் இதயத்தில் அலரது அரசு நிறுவப்படும். இவ்வுலகத் தீமைகளெல்லாம் ஒழிக்கப்பட்டு இதயத்தில் நிறைவுறும், நிலைநாட்டப்பெறும், புதிய வானகமும், புதிய பூமியுமாய் இருப்பதே இறையரசு. "பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும், மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும், மண்ணகமும் மறைந்து விட்டன."(திவெ 21:1)

"உமது சித்தம் நிறைவேறுக"
"உமது சித்தம் நிறைவேறுக" என்று நாம் சொல்லும் பொழுது ஏதோ தவிர்க்க முடியாத ஒரு விதி தான் எனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது. ஆதிக்கம் செலுத்துகின்றது, ஆட்சி செலுத்துகின்றது. ஆட்டிப் படைக்கின்றது என்பது அல்ல அர்த்தம்: மாறாக, இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி, அவருடைய சித்தப்படி நடப்பதேயாகும். இதன் வழியாக நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், நமது வாழ்வின் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்வையும் அவரது கையில் ஒப்படைப்பதே ஆகும். நமது வாழ்வை நடத்திச் செல்லும் ஒட்டுநராக இறைவனை ஏற்றுக் கொள்வதாகும். நமது வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்ற, நிறைவடைய அவரது பாதுகாப்பையும், வழிநடத்துதலையும் ஆர்வத்தோடு தேடுவதாகும்.

"அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும்"
இம்மன்றாட்டின் வழியாக நாம் இறைவனைச் சார்த்து வாழ்கின்றோம் என்பதை நாம் அறிக்கையிடுகின்றோம். எல்லா வயங்களின், நலன்களின், தேவைகளின் தொடக்கமும் முஎவுமாய் இருக்கின்றார். கடவுள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நமது அன்றாடத் தேவைகளை அவர் அறிந்துள்ளார். அவற்றைக் கொடுத்து நம்மைப் பராமரித்துக் காத்திடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இச்சொற்றொடர் எடுத்துக் காட்டுகின்றது.

"சோதனையில் விழவிடாதேயும்"
கடவுள் சோதனைகளை அனுப்புவதில்லை. மாறாக நம்மைச் சொதிக்கின்றார். நாம் அவரோடு, அவரைச் சார்ந்து வாழ்கின்றோமா என்று நிர்ணயிக்கப் பார்க்கிறார். சோதனைகள் தீயோனிடமிருந்து வருகின்றன. இதை அவர் அனுமதிக்கின்றார். நாம் அவற்றை இனம் புரிந்து கண்டு கொண்டு தீயோனோடு போராடி வெற்றிக்கொள்ள வேண்டும். இயேசுவின் சீடர்களாய் நாம் இருப்பதால் இச்சோதனைனளிலிருந்து நம்மை அவர் பாதுகாக்க வேண்டுமென்று நாம் செபிக்க வேண்டும். தீயோனிடமிருந்து சில காரியங்கள் வருகின்றன என்று தேர்ந்து தெளியும் வரம் இறைவன் நமக்கு அருளும் ஒரு கொடையே. சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. நம் அனைவருக்குமே சோதனைகள் வருகின்றன. பொன்தீயில் புடமிடப்பட்டுத் தூய்மையாவதுபோல சோதனைகள் நம்மை புடமிட்டுப் பார்க்கின்றது. அவை மீது வெற்றிக் கொள்பவனே இயேசுவின் உண்மையான சீடன். நமது பலத்திற்கு அப்பாற்பட்ட வகையில் இறைத்தந்தை நம்மைச் சோதிக்கமாட்டார்.

"உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்." 1கொரி 10:13

மன்னிப்பு: "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும்."
நாம் இறைவனிடமிருந்து மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் நிபந்தனை ஒன்று உண்டு. பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்புப் பெற்றவன் மன்னிப்புத் தரவேண்டும். இறைவன் நமது குற்றங்களை எத்தனை தடவை மன்னித்துள்ளார் என்ற உணர்வு நம்மில் இருந்தால்கட்டயாம் நாமும் பிறரது குற்றத்தை மன்னிக்காமல் இருக்க முஎயாது. இயேசு பேதுருவை மன்னித்து ஏற்றுக்கொண்டார். நாம் ஒப்புரவு அருட்சாதனம் (பாவசங்கீர்த்தனம்) பெற்றால் மடடும் போதது, பிறது குற்றங்களையும் மன்னி வேண்டும். நாம் ஒப்புரவின் தூதுவர்களாக இருக்க அழைக்கப்புடுகிறோம் என்ற புனித பவுல் அழகாக விளக்கிக் கூறுகின்றார்"

"அவரே (கடவுளின்) கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்." (2கொரி 5:18-21)

ஆம், அன்பார்ந்தவர்களே, இத்தகைய உன்னதமான மன்றாட்டை அர்த்தம் புரிந்து செபிப்போம். நமது வாழ்க்கை மாறுவது உறுதி.

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்"

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்"

மத்தேயு 23:1-12 ல் வருகின்ற ஆசிரியர்கள் சரியான வழியை மக்களுக்குக் காட்டவில்லை. தாங்கள் புகழ்பெறவும் மதிக்கப்படவுமே விரும்பினர். சுருங்கச் சொன்னால் 'பந்தா'  பேர்வழிகள். இவர்களிடம் உண்மை இல்லை,  நீதி நிலைபெறவில்லை, மக்கள் மேல் அக்கறை இல்லாத பேர்வழிகள், சொல்வது ஒன்று செய்வது வேறோன்று. இதுவே வெளிவேடம். கிறிஸ்து நமக்கு ஒரு நல்ல ஆசிரியர் தேவை என்கிறார்.

