அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, November 22, 2017

வாழ்க்கை என்னும் கொடை

வாழ்க்கை என்னும் கொடை  -  லூக்கா  19: 11-28

வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த கொடை. இந்த கடவுள் கொடுத்த கொடையைப் பயன்படுத்தி நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுகிறோம், வாழ்க்கையைப் பயனுள்ளதாக மாற்றுகிறோம், வாழ்க்கையை எப்படி வாழுகிறோம், என்பதுதான், நம் முன்னால் இருக்கக்கூடிய சவால்.
இந்த உவமையில் வரக்கூடிய மினாவை நாம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசலாம். ஒருவருடைய வாழ்வில் அவருக்கென்று பல திறமைகள் இருக்கலாம். அந்த திறமைகள் வெறுமனே புதைக்கப்பட்டு விடக்கூடாது. மாறாக, அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும். அதனைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பயன் கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும். அதைத்தான் இந்த உவமை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
நாம் வாழக்கூடிய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இங்கே திறமைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, அனைவரும் சிறப்பாக, இந்த உலகத்தை, கடவுள் கொடுத்திருக்கிற திறமைகள் மூலமாக மெருகேற்ற வேண்டும். அதற்கு நாம் முழுமையாக முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மனந் தளராமல் செபிப்போம் !

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை லூக்கா 18: 1-8 நற்செய்தியில் வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாடுவோம்: புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


-- அருள்தந்தை குமார்ராஜா

இடைவிடாத செபம் கேட்கப்படும்

இடைவிடாத செபம் கேட்கப்படும்

லூக்கா 18: 1-8   நற்செய்தியில் வருகிற நடுவர் ஏரோதாலோ, அல்லது உரோமையர்களாலோ நியமிக்கப்பட்ட நடுவர். பணம் இருந்தால், எதையும் செய்யலாம் என்பதாகத்தான், இந்த நடுவர்கள் செயல்பட்டனர். நீதிக்கு அங்கே இடமில்லை. எந்த அளவுக்கு பணத்தை வாறி இறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நாம் விரும்பியபடி நீதி கிடைக்கும். நீதி, நியாயத்தைப்பற்றி அங்கு யாரும் பேசமுடியாது. பணம்தான் எல்லாம் செய்யும்.

இங்கே நற்செய்தியில் குறிப்பிடப்படுகிற பெண் ஏழைகளை, எளியவர்களை அடையாளப்படுத்தும் பெண். பணத்தினால் நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்காது. ஏனென்றால் அவர்களால் பணம் கொடுக்க முடியாது. ஆனாலும், அந்த பெண் நீதியை பெற்றிட பிடிவாதமாய் இருக்கிறாள். எப்படியாவது, நீதி கிடைத்திட தொடர்ந்து அவள் நச்சரிக்கிறாள். நச்சரிப்பின் காரணமாக, அவள் நீதியைப்பெறுகிறாள். இயேசுவின் செய்தி இதுதான்: பணத்திற்கா விலைபோகிற நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், நம்மைப்படைத்துப்பாதுகாத்துவரும் கடவுள் நம்மை அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுவாரா? நிச்சயம் நம்மைக்காப்பார். நமது சார்பில் அவர் என்றும் இருப்பார். நம்மை வழிநடத்துவார். நம்மோடு எந்நாளும் அவர் பயணிப்பார்.

கடவுளிடத்தில் செபிக்கின்றபோது, எப்போதும் நாம் மனம் உடைந்துவிடக்கூடாது. நாம் கேட்பது கிடைக்கவேண்டிய நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். செபத்திலே நாம் நினைத்தது கேட்கப்படவில்லை என்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. உறுதியாக, நம்பிக்கையோடு, விடாமுயற்சியோடு கேட்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

ஏழைகளின் கடவுள்

ஏழைகளின் கடவுள்

லூக்கா 18: 1-8 நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் மற்றும் கைம்பெண் பற்றிய உவமை தரப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் நேர்மையற்ற நடுவர் கடவுளுக்கு ஒப்பிடப்படவில்லை. நேர்மையற்ற நடுவரை, நிச்சயம் நம்மால் கடவுளுக்கு ஒப்பிட முடியாது. அவரது இரக்கத்திற்கு முன்னால், இந்த நேர்மையற்ற நடுவரின் செயல், ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அவருக்கு எதிராக, கடவுள் ஒப்பிடப்படுகிறார். நேர்மையற்ற நடுவரே இப்படி இருந்தால், கடவுள் எப்படி இருப்பார்? என்று, எதிர்மறையான விதத்தில், நற்செய்தி சொல்லப்படுகிறது.

இந்த நற்செய்தியில் நாம் காண்கிற மற்றொரு செய்தி: ஏழைகள்பால் கடவுள் கொண்டிருக்கிற அன்பு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் பெண், கணவனை இழந்த பெண். அவளுக்கு ஒரு பிரச்சனை. அவளுக்கு ஒரு எதிரி. அவளுக்கு ஒரு அநீதி நடந்து விட்டது. அவளுக்கு அநீதி செய்தவன், இவள் சார்பாக யார் வர முடியும்? என்ற மமதையோடு, நடந்திருக்கிறான். அந்த பெண், நடுவரிடம் நிச்சயம் செல்வாள் என்பது, அவளது எதிர்க்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும், பணத்தைக்கொண்டு எதையும், சாதிக்கலாம் என்று, அவளுடைய எதிரி நினைத்திருந்தான். ஆனால், அவன் ஒன்றை மறந்து விட்டான். எளியவர்கள் சார்பாக, கடவுள் எப்போதும் இருப்பார், என்கிற செய்தியை அவன் முற்றிலும் புறக்கணித்துவிட்டான்.

நமது கடவுள் எளியவர்களின் கடவுள். ஏழைகளின் கடவுள். துன்பப்படுகிற மக்களின் சார்பாக இருந்து பேசுகிற கடவுள். ஏழைகளுக்காக இரங்குகிற கடவுள். ஏழைகளாக இருக்கக்கூடிய மக்கள், நமக்காக யார் இருக்கிறார்கள்? நம் சார்பாக யார் வாதாடுவார்கள்? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், கடவுள் அவர்களுக்காக இருக்கிறார்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

தளராத இறைநம்பிக்கை

தளராத இறைநம்பிக்கை

இந்த உலகத்தில் நமக்கு பல தேவைகள் இருக்கிறது. எல்லா தேவைகளையும நாமே நிறைவேற்றிவிட முடியுமா? நம்மால் முடியாதது இருக்கிறதா? என்றால், இருக்கிறது. நமக்கென்று பல தேவைகள் இருந்தாலும், அவையனைத்தையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மை கடந்த ஒரு ஆற்றல் நமக்கு தேவைப்படுகிறது. அதுதான் கடவுள் சக்தி. அந்த கடவுளிடம் நம் தேவைகளை எடுத்துரைக்கிறபோது, அவர் நமது தேவையை நிறைவேற்றித் தருகிறவராக இருக்கிறார்.

இந்த உலகத்தில் நமது தேவையை நிறைவேற்றுகிறவர்கள் நமது தந்தையும், தாயும். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதையே, தங்களது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்கிறவர்கள் நமது பெற்றோர். அதைப்போலத்தான் கடவுள் நம் தந்தையாக, தாயாக இருந்து நமது தேவைகளை உடனிருந்து நிறைவேற்றித்தருகிறார். நமது பெற்றோர் நமக்கு தேவையானதை, நாம் கேட்பதற்கு முன்னமே நிறைவேற்றித்தருகிறார்கள். அதுபோல கடவுளும் நமது தேவைகளை அறிந்து, நமக்கு நிறைவேற்றித்தரக்கூடியவராக இருக்கிறார்.

எப்படி நம்முடைய பெற்றோர் நமக்கு தேவையான காரியங்களை நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறோமோ, அதேபோல கடவுளும் நம் தேவைகளை நிறைவேற்றுவார் என்று, நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை தளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்கான வரத்தை ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை

கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள் பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன?

தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை. அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான், அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல் இருப்பவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்குள் செல்லாமல், நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் சிரத்தை எடுப்போம். நமது வாழ்க்கையை கடவுளுக்கு பயந்து நடக்கக்கூடிய வாழ்க்கையாக மாற்றியமைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Tuesday, November 21, 2017

செசீலியம்மாவுக்கு கவிப்பா

செசீலியம்மாவுக்கு கவிப்பா

இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே

கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே

பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே

மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே

வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத்  தூண்டுகோலே

கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே

எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே

பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே

வாழிய வாழியவே !

அன்புடன்,

கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007

மரித்தோரை மறந்தால்...

மரித்தோரை மறந்தால்...

வாழும் உறவுகளை வருந்தி மறந்திருக்கலாம்

வாழ்வித்தவர்களை தெரிந்து மறந்திருக்கலாம்

நோயுற்றவர்களை காணாமல் மறந்திருக்கலாம்

வீழ்ந்தோரை அருகில் நில்லாமல் மறந்திருக்கலாம்

தாழ்ந்தோரை எள்ளி நகையாடி மறந்திருக்கலாம்

இழந்தோரை இகழ்ந்து பரிகசித்து மறந்திருக்கலாம்

மறந்தோரை மன்னிக்க மனமின்றி மறந்திருக்கலாம்

ஆனால் மரித்தோர் ஏங்குகையில் நாம் மறக்கலாமா...?

ஆத்துமாக்களை நினைவுகளினின்று ஒதுக்கலாமா....?

நம்மை இந்நிலைக்கு உயர்த்தியோரை உதாசீனப்படுத்தலாமா..?

ஆன்மாக்களை நினைப்போம்
ஆன்மாக்களுக்காக
செபிப்போம்
ஆன்மாக்கள் காட்டிய வழிநடப்போம்

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

முந்தியின் முடிச்சு

முந்தியின் முடிச்சு  - லூக்கா  19: 11-28

'நான் என்ன முந்தியிலயா முடிச்சு வச்சிருக்கிறேன்!'
என் அய்யாமை லட்சுமி அம்மாவிடம் காசு கேட்கும்போதெல்லாம் அவர் இப்படித்தான் சொல்வார். ஆனால், தன் முந்தியின் நுனி முடிச்சை அவிழ்த்துக் காசைக் கொடுத்துவிடுவார்.
அவர் காசை முடிந்து வைத்தே அவரின் முந்தி நுனி சுருக்கமாக இருக்கும். முந்தியில் முடிய வெட்கப்படும் சிலர் கைக்குட்டையில் முடிந்து அதைத் தங்களின் இடுப்பில் சொருகி வைத்திருப்பார்கள் - குறிப்பாக ஆண்கள். முந்தியில் நாணயங்களைத்தான் முடிய முடியும். நோட்டுக்களை முடிந்து வைப்பது பாதுகாப்பானது அல்ல. மேலும் உடலின் வியர்வையால் நோட்டுக்கள் நனைந்துவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
முந்தியின் முடிச்சு - ஒரு பாதுகாப்பு பெட்டகம்.
நெல்வயலில் இறங்குமுன் கழற்றப்படும் மெட்டி, கைவிரலின் மோதிரம், வீட்டுச் சாவி, புகையிலை, பாக்கு, பணம் என எல்லாம் முடியப்படுவது முந்தியில்தான்.
முந்தியின் முடிச்சு எளிதாக அவிழ்வதில்லை. மேலும், அவை நம் உடலை உரசிக்கொண்டே இருப்பதால் அவைகள் தவறவும் வாய்ப்பில்லை.
'உன் வீட்டுக்காரரை உன் முந்தியில் முடிசுசுக்கோ!' என்று தாய் தன் மகளுக்கு அறிவுரை கொடுப்பதும் இதனால்தான்.
மனிதர்கள் காசை சேகரித்து வைக்கத் தொடங்கியதின் முதற்படி இதுவாகத்தான் இருக்கும். முதலில் முந்தி, அடுத்து சுருக்குப் பை, அடுத்து பர்ஸ், அடுத்து ஏடிஎம் அட்டை என வளர்ந்து கொண்டிருக்கிறது.
முந்தியோடு நிறுத்திக் கொள்தல் பொருளாதாரத்தின் முதல்படியே.
அப்படி முந்தியோடு முடிந்து வைத்து, தன் பொருளாதார வளர்ச்சியை தானே நிறுத்திக் கொண்ட ஒருவரைத்தான் லூக்கா 19:11-28  நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.
 நாம் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.
மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் தாலந்து எடுத்துக்காட்டுக்கும் (25:14-30) மூன்று முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன:
1. மத்தேயு, 'தாலந்து' என குறிப்பிடுவதை, லூக்கா 'மினா' எனக் குறிப்பிடுகிறார். 60 மினாக்கள் சேர்ந்ததுதான் ஒரு தாலந்து.
2. மத்தேயுவில் மூன்று பேருக்கு, ஐந்து, இரண்டு, ஒன்று என தாலந்துகள் கொடுக்கப்படுகின்றன. லூக்காவில் பத்து பேருக்கு, ஆளுக்கு ஒன்று வீதம் பத்து மினாக்கள் கொடுக்கப்படுகின்றன.
3. மத்தேயுவில் மூன்றாம் நபர் தாலந்தை நிலத்தில் புதைக்கிறார். லூக்காவில் மூன்றாம் நபர் கைக்குட்டையில் முடிகிறார். மேலும் முதல் நபர் ஒன்றை பத்தாகவும், இரண்டாம் நபர் ஒன்றை ஐந்தாகவும் பெருக்குகின்றார். மற்ற ஏழுபேர் தங்கள் மினாக்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களில் எது இயேசு சொன்னது என்பது குழப்பமாக இருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுக்களிலும், மூன்றாம் நபர் கண்டிக்கப்படுகிறார்.
எதற்காக? அவரின் சோம்பலுக்காகவும், அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பெருக்காததற்காகவும்.
டாடா மோட்டார்ஸ் விளம்பரத்தில் அழகாக ஒரு வரி வரும்:
'நமக்கு உள்ளிருந்து நம்மை இயக்குவதே நம்மை மேன்மையானவராக்குகிறது!'
அதாவது, நம் கைகளில் எத்தனை மினாக்கள் இருப்பதைப் பொறுத்து அல்ல நம் மேன்மை. மாறாக, அந்த மினாக்களைப் பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் இருக்கவும் வைக்கின்ற நம் உள்மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்.
ரூபிக்ஸ் க்யூப் பார்த்திருப்பீர்கள்.
இதில் உள்ள நிறங்களை அந்தந்த பகுதியில் சரியாகச் சேர்க்க 43,252,003,274,489,856,000 வழிமுறைகள் உள்ளன.
ஒரு கையடக்க க்யூபே இத்தனை வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றால், கைக்குள் அடங்காத நம் மனித வாழ்க்கைக்கு எத்துணை வழிமுறைகள் இருக்கும்.
ஒரு வழிமுறை தவறாய்ப்போனாலும், அல்லது ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டாலும், அடுத்த ஒன்றுக்கு முயற்சிக்கலாமே. – Fr. Yesu, Madurai.

