அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

விழிப்பாய் இருங்கள்!

விழிப்பாய் இருங்கள்!

ஓர் ஆசிரமத்தில் புதிதாகச் சேர்ந்த சீடர் ஒருவர் மிகுந்த ஆர்வக் கோளாறில் குருவிடம், “வந்ததிலிருந்து நான் சும்மாதான் இருக்கின்றேன், ஏதாவது எனக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சியைக் கொடுங்கள்” என்றார். குருவோ அந்தச் சீடரிடம், “ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்” என்றார்.

“ஆன்மீகப் பயிற்சி ஏதாவது கொடுங்கள் என்று சொன்னால், தரையைச் சுத்தம் செய்யுங்கள் என்று சொல்கிறீர்களே, இத்தனை நாட்களும் நான் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்துகொண்டுதானே இருக்கின்றேன். இது என்ன நியாயம்?” என்று கொந்தளித்தார் அந்த சீடர். “இத்தனை நாளும் நீ ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கலாம், ஆனால் தரையைச் சுத்தம் செய்கிறேன் என்ற விழிப்போடு சுத்தம் செய்யவில்லை; ஏனோதானோவென்று சுத்தம் செய்துகொண்டிருந்தாய், அதனால் அப்படிச் சொன்னேன்” என்றார் குரு.

அன்றிலிருந்து அந்த சீடர் தரையைச் சுத்தம் செய்வதைக்கூட விழிப்புணர்வோடு சுத்தம் செய்து, ஆன்மீகத்தில் மேலும் மேலும் வளர்ந்தார்.

நாம் செய்யக்கூடிய எந்த வேலையாக இருந்தாலும் அதை விழிப்புணர்வோடு செய்தால், அதற்கான ஆசிர் கிடைக்கும் என்பதற்காக சொல்லப்படும் ஜென் கதை இது.

மத்தேயு 25: 1-13
 நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ‘நாம் விழிப்பாய் இருக்கவேண்டும்’ என்கிற உண்மையை வலியுறுத்திச் சொல்கிறார். எதற்காக நாம் விழிப்பாக இருக்கவேண்டும், விழிப்பாய் இருப்பதன் அவசியம் என்ன என்பதை இறைவார்த்தையின் ஒளியில் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக இயேசு சொல்லக்கூடிய உவமை மணமகனை எதிர்கொண்டு காத்திருக்கக்கூடிய பத்துக் கன்னியர்கள் உவமையாகும்.  பொதுவாக யூத சமூகத்தில் திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஏனென்றால், அது ஒரு மகிழ்ச்சியான தருணம். மேலும் திருமணத்தில் இணையும் மணமக்கள் அரசன் அரசியைப் கவுரவிக்கப்படுவார்கள்; அவர்கள் மேள தாளங்களோடு வரவேற்கப்படுவார்கள்; மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் மணமகனை வரவேற்பதற்காக தகுந்த தயாரிப்புகளோடு காத்திருப்பார்கள். இத்தகைய பின்னணியில்தான் நாம் இயேசு சொல்லக்கூடிய உவமையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரக்கூடிய பத்துத் தோழியர்களில் ஐந்து பேர் விளக்குகளோடும் எண்ணையோடும் தகுந்த தயாரிப்போடு, வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் விழிப்பாய் இருக்கின்றார்கள். ஆனால் மற்ற ஐந்து பேர் விளக்குகளில் போதிய எண்ணெய் இல்லாமல் விழிப்புணர்வற்று இருக்கின்றார்கள். திடிரென்று மணமகன் வந்தபோது, தகுந்த தயாரிப்போடு இருந்த முன்மதியுள்ள தோழியர்கள் மணமகனோடு உள்ளே செல்கிறார்கள், ஆனால் முன்மதியில்லாமலும் முன் தயாரிப்பு இல்லாமலும் இருந்த தோழியர்களோ மணமகனோடு உள்ளே செல்ல முடியாமல் போய்விடுகிறது.

இயேசு சொல்லக்கூடிய இந்த பத்துத் தோழியர்கள் உவமை. மூன்று முக்கியமான உண்மைகளை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அவை யாவை என்று இப்போது பார்ப்போம்.

விழிப்பாய் இருக்கவேண்டும்: உவமை சொல்லக்கூடிய முதலாவது உண்மை இதுதான். விழிப்பாய் இருந்த ஐந்து தோழியர்களோ மணமகனோடு திருமண விருந்தில் கலந்து கொள்கிறார்கள். விழிப்பாய் இல்லாத தோழியர்களோ மணமகனோடு திருமண விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறாமல் போய்விடுகிறார்கள். ஆகையால், விழிப்புணர்வுதான் இங்கே ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் முக்கியமான காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்லாது, நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நாம் எதிர்பார்க்கும் பலனை நிச்சயமாகப் பெறலாம் என்பது உறுதி.

சிலவற்றை கடைசி நேரத்தில் செய்யமுடியாது: உவமை உணர்த்தும் இரண்டாவது உண்மை இதுவாகும். எண்ணெய்யோடு இருந்த ஐந்து முன்மதியுள்ள தோழியர்கள் மணமகன் வருகையில் அவரோடு சென்றுவிட்டார்கள், ஆனால் முன்மதியில்லாத, விழிப்புணர்வு இல்லாத ஐந்து தோழியரோ கடைசி நேரத்தில் எண்ணையைத் தேடி அலைந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் எவ்வளவு தேடியும் கிடைக்காததால், மணமகனுடைய திருமண விருந்தில் கலந்து வாய்ப்பினைப் பெறாமலே போய்விடுகிறார்கள்.

கடைசி நேரத்தில் கடவுளோடு நல்ல உறவினை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியாது: உவமை உணர்த்தும் மூன்றாவது உண்மை இதுதான். சிலர் நினைக்கலாம், வாழும் காலம் மட்டும் எப்படியும் வாழ்ந்துவிட்டு, கடைசிக் காலத்தில் இறைவனைத் தேடினால் போதுமென்று. அப்படியெல்லாம் முடியாது என்பதை உவமையில் வரும் ஐந்து முன்மதியில்லாத தோழியர்கள் விளக்குகிறார்கள்.

ஆகவே, அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை விழிப்புணர்வோடு செய்து, ஆண்டவரின் வருகைக்காக நம்மையே தயாரித்துக் கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017

No comments:

Post a Comment