இன்றய உலகில் நமக்கும் சரியான வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். மலிந்து கிடக்கும் முறைகேடுகள் நிறைந்த சமுதாயத்தில் நமக்கு வழிகாட்ட நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். சிலருக்குப் பெற்றோர் வழிகாட்டிகள். சிலருக்கு நண்பர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு நடிகர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு அரசியல் தலைவர்கள் வழிகாட்டிகள். பள்ளி ஆசிரியர்கள் பாடத்தை (ளலடடயடிரள) முடிப்பதிலும், தேற்சி விகிதத்திலுமே கருத்தாய் இருக்கின்றனர். மாணவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக் குறி.

கிறிஸ்துவே நம் சிறந்த வழிகாட்டி, அவரே வாழ்வும் வழியும். கிறிஸ்து காட்டும் வழியில் நாம் நடந்தால் நிச்சயம் நமக்கு வாழ்வு உண்டு. எக்காலத்திலும் குறிப்பாக இத்தவக்காலத்தில் கிறிஸ்து காட்டிய வழியில் வாழ முற்படுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.


--பணி. மரியதாஸ்

"இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்' என்றார்" (மத்தேயு 23:11)

"இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும்' என்றார்" (மத்தேயு 23:11)

-- பணிசெய்வதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை; பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ பிரும்பவுமில்லை. மாறாக, இயேசு தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார். எனவே, உண்மையான சிறப்பு நாம் பிறருக்குத் தொண்டாற்றுவதிலிருந்து பிறக்கவேண்டும். ரபி (போதகர்), தந்தை, ஆசிரியர் போன்ற பட்டங்கள் தம்மிலே தவறு என இயேசு கூறவில்லை. ஆனால் இத்தகைய பெயர்களைச் சொல்லி மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்பதால் தற்பெருமை கொள்வதோ அதனால் பிற மனிதரைவிடவும் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதுவதோ தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு விடுத்த எச்சரிக்கை திருச்சபைக்கும் திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் தனிப்பட்ட விதத்தில் பொருந்தும். மத்தேயு காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம் இதை அறிந்திருந்தது.

-- இன்றைய திருச்சபையும் பணிசெய்யும் சமூகமாகத் திகழவேண்டும். திருச்சபை பல பணிகளை ஆற்றுவது உண்மைதான். என்றாலும் அப்பணிகளில் ஈடுபடும்போது இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருப்பதை அறிவித்த இயேசு அந்த ஆட்சியில் நாம் புக வேண்டும் என்றால் பணிசெய்யும் மனநிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என நம்மிடம் கேட்கின்றார்,

மன்றாட்டு
இறைவா, பிறருக்குப் பணியாற்றும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

பெரிய மனிதர் என்று யாரை கணிக்கிறீர்கள்? என்ன தகுதி வேண்டும்?

பெரிய மனிதர் என்று யாரை கணிக்கிறீர்கள்?  என்ன தகுதி வேண்டும்?

விலை உயர்ந்த உடைகள் அணிய வேண்டும். பெரிய பங்களா மாதிரி வீடு இருக்க வேண்டும். வீடு நிறைய நவீன வசதிகள் பொருட்கள் இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனம்.உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும். கவர்ச்சியான உடை அணிய வேண்டும். (வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களை அகலமாக்குபவர்கள்) குனிந்து வேலை செய்யக் கூடாது. முதலீடு இல்லாமல் முதலாளியாக இருக்க வேண்டும். (தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரக் கூடாது);. ஜால்ரா கூட்டம் சுற்றி இருக்க வேண்டும். (தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் பாராட்ட வேண்டும்) எங்கும் எதிலும் முதலிடம் கொடுக்க வேண்டும். (விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளும் தேடுபவர்கள்). ஐயா, அம்மா என்று எல்லோரும் அழைக்க வேண்டும். ("ரபி" என அழைக்கப்பட வேண்டும். தந்தை என அழைக்கவேண்டும்)

இயேசுவின் பார்வையில் உள்ள எளிமையான மனப்பான்மையும் அணுகுமுறையும் உள்ள தலைவர்கள் நம்மிடையே தோன்றுவார்களாயின் நம் சமுதாயம் வளரவும் முன்னேறவும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் சில நாட்களில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண இருக்கிறோம். இயேசு சுட்டிக்காட்டும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற்றப் பாதையில் நம் நாட்டை அழைத்துச் செல்வோம். அல்லது அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள்.


-ஜோசப் லீயோன்

அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள்!

அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள்!

1. மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் பற்றிய இயேசுவின் பார்வை எப்படி இருந்தது என்பதற்கு மத்தேயு 5: 17 – 20 நற்செய்தி வாசகமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. "அவர்கள் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் சொல்வதையெல்லாம் கடைப்பிடித்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்" என்பதுதான் இயேசுவின் அறிவுரை. இதன்மூலம் பரிசேயர், மறைநூல் அறிஞருடைய அதிகாரத்தை, சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை இயேசு அங்கீகரிக்கின்றார், ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் இடறலாகவும், முரண் சான்றாகவும் அமைவதையும் கவனமுடன் சுட்டிக்காட்டுகின்றார். அவர்களைப் போல நமது வாழ்வும், பணிகளும் அமைந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

நமது வாழ்வையும், பணிகளையும் நாமே ஆய்வு செய்து நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காண்போமா? நமது வாழ்வு பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்து, "இவர்களைப் போல் வாழுங்கள்" எனச் சொல்லும்படி அமைந்திருக்கிறதா? அல்லது பரிசேயர்களைப்போல, "இவர்களைப் போல் வாழாதீர்கள்" என இயேசு சொல்வதுபோல் அமைந்திருக்கிறதா? சிந்திப்போம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, பரிசேய மனநிலையையும், செயல்பாடுகளையும் களைந்து, நேர்மையாக, முரண்பாடின்றி வாழும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


2. மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் இயேசு கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். ஆனால், அவர்களைப் பற்றிய இயேசுவின் மிகப் பெரிய திறனாய்வு, தீர்ப்பு இதுவாகத்தான்; இருக்கவேண்டும்; அவர்கள் கூறுவதுபோல் நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். பல பரிசேயர்களும் இதைக் கேட்டு மிகவும் அவமானம் அடைந்திருப்பார்கள்.