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்?

இறைவன் கொடுத்த தாலந்தை நாம் என்ன செய்தோம்? -  லூக்கா  19: 11-28


ஆங்கிலேய ஆட்சியில் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மவுண்பேட்டன் பிரபு அவர்கள். தனது சாதூயர்த்திற்கும், புத்திக்கூர்மைக்கும் பேர்போனவர். எப்படிப்பட்ட பிரச்சனையையும் தனது புத்திக்கூர்மையால் தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
ஒருமுறை பத்திரிக்கையாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாக, அறிவுத்தெளிவோடு பதிலளித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நின்று அவரை வாழ்த்திவிட்டு கேட்டார், “ உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று.
அதற்கு அவர், “நான் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்கள்கூட விவசாயிகள்தான். ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருப்பது என்னுடைய கடின உழைப்புதான். உழைப்பால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அவரை வெகுவாக வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
ஒருமுறை ரஷ்ய அதிபர் லெனின் இவ்வாறு சொன்னார், “நாடு முன்னேறத் தேவையான மூன்று: உழைப்பு, கடின உழைப்பு, ஓயாத உழைப்பு இவைதான்” என்று. ஒருமனிதன் தன்னுடைய வாழ்வில் கடுமையாக உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா உவமையைக் குறித்துப் பேசுகிறார். (மத்தேயு நற்செய்தியில் இது தாலந்து உவமையாக வருகின்றது). உயிர்குடிமகன் ஒருவர் தன்னுடைய பணியாளர்களை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்துவிட்டு தொலைதூரம் செல்கிறார். சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் கணக்குக் கேட்கிறபோது ஒருவன் பத்து மினாக்களையும், இன்னொருவன் ஐந்து மினாக்களையும் ஈட்டியதாக கொண்டுவந்து தருகிறான். கடைசியில் வந்தவனோ தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை கைகுட்டையில் முடிந்துவைத்து அப்படியே கொடுக்கிறான். இதனால் தலைவனுடைய சினத்துக்கு ஆளாகிறான்.
இங்கே மினா – தாலந்து – என்பதை கடவுள் நமக்குக் கொடுத்தாக திறமைகள், வாய்ப்பு, வசதிகள் என்பதாக புரிந்துகொள்ளலாம். கடவுள் யாரையுமே திறமையற்றவராகவோ அல்லது ஜடமாகவோ படைக்கவில்லை. அதை நாம் எசா 43:4 ல் வாசிக்கின்றோம், “என் (கடவுள்) பார்வையில் நீ விலையேற்றப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்” என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் திறமையானவர்கள், ஆற்றல்மிக்கவர்கள்.
ஆனால் பலர் இன்று தங்களிடம் இருக்கும் திறமையை உணராமல்; தங்களுடைய மதிப்பை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். “உன்னையே நீ அறிவாய்” என்பான் தத்துவஞானி சாக்ரடிஸ். நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கிறது, என்ன ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம். உவமையில் வரும் முதல் இரண்டு பணியாளர்களும் தங்களிடம் இருந்த திறமையை, உழைப்பைப் பயன்படுத்தி பத்து, ஐந்து மினாக்கள் முறையே ஈட்டினார்கள். அதனால் அவர்கள் தங்களுடைய தலைவரிடமிருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றார்கள். நாம் நமது திறமையை, உழைப்புப் பயன்படுத்தினால் என்றும் உயர்வுதான்.
அதேவேளையில் உழைக்காமல் சோம்பித்திரிவது என்பது கடவுளின் தண்டனைக்கு உரியதாக கருதப்படுகிறது. உவமையில் வரும் கடைசிப் பணியாளர் தலைவன் தனக்குக் கொடுத்த மினாவை வைத்து மேலும் செல்வம் ஈட்டாமல் கைகுட்டையில் பொதிந்து வைத்திருக்கிறான். அதனால் தலைவனின் சினத்திற்கு உள்ளாகிறான். நாமும்கூட பலவேளையில் உழைக்காமல், ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவர், அது நின்றாலும் ஓடினாலும் ஒன்றுதான்” என்பார் கூப்பர் என்ற அறிஞர். ஆம், சோம்பேறி ஒன்றுக்கும் உதவாதவன். அதனால் அவன் அழிவையே சந்திப்பான்.
ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.


கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்?

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை நாம் எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றோம்? - லூக்கா  19: 11-28


ஒரு மாலைப் பொழுதில் தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் உலவிக்கொண்டிருந்தன. 
குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் ஒட்டகம் அவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையாகப் பதில்சொல்லும். 
அன்றைக்கும் அப்படித்தான். குட்டி ஒட்டகம் தாய் ஒட்டகத்தைப் பார்த்து “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” என்றது. “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும் தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துகொண்டு, வேண்டும்போது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்க்கை திமிலைக் கொடுத்திருக்கு” என்றது தாய் ஒட்டகம். 
குட்டி ஒட்டகம் திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மற்ற மிருகங்களுக்கு அப்படி இல்லையே. அது ஏன்?”. தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக்கொண்டு சொன்னது. “பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும். அப்போது சற்றென்று ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைனா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”.
குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது, “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”. “அது கண்ணு... மணல்ல நடக்கும்போது நம் கால் மணல்ல புதையாம நடக்கத்தான்” பொறுமையாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம். “பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே, அது ஏன்? இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி. அதற்கு தாய் ஒட்டகம் சொன்னது, “பாலைவனத்தில் செடி கொடி எல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?”.
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு இலண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம இரண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கும்?”. குட்டி ஒட்டகம் கேட்ட இந்தக் கேள்விக்கு தாய் ஒட்டகத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆம், நாமும்கூட இந்த ஒட்டகங்களைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அளப்பெரிய திறமைகளைக் கொண்டிருந்தும், நம் திறமைகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்துக்கொண்டு தேவையில்லாத இடத்தில் பயனில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மினா நாணய உவமையை எடுத்துக்கூறுகின்றார். இயேசு கூறிய மற்றெல்லா உவமைகளை விடவும் இந்த உவமை வரலாற்றில் நிகழ்ந்தவற்றோடு மிகவும் ஒத்துப் போகின்றனது. எப்படி என்றால், பெரிய ஏரோதுவின் இறப்புக்குப் பிறகு அவருடைய மூன்று மகன்களான அந்திப்பா, பிலிப் அர்கிலஸ் ஆகியோர் தங்களுக்கென்று குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு ஆண்டு வந்தார்கள். இதற்கிடையில் அற்கிலஸ் உரோமை நகருக்குச் சென்று, அங்கிருந்த உரோமை அரசனாகிய அகுஸ்துஸ் என்பவரிடம் தன்னை யூதேயாவிற்கு அரசனாக ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதற்கு யூதர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அவர்கள் அர்கிலசை அரசராக ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு மினா நாணய உவமைச் சொல்கின்றார்.
உவமையில் வரும் உயர்குடிமகன் தன்னுடைய பணியாளர்களை அழைத்து மினாக்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வாணிபம் செய்யச் சொல்லிவிட்டு, ஆட்சியுரிமை பெறப் போகின்றார். ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தபிறகு தன்னிடம் மினாக்களை பெற்றவர்களிடமிருந்து கணக்கைக் கேட்கின்றார். அவர்களில் இருவர் சரியாகக் கணக்கைக் கொடுக்க, கடைசியில் வரும் பணியாளர் பெற்ற மினாவை அப்படியே திரும்பக் கொடுக்கின்றார். இதனால் சினங்கொள்ளும் அவர், அந்தப் பணியாளருக்கு உரிய தண்டனையைக் கொடுக்கின்றார்.
இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது. ஒன்று, கடவுள் நம்மை நம்பி பொறுப்புகளை/ திறமைகளை கொடுக்கின்றார் என்பதாகும். இரண்டு, கொடுத்த பொறுப்புகளுக்குக் கணக்குக் கேட்கின்றார் என்பதாகும். மூன்று, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகின்றோமோ அதனடிப்படையில் நமக்கு வெகுமதி வழங்கப்படும் என்தாகும். ஒருவேளை, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் திறம்படச் செய்திருந்தால் ஆசிர்வாதத்தைப் பெறுவது என்பது உறுதி.
எனவே, கடவுள் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் பொறுப்புகளை/ திறமைகளை நல்லவிதமாய் பயன்படுத்துவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் - லூக்கா 18: 1-8

இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலையடிவாரக் கிராமத்தில் கார்முகில், வணங்காமுடி என்ற இணைபிரியா தோழர்கள் இருவர் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் சோம்பேறியாக சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடும் சுறுசுறுப்பாகவும் எந்த வேலையையும் மிக அழகாக செய்து முடிக்க கூடியவன்.

ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஓர் இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் ஒரு கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக்காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கலப் பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம், எனக்கு பிள்ளை குட்டிகளென்று யாரும் கிடையாது. எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று, அந்தப் புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார்.

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம். இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம்” என்று கூறினான். அதற்கு வணங்காமுடி "புதையலை கண்டறியத்தானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைத்தனம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் “உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது” என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல், அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான்.

பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியைத் தொடங்கினான். வழியில் ஒரு கடைக்காரரிடம் மலையில் இருக்கும் கோயிலை பற்றி விசாரித்தான். அதற்கு அந்த கடைக்காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும், அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார்.
அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது. ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் “மலையில் கோயிலை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அந்த சிறுவன் “ஓ நன்றாக தெரியுமே... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான்.

கோவிலுக்குச் சென்ற அவன், அதற்கு எதிரே இருந்த அரசமரத்தின் அடியில் குழி தோண்டினான். இறுதியில் புதையலையும் கண்டுகொண்டான்.

தன்னம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியோடு மலைமீது ஏறியதன் பலனாக அந்த புதையல் வணன்காமுடிக்குக் கிடைத்தது. ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுகோ எதுவும் கிடைக்காமல் போனது. தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் ஒரு செயலைச் செய்தால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனந்தளராமல் இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு நேர்மையற்ற நடுவர், கைம்பெண் உவமையைச் சொல்கிறார். நடுவரோ யாருக்கும் ஏன் கடவுளுக்குக் கூட பயப்படாதவர். நிச்சயம் அவர் ஒரு உரோமை அரசாங்கத்தின் நடுவராகவே இருந்திருக்க வேண்டும். யூத நடுவர்கள் அப்படி கடவுல்க்குப் பயப்படாமல் இருக்கமாட்டார்கள். அவரிடத்திலிருந்து நீதி கிடைக்கவேண்டும் என்று யாதொரு துணையும் இல்லாத கைம்பெண் போராடுகின்றார். நேர்மையற்ற நடுவர் யாருக்கும் பயப்படதவராக இருந்தாலும், அக்கைம்பெண்ணின் தொல்லையின் பொருட்டு அவர் அவருக்கு நீதியை வழங்குகின்றார்.

இந்த உவமையைச் சொல்லிவிட்டு இயேசு, “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ” என்கின்றார். இறைவன் தன் மக்கள்மீது பேரன்பு கொண்டிருப்பவர். அவர் தம்மிடத்தில் மனந்தளராது மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயம் செவிகொடுப்பார் என்பதே உண்மை.

