அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, September 1, 2017

கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்தை அர்த்தமுள்ள விதமாய் பயன்படுத்துவோம்

கடவுள் நமக்குக் கொடுத்த தாலந்தை அர்த்தமுள்ள விதமாய் பயன்படுத்துவோம்

நம்முடைய இந்தியத் திருநாட்டில் தோன்றிய புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் என்பவர்.

ஒருசமயம் பத்திரிக்கையாளர்  ஒருவர் அவரிடத்தில், “ஐயா! நீங்கள் இன்றைக்கு பார் போற்றும் விஞ்ஞானியாக உயர்ந்திருக்கிறீர்களே, நீங்கள் பிறக்கின்றபோது உங்களுடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பமாக இருந்ததா என்ன?” என்று கேட்டார். அதற்கு சர்.சி.வி.ராமன் மிகவும் பொறுமையாக அவருக்கு பதில் சொன்னார், “நான் பிறக்கின்றபோது என்னுடைய தந்தை மாதத்திற்கு பத்து ரூபாய் சம்பளம் என்றுதான் வாங்கிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்னுடைய குடும்பமும் நானும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்ததற்குக் காரணம், என்னுடைய கடின உழைப்பன்றி வேறொன்றுமில்லை” என்றார்.

சர்.சி.வி ராமனின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கக்கூடியவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது அவர்களுடைய கடின உழைப்பன்றி வேறொன்றுமில்லை. இதுதான் உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தாலந்து உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இவ்வுவமை உணர்த்தும் உண்மைகளை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமையை/ தாலந்தைக் கொடுத்திருக்கிறார்: உவமையில் வருகின்றவர் தன்னுடைய பணியாளர்களிடம் ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுக்கின்றார். கடவுள் மனிதர்களைப் படைக்கின்றபோது வித்தியாசமாகப் படைக்கின்றார் என்று இதை எண்ணாமல், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை/ தாலந்து எந்தவிதத்தில் பயன்படுத்துகின்றோம் என்கிற பொருளில் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் தாலந்து என்று சொல்லும்போது யூதர்களைப் பொறுத்தளவில் ஒரு மனிதனின் பதினைந்து ஆண்டுகால வருமானம்.  இவ்வளவு தொகையை/ திறமைகளை கடவுள் ஒரு மனிதருக்குக் கொடுத்திருக்கிறார் என்றால், நாம் அதனை எந்தளவுக்கு பயனுள்ள விதமாய் பயன்படுத்துகின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கொடுக்கப்பட்ட தாலந்தை சரிவரப் பயன்படுத்தினால் ஆசிர்: உவமையில் வரும் மனிதர் தன்னிடம் தாலந்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்கள் (ஐந்து தாலந்து பெற்றவர் மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்) மேலும் ஐந்து தாலந்துகள், இரண்டு தாலந்துகள் முறையே திரட்டிக்கொண்டு வந்தபோது அவர் அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லவில்லை, மாறாக மேலும் ஐந்து தாலந்துகள் இரண்டு தாலந்து முறையே கொடுத்து அவர்களை மேலும் வாணிபம் செய்யச் சொல்கிறார். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை சரியாகப் பயன்படுத்துகின்றபோது கடவுள் நம்மை மேலும் மேலும் ஆசிர்வதிப்பார் என்பதுதான்  உண்மையாக இருக்கின்றது.

எந்தவொரு முயற்சியும் செய்யாதோர் தண்டனை பெறுவர்: உவமையில் வரக்கூடிய மூன்றாவது மனிதரோ தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தை சரியாகப் பயன்படுத்தாமல் நிலத்தைத் தோண்டி புதைத்து வைக்கின்றார். அதனால் தலைவர் வந்து கேட்கின்றபோது சரியான தண்டனை பெறுகின்றார். தாலந்தைச் சரியாகப் பயன்படுத்தாவரைக் குறித்துச் சொல்கிறபோது விவிலிய அறிஞர்கள் அவரை ‘பரிசேயர் மறைநூல் அறிஞர்களோடு ஒப்பிட்டுப் பேசுவார்கள். அவர்கள்தான் சட்டத்தை இம்மியளவுகூட பிசகாமல் – கூட்டவும் செய்யாமல், குறைக்கவும் செய்யாமல் – அப்படியே பாதுகாத்து, தங்களுடைய வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையாமல் இருந்தார்கள். அதனாலே அவர்கள் தலைவரின் /இயேசுவின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளானார்கள். நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தாமல், அப்படியே வைத்திருந்தோம் என்றால், கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவது உறுதி.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் அது என்னவென்றால், கடவுள் நம்முடைய தகுதிக்கு அதிகமாக எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, நம்முடைய தகுதிக்கு ஏற்றமாதிரிதான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார். ஆனால், அதைக்கூட நம்மால் தரமுடியாவிட்டால் கடவுளின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது நிதர்சன உண்மை.

தாலந்தை சரியாகப் பயன்படுத்தியவருக்கு மேலும் தாலந்து கொடுக்கப்படும், பயன்படுத்தாவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்: இந்த உவமை சொல்லக்கூடிய நான்காவது உண்மை இதுதான். ஒருவர் தனக்குக் கொடுக்கப்பட்ட திறமையை நன்றாகப் பயன்படுத்தினால், அவருக்கு மேலும் மேலும் ஆசிர்வாதமும், திறமையைச் சரியாகப் பயன்படுத்தாதபோது இருப்பதும் எடுக்கப்படும் என்பது இயேசு கூறவரும் செய்தியாக இருக்கின்றது. இதை மேலோட்டமாகப் பார்க்கின்றபோது அநீதி போன்று தோன்றினாலும் அதுதான் நீதியாக இருக்கின்றது.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை அர்த்தமுள்ள விதமாய் பயன்படுத்துவோம், அதற்குக் கடினமாய் உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:

Post a Comment