நம்முடைய வாழ்வையும் இந்தப் பார்வையில் கொஞ்சம் அலசினால் நல்லது. யாராவது நம்மைப் பற்றி இளையோரிடம் இந்த அறிவுரையைக் கொடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? நம்முடைய வாழ்வு பிறருக்க எடுத்துக்காட்டானதாக இருக்க வேண்டுமேயொழிய, எதிர்சாட்சியாக இருக்கக் கூடாது. எனவே, நம்முடைய அறிவு, திறமைகள், ஆளுமை, பேச்சாற்றல் ... போன்ற பல இருந்தும் நம்மைப் பற்றி இத்தகைய ஒரு  திறனாய்வை பிறர் முன் வைத்தால், அது நமக்கு மிகப் பெரிய ஓர் அவமானம்.

எனவே, நம் வாழ்வைப் பற்றி, நம் நடத்தையைப் பற்றிக் கவனமாயிருப்போம். முடிந்தால், இவரைப் போல வாழுங்கள் என்று பிறர் நம்மைப் பற்றிச் சொல்லும் வண்ணம் நடப்போம். முடியாவிட்டால், இவர் செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று பிறர் சொல்லாத வண்ணமாவது நடக்க அக்கறை கொள்வோம்.

மன்றாடுவோம்; இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய இயேசுவே, இன்றைய நாளில் உமது பேரன்புக்காக நன்றி கூறுகிறேன். இறiவா, என் வாழ்வையும், நடத்தையையும் ஆசிர்வதியும். பிறருக்கு இடறல் இல்லாத, முரண்பாடுகள் இல்லாத நேர்மையான வாழ்வு வாழச் செய்யும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருட்தந்தை குமார்ராஜா

வாழ்வு கடவுளை மாட்சிமைப்படுத்தட்டும்

வாழ்வு கடவுளை மாட்சிமைப்படுத்தட்டும்

நற்செய்தியில் நாம் வாசிக்கிற ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொர் பிண்ணனியில் எழுதப்படுகின்ற ஒன்றாகும். நாம் வாசிக்கும் நற்செய்தியின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் வரலாற்றுப் பிண்ணனியும், இயேசு கூறிய காலச்கமசூழலின் பிண்ணனியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அதன் உண்மையான அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாமல், திரித்து தான் பொருள் அறிய முடியும். பிரிந்துபோன சபையினர் செய்யக்கூடிய வேலை இந்த திரித்துக்கூறுகிற செய்தி.

நற்செய்தியில், இந்த மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்று இயேசு சொல்கிறார். எதற்காக? இயேசு சொல்வதன் பொருளை தெளிவாக அறிந்து கொள்ளவில்லையென்றால், தவறான அர்த்தத்தை தான் நாமும் புரிந்துகொள்வோம். இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார். காரணம்: இவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான், பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும், முதன்மை இருக்கைகளையும், மக்களால் தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் எனறு வலிறுத்தினார்கள். இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.

நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் “எல்லாமே இறைவனின் அதிமிகு மகிமைக்கே“ என்கிற விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப்போல, நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்றபோது, கடவுள் நம்மை உயர்த்துவார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவனை மகிமைப்படுத்துவோம்

இறைவனை மகிமைப்படுத்துவோம்

யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்களின் விசுவாச வாழ்வு என்பது தலைமுறை, தலைமுறையாக பரிமாறப்படுவது. தொடக்கத்தில் கடவுள் திருச்சட்டத்தை மோசேக்கு கொடுத்தார். மோசே அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார். யோசுவா அதை இஸ்ரயேலரின் பெரியவர்களிம் ஒப்படைத்தார். இஸ்ரயேலின் பெரியவர்கள் வாயிலாக திருச்சட்டம் இறைவாக்கினர்களிடம் கொடுக்கப்பட்டது. இறைவாக்கினர்கள் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் ஒப்படைத்தனர். இயேசு வாழ்ந்த காலத்தில் விசுவாச வாழ்விற்கு பொறுப்பானவர்கள் இந்த மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்தான். எனவேதான், இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும், புகழையும் எதிர்பார்த்தனர். எந்த அளவுக்கு என்றால், தங்களை கடவுளுக்கு இணையாக காட்டிக்கொள்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களை முன்னிறுத்தினர். இந்தப் பிண்ணனியில் தான் இயேசு மத்தேயு 23:1-12 நற்செய்தியில் இயேசு அவர்களுக்கு சாட்டையடி தருகிறார்.

பிரிந்து போன சபை சகோதரர் ஒருவர் கேட்டார்: நற்செய்தியிலே இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்றிருக்கிறதே? எதற்காக குருக்களை, உங்கள் மக்கள் ‘தந்தை’ என்று அழைக்கிறார்கள்? என்று. இன்றைக்கு சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத கேள்விகளைக்கேட்பதில் பிரிந்துபோன சபைக்கு நிகர் பிரிந்து போன சபையினர் தான். அரைகுறை விவிலியம் கூடத் தெரியாமல், விவிலியத்தின் ஆழம் புரியாமல், ஏதோ மேலோட்டமாக இரண்டொரு வார்த்தைகளை மனனம் செய்துவிட்டு, தனக்கு விவிலியம் முழுவதும் தெரியும் என்பது போன்ற மமதை, இன்றளவும் பிரிந்துபோன சபையினரிடத்தில் இருப்பது வேதனைக்குரியது. இயேசு சொல்வதன் பொருளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார். காரணம்: அவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான், பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும் முதன்மை இருக்கைகளையும், மக்களால் தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.

நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் ‘எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே’ என்கிற விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப் போல, நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்ற போது, கடவுள் நம்மை உயர்த்துவார்.


- அருட்பணி. தாமஸ் ரோஜர்

Saturday, August 26, 2017

அன்னை மாமரித்தாயை மகிழ்விக்கும் மந்திரம்

அன்னை மாமரித்தாயை மகிழ்விக்கும் மந்திரம்

ஒருநாள், புனித மெக்டில்டே செபித்துக்கொண்டிருந்த வேளையில், பரிசுத்த கன்னி மாமரியின் மேல் தான் கொண்டிருந்த அன்பினை, முன்பை விட அதிகமாக வேறு எந்த வகையில் வெளிப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது, பேரானந்தத்தில் மூழ்கினார்.

நமதாண்டவள், தனது மார்பினில் ‘அருள் நிறைந்தவளே வாழ்க’ என்ற தேவதூதரின் வாழ்த்தொலியை, தங்க எழுத்துக்களால் பொறித்த வண்ணம் புனிதைக்குத் தோன்றி, ”என் மகளே, மிகவும் பரிசுத்த தமத்திருத்துவம் எனக்களித்த வாழ்த்தொலியை கூறுவதைக் காட்டிலும் மேலாக எதனைக் கொண்டும் என்னை மகிழ்விக்க முடியாது என்பதனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதன் வாயிலாகவே நான் இறைவனின் தாய் என்ற மேன்மை நிலைக்கு உயர்த்தப்பட்டேன்” என்று கூறினார்கள்.

மேலும்,

“ஆவே(வாழ்க) என்ற வார்த்தை, கடவுள் படைத்த ஆதிப்பெண் ஏவாளைக் குறிப்பதாகும். இந்த வார்த்தையின் வாயிலாக, தந்தையாம் கடவுள் தனது முடிவில்லா வல்லமையினால், முதல் பெண்ணாம் ஏவாளின் கீழ்படியாமையால் மனுக்குலம் பெற்றுக்கொண்ட அனைத்து பாவங்களில் இருந்தும், அவற்றின் ஆதிக்கத்தில் இருந்தும் என்னை பத்திரமாக பாதுகாத்தார் என்று உணர்ந்து கொள்கிறேன்.”

“மரியாள் என்ற பெயரின் பொருள் ’ஒளியின் ஆண்டவள்’, தந்தையாம் கடவுள், பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒளிர்விக்க, ஒளியால் நிரப்ப, என்னை சுடர் விட்டு ஒளிரும் விண்மீனைப் போன்று, ஞானத்திலும் ஒளியிலும் நிரப்பியுள்ளார் என்பதனைக் காட்டுகின்றது.”

“ ’அருள் நிறைந்தவள்’ என்ற வார்த்தையானது, எவ்வாறு திவ்ய இஸ்பிரித்து சாந்து என் மேல் எண்ணிலடங்கா அருள் வரங்களைப் பொழிந்துள்ளார் என்பதனையும், என்னை நோக்கி பக்தியுடன் தியானித்து, என்னிடம் உதவி வேண்டும் அன்பர்களுக்கு, அந்த அருள் வரங்களைப் அபரிமிதமாக நான் அளிக்கமுடியும் என்பதனை நினைவுபடுத்துகின்றது.”

“மக்கள் ‘ஆண்டவர் உம்முடனே’ என்று கூறும்பொழுது, நித்திய வார்த்தையானவர்  என்னுடைய கருவில் மனுவுரு எடுத்த பொழுது, நான் அடைந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரானந்தத்தை எனக்கு மீண்டும் மீண்டும் அளிக்கின்றனர்.”

“ ‘பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, என்னை படைப்புக்கள் அனைத்திலும் உயர்ந்த பேற்றினை அளித்து இத்தகைய பேருவகை அடையச் செய்த தந்தையாம் கடவுளின் இரக்கத்திற்காக அவரைப் புகழ்ந்து பாடுகின்றேன்.”

“ ‘உமது திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே’ என்று நீங்கள் செபிக்கும் பொழுது, விண்ணவர் அனைவரும் என்னோடு இணைந்து, எனது மகன் சேசுகிறிஸ்து மனுக்குலத்தை மீட்டதால் ஆராதிக்கப்படுவதையும், மகிமைப் படுத்தப்படுவதையும் கண்டு அக்களிப்படைகின்றனர்.”
என்று கூறினார்கள்.

*சிந்தனை*

“சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே!!! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”

“ ‘இதோ என் உடல், இதோ என் இரத்தம்’ என்று குருக்கள் திருப்பலியில் கூறுகின்ற வசீகர வார்த்தைகளை முழு உரிமையோடு கூற அன்னை மாமரி ஒருவருக்கே உரிமையுண்டு, ஏனெனில் அன்னை மாமரி தன் இரத்தத்திலிருந்தும், உடலிலிருந்தும், திவ்ய இஸ்பிரித்து சாந்துவின் துணையோடு தேவ சுதனைப் பெற்ற தாய் என்பதால் தான்’ என்று புனித அகுஸ்தினார் கூறுகின்றார்.

கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, அன்னை மாமரி இறைவனின் தாய் என்று கிருஸ்தவர்கள் ஏற்று வாழ்ந்து வந்தனர். திருச்சபையின் முதுபெரும் தந்தையரில் ஒருவரான ஆரிஜென் (origen) என்பவர்தான் நமதன்னைக்கு இந்த புகழ் மாலையைச் சூட்டினார்.