எனவே, நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் மனந்தளராது மன்றாடுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

தொந்தரவு

தொந்தரவு


ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தும்

தன் தாயிடம்,

'டுவெண்டி ஃபோர் அவர்ஸ் சதா ட்ரபுள் குடுத்துகிட்டே இருக்க நீ!'

என்று கடிந்து கொள்வார் எம்.ஆர். ராதா.

தொந்தரவு –

ஒருவர் மற்றவருக்குச் செய்வது. இது நடக்கு இருவர் அல்லது இருவருக்கு மேல் அவசியம். எனக்கு நானே தொந்தரவு கொடுக்க முடியுமா? முடியாது. அடுத்தவர்தான் கொடுக்க முடியும். அல்லது நான்தான் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும்.

ஒரு புள்ளியில் தொடங்கும் வேலை மற்றொரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நகர்தலை மற்றவர் இடைநிறுத்தினால் அதற்குப் பெயர் தொந்தரவு.

ஆங்கிலத்தில் 'disturb' என்கிறோம். இதன் இலத்தீன் மூலம் 'dis-turbare'. Turbain என்பது ஒரு சக்கரம். அந்தச் சக்கரத்தின் ஓட்டத்தை தடுப்பது அல்லது நிறுத்துவதுதான் dis-turb.

  1. சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை.

  2. உதாரணத்திற்கு, இப்போது தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்யும் கனமழை. இந்தக் கனமழையினால் நம் பயணம், பணி தடைபடுகிறது. ஆனால், இது தவிர்க்க முடியாத தொந்தரவு.

  3. சில தொந்தரவுகள் தவிர்க்க கூடியவை.

  4. நாம் படிக்கும் இடத்தின் அருகில் லவுட் ஸ்பீக்கரில் பாட்டு ஓடுகிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொந்தரவை தவிர்க்க நான் என் அறையின் கதவுகளை அடைக்கலாம். அல்லது வேறு இடத்திற்கு நானே மாறிச் செல்லலாம்.

  5. சில தொந்தரவுகள் நாமாக ஏற்படுத்திக் கொள்பவவை.

  6. முக்கியமான ப்ராஜக்ட் ஒர்க் செய்து கொண்டிருக்கும்போது, ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் ஆன் செய்து வைத்து அந்த ஸ்க்ரீனில் ஒரு கண், கணிணி ஸ்க்ரீனில் மறு கண் என இருப்பது.

  7.  லூக்கா 18:1-8) தொந்தரவு கொடுக்கும் ஒரு கைம்பெண்ணைப் பார்க்கிறோம். யாருக்குக் கொடுக்கிறார்? நீதியற்ற நடுவருக்கு. எதற்காக? தனக்கு நீதி வேண்டி.

  8. இந்த நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை', 'மனிதரையும் மதிப்பதில்லை'.

  9. இருந்தாலும் தொந்தரவின் பொருட்டு அடிபணிகிறார்.

  10. இந்தப் பெண்ணின் தொந்தரவுக்குப் பின் இருப்பது நம்பிக்கை. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை. நம்பிக்கையுடன் தட்டும் எந்தக் கதவும், மீண்டும் மீண்டும் தட்டப்படும்போது, கண்டிப்பாக திறக்கப்படும்.

  11. இந்தப் பெண் தன்னிடம் ஒன்றுமில்லாத ஒருநிலையில், தன் கையறுநிலையில் நடுவர்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

  12. இந்தப் பெண்ணின் நம்பிக்கை எப்படி இருக்கிறது தெரியுமா?

  13. ஆற்றுத் தண்ணீரில் அமிழ்த்தப்படும் ஒருவன் தன் தலையை முட்டிக்கொண்டு மூச்சுக்காற்றுக்கு வெளியே வருவானே அப்படியிருக்கிறது.

  14. தொந்தரவும் நல்லதே! – Fr. Yesu, Madurai.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

பீகார் மாநிலம் பாகலூர் என்ற குக்கிராமம். இங்கே இருக்கக்கூடிய மக்கள் நிலமில்லாத பரம ஏழைகள். வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் ஐம்பது கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கக்கூடிய பக்கத்து ஊருக்குத்தான் செல்லவேண்டும். இதனால் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் பக்கத்துக்கு ஊருக்குச் செல்வதற்கான இன்னொரு வழியும் இருந்தது. அது இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் மலைக்கு உள்ளே இருந்த குறுகலான பாதை. சிலநேரங்களில் இதன்வழியாக போகமுனைவோர் உடலில் சிராப்புகளோடும், காயங்களோடுதான் திரும்பிவருவர். அரசாங்கத்திடம் ஊர் மக்கள் மலைப்பாதையை விரிவுபடுத்தவேண்டும் என்று எவ்வளவோ சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் கேட்கப்படாமலே போனது. இதனால் ஊர்மக்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

இவ்வேளையில் அவ்வூரில் இருந்த தஷ்ரத் மஞ்சி என்ற மனிதன் ஒவ்வொருநாளும் வேலைக்குச் சென்றுவிட்டு, உடம்பில் காயங்களோடும், சிராப்புகளோடும் வந்த தன்னுடைய மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து, “ஏன் நாமே இந்த மலையை உடைத்து பாதையை உண்டாக்கக்கூடாது” என்று சிந்தித்தான். ஊர் மக்களுக்காக அல்லாது தன்னுடைய மனைவிக்காகவே மலையில் முதலில் பாதையமைக்க முடிவெடுத்தான்.

1960 ஆம் ஆண்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினான். அப்போது ஊர் மக்களெல்லாம் அவனது செயலைப் பார்த்துக் கேலிசெய்தனர். ஆனால் அவன் தான் எடுத்த முயற்சியில் விடாமுயற்சியோடு உழைத்தான். இதற்கிடையில் ஒருநாள் அவனுடைய மனைவி மலைப்பாதையில் சென்றபோது ஒரு பாறாங்கல் அவள்மீது விழுந்து, அந்த இடத்திலே அவள் இறந்துபோனாள். “யாருக்காக இந்த மலையை உடைக்க ஆரம்பித்தோமோ அவளே இறந்துவிட்டாளே” என்று அவன் மனம்வருந்தி அழுதான்.

ஆனால் தான்கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்ததால் மலையை உடைத்து, பாதை அமைக்கும் வேளையில் மும்முரமாக இறங்கினான். அவனுடைய இடைவிடாத முயற்சியின் பலனால் 1982 ஆம் ஆம் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் 30 அடி அகலமுள்ள ஒரு பாதை உருவானது. தனது மனைவிக்காக தொடங்கிய முயற்சி ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படுவதை எண்ணி அவன் மிகவும் சந்தொசப்படான். மக்களும் தஷ்ரத் மஞ்சி என்ற அந்த மனிதனின் செயலை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

விடாமுயற்சியோடு செயல்படும்போது எப்படிப்பட்ட காரியமும் சாத்தியப்படும் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விடாமுயற்சியோடு ஜெபித்தால், இறைவனின் வேண்டினால் அவர் நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்பதை ‘கைம்பெண்ணும், நேர்மையற்ற நடுவரும்’ என்ற உவமையின் வாயிலாக அழகுபட எடுத்துக் கூறுகின்றார். உவமையில் வரும் நடுவர் கடவுளுக்கும் அஞ்சாதவர், மக்களையும் மதிக்காதவர். அப்படிப்பட்ட நடுவரே, கைம்பெண்ணின் விடாமுயற்சியால் – நச்சரிப்பால் – அவருக்கு தீர்ப்பு வழங்கினார் என்று சொன்னால், கடவுள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை நோக்கி அல்லும், பகலும் மன்றாடும்போது அதற்கு செவிசாக்காமல் போவாரோ? என்கிறார் இயேசு.

நாம் ஒவ்வொரும் இடைவிடாது, தொடர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக இருகின்றது. ஆனால் பலநேரங்களில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இறைவனின் ஜெபித்துவிட்டு, ‘கடவுள் என்னுடைய ஜெபத்தை கேட்கவில்லை’ என்று வேதனைப்படுகின்றோம். தானியேல் புத்தகம் 6:16 ல் வாசிக்கின்றோம், “நீ இடைவிடாது வழிபடும் கடவுள் உன்னை விடுவிப்பாராக” என்று. 1 தெச 5:17 ல் “இடைவிடாது இறைவனிடம் மன்றாடுங்கள்” என்று படிக்கின்றோம்.

ஆதலால் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம். அதன் வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

“கடின உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, உறுதியான சிந்தனைகள் இவையே வெற்றிக்கு அடிப்படை” – கார்லைஸ். Fr. Maria Antonyraj, Palayamkottai.

என் இல்லம் இறைவேண்டலின் வீடு

“என் இல்லம் இறைவேண்டலின் வீடு”

பெருநகர் ஒன்றில் பிரிவினை சபையைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் இருந்தார். அவருக்கு குதிரைகளின்மீதும், குதிரைப் பந்தயத்தின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னுடைய வீட்டில்கூட ஒரு உயிர்தரக் குதிரையை வாங்கி வைத்திருந்தார். குதிரைகளின்மீது இவருக்கு இருந்த அதிகமான நாட்டத்தைக் கண்ட ஒரு குதிரை வியாபாரி ஒருவர், தன்னிடம் இருந்த குதிரையை விற்கவேண்டும் என நினைத்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்:

“ஐயா உங்களுக்கு குதிரையின்மீது அதிகமான நாட்டம் இருக்கிறது என்பதை நான் அறிவேன். என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அரபு நாட்டிலிருந்து பிரத்யோகமாக இறக்குமதி செய்யப்பட்ட குதிரை அது. பழகுவதற்கு மிகவும் சாதுவானது. சிறிய குழந்தைகள்கூட அதில் ஏறிக்கொண்டு சவாரி செய்யலாம். அதற்காக நீங்கள் பெரிதாக எதையும் செலவழிக்கவேண்டாம். பராமரிப்புச் செலவுகூட மிகக்குறைவு.

மேலும் அதைப் பார்த்து நீங்கள் போ என்றால் போகும். நில் என்று சொன்னால் நிற்கும். அவ்வளவு கீழ்படிதலுள்ள குதிரை அது. இப்படிப்பட்ட ஒரு குதிரையை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதனால் நீங்கள் அந்தக் குதிரையை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அந்த குதிரை வியாபாரி மதபோதகரைக் கெஞ்சிக் கேட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதபோதகர் வியாபாரி,      “இவ்வளவு கீழ்படிதலுக்கு ஒரு குதிரையை என்னுடைய ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாமா?, ஏனென்றால் என்னுடைய ஆலயத்திற்கு வரும் இறைமக்கள் யாருமே என்னுடைய சொல்பேச்சுக் கேட்பதில்லை, எனக்குக் கீழ்படிந்து நடப்பதுமில்லை” என்றார்.

இதைக் கேட்டு அந்த குதிரை வியாபாரி பேச்சற்று நின்றார்.

ஆலயமும், அதில் நடக்கும் வழிபாடும் மக்களின் மனதில் மாற்றத்தையும், தூய அன்பையும் கொண்டுவரவேண்டும். அத்தகைய மாற்றமும், அன்பும் நிகழவில்லை என்றால், ஆலயத்தாலும், அதில் நிகழும் வழிபாட்டுக் கொண்டாட்டங்களாலும் ஒரு பயனும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வியாபாரம் செய்துவந்தவர்களை விரட்டி அடிக்கின்றார்; அதன் புனிதத்தன்மையையும், மாண்பையும் நிலைநாட்டுகிறார். இயேசுவின் இந்த தீரமிக்க/வீரமிக்க செயலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே வாழ்ந்துவந்தது. எனவே அவர்களுக்கென்று கோவில் கிடையாது. அவர்கள் இறைவனை மலைதனிலும், (யோவான் 4:20) இன்ன பிற இடத்திலும் வழிபாட்டு வந்தார்கள். அதன்பிறகு ஆண்டவராகிய கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் கொடுத்த பத்துக்கட்டளைகளையும், ஆரோனின் கோலையும், மன்னாவையும் உடன்படிக்கைப் பேழையில் வைத்து, அதில் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முதல்முறையாக தாவீது அரசன் கடவுளுக்குக் கோவில் கட்ட நினைத்தபோது, கடவுள் அவரிடம், “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய், எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு  நீ கோவில் கட்டவேண்டாம்” என்கிறார். (1குறி: 22:8)

எனவே, யூத மக்களுக்கான முதல் ஆலயம் தாவீதின் மகனான சாலமோனின் காலத்தில்தான் கட்டப்படுகிறது. அவர் கடவுளுக்காக கோவிலைக் கட்டி, அதை இவ்வாறு நேர்ந்தளிக்கிறார், “இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்கு செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக”.

ஆதலால், சாலமோன் அரசரால் கட்டப்பட்ட ஆலயம் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதை நம்முடைய மனதில் இருத்திக்கொளகொள்ளவேண்டும். இறைவாக்கினர் எசாயா இக்கருத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாகக் கூறுவார், “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு” என்று  (எசா 56:7). ஆகவே, எருசலேம் ஆலயம் யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருந்து, அதில் புறவினத்து மக்கள் ஜெபிக்கக்கூடிய பகுதியில் வியாபாரம் நடந்ததால்தால்தான் ஆண்டவர் இயேசு அங்கே வியாபாரம் செய்கின்றவர்களை விரட்டி அடிக்கின்றார். ஆலயம் இறைவேன்டலின் வீடு, அது வியாபாரத் தளமல்ல” என்பதை எண்பிக்கின்றார்.

இறைமக்கள் சமூகமாகிய நாம் இறைவன் தங்கிவாழும் இல்லத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவமும், மதிப்பும் தருகிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். “ஆண்டவன் சன்னதி, மனதிற்கு நிம்மதி” என்பார்கள்.

எனவே நாம் ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்வோம். ஆர்வமாய் ஆண்டவரை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“He who doesnot go to church in bad weather will go to hell when it is fair”

Fr. Maria Antonyraj, Palayamkottai. 2016

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் செய்வோம்

நடுத்தர வயது நண்பர்கள் இருவர் காலார நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரில் ஒருவரின் அலைபேசி ஒலித்தது. உடனே அவர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். ஆனால் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. அதனால் வெளி ஒலிப்பானை (Speaker) அழுத்தினார். அப்போது சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது.

எதிர்முனையில் இருந்தது வெளியூரில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் அவருடைய அன்புமகன். இரண்டு பேரும் நீண்ட நேரம் அன்பொழுகப் பேசி, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் தங்களது பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சிறுது நேரம் கழித்து மகன், “அப்பா! அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம். அதற்காக ஐந்தாயிரம் ருபாய் வேண்டும்” என்று பேசி முடிப்பதற்குள் அவனுடைய தந்தை, “ஹலோ மகனே! நீ பேசுவது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. கொஞ்சம் சத்தமாகப் பேசு” என்றார். எதிர்முனையில் இருந்த மகன், “ஹெலோ அப்பா! நீங்கள் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கின்றது. அடுத்த வாரம் எங்களுடைய கல்லூரியிலிருந்து ‘ஆல் இந்தியா டூர்’ போகிறோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் தந்தை இடைமறித்து, ‘மகனே! நீ பேசுவது எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. சிக்னல் இருக்கும் இடத்திற்கு வந்து பேசு’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

இதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர், “உன் மகன் பேசுவது தள்ளிவரும் எனக்கே தெளிவாகக் கேட்கிறது. அப்புறம் எதற்கு உன்னுடைய மகனிடம் பொய் சொல்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அவர், “உனக்குத் தெளிவாகக் கேட்கிறதல்லவா? அப்படியானால் நீயே அவன் கேட்கும் ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வை” என்று ஒரு போடு போட்டார்.

பணத்திற்காக பெத்த மகனையே புறக்கணிக்கும் பெற்றோர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் செல்வத்திற்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்கிறார். காரணம் செல்வம் என்பது தன்னகத்தில் சுயநலத்தைக் கொண்டது. அதனால்தான் இயேசு தன்னைப் பின்பற்ற வந்த செல்வந்தனாகிய இளைஞனிடம், “நீ போய், உம் உடமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்கிறார் (மத் 19: 21). செல்வம் இறைவனின் ஆட்சியை அடைவதற்கு நமக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும்கூட பலவேளைகளில் நாம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை மறந்து, நிரந்தரமற்ற செல்வமாகிய பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம். அதிலே நாம் மூழ்கி விடுகின்றோம். ஆனால் உண்மை என்னவெனில் அரும்பாடு பட்டு சேர்க்கும் செல்வத்தினால், நம்மால் நிம்மதியாக வாழ்க்கை வாழ முடியாது (லூக் 12:15). மாறாக இறைவனுக்குப் பணிந்து, அவர் காட்டும் வழியில் நடக்கும்போது நமக்கு எல்லா ஆசிரும், அருளும் கிடைக்கும்.

இணைச்சட்ட நூல் 6:13 ல் வாசிக்கின்றோம் “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட” என்று. அதேபோன்று திருத்தூதர் பணிகள் நூல் 16: 31 ல் வாசிக்கின்றோம் “ஆண்டவராகிய இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும், உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்று. ஆம், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தோம் என்றால் இறைவனின் ஆசி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஆதலால் உலக செல்வங்களுக்குப் பணிந்து நடப்பதை விடுத்து, உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பணிவிடை செய்துவாழுவோம். இறைவன் அருளை நிறைவாய் பெறுவோம். Fr Palay Maria Antonyraj, Palayamkottai.








நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது

‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ -  திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16: 3-9, 16, 22-27 & லூக்கா 16: 9-15

வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக் கூடிய கதை இது.

முன்பொரு காலத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் பாடிக்கொண்டே செருப்புத் தைத்துக்கும் தொழிலைச் செய்து வந்தார். இதனால் அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே சிறுவர் சிறுமியர் அவருடைய வீட்டுவாசல் முன்பாக வந்து நின்றார்கள்.

அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரும் செல்வம் படைத்த செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் இரவு முழுவதும் தன்னிடம் இருக்கின்ற பணத்தை எண்ணிவிட்டு, அதிகாலையில்தான் தூங்கச் செல்வார். அப்படியிருந்தும் அவருக்குத் தூக்கம் வருவதே கிடையாது. அவர் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு ‘நம்மிடம் இவ்வளவு பணம் இருக்கின்றது, இருந்தாலும் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை, ஆனால் இந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் பணமே இல்லை. அப்படியிருந்தும் அவன் நிம்மதியாக இருகின்றானே’ என்று. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

ஒருநாள் அவர் செருப்புத் தைக்கும் தொழிலாளியை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்தார். அவரிடத்தில் ஒரு சிறிய பையைக் கொடுத்து, இதை வைத்துக்கொள் என்று சொன்னார். செருப்பு தைக்கும் தொழிலாளியும் அதை அன்போடு வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்குச் சென்று செல்வந்தர் கொடுத்த அந்த பையைத் திறந்து பார்த்தபோது செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு பேச்சு மூச்சு வரவில்லை. ஏனென்றால், அந்தப் பை முழுவதும் தங்க நாணயங்கள் இருந்தன. தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு தங்க நாணயங்களை அவர் பார்த்ததே இல்லை. அவர் அந்தப் பையில் எவ்வளவு தங்க நாணயங்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினர். இதனை அவருடைய வீட்டிற்கு, அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்கு வரும் சிறுவர் சிறுமியர் பார்த்துவிட்டனர். இதனால் அவர் தங்க நாணயங்கள் தன்னிடம் இருக்கின்ற செய்தியை குழந்தைகள் தெரிந்துகொண்டு விட்டார்களே என்று பயமுற்றார். எனவே, அவர் தங்க நாணயங்களை தன்னுடைய படுக்கையறையில் கொண்டுபோய் வைத்தார்.

படுக்கையறையில் தங்க நாணயங்கள் இருப்பது யாருக்கும் தெரிந்துவிடுவோ என நினைத்து அதனை மொட்டைமாடியில் கொண்டுபோய் வைக்கத் திட்டமிட்டார். மொட்டைமாடியும் சரியான இடம் கிடையாது என நினைத்த அவர் அவற்றை சமையற்கட்டில் வைக்கலாம் என்று திட்டம் தீட்டினர். அதுவும் சரிபட்டு வராது என நினைத்த அவர்,  கொல்லைப்புறத்தில் ஒரு குழிதோண்டி அதைப் புதைத்து வைத்தால் யாரும் தெரியாது என நினைத்தார். அதன்படியே அவர் செய்தார். அப்போதும் அவர் மனம் அமைதி கொள்ளவில்லை. அவர் செருப்பு தைக்கும் தொழிலை விட்டுவிட்டு, பாடல் பாடுவதையும் விட்டுவிட்டு எப்போதும் தங்க நாணயங்களைக் குறித்தே நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் நிம்மதியின்றித் திரிந்தார். அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்க வரும் குழந்தைகளும்கூட வரவே இல்லை.

ஒருநாள் அவர் தான் எதற்கு இப்படி நிம்மதியின்றி இருக்கின்றோம், இதற்குக் காரணம் என்ன? என்று ஆற அமர யோசித்துப் பார்த்தார். அப்போது அவர் தங்க நாணயங்கள்தான் தன்னுடைய நிம்மதியின்மைக்குக்  காரணம் எனப் புரிந்துகொண்டு, கொல்லைப்புரத்தில் புதைத்து வைத்திருந்த தங்க நாணயங்களை எடுத்து, அவற்றை செல்வந்தரிடம் கொடுத்து, “இவற்றை நீரே வைத்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார். இப்போது அவரால் நிம்மதியாக பாடல்களைப் பாடிக்கொண்டு செருப்பு தைக்க முடிந்தது. முன்பு அவருடைய வீட்டிற்கு பாடல்களைக் கேட்பதற்காக வந்த சிறுவர் சிறுமியரும் வரத்தொடங்கினார்.

கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி பணமில்லாதபோது நிம்மதியாக இருந்தார். பணம் வந்த பின்பு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பணத்திற்கும் நிம்மதிக்கும் – நிம்மதியைத் தரும் கடவுளுக்கும் – வெகு தூரம் என்பதை இந்த கதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ என்கிறார். காரணம், பணம் எப்போதும் ஒருவனுக்குள் தன்னலத்தை மட்டுமே வருவிக்கும்; இவ்வுலகம் தொடர்பாகவே சிந்திக்கத் தூண்டும். இப்படிப்பட்டவர் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் கடவுளுக்கு உண்மையாகப்  பணிவிடை செய்யும் ஒருவர் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். ஆனால், அப்படி இறைப்பணி செய்யும் ஒருவருக்கு எல்லா ஆசிர்வதங்களுக்கும் நிரம்பக் கிடைக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.

எனவே, நமக்கு நிலையான, நிறைவான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

திறமைகளைத் திறம்படப் பயன்படுத்துவோம்

திறமைகளைத் திறம்படப் பயன்படுத்துவோம்

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அந்த மூன்று மகன்களில் மூத்தவன் மரங்களை வளர்ப்பதில் கெட்டிக்காரன். இரண்டாமவன் ஆடுகளை வளர்ப்பதில் கெட்டிக்காரன். கடைசி மகனோ யாழ் மீட்டுவதில் கெட்டிக்காரனாக விளங்கினான். ஒருநாள் அரசன் தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, தான் ஐந்தாண்டு காலம் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாகவும், அந்த ஐந்தாண்டுகளில் மக்களை நன்றாகப் பராமரிக்கும்படியாகும் கேட்டுக்கொண்டுவிட்டு  புறப்பட்டார்.

அரசர் போனபிறகு அவருடைய மூன்று மகன்களும் நாட்டு மக்களை சில மாதங்களுக்கு சிறப்பாக நடத்தினார்கள். அந்நாட்டில் குளில்காலம் வரத் தொடங்கியது. அவ்வாண்டு குளிரானது மற்ற ஆண்டுகளில் ஏற்பட்ட குளிரையும்விட சற்றுக்கூடுதலாக இருந்தது. அதனால் மக்கள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றார்கள். ஒருசிலர் இளவரசர்களிடம் வந்து, உதவிகேட்டு நின்றனர். அப்போது மரங்களை வளர்ப்பதில் கெட்டிக்காரனாக இருந்த மூத்தமகனோ தான் வளர்த்த மரங்களை எல்லாம் வெட்டித்தந்து, அவற்றை வைத்து குளிர்காய்ந்து கொள்ளும்படியாகச் சொல்லி அனுப்பிவைத்தான். இதனால் குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அந்நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே, மக்கள் உணவிற்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். அப்போது மக்கள் இளவரசர்களைச் சந்தித்து, தங்களுடைய பிரச்னைக்கு தீர்வு சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது ஆடுகளை வளர்ப்பதில் கெட்டிக்காரனாகிய இரண்டாம் மகனோ தான் வளர்த்த ஆயிரக்கணக்கான ஆடுகளை அடித்து, உணவாக உட்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். இதனால் மக்கள் ஓராளவு ஆறுதல் அடைந்தார்கள். இருந்தாலும் மக்களிடம் துயரமும், கவலையும் போகவில்லை. இதைக் கண்ணுற்ற யாழ் இசை மீட்டுவதில் வல்லவனாகிய இளைய மகனோ, அவர்களின் துயரத்தை போக்க நினைக்காமல், அவர்களோடு சேர்ந்து அழுதுதீர்த்தான். இதனால் நாட்டு மக்களில் நிறையப் பேர் தங்களுடைய பிரச்னைகளைத் தீர்த்துவைக்க ஆளில்லையே என்று சொல்லி நாட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டார்கள்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அரசர் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பி வந்தார். அவர் நாட்டைப் பார்த்தபோது மக்களெல்லாம் முகத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தார்கள். அப்போது அவர் தன்னுடைய மூன்று மகன்களிடம் காரணத்தைக் கேட்க, எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்போது அவர் அவர்களிடம், “இத்துன்பத்தைப் போக்க நீங்கள் ஏதாவது செய்தீர்களா?” என்று கேட்க, மூத்த மகன், “தந்தையே! நான் வளர்த்த மரங்களை எல்லாம் வெட்டி, மக்களது குளிரைப் போக்கினேன்” என்றான். இரண்டாம் மகனோ, “நான், இத்தனை ஆண்டுகளும் வளர்த்த ஆடுகளை எல்லாம் அடித்து, மக்களுக்கு உணவு கொடுத்தேன்” என்றான். எதுவும் பேசாதிருந்த இளைய மகனைப் பார்த்து தந்தை, “மகனே! நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “மக்களுடைய துயரம் என்னை வாட்டவே, நான் அவர்களோடு சேர்ந்து அழுதேன்” என்றான். உடனே அரசர் அவனிடம், “மகனே உனக்குத் தான் யாழ் மீட்டத் தெரியுமே, இதை வைத்து மக்களை சந்தோசப்படுத்தியிருக்கலாமே” என்றார். அதற்கு அவன் எதுவும் பேசாதிருந்தான்.