ஆனால் 5 ஆம் நூற்றாண்டில் ஆரியுஸ் மற்றும் நேஸ்தொரியுஸ் போன்றவர்கள் மரியாள் இறைவனின் தாய் அல்ல என்று தப்பறைகளைப் போதித்தனர். இதனை திருத்தந்தை செலேஸ்டின் அவர்களின் பிரதிநிதியான புனித சிரில் அவர்களின் தலைமையில் 431 ஆம் ஆண்டு கூடிய எபேசு பொதுச்சங்கம் மிகவும் உறுதியாக மறுத்துரைத்து,” அர்ச் மரியாள் மெய்யாகவே இறைவனின் தாய்” என்ற சத்தியத்தைப் பிரகடனப் படுத்தியது.

இறைவனே தனது தூதர் வாயிலாக,” இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்;  உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும், ஆதலால் உம்மிடம் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்” (லுக். 1:35) இந்த சத்தியத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி, எலிசபெத்தம்மாள் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பப்பட்டு ”என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்ததெப்படி”(லூக். 1:43) என்று இந்த தேவரகசியத்தை உறுதிபடுத்துகின்றார்.

தேவசுதனாகிய சேசு கிறிஸ்து ஆள் ஒருவரே ஆனால் தேவ சுபாவம் மற்றும் மனித சுபாவம் என்னும் இருவகை சுபாவங்களை கொண்டிருந்தார். தந்தையாகிய இறைவனும், இஸ்பிரித்து சாந்துவும் உறுதிபடுத்திய தேவரகசியத்தினை நாம் மறுக்கலாமோ? தேவசுதனைப் பெற்றேடுத்த அன்னை மாமரி “இறைவனின் தாய், தேவதாய், சர்வேசுரனுடைய மாதா என்பதில் நமக்கென்ன சந்தேகம்?

இயேசுவுக்கே புகழ்!!!மாமரித்தாயே வாழ்க!!!

எனக்கு இயேசு யார்?

எனக்கு இயேசு யார்?

பொதுக்காலம் 21வது வாரம்
(முதல் வாசகம்: எசாயா 22,19-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 138
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11,33-36
நற்செய்தி: மத்தேயு 16,13-20)

தெளிவுகள் இல்லாத போது
புரிதல்கள் ஏழாத போது
விடைகள் கிடைக்காத போது
விளக்கங்கள் கொடுக்கப்படாத போது
கேட்ட கேள்விகளுக்கே அர்த்தங்கள் இல்லாமல் போகலாம்!
விடியலைத்தேடி கண் விழிக்கும் மனங்களெல்லாம்
விந்தையான உலகத்தைக் கண்டு விழிப்பிதுங்கி நிற்கின்றது...
காரணம்  நான் யார் என்று தெரியாத நிலை
நான் எதற்காக இவ்வுலகில் இருக்கிறேன் என்று உணராத நிலை
நான் ஏன் வாழ்கிறேன் என்று சிந்திக்காத நிலை
நான் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டுமென்று
யோசிக்காத நிலை
அடுக்குமாடி குடியிருப்பாய் அடுக்கடுக்காய் போகும்
இப்பட்டியலில் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டி நிற்கிறது
நம்முடைய வாழ்க்கை!
எதில் எதார்த்தம் எதில் உண்மை எதில் நியாயம் என்று
ஒன்றன்பின் மற்றொன்றாக
வாழ்வை அலசிப்பார்க்கும் சூழலில்
நான் யார் என்ற கேள்விக்குப் பதில் கொடுப்பது
சற்று சிரமமே! இருப்பினும்,
நான் யார் என்று சொல்கிறார்கள்?
நான் யார் என்று சொல்கிறீர்கள்?
இவ்விரு கேள்விகளுக்கு விடைத்தேடுவதே
இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையச்சிந்தனை!
இது சாதாரணமான கேள்வி.
ஆனால் சரித்திரத்தைத் திரும்பிப் பார்;க்க வைத்த கேள்வி...
உலக வரலாற்றில் எந்தத் தலைவரும் தன் சீடர்களிடம்
நான் யார் என்று கேட்டிருக்கமாட்டார்
காரணம் நான் ஏன் என் பணியாளனிடம்
கேட்க வேண்டும்?
நான் ஏன் என் வேலைக்காரனிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என்னைப் பின்பற்றுபவர்களிடம் கேட்க வேண்டும்?
நான் ஏன் என் மக்களிடம் கேட்க வேண்டும்?
இதுதான் இன்றைய தலைவர்களின் நிலை!
தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்
என்று தெரிந்துக்கொள்ள நினைப்பதில்லை...
அதன்பால் அக்கறையும் கொள்வதில்லை...
ஆனால்,
இயேசு மட்டும் ஏன் நான் யாரென்று கேட்கிறார்...
அவருக்கு அவரைப்பற்றி தெரியாதா?
அப்படில்ல அவருக்கு அவரைப் பற்றியும் தெரியும்
அவரைப் பின்பற்ற விரும்பும் நம்மைப்பற்றியும் தெரியும்
இருந்தப்போதிலும் நம்மிடத்தில் விளங்கும்
சிறுசிறு ஐயங்களை அப்புறப்படுத்த விரும்புகிறார்
இறைமகன் இயேசுகிறித்து...
உணவின் பின் ஓடிய கூட்டம் இறைவார்த்தையின் பின் ஓட வேண்டும்!
போலிகளுக்குப்பின் ஓடிய கூட்டம்
உண்மையின் சாயலான இயேசுவைக் காண வேண்டும்!
நம்பிக்கையற்ற நிலையில் நின்ற சீடர்கள் நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும்!
குழம்பிய நிலையில் இருந்த பேதுரு நிதானத்தில் நிம்மதியாய் வாழ வேண்டும்!
இவைகளே இயேசுவை நான் யாரென்று கேட்க வைத்தன!
இன்றைய சூழலும் நாமும் பல தருணங்களில்
இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கிறோம்...
நம்முடைய அவசியமற்ற ஐயம் நம்முடைய பண ஆசை
நம்முடைய அன்பற்ற நிலை நம்முடைய பிளவுபட்ட மனம்
நம்முடைய தேவையற்ற பயம் நம்முடைய போலியான வாழ்க்கை
நம்முடைய முகமூடிப் பார்வை நம்முடைய உதட்டளவு பேச்சுகள்
இவையெல்லாம் இயேசுவைக் கேள்விக் கேட்க வைக்கின்றன...
அதற்கும் இயேசு  முகம் கோணாமல் பதில் கொடுக்கிறார்...
காரணம் அவர் நம்மை அந்தளவு அன்புச் செய்கிறார்!
அவர் நம்மை முழுவதுமாய் ஏற்றுக்கொள்கிறார்!
ஆனால் நாம்? இங்கேதான் நம்முடைய வாழ்க்கை
புடமிட்டுப் பார்க்கப்படுகிறது...
இயேசுவுக்கு நான் நண்பன்
இயேசுவுக்கு நான் பிள்ளை
இயேசுவுக்கு நான் சகோதரன், சகோதரி
இயேசுவுக்கு நான் உற்ற தோழி
இவையெல்லாம் நியாயமானதே!
எனக்கு இயேசு யார்?
என்பதுதான் இங்கே மிகமிக முக்கியம்...
திருவிழாவுக்கு வருவது செபமாலை செபிப்பது
நற்கருணை ஆராதனையில் பங்கேற்பது
திருப்பலியில் தவறாமல் பங்கெடுப்பது
தர்மம் செய்வது
இப்படியாக நான் இயேசுவைப் புரிந்திருக்கின்றேனா?
அல்லது
அவருடன் உரையாடுவது அவருடன் உறவாடுவது
அவருடன் என் இன்ப, துன்பத்தைப் பகிர்வது
அவரிடத்தில் என் துயரத்தை அறிக்கையிடுவது
அவரிடத்தில் என்னையே ஒப்புக்கொடுப்பது...
இதில் எது எனக்காது?
இதில் என்னை எங்கே பொருந்திப் பார்ப்பது?
இயேசுவை நல்லவிதத்தில் நான் புரிந்துகொண்டால்....
என்னாலும் சொல்ல முடியும்
‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’
தொடர்ந்து பயணிப்போம்
இயேசுவை யாரென்று கண்டுக்கொள்வோம்
எனக்கு இயேசு யாரென்றும் தெரிந்துக்கொள்வோம்...
அறிதலின் தொடக்கமே அறிவித்தலின் தொடக்கம்
இயேசுவை அறிவோம்
அவரைப் பற்றி மற்றவரிடத்தில் அறிவிப்போம்!
- ஆமென்⁠⁠⁠⁠