பின்னர் அரசர் அவனிடம், “சரி மகனே! இப்போதாவது நீ யாழிசை மீட்டி மக்களை மகிழ்ச்சிப்படுத்து” என்றார். அவன் தன்னுடைய அறைக்குச் சென்று யாழை எடுத்துக்கொண்டு வந்து மீட்டத் தொடங்கினான். ஆனால் இத்தனை ஆண்டுகளும் அவன் யாழினை மீட்டாததால், அவனால் யாழை சரியாக மீட்ட முடியவில்லை. அவன் தன்னுடைய நிலையை நினைத்து வெட்கித் தலைகுனிந்து நின்றான். அப்போது அரசர் அவரிடம், “நீ இத்தனை ஆண்டுகளும் யாழினை – உன்னிடமிருந்த திறமையை சரியாகப் - பயன்படுத்தாததினால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நிறைய மக்கள் நம்முடைய நாட்டிலிருந்து வெளியே கிளம்பியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற்க் காரணம் நீதான்” என்று சொல்லி அவனை சிறையில் அடைத்தார்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை – தாலந்துகளை - சரியாகப் பயன்படுத்தாதபோது இளையமகனுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். நீதிமொழிகள் நூல் 31: 10-13, 19-20, 30-31, திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5: 1-6 & மத்தேயு  25: 14-30
வாசகங்கள் தரும் சிந்தனை : கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளைத் திறம்படப் பயன்படுத்துவோம் என்பதாகும். எனவே, நாம் எப்படி திறமைகளை திறம்படப் பயன்படுத்தப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமை நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். இவ்வுவமை நமக்கு உணர்த்தும் முதலாவது பாடம்: கடவுள் எல்லாரையும் ஏதாவது ஒரு திறமையால் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதாகும். உவமையில் ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஒரு தாலந்து என்பது ஆறாயிரம் தெனாரியத்திற்குச் சமம். ஒரு தெனாரியம் என்பது ஒருநாள் கூலி) ஆகவே, இங்கே திறமையில்லாதவர் என்று யாருமில்லை. வேறுவிதமாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுளின் படைப்பில் யாருமே ஜடமோ அல்லது ஒன்றுமில்லாதவர் கிடையாது. திறமையைப் பயன்படுத்தாத மனிதர் வேண்டுமானால் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் திறமையில்லாதவர் என்று யாருமே இருக்க முடியாது. ஏனென்றால், நாம் அனைவரும் கடவுளது பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்; மதிப்பு மிக்கவர்கள் (எசா 43:4), ஆகையால் நாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.

இவ்வுவமை நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம்: நாம் ஒவ்வொருவரும் தனிதன்மையானவர்கள் (Unique) என்பதாகும். எப்படியென்றால் இந்த உவமையில் வரக்கூடிய பணியாளர்களில் ஒருவருக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துகொண்டு கடவுள் நம்மை ஏற்றத்தாழ்வோடு படைத்திருக்கிறார் என்று பொருள்கொள்ளக்கூடாது, மாறாக ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட கொடைகளில், வாழ்கின்ற வாழ்க்கையில் தனித்தன்மையாக இருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், “தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே தூய ஆவியார் அறிவு செறிந்த சொல்வளத்தை அளிக்கின்றார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள்கொடைகளையும் அளிக்கிறார்...” என்று ( 1 கொரி 12: 8-11). ஆகவே, தூய ஆவியார் அல்லது கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கொடையை வழங்கியிருக்கிறார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டோம் என்றால், அடுத்தவரைக் குறித்து பொறாமை கொள்ளமாட்டோம். அடுத்தவரை கடவுளை என்னைவிட அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார் எனக் காழ்புணர்ச்சி கொள்ளமாட்டோம்.

நிறைய நேரங்களில் ஒவ்வொருவரும் தனிதன்மையானர்; வித்தியாசமானவர் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாததால்தான் பல்வேறு குழப்பங்கள், போட்டிகளும், கட்சி மனப்பான்மையும் ஏற்படுகின்றன. காயின் ஆபேலை தன்னைவிட அவன் தனித்தன்மையானவன் என்று உணர்ந்திருந்தால் ஆபேலைக் கொலைசெய்திருக்க மாட்டான். அதேபோன்று தாவீதும் தானும் தனித்தன்மையானவர்கள்  என்று சவுல் உணர்ந்திருந்தால், சவுல் தாவீதைக் கொள்வதற்கு சூழ்ச்சி செய்திருக்கமாட்டான். ஆகையால், ஒவ்வொருவருமே நான் மற்றவரைவிட தனித்தன்மையானவன், வித்தியாசமானவன் என்பதை உணராததினால்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள். எனவே நாம் ‘ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்’ என்பதை உணர்ந்து வாழ்வோம்.

இறுதியாக இவ்வுவமை உணர்த்தும் செய்தி: ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட திறமையை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து ஆகும். உவமையில் ஐந்து தாலந்து பெற்றவரும், இரண்டு தாலந்து பெற்றவரும் முறையே மேலும் ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து ஈட்டுகிறார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தில் குழிதோண்டி புதைத்து வைக்கிறார். அதனால் தலைவர் ஐந்து தாலந்து பெற்றவரையும், இரண்டு தாலந்து பெற்றவரையும் பாராட்டி, அவர்களுக்கு நல்ல பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். ஆனால் தனக்குக் கொடுப்பட்ட ஒரு தாலந்தை சரியாகப் பயன்படுத்தாத அந்த பணியாளரை வதைப்பவர்களிடம் அனுப்பி வைக்கிறார். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை, தாலந்துகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது நம்முடைய வாழ்வும் தாழ்வும் என்று சொன்னால் அது மிகையாகது.

நிறைய நேரங்களில் கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளை சரிவரப் பயன்படுத்தாத பாவிகளாகவே இருக்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சோம்பேறித் தனமும், உழைக்க மனமில்லாத மந்தத்தன்மையுமே ஆகும். “சோம்பல் ஒருவரைத் தூங்கிக்கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்” என்கிறது நீதிமொழிகள் புத்தகம் (19:15). ஆம், சோம்பேறித்தனம் நம்மை உழைக்கவிடாது; உழைக்காமலே உயரவேண்டும் என்று நினைக்கச் செய்யும், அதுவே நமது அழிவுக்குக் காரணமாகிவிடும்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் ஒரு கதை.

ஒருநாள் முல்லா சந்தைகூடும் இடத்தில் நின்றுகொண்டு, சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்த மக்களைப் பார்த்து, “அன்பார்ந்த நண்பர்களே, உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அருள்கூர்ந்து சற்று நில்லுங்கள்” என்று உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.

“நண்பர்களே, கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து, சுகபோக வாழ்வுவாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்,  நான் அதற்கு வழி சொல்லுகிறேன். என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர்,  அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்” என்றார் முல்லா.  அநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள். “முல்லா! உழைக்காமல் சுகபோக வாழ்வுவாழ என்ன வழி?,  தயவு செய்து கூறுங்கள்” என்று மக்கள் கூச்சலிட்டனர். முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். “என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே” என்று மக்கள் கேட்டனர்.

“நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை , போய் வருகிறேன்” என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதை வேடிக்கையாக இருந்தாலும், அது உணர்த்தும் உண்மை ஆழமானது. நாம் உழைக்காமல் உயர நினைக்கிறோம். அது ஒருபோதும் நடக்காது என்பதைத்தான் இந்த கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை – தாலந்துகளை – மண்ணுக்குள் குழிதோண்டி புதைக்காமல், அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவோம், அதன்வழியாக ஆண்டவர் வரும் நாளில் (இரண்டாம் வாசகம்) அவரிடமிருந்து நல்ல  வெகுமதியைப் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள்

விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள்

இளைஞன் ஒருவன் ஒருநாள் புத்தரைச் சந்தித்து அவரிடமிருந்து ஆசிபெற வந்தான். அவன் புத்தரது முகத்தைப் பார்த்தவுடன், அவரது முகத்திலிருந்து வெளிப்பட்ட அருளில் அப்படியே மெய்மறந்து நின்றான்.

பிறகு அவன் புத்தரைப் பார்த்து, “நீங்கள் கடவுளா?” என்று கேட்டான். அதற்கு அவர், “இல்லை” என்று பதிலளித்தார். அவன் மீண்டுமாக, “அப்படியானால் நீங்கள் வானதூதரா?” என்று கேட்டான். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளித்தார். அவன் விடாமல் புத்தரிடம், “ஒருவேளை நீங்கள் இறைவாக்கினராக இருப்பீர்களோ?” என்று கேட்டுப் பார்த்தான். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளித்தார். அவன் சற்று பொறுமை இழந்தவனாய், “நீங்கள் கடவுளுமில்லை, வானதூதருமில்லை, ஏன், இறைவாக்கினர்கூட இல்லை. அப்படியானால் நீங்கள் யார்?” என்று கேட்டார்.

அதற்கு புத்தர் மிகவும் சாந்தமாக, “நான் விழிப்பாய் இருப்பவன் (I am Awake)” என்று பதிலளித்தார்.

சாலமோனின் ஞான நூல் 6: 12-16, திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4: 13-18 & மத்தேயு  25: 1-13 வாசகங்கள் தரும் சிந்தனை ‘விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள்’ என்பதாகும். எனவே, நாம் அதனைக் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மானிடமகனது வருகை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நிகழலாம். ஆதலால் விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள் என்கிறார். அதற்காக அவர் சொல்லும் உவமைதான் பத்துக் கன்னியர்கள் உவமை.

ஏறக்குறைய யூதப் பின்னணியில், யூதர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்து மானிட மகனது வருகைக்கு நாம் எப்படித் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை நமக்கு போதிக்கின்றார். யூதர்களுடைய வழக்கப்படி மணமகளின் தோழியர் மணமகனை வரவேற்று அவரோடு மணமகள் வீட்டில் நுழைய மாலைவேளையில் காத்திருப்பர். மணமகன் காலம் தாழ்த்தி இரவில் கூட வந்து சேரலாம். இதையெல்லாம் சரியாகக் கணித்து மணமகளின் தோழியர் தயார் நிலையில் இருக்கவேண்டும். ஏனெனில் மணமகன் வரும் நேரம் தெரியாது. இரவில் தேவைப்படும் விளக்குகள், எண்ணெய் போன்றவை தயாராக இருக்கவேண்டும். ஆகவே அவர்கள் மணமகனை வரவேற்பதில் முன்யோசனையோடும், விவேகத்தோடும் செயல்படவேண்டும். அப்படிச் செயல்படாதவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. மணமகனின் வருகையைப் போன்று மானிடமகனின் வருகையும் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டத் தான் நாம் விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று ஆண்டவர் இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார்.

நாம் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விழிப்பாய் இருத்தல் என்றால் தூங்காமல் இருப்பதா என்றால் நிச்சயமாக இல்லை. விழிப்பாய் இருத்தல் என்பது எதற்கும் தயாராக இருப்பது ஆகும். ஓட்டப்பந்தயத்தில் ஓடக் காத்துக்கொண்டிருக்கும் வீரர், நடுவர் எப்போது விசில் அடிப்பார் எனக் காத்துக்கொண்டிருக்கிறாரோ, அதுபோன்று நாமும் ஆண்டவருடைய வருகை எப்போதுமேண்டுமானாலும் வரலாம் என எதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஆகவே, எப்போது வேண்டுமானாலும் நிகழ இருக்கும் அந்த ஆண்டவரின் வருகைக்காக நாம் என்ன செய்யவேடும் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டிய முதலாவது காரியம்: நாம் நமது பொறுப்புகளை கடமைகளை, செய்யவேண்டியதை அவ்வப்போதே செய்வதாகும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் அல்லது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றால் இறுதியில் நஷ்டப்படப்போவது என்னமோ நாமாகத்தான் இருக்கும். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் ஐந்து அறிவிலிகளோ மணமகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுகூடத் தெரியாமல், விளக்குகளை எரிய வைக்க போதிய எண்ணெய் இல்லாமல் இருக்கிறார்கள். திடிரென்று மணமகன் வரும்போது போதிய எண்ணெய் இல்லாததால், அவர்கள் மணமகனோடு திருமண மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஆகவே, நாம் செய்யவேண்டிய காரியத்தை அவ்வப்போதே செய்யப் பழகுவோம்.

எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையோடு வாழக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் என்ன என்பதை விளக்கச் சொல்லப்படும் ஒரு வேடிக்கையான கதை.