விவிலியமும் பல்சுவையும்

விவிலியமும்  பல்சுவையும்

விவிலியம் ஒரு பல்சுவை ஏடு

இதில் வாழ்க்கையும்,வழக்காடும் உண்டு

இதில் மன்னிப்பும், மனிதமும் உண்டு

இதில் வல்லமையும்,வலிமையும் உண்டு

இதில் உதவியும், உத்தானமும் உண்டு

இதில் ஞானமும்,ஞானபடிப்பினையும் உண்டு

இதில் தெய்வீகமும், தெய்வ நம்பிக்கையும் உண்டு

இதில் பாவநிவர்த்தியும், பாவம் நீக்கும் மருந்தும் உண்டு

இதில் நம்பிக்கையும்,நலமருளும் மகிமையும் உண்டு

இதில் கடமையும்,கறைஅகற்றும்கலங்களும்உண்டு

இதில் மகிழ்வும், மனித நேயமும் உண்டு

இதில் ஆற்றலும், ஆறுதலும் உண்டு

இதில் சந்திப்பும், சகிப்பும் உண்டு

இதில் இயற்கையும், இறைவனும் உண்டு

இதில் கவலையும், களிப்பும் உண்டு

இதில் மணமும், மணவாழ்வு நன்னெறியும் உண்டு

இதில் சத்தியமும்,சகோதரத்துவமும் உண்டு

இதில் வினாக்களும்,விடைகளும் உண்டு

இதில் தீயின் சூடும், தீதின் சாபமும் உண்டு

இதில் தவிப்பும், தனிமையும் உண்டு

இதில் ஓலமும்,ஓங்குநல்செயலும் உண்டு

இதில் சஞ்சலமும், சரித்திரமும் உண்டு

இதில் வையமும், வைத்தியமும் உண்டு

ஈடு இணையற்ற களஞ்சியமாம்

விவிலியத்தை நாளும் இதய சிம்மாசனத்தில்

அரியணை ஏற்றுவோம் வாரீர்.

அன்புடன்

கஸ்மீர்ரோச்,
சின்னமலை, சென்னை
9382709007

புனித அந்தோணியாசும், அவரது நண்பரும்!!

புனித அந்தோணியாசும், அவரது நண்பரும்!!