ஒருமுறை வெள்ளைக்காரன், அரேபின், இந்தியன் என மூவர் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைத்தது. மூவரும் அதை பங்கு போட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு மிகச்சின்ன அல்வா துண்டு அது!
அதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு, இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு. என்று தீர்மானித்தார்கள்.

மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவை பகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்தார்கள். முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பித்தான் “நேற்றிரவு என் கனவிலே கடவுள் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார்” என்றான். அடுத்து, அரேபியன் தான் கண்ட கனவைச் சொன்னான்: “நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்”.

கடைசியாக இந்தியன் பேச ஆரம்பித்தான். “நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாள்! எதிரிலேயே இவ்வளவு இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு, கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு!” என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன்” என்று சொன்னான். மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க, உள்ளே அல்வாவைக் காணோம்!

இந்த கதை சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். எந்த ஒரு வேலையைச் செய்யும்போது, அந்த வேலையை நாம் தள்ளிப்போடவே கூடாது! அப்படித் தள்ளிப்போட்டால் அதனால் பாதிக்கப்படுவது நாம்தான். ஆகவே, நாம் செய்யவேண்டியதை, காலம்தாழ்த்தாமல், உடனுக்குடன் செய்வோம்.

இரண்டாவதாக ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டியது, அவரை – ஞானத்தைத் - தேடுவதாகும். சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஞானத்தை தேடுவதை குறித்துப் படிக்கின்றோம். ஞானம் என்பது வேறொன்றும் கிடையாது அது இறைவன்தான். இறைவன் எப்படி மங்காத ஒளியாக இருக்கிறாரோ, அதுபோன்று ஞானமும் ஒளிமிக்கதாக இருக்கின்றது. அத்தகைய ஞானத்தை – இறைவனைத் – தேடினோம் என்றால் அதைக் கண்டடைந்து கொள்வோம் என்பது உறுதி (6:12). இன்றைக்கு மனிதர்களாகிய நாம் எதையெதையோ தேடி, அவற்றிற்குப் பின்னால் நம்முடைய வாழ்வையே தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானத்தை, இறைவனைத் தேடிச்சொல்லும்போது இறையாசிரை, கவலையிலிருந்து விடுதலையைப் பெறுவோம் என்பது கண்கூடு (சஞா 6:15), ஆகவே, நாம் ஆண்டவரின் வருகைக்கு நம்மையே நாம் தயார் செய்ய ஞானத்தை – இறைவனைத் - தேடிச் செல்வோம்.

நிறைவாக ஆண்டவரின் வருகைக்காக நாம் செய்யவேண்டியது: நம்பிக்கையோடு இருப்பதாகும். நற்செய்தி வாசகத்தில் மணமகனை வரவேற்பதற்காக மணமகளின் தோழியர் எரியும் விளக்குகளுடன் காத்திருந்தனர் என்று படிக்கின்றோம். இந்த எரியும் விளக்குங்கள்தான் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை. ஆண்டவர் இயேசு நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள் அவர் தரும் ஆசிரைப் பெற்றுக்கொள்வார்கள். அதைவிடுத்து நம்பிக்கையற்று வாழும்போதும் அதற்குரிய வெகுமதியை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், “இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புவோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரை கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆகையால், இறைவன்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு எல்லா ஆசிரைத் தரும் என்பது உறுதி.

இன்றைக்கு நாம் இறைவனில், நம்மில் அயலாரில் நம்பிக்கை வைத்து வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்பினால் அதற்கான பலன் உண்டு என்பதற்குச் சொல்லப்படும் ஒரு கதை.

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள். ”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள்.

அவன் அமைதியாக சிந்தித்தான். ‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். அதனால் அவன் முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்!

நம்பிக்கையோடு வாழ்ந்தால் எல்லா நன்மைகளும் கைகூடி வரும் என்பது எவ்வளவு உண்மை. ஆகவே ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கும் நாம், ஆயத்தமாகவும், நம்பிக்கையோடும் இருப்போம். அவர் ஒருவரை மட்டும் தேடிச்சென்று அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்

செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்

சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல ஆலயத்தில் போதிப்பதற்காக மறைபோதகர் ஒருவர் அழைப்புப் பெற்றிருந்தார். அவர் ‘பிறருடைய உடமையை, பொருளைத் திருடக்கூடாது’ என்ற தலைப்பில் அற்புதமாக மறைபோதனை செய்தார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அந்த மறைபோதகர் தன்னுடைய போதனையை முடித்துக்கொண்டு, தன்னுடைய இருப்பிடம் செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணமானார். அந்த பேருந்தில் சரியான கூட்டம், நிற்பதற்குக்கூட இடமில்லை. மறைபோதகர் எப்படியோ  பேருந்துக்குள் நுழைந்து, ஓர் மூலையில்போய் நின்றுகொண்டார். பின்னர் ஒரு டாலர் பணத்தை எடுத்து, பயணச்சீட்டு வாங்கிக்கொண்டார். பயணச்சீட்டு போக மீத பணத்தை பேருந்து நடத்துனர் மறைபோதகரிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார். மறைபோதகர் நடத்துனர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அது சிறிது அதிகமாகவே பணம் இருந்தது.

உடனே அவர் நடத்துனரிடம் சென்று அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அவரிடம கொடுத்து, “இந்தப் பணம் அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணம். இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அப்போது அந்த பேருந்து நடந்துனர் மறைபோதகரிடம், “நான் தெரிந்தேதான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஏனென்றால் நேற்று ஆலயத்திற்கு வந்திருந்திருந்தேன். அப்போது நீங்கள்தான் மறைபோதனை செய்தீர்கள். அந்தப் போதனையில் ‘பிறருடைய பொருளை, உடைமையைத் திருடக்கூடாது’ என்று போதித்தீர்கள். நீங்கள் போதித்ததற்கு ஏற்ப வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் நான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதிகமான பணத்தை என்னிடம் கொடுத்து, நான் வைத்த சோதனையில் நீங்கள் வெற்றிக்கொண்டுவிட்டீர்கள். ஒருவேளை நீங்கள் மட்டும் நான் அதிகமாகக் பணத்தை என்னிடம் திருப்பித் தந்திராவிட்டால் ‘இவர்கள் போதிப்பார்கள், ஆனால் செயலில் காட்டமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருப்பேன்’ என்றார்.

எல்லாவற்றையும் கேட்டபிறகு மறைபோதகர் நடத்துனரிடம், “நான் கடைப்பிடிக்காத எதையும், மக்களுக்குப் போதிக்கமட்டேன்” என்றார். போதித்ததை வாழ்வாக்க வேண்டும் அதுதான் உண்மையான போதனை என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.  மத்தேயு 23: 1-12, இறைவாக்கினர் மலாக்கி  1: 14 - 2: 1-2,8-10 & திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 2: 7-9,13 வாசகங்கள் ‘செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்’ என்ற சிந்தனையை வழங்குகின்றது. நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களுக்கு எதிரான தனது கண்டக்குரலைப் பதிவு செய்கின்றார். இந்தப் பகுதியிலிருந்து நாம் என்னென்ன செய்யக்கூடாது, என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்த தெளிவினைப் பெறுகின்றோம்.

நற்செய்தியில் இயேசு மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறுகின்றார், “பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்” என்று. ஆம், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தார்கள். ஆனால், அவர்கள் அதை தங்களுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டவில்லை. இது மிகப்பெரிய போலித்தனம். இப்படிப்பட்ட ஒரு போலித்தனத்தை நம்முடைய வாழ்வில் செய்யக்கூடாது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

நிறைய நேரங்களில் நாம் போதிக்கின்றாம் அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கின்றோம். ஆனால் அந்த போதனைக் கேற்ப, இறைவார்த்தை வாசிப்பிற்கேற்ப நம்முடைய வாழ்வு இராததுதன் மிகப்பெரிய அபத்தமாக இருக்கின்றது. ‘போதனையும் வாழ்வும் அல்லது இறைவார்த்தை வாசிப்பும், வாழ்வும் ஒத்துப்போகாதது இயேசுவைப் பொறுத்தளவில் மிகப்பெரிய குற்றம்தான். மத்தேயு இயேசுகூறுவார், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று (மத் 7: 21). எனவே நாம் போதிப்பது ஒன்றாகவும், வாழ்வது ஒன்றாகவும் இல்லாமல், போதனையும், வாழ்வும் ஒத்துப்போகும்படி வாழ்வோம்.

அடுத்ததாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைக் கடிந்துகொள்வதற்குக் காரணம் அவர்களின் வெளிவேடத்தனமான வாழ்வாகும். குறிப்பாக அவர்கள் எதைச் செய்ததாலும் மக்கள் பார்க்கவேண்டுமென்ற செய்தார்கள். அது தான தர்மமாக இருக்கட்டும், இறைவேண்டுதலாக இருக்கட்டும் எல்லாவற்றையும் அவர்கள் மக்கள் பார்க்கவேண்டும், தங்களைப் புகழவேண்டும் என்று செய்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் போதனையோ இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது. இயேசு கூறுகின்றார், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது, உங்கள் உள்ளறைக்குச் சென்று வேண்டுங்கள்” (மத் 6:6), நீங்கள் தர்மம் செய்யும்போது ‘உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாத அளவில் செய்யுங்கள்” ( மத் 6:3)என்று. ஆகவே, நாம் எதைச் செய்தாலும் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போன்று மக்கள் பார்க்கவேண்டுமென்றோ அல்லது விளம்பரத்திற்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக (2015 ஆண்டு, ஆகஸ்டு 09 ம் நாள்) பத்திரிகையில் வந்த செய்தி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தன் தாயுடன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நின்றுகொண்டு அண்ணா அரங்கம் எங்கு உள்ளது என தேடிக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவர் விசாரித்த போது, அவர்கள் கோவையில் உள்ள அண்ணா அரங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக சென்னைக்கு வந்தது தெரியவந்தது.

இதனைக் கேட்டறிந்த மாணவியும் அவரின் தாயும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்தத் தாயானவள், தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், இளங்கலை வேளாண்மை பிரிவிற்கு கலந்தாய்வுக்கு வந்துள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.  இதனையடுத்து, அந்த நபர் தாய் மற்றும் மகளை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனது சொந்த செலவில் விமான பயணச்சீட்டு எடுத்து இருவரையும் கோவைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கோவை சென்றவர்கள் மதியம் 12 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொண்டு இளங்கலை பயோ டெக்னாலஜி பிரிவை தேர்வு செய்தனர். மாணவி மற்றும் அவரின் தாயார், தனக்கு உதவிசெய்த நபர் யார் என்று தெரியாமல் அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இப்படியும் யாருக்குமே தெரியாமல், எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் இயேசுவின் போதனைப்படி வாழக்கூடியவர்கள். நாம் இவர்களைப் போன்று வாழவேண்டும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்ல.

மூன்றாவதாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுவதற்குக் காரணம் அவர்களது ஆணவம்தான். “விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகிறார்கள்” என்று இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார். பல நேரங்களில் நாமும் அவர்களைப் போன்று முதன்மையான இடங்களைப் பெறவேண்டும், முதன்மையான இடங்களை வகிக்கவேண்டும் என்ற ஆணவத்தோடு செயல்படுகின்றோம். ஆனால் ஆண்டவர் ஆணவத்தை அல்ல தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர், “உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும், அப்படித் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்” என்கிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அல்ல, தாழ்ச்சியையும் பணிவையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும். ஏனென்றால் தாழ்ச்சி என்ற விதையிலிருந்துதான் எல்லா மரமும் பிறக்கின்றது (தமிழருவி மணியன்). நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனின் எல்லா ஆசிரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நம்முடைய இந்தியத் திருநாட்டில் விடுதலைப் போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது காந்தியடிகள் இரயிலில் ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த இருக்கைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் வெற்றிலையை போட்டு, எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டிக்குள்ளே துப்பினார். இதைப் பார்த்த காந்தியடிகள் எதுவும் பேசாமல் ஒரு துணியால் துடைத்தார். அவர் மீண்டுமாக எச்சிலை வெளியே துப்பாமல் இரயில் பெட்டுக்குள்ளே துப்பியபோதும் காந்தியடிகள் மிகுந்த பொறுமையோடும் தாழ்சியோடும் அதைத் துடைத்தெடுத்தார்.

அப்போது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அந்த மனிதரிடம், “எதற்காக எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டுக்குள்ளே துப்புகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “இது என்னுடைய நாடு, இந்த இரயில் என்னவேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது” என்றார். உடனே அக்கம் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள், ‘இது உன்னுடைய நாடுதான், இந்த இரயிலில் உனக்கு என்னவேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதுதான். ஆனால் நீ துப்புகிற எச்சிலை எல்லாம் துடைக்கின்ற மனிதர் யாரென்று தெரியுமா?, அவர் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள்” என்றார்கள்.