பிளாரன்ஸ் நாட்டின் புகழ் பெற்ற பேராயர் புனித அந்தோனியாஸ் விவரிக்கின்றார் தாம் இருந்த தோமினிக்கான் மடத்திற்க்கு மிக நெருக்கமானவரும் பக்தியுள்ள கண்ணியருமான ஒரு நபர் இறந்த பொழுது அவரது ஆத்தும இரட்சிப்புகாக பல திருப்லிகளும் தவக்கிரியைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டன

நீண்ட காலம் கடந்த பிறகு அந்த கண்ணியவானுடைய ஆன்மா கொடூர வாதையுடன் புனித அந்தோணியாஸ் அவர்கள் முன் தோன்றினார் புனிதர் அந்த நணபரிடம் கேட்டார் புனிதமான அர்பனிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்த நீங்கள் இன்னுமா உத்திரிக்கிற ஸ்தலத்தில்இருக்கிறீர்கள் என்று வேதனையுடன் கேட்டார்

அந்த கண்னியவான் ஆமாம் புனிதரே இன்னும் நீண்டகாலம் இருக்கவேண்டியுள்ளது நான் பூலோகத்தில் வாழ்ந்தபோது ஆன்மாக்களின் உத்திரிப்பு கடனுக்காக தவக்கிரியைகள் ஏதும் செய்யாததால் நீதியுள்ள தேவன் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து தவக்கிரியைகளின் பலன்களையும் நான் யாருடைய ஆத்துமங்களுக்கெல்லாம் ஜெபிக்க கடமை பட்டிருந்தேனோ அந்த ஆத்துமங்களின் உத்திரிப்புக் கடன்களுக்காக ஏற்று கொண்டுவிட்டார் இருப்பினும் கடவுள் தமது நீதியின் பொருட்டு நான் மோட்ச்சத்தில் நுழையும்போது எனது அனைத்து நற்கிரியைகளுக்கும் கைம்மாறு அளிப்பார் ஆனால் முதலில் நான் கவனமின்றி புறக்கனித்த ஆண்மாக்களுக்கு ஈடுசெய்யவேண்டியுள்ளது என்றார்

ஆமாம் எத்துணை உண்மையானவை நமது தேவனின் வார்த்தைகள் " நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும் "

இந்த தேவ வார்த்தைகளை படிப்பவர்கள் அனைவரும் அந்த பக்தியான நபருக்கு நேர்ந்ததுதான் உத்திரிக்கிற ஆண்மாக்களுக்காக ஜெபிக்க மற்றும் உதவி செய்ய மறுக்கிறவர்களுக்கு ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் --ஆமேன்

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க

சுமைகளை அகற்றுவோம்

சுமைகளை அகற்றுவோம்

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை மத்தேயு 5: 17 – 20 ல் நாம் பார்க்கலாம். அங்கே பத்துக்கட்டளைகளைப் பற்றிய செய்தி நமக்குத் தரப்படுகிறது. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் நெறியாகக் கருதப்படுவது பத்துக்கட்டளைகள். பத்துக்கட்டளைகளின் அடிப்படை நெறியை இரண்டு வகைப்படுத்தலாம். கடவுளை நேசிப்பது, மனிதர்களை நேசிப்பது தான் அவை. இந்த கட்டளைகள் முடிவில்லாதது. இவற்றை மீறுவது மிகப்பெரிய பாவம். இவற்றை பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், விளக்கங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஒழுங்குகளாகப் பிரித்தனர்.

விளக்கங்கள் என்ற பெயரில் பிரிக்கப்பட்ட ஒழுங்குகள் உண்மையான அடிப்படைச் சட்டத்திற்கு எதிராகத்தான் பலவேளைகளில் விளக்கப்பட்டது. உண்மையான உள்ளர்த்தம் மறைக்கப்பட்டு, வேறு, வேறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இறுதியில், மக்களைக் காக்க வேண்டிய சட்டங்கள், மக்கள் தூக்க இயலாத சுமையாகிப்போனது. மக்களை கடவுள்பால் அழைத்துவர வேண்டிய சட்டங்கள், கடவுளுக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை அறுப்பதற்கு வழிவகுத்தது. மன ஆறுதலுக்கு இடமான கடவுளின் இல்லம், மன வருத்தத்தைத் தரும் இடமாக மாறியது. இதைத்தான் இயேசு கடுமையாச்சாடுகிறார்.

மதங்கள், வழிபாடுகள் அனைத்தும் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களுக்கு மன ஆறுதல் தரும் இடங்களாக ஆலங்கள் அமைய வேண்டும். ஒழுங்குமுறைகள் தேவை. அந்த ஒழுங்குமுறைகள் மக்களுக்கு சுமையாக, தூக்க இயலாத பாரமாக இருக்கக்கூடாது.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மக்கள் தரும் மதிப்பு

மக்கள் தரும் மதிப்பு

பரிசேயர்கள் எப்போதுமே தாங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும், தங்களை மற்றவர்கள் உயர்வாக நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், தொழுகைக்கூடங்களில் அவர்கள் முதன்மையான இடங்களை விரும்ப வைத்தது. முன்வரிசையில் உட்கார்ந்தால், கடவுளின் வார்த்தையை நன்றாகக் கேட்க முடியும், தகுதியான முறையில், பக்தியான முறையில் பங்கேற்க முடியும் என்பதற்காக அல்ல, மாறாக, மற்றவர்கள் பார்க்கும் வண்ணம், பக்தியாக இருப்பது போல நடிக்க முடியும் என்பதற்காககத்தான்.

அதேபோல, அவர்கள், மக்கள் கூடக்கூடிய இடங்களில் ”ராபி” என்று அழைக்கப்படுவதை விரும்பினார்கள். இது ஒரு குழந்தை பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையைவிட அதிகமானது. ஏனென்றால், பெற்றோர் இந்த உலக வாழ்க்கைக்கான உடலைக்கொடுத்து இருக்கிறார்கள். போதகர்களோ, முடிவில்லாத வாழ்விற்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதால். எனவே, பெற்றோரைவிட, மதிக்கப்பட வேண்டியவர்கள், போதகர்களே என்ற கருத்து மக்கள் மனதில் இருந்த காரணத்தினால் தான். அவர்கள் ”தந்தை” என்றும் அழைக்கப்பட விரும்பினார்கள். காரணம், தந்தை என்பது உயர்ந்த இடத்தைக்குறிக்கும் சொல். இஸ்ரயேல் மக்களின் தலைவர்களை, வழிநடத்தியவர்களைத் ”தந்தை” என்ற உரிமையோடு மக்கள் அழைத்தனர். எலிசா இறைவாக்கினர், எலியாவை தந்தை என்று அழைத்தது போல (2அரசர் 2: 12).

தங்களின் மதிப்பிற்காக, மரியாதைக்காக எதையும் செய்யத்தயாராக இருந்த பரிசேயர்களைப் போல நமது வாழ்வு அமைந்துவிடக்கூடாது. மதிப்பும், மரியாதையும் நாமாக விரும்பிக்கேட்டு வருவது அல்ல. நாம் வாழ்கிற வாழ்வைப்பார்த்து, அதுவாக நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் உண்மையான மதிப்பும், மரியாதையும்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

இயேசு காட்டும் சமயம்

இயேசு காட்டும் சமயம்

சமயம் என்பது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக்கூடாது என்பதை மத்தேயு 23: 1-12 நற்செய்தி வாயிலாக இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். சமயம் என்பது கடவுளுடனான உறவு மட்டுமல்ல, மனிதர்களுடனான உறவும் கூட. கடவுள் பத்துக்கட்டளைகளை மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். அதனுடைய அடிப்படையே கடவுளுக்கும், மனிதர்களுக்கும் உண்மையான மதிப்பைக் கொடுக்கக்கூடிய செயல்பாடுதான். ஆனால், சமயம் என்ற பெயரில் பரிசேயர்களும், சதுசேயர்களும் செய்த அக்கிரமங்களை இயேசு கடுமையாகச் சாடுகிறார்.

சமயம் என்பது பள்ளத்திலே வீழ்ந்து கிடக்கிற மக்களை தூக்கிவிடுவதாக இருக்க வேண்டும். மேலும், மேலும் அவர்கள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட காரணமாக இருக்கக்கூடாது. சமயம் என்பது சோர்வுற்ற மக்களை தேற்றுவதாக இருக்க வேண்டும். அவர்களை மேலும் தடுமாறுவதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது. சமயம் என்பது அடிமைத்தளையை உடைத்தெறிந்து விடுதலை தருவதாக அமைய வேண்டும். அவர்களை அடிமைச்சிறைக்குள்ளாக வைப்பதாக இருக்கக்கூடாது. எப்படியெல்லாம் சமயம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் அதிகாரவர்க்கத்தினர் சமயத்தை தங்கள் கைப்பாவையாக்கி மாற்றியிருந்தனர். இந்த தவறான கண்ணோட்டத்தை இயேசு உடைக்கிறார்.

நாமும் கூட சமயம் என்பதன் பொருளை அறிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறோம். அதனால் தான், சமயத்தின் பெயரால் அநீதிகளையும், சாதிச்சண்டைகளையும், அரசியல் குள்ளநரித்தனத்தையும் இங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். இவையனைத்துமே பரிசேயத்தனம். இயேசுவால் வெறுக்கப்படக்கூடிய செயல்பாடு. அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

நாம் வாழும் வாழ்க்கை

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை மத்தேயு எழுதிய 23: 1-12 நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டு விதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை.

தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கிறார்கள். இதற்கு, அவர்களின் கையில் இருக்கிற பத்திரிக்கைகள், தொலைக்காட்சி போன்றவை ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தியாக உள்ளத்தோடு, நாட்டிற்காக உழைத்த தூய்மையான தலைவர்களின் இருக்கையை, இன்றைய தலைவர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், நாமாவது அடுத்தவர்களை அதிகாரம் செய்ய நினைக்காமல், மற்றவர்களுக்கு பணிந்து நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். பொறுப்பு, பணி என்பது நாம் அனுபவிப்பதற்கு அல்ல. அது மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு பயன்படுவது. இந்த சமுதாயத்தையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதற்கு பயன்படுத்துவது. அப்படிப்பட்ட நல்ல குணங்களை நமது வாழ்வில் நாம் வெளிப்படுத்துவோம்.


அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

”கனி தரும் திராட்சைக் கொடி”

”கனி தரும் திராட்சைக் கொடி”  - திருப்பாடல் 128: 1 – 2, 3, 4, 5


திராட்சைக் கொடி வளமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த வளமையை, இல்லத்தின் தலைவிக்கு ஆசிரியர் ஒப்பிடுகிறார். யாரெல்லாம் ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் வளமையாக இருப்பர் என்பது இங்கே நமக்குத் தரப்படுகிற செய்தி. இந்த உவமை இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிற உவமையாக இருந்தாலும், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய பிள்ளைகள் அனைவருக்குமே இது நன்கு பொருந்துவதாக அமைந்துள்ளது.

ஒரு குடும்பம் இறைவனால் முழுக்க ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், அந்த குடும்பத்தில் இருக்கிற தலைவர், தலைவி, குழந்தைகள் என அனைவரும் இறைவனின் முழுமையான பராமரிப்பைப் பெற வேண்டுமென்றால், அவர்கள் ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்போது ஆண்டவர் தம் பார்வையில் அவர்கள் விலைமதிக்க முடியாதவர்களாக இருப்பர். வாழ்நாள் முழுவதும் எந்தவொரு தீங்கும் அவர்களை நெருங்காதிருக்கும். வாழ்வின் நிறைவை அவர்கள் எப்போதும் அனுபவிக்கக்கூடிய வகையில், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.

நம்முடைய குடும்பங்கள் இறைவனின் அருளையும், ஆசீரையும் பெற்ற குடும்பங்களாக இருக்க வேண்டுமென்றால், ஆண்டவர்க்கு அஞ்சி வாழக்கூடிய குடும்பங்களாக இருக்க வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்வு, இறைவனின் முழுமையான ஆசீர்வாதத்தை நமக்குத் தரக்கூடிய வாழ்வாக இருக்கும்.

-     அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்