இதைக் கேட்ட அவர் பேச்சற்றுப் போனார். உடனே அவர் காந்தியடிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். காந்தியடிகள் பெருந்தன்மையோடு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இங்கே காந்தியடிகளின் பொறுமையும், தாழ்ச்சியும் தீச்செயலில் ஈடுபட்ட மனிதரை மனமாறச் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பொறுப்புகளில் இருப்பவர்கள் ஏன், எல்லாருமே ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியைக் கொண்டு  வாழவேண்டும். அதுதான் ஒரு மனிதருக்கு அழகு சேர்க்கும்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் போதிப்பது ஒன்றாகவும் வாழ்வது ஒன்றாகவும் அல்லாமல், போதித்ததை வாழ்வாக்குவோம், எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம். அதேபோன்று ஆணவத்தோடு அல்லாமல், தாழ்ச்சியோடு வாழப் பழகுவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள் - மத்தேயு 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள்.

தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள

எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''

நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.

நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 1: 14 - 2: 1-2,8-10

``நானே மாவேந்தர்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். ``இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன்.

ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கெனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்'' என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.

``நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கி விட்டீர்கள்'' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.

``ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.''

நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?

சார்லஸ் பொரோமேயு

சார்லஸ் பொரோமேயு (நவம்பர் 04)

நிகழ்வு

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த திரிதெந்திய பொதுசங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த சார்லஸ் பொரோமேயு மிகவும் கடினமாக உழைத்து வந்தார். அப்போது அவருக்கு பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அவரை அதிகமாக எதிர்த்தவர்கள் ஹுமிலியாடி சபையைச் (Congregation Of Humiliati) சார்ந்தவர்கள்தான். அவர்கள் ஆடம்பரமாகவும், மிகவும் பகட்டான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். சார்லஸ் பொரோமேவோ துறவிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழவேண்டும் என்று சொல்லிவந்தார். இது பிடிக்காமல்தான் அந்த சபையைச் சேர்ந்தவர்கள் சார்லஸ் பொரோமேவைக் கொல்லப் பார்த்தார்கள். ஒருநாள் சார்லஸ் பொரோமேயு ஆலயத்தில் மக்களோடு ஜெபித்துக்கொண்டிருந்தபோது ஹுமிலியாடி சபையைச் சேர்ந்தவர்கள் கூலியாட்களை வைத்து, துப்பாக்கியினால் சுட்டு அவரை வீழ்த்தப் பார்த்தார்கள். ஆனால் குறி தவறி சார்லஸ் பொரோமேயு உயிர்பிழைத்தார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் எல்லாரும் திரும்பிப் பார்த்தபோது சார்லஸ் பொரோமேயு மிகவும் பொறுமையாக அவர்களிடம், “எனக்கு ஒன்றும் ஆகவில்லை, என்னைச் சுட நினைத்தவர்களையும் நான் மன்னித்துவிட்டேன். நாம் தொடர்ந்து இறைவனைத் தொழுவோம்” என்று சொல்லிவிட்டு, மக்களோடு ஜெபிக்கத் தொடங்கினார்.

தன்னைக் கொல்ல நினைத்தவர்களையும் மன்னிக்கும் குணம் உடையவராக விளங்கினார் தூய சார்லஸ் பொரோமேயு விளங்கினார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
புனித
சார்லஸ் பொரோமெயோ
மிலான் நகரின் பேராயர்
Native nameCarlo Borromeo
உயர் மறைமாவட்டம்மிலான்
ஆட்சி பீடம்மிலான்
நியமனம்12 மே 1564
ஆட்சி முடிவு3 நவம்பர் 1584
முன்னிருந்தவர்Giovanni Angelo de’ Medici
பின்வந்தவர்Gaspare Visconti
பிற பதவிகள்புனித பரசேதே கோவிலின் கர்தினால் குரு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு4 செப்டம்பர் 1563
Federico Cesi-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு7 டிசம்பர் 1563
Giovanni Serbelloni -ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது31 ஜனவரி 1560
கர்தினால் குழாம் அணிகர்தினால்-குரு
பிற தகவல்கள்
இயற்பெயர்Count Carlo Borromeo di Arona
பிறப்பு2 அக்டோபர் 1538
Castle of Arona, Duchy of Milan
இறப்பு3 நவம்பர் 1584 (அகவை 46)
மிலான்
கல்லறைமிலான் உயர்மறைமாவட்ட முதன்மை பேராலயம்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்
  • கில்பெர்தோ பொரோமெயோ
  • மார்கரீதா தே மெடிசி
வகித்த பதவிகள்
  • Administrator of Milan (1560-1564)
  • Cardinal-Deacon of Santi Vito, Modesto e Crescenzia (1560)
  • Cardinal-Deacon of Santi Silvestro e Martino ai Monti (1560–1563)
  • Cardinal-Priest of Santi Silvestro e Martino ai Monti (1563–1564)
  • Archpriest of the Basilica di Santa Maria Maggiore (1564–1572)
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா4 நவம்பர்
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
முத்திப்பேறு12 மே 1602
திருத்தந்தை ஐந்தாம் பவுல்-ஆல்
புனிதர் பட்டம்1 நவம்பர் 1610
திருத்தந்தை ஐந்தாம் பவுல்-ஆல்
சித்தரிப்பு வகைகர்தினால்களின் உடையில்
பாதுகாவல்வயிற்றுப் புணால் அவதியுறுவோர்; ஆப்பிள் தோட்டம்; ஆயர்கள்; திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்வோரும் அவர்களுக்கு கற்பிப்போரும்; குடல் கோளாறுகள்; லம்பார்தி, இத்தாலி; மான்டெர்ரே, கலிபோர்னியா; குருமட மாணாக்கர்; ஆன்ம வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்;
திருத்தலங்கள்மிலான் உயர்மறைமாவட்ட முதன்மை பேராலயம்
வாழ்க்கை வரலாறு  
சார்லஸ் பொரோமேயு பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள அரோனா என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தை கில்பர்ட் பொரோமேயு, தாய் மார்கரெட் தே மெடிசி என்பவர் ஆவார். சார்லஸ் பொரோமேவின் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம். அதனால் இவருடைய தந்தை இவர் கல்வி கற்க மிலன் நகருக்கு அனுப்பி வைத்தார். சார்லஸ் பொரோமேவோ கல்வியில் சிறந்து விளங்கினார். எந்தளவுக்கு என்றால் இவர் தன்னுடைய 21 ஆம் வயதிலேயே சிவில் சட்டத்திலும், திருச்சபை சட்டத்திலும் (Canon Law) முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருடைய திறமையைப் பார்த்த அப்போது இருந்த திருத்தந்தை நான்காம் பவுல் இவரை மிலன் நகரின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். (திருத்தந்தை நான்காம் பவுல் சார்லஸ் பொரோமேயுவின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்). சார்லஸ் பொரோமேயு சிறு வயதினராகவும் குருவாக அருட்பொழிவு செய்யப்படாத நிலையிலும் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டாலும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே செய்தார். குறிப்பாக 1562 ஆம் ஆண்டில் நடைபெற்ற திரிதெந்திய சங்கத்தில் இவர் திருத்தந்தைக்குப் பக்கபலமாக இருந்தார்.

இதற்கிடையில் சார்லஸ் பொரோமேயுவின் சகோதரர் இறந்துபோனார். இதனால் மக்கள் அனைவரும் சார்லஸ் பொரோமேயு குடும்பப் பொறுப்புகளைப் பார்க்கப் போய்விடுவார், இனிமேல் அவர் ஆயராக பணிசெய்ய மாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ குடும்பத்தை கடவுள் பார்த்துக்கொள்வார், நான் இறைப்பணி செய்யப்போகிறேன் என்று தன்னுடைய தந்தையிடம் சொல்லிவிட்டு இறைப்பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இதைப் பார்த்து மக்கள் அனைவரும் வியந்து போய் நின்றார்கள். சகோதரரின் பிரிவிலிருந்து மீண்டுவந்த சார்லஸ் பொரோமேயு குருத்துவத்திற்காக தன்னையே முழுவதும் தயாரித்து 1563 ஆம் ஆண்டு குருவாக மாறினார். குருவாகிய மாறிய பிறகு அவர் ஏற்கனவே செய்துவந்த மிலன் நகரின் ஆயர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சார்லஸ் பொரோமேயு இரக்கமும் அன்பும் உதவி செய்வதில் வல்லவராகவும் விளங்கினார். 1576 – 78 ஆம் ஆண்டுகளில் மிலன் நகரில் கடுமையான கொள்ளை நோய் ஏற்பட்டது, அதனால் மக்களில் பெரும்பாலனவர்கள் இறந்துபோனார்கள். எஞ்சியிருந்தவர்கள்கூட தங்களுடைய சொந்த பந்தங்களை இழந்து உணவிற்கு பெரிதும் கஷ்டப்பட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சார்லஸ் பொரோமேயு தன்னிடம் இருந்த பணம் பொருள், ‘Neapolitan Pricedom Of Dric எனப்படும் பட்டத்தையும் கூட மக்களுக்காகத் துறந்து அவர்களுக்கு உதவிசெய்தார். அது மட்டுமல்லாமல் நோயினால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு மருத்தவ உதவிகள் செய்வதிலும் பெரும்பங்காற்றினார்.

சார்லஸ் பொரோமேயு சமூகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல் ஆன்மீகப் பணிகளையும் செய்துவந்தார். திரிதெந்திய பொதுச் சங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த பெரிதும் உழைத்தார், அதற்காக அவர் நிறையபேரிடமிருந்து எதிர்ப்புகளை சந்தித்தார். ஆனாலும் அவர் மனந்தளராமல் திருச்சபை கற்பித்தவற்றை தான் கடைபிடித்ததோடு மட்டுமல்லாமல், அதனை எல்லாரும் கடைபிடிக்க பெரிதும் பாடுபட்டார். குருமடங்களை நிறுவி, குருக்களின் ஆன்மீகப் பயிற்சிக்காக பெரிதும் உழைத்தார். இவருடைய பணிகளைப் பார்த்த, இவருடைய சம காலத்தவரும் புனிதருமான பிலிப் நேரி இவரை இரும்பு மனிதர் என அன்போடு அழைத்தார். சார்லஸ் பொரோமேயு எத்தனையோ பணிகளைச் செய்தாலும் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதில்லை. அவர் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த ஜெப வாழ்வே அவருக்கு எல்லாப் பணிகளையும் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இப்படி இறைப்பணிக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட சார்லஸ் பொரோமேயு தன்னுடைய நாற்பத்தி ஆறாம் வயதில் இந்த மண்ணுலக வாழ்வைத் துறந்தார். 1616 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சார்லஸ் பொரோமேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

  1. தாழ்ச்சி
தூய சார்லஸ் பொரோமேயு தாச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் மிலன் நகரில் பேராயராக இருந்தாலும் அதை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் எல்லாரிடத்திலும் தரைமட்டும் இறங்கி வந்து, மிகவும் தாழ்ச்சியோடு பழகினார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் தாழ்ச்சி என்ன பண்பு இருக்கின்றதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” (லூக் 14:11) என்று. நாம் தாழ்ச்சியோடு வாழும்போது தூய சார்லஸ் பொரோமேயு போன்று இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

  1. தேவையில் இருப்போருக்கு உதவி
சார்லஸ் பொரோமேயு தேவையில் இருப்போருக்கு உதவிடும் நல்ல மனத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரின் இத்தகைய பண்பிற்கு 1576- 78 ஆம் ஆண்டுகளில் மிலன் நகரில் ஏற்பட்ட கொள்ளைநோயின் போது அவர் ஆற்றிய அரும்பணிகளே சான்றாக இருக்கின்றது. சார்லஸ் பொரோமேயு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தார். இன்று அவரிடம் இருந்த இரக்க குணம், உதவிடும் பண்பு நம்மிடம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

2010 ஆம் ஆண்டு ஹைதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில் 1,50,000 மக்களுக்கும் மேல் இறந்துபோனார்கள். நிறையபேர் தங்களுடைய வீடுகளையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்துபோய் நின்றார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து அனாதையாக நின்றார்கள். இவர்களையெல்லாம் எப்படி பராமரிப்பது என்று அரசாங்கம் குழம்பிப்போய் நின்றது. அப்போதுதான் உலக நாடுகளில் சில, குறிப்பாக அமெரிக்காவில் இருந்த நிறைய நல்ல உள்ளங்கள், தங்களுடைய பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளை தங்களுடைய இல்லங்களில் ஏற்று, அவர்களைத் தங்களுடைய குழந்தைப் போன்று  வளர்ப்பதற்கு முன்வந்தார்கள். அவர்கள் செய்த இந்த நல்ல காரியத்தைப் பார்த்து உலகமே வியந்துபோய் நின்றது.

தேவையில் இருக்கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. விலிலியமும் தேவையில் உள்ள மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதைத் தான் போதிக்கின்றது (எசா 58:5-10). ஆகவே, தூய சார்லஸ் பொரோமேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாமும் அவரைப் போன்று இறைப்பணிக்காக நம்மை முழுதாய் அர்ப்பணிப்போம், தாழ்ச்சியோடும் தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவிடும் நல்ல பண்போடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மேன்மையடைய தாழ்ச்சியே வழி!

மேன்மையடைய தாழ்ச்சியே வழி! - லூக்கா 14: 1,7-11

உரோமை அரசாங்கத்தின் தன்னிகரில்லாத அரசராக விளங்கியவர் சார்லேமக்னே (742 -814) என்பவர். அவருடைய அரசபையில் ரொனால்டு என்பவர்  மந்திரியாக இருந்தார்.

ஒருநாள் ரொனால்டும் அவரோடு சேர்ந்து ஒருசில படைவீரர்களும் காட்டுவழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சரசென்ஸ் நாட்டைச் சார்ந்த படைவீரர்கள் சிலர் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ரொனால்டும் அவருடைய படைவீரர்களும் நிலைகுலைந்து போனார்கள்.

ரொனால்டிடம் ஒலிவன்ட் என்ற ஒருவகையான எக்காளம் இருந்தது. அதனை எடுத்து ஊதினால் முப்பது கிலோமீட்டர் பரப்பளவுக்குக் கேட்கும். ரொனால்டோடு இருந்த படைவீரர் ஒருவர் அவரிடம், “மந்திரியாரே! உங்களிடம் இருக்கும் எக்காளத்தை எடுத்து ஊதினால், அந்த சத்தம் கேட்டு நம்முடைய மன்னர் இங்கே வந்து,  நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி விடுவார் அல்லவா. அதனால் விரைவாக அந்த எக்காளத்தை எடுத்து ஊதுங்கள்” என்றார். ஆனால் ரொனால்டோ எக்காளத்தை எடுத்து ஊதவில்லை, ‘நான் எவ்வளவு பெரிய ஆள், என்னால் மன்னரிடம் எல்லாம் உதவி கேட்க முடியாது” என்று மிக ஆணவத்தோடு அந்தப் படைவீரரிடம் பதில் சொல்லிவிட்டு, தன்னால் முடிந்த மட்டும் எதிரிகளோடு சண்டையிட்டார்.

எதிரிகளின் தாக்குதலை ரொனால்டாலும் அவருடைய படைவீரர்களும் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவர்கள் செத்து மடிந்தார்கள். இனிமேலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ரொனால்ட் எக்காளத்தை எடுத்து ஊதினார். அந்த சத்தம் கேட்டு மந்திரிக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த மன்னர் சார்லேமக்னே தன்னுடைய படைவீரர்களோடு சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் மந்திரி ரொனால்டும் அவரோடு சேர்ந்து படைவீரர்களும் எதிரியின் தாக்குதலில் மடிந்து போய் கிடந்தார்கள்.

ரொனால்ட் முன்னமே எக்காளத்தை ஊதி, தன்னையும் படைவீரர்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அவரிடம் இருந்த தான் என்ற ஆணவம் ‘நான் எப்படி மன்னரிடம் உதவி கேட்பது’ என்ற வெற்றுக் கவுரவம் மந்திரியாரின் உயிரையும் படைவீரர்களின் உயிரையும் பறித்துக்கொண்டது. ஒருவேளை ரொனால்ட் மிகவும் தாழ்ச்சியோடு எக்காளத்தை ஊதி மன்னரை உதவிக்கு அழைத்திருந்தால் அனைவருமே காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்பது உறுதி.

நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய ‘தான் என்ற ஆணவம்’ எவ்வளவு பெரிய அழிவை நமக்குக் கொண்டு வந்து தருகின்றது என்பதை இந்த நிகழ்வு மிக வேதனையோடு பதிவு செய்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அப்போது விருந்துக்கு வந்திருந்த நிறையப் பேர் பந்தியில் முதன்மையான இடங்களைப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். இதனைக் கவனித்த இயேசு அவர்களிடம், “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது போய் கடைசி இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்... இவ்வாறு தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்” என்கிறார்.

நிறைய நேரங்களில் நாம் மற்றவர்கள் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும், பாராட்டவேண்டும் என்று ஆணவத்தோடு நடந்து கொள்கின்றோம். அப்படி நாம் நடந்து கொள்கின்றபோது சிறுமைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகின்றோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. மாறாக, உள்ளத்தில் நாம் தாழ்ச்சியோடு வாழ்கின்றபோது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுகின்றோம். இது முற்றிலும் உண்மை.

இறைவனின் ஆசிரை, அருளை நமக்குப் பெற்றுத் தருகின்ற தாழ்ச்சியை நம்முடைய உள்ளத்தில் எப்படி வளர்த்துக்கொள்வது என்று இப்போது பார்ப்போம்.

ஒருவர் தம்மைப் பற்றி முழுமையாக அறிய முற்படும்போது உள்ளத்தில் தன்னாலேயே தாழ்ச்சி வளரும் என்பது நிதர்சனம். தான் ஒன்றுமில்லை, பெரும்பாவி, ஒன்றும் அறியாதவன் என்று ஒருவர் தன்னைப் பற்றி எப்போது முழுமையாகத் தெரிந்துகொள்கின்றாரோ அப்போது அவர் தாழ்ச்சியுள்ளவராக மாறுவது உறுதி. அடுத்ததாக, எவர் ஒருவர் தம்மை நிறைவானவராகிய கடவுளோடு தம்மைக் ஒப்பிட்டுப் பார்க்கின்றாரோ அவரும் தாழ்ச்சியுள்ளவராக மாறிவிடுவார். எப்படியென்றால் உன்னத இறைவனோடு ஒருவர் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவருக்கு முன்னால் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்வர். அப்போது இயல்பாகவே அவரிடத்தில் தாழ்ச்சி வளரும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் அவர் நமக்குப் போதித்த தாழ்ச்சி என்ற புண்ணியத்தை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள்

ஓர் ஊரில் தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தார்கள். தந்தை தன்னுடைய மகளை அதிகமாக அன்பு செய்துவந்தார். அவளை தன்னுடைய உயிராக நினைத்து வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் அன்பு மகள் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானாள். அப்போது அந்த தந்தை நகரில் இருந்த எல்லா மருத்துவர்களிடமும் சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தார். ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் இரவில் மகள் இறந்துபோனாள். அப்போது அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய உலகமே இருண்டுபோய்விட்டது என நினைத்தார். எல்லாரிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு தனிமையான வாழ்வு வந்தார். தன்னுடைய மகளின் ஞாபகம் வரும்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுதார்.

ஒருநாள் அவர் தூங்கும்போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் மேலுலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகள் தங்களுடைய கைகளில் எரியும் மெழுகுதிரியை ஏந்தி கடவுளின் திருமுன் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ஒரே ஒரு குழந்தை மட்டும் அணைந்த மெழுகுதிரியோடு நின்றுகொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய குழந்தை என்று.

உடனே அவர் அந்தக் குழந்தையை (மகளை) அள்ளி எடுத்துக்கொண்டு, “மகளே எல்லாருடைய திரியும் எரிந்துகொண்டிருக்க, உன்னுடைய திரி மட்டும் ஏன் அணைந்துபோய் இருக்கின்றது?” என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த குழந்தை, “அப்பா! என்னுடைய திரி மற்ற குழந்தைகளின் திரிகளைப் போன்று நன்றாகத்தான் எரியும். ஆனால் நீ தொடர்ந்து வடிக்கும் கண்ணீர் பட்டுதான் என்னுடைய திரி அணைந்துபோய்விடுகிறது?” என்றது.

தொடர்ந்து அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையைப் பார்த்துச் சொன்னது, “அப்பா எதற்காக இப்படி அழுதுகொண்டே இருக்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரிந்தாலும், இங்கே உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் என்னைப்பற்றி நினைத்து நீ இனிமேலும் அழுதுகொண்டிருக்காதே” என்று. உடனே அந்த தந்தை தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். தன்னுடைய மகள் விண்ணகத்தில் உயிரோடுதான் என்று ஆறுதல் அடைந்தார்.

“வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை” என்பதற்கு இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

இன்று அன்னையாம் திரு அவை இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில் நம்முடைய குடும்பங்களில் இறந்த அன்பான உறவுகளுக்காக, இன்னும் யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

இன்று நாம் கொண்டாடும் இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் தொடக்கத்தில் ‘குளூனி’  நகரில் பிறந்த ஓடிலோ என்ற துறவியால் கி.பி.906 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதன்பின் இவ்விழா படிப்படியாக எல்லா துறவுமடங்களுக்கும் பரவி, இறந்த ஆன்மாக்களுக்காக விழா எடுத்துக் கொண்டாடும் நிலை உருவானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து இவ்விழா நவம்பர் 2 ஆம் தேதி கொண்டாடும் நிலை உருவானது. விவிலியத்தில் கூட இறந்த ஆன்மாக்களுக்காக பலிகொடுக்கும் நிலை இருந்ததை நாம் வாசிக்கின்றோம் (2 12: 43-45).

இப்போது இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை” என்று. ஆகவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே ஆகும். அத்தகைய நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

இரண்டாவதாக இவ்விழா இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. “புனிதர்களின் சமூக உறவை விசுவாசிக்கிறோம்” என்று சொல்லும் நாம் துன்புறும் திருச்சபையில் உள்ள (உத்தரிக்க தலத்தில் உள்ளவர்கள்) ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்களை வெற்றிபெற்ற திருச்சபையில் (விண்ணகம்) சேர்த்துக்கொள்ளும். எனவே நாம் அவர்களுக்காக ஜெபிப்போம்.

மூன்றாக இவ்விழா உணர்த்தும் செய்தி, நாம் இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சின்னஞ் சிறிய சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்குத்தான் விண்ணகத்தை பரிசாகத் தருகின்றார்.

எனவே, இந்த நல்ல நாளில் இறந்த ஆன்மாக்களுக்காக சிறப்பாக ஜெபிப்போம். அதோடு நாமும் இறைவனுக்கு உகந்த நல்ல வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“If Job’s sons were purified by their father’s sacrifice, why should we doubt that our offerings for the dead bring them some consolation? Let us not hesitate to help those who have died and to offer our prayers for them” – ஜான் கிரிஸ்சோஸ்டம். - Fr Palay Mariaantonyraj, Palayamkottai. 2016

Fr Palay Mariaantonyraj, Palayamkottai - மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02) – 2015

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவுவிழா

1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல் நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.

இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல், பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.

அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற அருட்சகோதரி, “நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார். அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும் திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை ( Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும் நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.

இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள் விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).

இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் கூறுகின்றார், “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று.

ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால் நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக இருக்கின்றது.

இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.

இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம் இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.

நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், “சொர்க்கமும், நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்” என்று குறிப்பிடுகின்றார். ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை, சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின் அருமையான கருத்து.

ஒரு கிராமத்திலே தச்சர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவரிடம் வானதூதர் ஒருவர் வந்து, “உன் வாழ்நாட்கள் முடிந்துவிட்டது, சொர்க்கம் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது” என்றுசொல்லி அழைத்துப் போக வந்தார். அதற்கு அந்த தச்சர், “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் நிலத்தை உழ ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு கலப்பை செய்து தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்” என்றார். உடனே வானதூதர் அவ்விடத்திலிருந்து அகன்றார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர் அவரிடம் வந்து, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வந்தார். ஆனால் அவரோ, “இப்போதுதான் உழவர்கள் வயலில் உழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு மாட்டுவண்டி செய்து தந்துவிட்டு, வருகிறேன்” என்றார். இதைக்கேட்டதும் வானதூதர் அவ்விடம் இருந்து அகன்றார். மீண்டுமாக மூன்றுமாதம் கழித்து அவரை அழைத்துப் போக வானதூதர் அவரிடம் வந்தார். அதற்கு அந்த தச்சர், “இன்னும் மண்வெட்டி மட்டும் செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும். அப்புறம் நானே வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சிக்கொண்டார். அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து அகன்றார்.

அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம் வந்தார். அப்போது தச்சர், “நான் விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் சொர்க்கத்திற்க்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார். அதற்கு அந்த வானதூதர் வேண்டாம் என்று சொன்னது. அவர் ஏன் என்று அதனிடம் கேட்டதற்கு, “எல்லாருக்கும் நீ உதவிசெய்து வாழ்வதால் இந்த மண்ணுலகமே உனக்கு சொர்க்கம், ஆதலால் எதற்கு உனக்கு இன்னொரு சொர்க்கம்” என்று சொல்லி, அவ்விடத்திலிருந்து அகன்றது.

உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.

ஆகவே இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு செய்து வாழ்வோம். அதன் வழியாக இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெறுவோம்.

அனைத்து ஆன்மாக்கள்

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் சாவைக் கடந்து வாழ்வுக்கு வருவர் என்று இயேசு கூறுகிறார். மகனில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் என்று கடவுள் கூறுகிறார். நானே உயிர்தரும் உணவு. என்னை உண்பவர் இறப்பினும் உயர் வாழ்வர் என்று இயேசு கூறுகிறார்.

இயேசு உடலோடு உயிர்த் தெழுந்தார். அவர் என்றென்றும் வாழ்கிறவர். நேற்றும் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்பவர். அவரில் வாழ்ந்து அவரில் மரிக்கின்றபோது அவரோடு நிலைவாழ்வுக்கு உயிர்த்தெழுவோம்.

கடந்து செல்லும் உயிர்ப்பு; வாழ்வை அனைத்து ஆன்மாக்களும் இயல்பாகப் பெற்றிட வரம் வேண்டுவோம். வாழும் காலத்தில் ஏற்புடைய நம்பிக்கையினால் நமது வாழ்வும் வெற்றியடைய மன்றாடுவோம்.