அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 24, 2017

‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகச்சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரிமாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள்.  மூன்றுமுறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.

அந்த அரசன் ஓர் நயவஞ்சகன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும்  பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், தகுந்த சன்மானம் தருவேன்”  என்பான்.

வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, “அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்” என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ''இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று சாதித்தால், “கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்” என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன்.  புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ''இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், “இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்” என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.

'அல் அஸ்மாய்' என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.

“மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன்.  உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார். அதற்கு அரசர், “புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார். “நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார்.  கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மன்னன் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டான். 'அல் அஸ்மாய்’ என்ற அந்த கவிஞனின் வழிமுறை, எண்ணம், அணுகுமுறை எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே அவரால் நயவஞ்சக அரசனை வெற்றிக்கொள்ள முடிந்தது.

பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘கடவுளின் வழிமுறைகள், எண்ணங்கள் எல்லாம் மனிதரின் வழிமுறைகள், எண்ணங்கள் அனைத்தையும் விட உயர்வானது என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில்,  வேலையாட்கள் திராட்சைத் தோட்டத்தில் உழைப்பதற்காக விடியற்காலை, காலை ஒன்பது மணி, பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் கூலிகொடுக்கப்படும்போது எல்லாரும் சமமான கூலி பெறுகிறார்கள். இதனால் முன்கூட்டியே வேலைக்கு வந்தவர்கள் முணுக்கிறார்கள். ஆனால் திராட்சைத் தோட்ட உரிமையாளரோ, எல்லாருக்கும் சமமான கூலி கொடுப்பது  தன்னுடைய விருப்பம் என்று சொல்லி அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.

வேலைக்குத் தகுந்தவாறுதான் கூலிகொடுக்கவேண்டும் என மனித கண்ணோட்டத்தில் நாம் சொல்லலாம். ஆனால் கடவுளது பார்வை அப்படிக்கிடையாது, அது இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதுபோல ‘கடவுளின் எண்ணங்கள் மனிதர்களின் எண்ணங்களைவிட உயர்ந்ததாக, கடவுளின் வழிமுறைகள் மனிதர்களின் வழிமுறைகளைவிட உயர்ந்ததாக இருக்கின்றது. உவமையில் கடவுளின் எண்ணம் எந்தளவுக்கு மனிதர்களின் எண்ணங்களை விட உயர்ந்து நிற்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னதுபோல மனிதர்களாகிய நாம் வேலைக்குத் தகுந்த கூலியைத்தான் தருகின்றோம். ஆனால் ஆண்டவராகிய கடவுளோ அதற்கு மேலும் சென்று கூலியைத் தருகின்றார். இந்த உவமையைக் குறித்து சொல்கிறபோது ஒருசில விவிலிய அறிஞர்கள், “திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்த கூலியாட்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கக் காரணம், அந்த கூலியாட்களை நம்பி அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. எனவே ஒரு தெனாரியத்திற்கும் குறைவாக ஊதியம் கொடுத்தால் அவர்களுடைய குடும்பம் பட்டினியில் வாடக்கூடும் என்பதற்காகத்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் இப்படிச் செய்தார்” எனக் கூறுவார்கள்.

அப்படியானால் விடியற்காலையிலிருந்தே வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் என்ற கூலி அநீதியாக இல்லையா? என்று நாம் கேள்வி கேட்கலாம். அதற்கு உவமையிலே பதில் இருக்கின்றது. திராட்சைத் தோட்ட உரிமையாளார் தனக்கு எதிராக முணுமுணுத்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், “நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விரும்பம்” என்று. ஆகவே திராட்சைத் தோட்ட உரிமையாளர் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, மாறாக கடைசியில் வந்த கூலியாட்கள்மீது, அவர்கள் குடும்பத்தின்மீது கொண்ட இரக்கத்தினால் பெருந்தன்மையோடு நடந்துகொண்டார் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண்டவராகிய கடவுளும் எளியவர், சமுதாயத்தில் உள்ள வறியவர்பால் அதிக அன்பும், கரிசனையும் கொண்டு இருக்கிறார் என்றால், பணம்படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கடவுள் அநீதியாக நடந்துகொள்கிறார் எனப் புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக எளியவரும், வறியவரும் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இப்படிச் செயல்படுகின்றார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். (இடஒதுக்கீட்டையும் இங்கே இணைத்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்)

பல நேரங்களில் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை. கடவுளின் தயவு எளியவருக்குக் கிடைத்துவிட்டால் வலியவர்கள் அதைக்கண்டு பொறாமை கொள்கிறார்கள். உவமையிலும்கூட திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடையில் வந்த கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் கொடுத்ததை முதலில் வந்தவர்கள் பொறாமைக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அதனால்தான் அவர், “நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” என்கிறார். ஆகவே வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் ஒரு மனிதரின் வளர்ச்சியைக் கண்டு மகிழவேண்டுமே ஒழிய பொறாமைப்படக் கூடாது. பின்னர் பொறாமையே அம்மனிதரின் அழிவுவுக்குக் காரணமாகிவிடும்.

ஓர் ஊரில் துணி துவைப்பவனும் மண்பானை செய்கின்ற குயவனும் அருகருகே வசித்து வந்தார்கள். துணி துவைப்பவனோ வசதியாக இருந்தான். இதைக் கண்டு குயவனுக்குத் தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் குயவன் துணி துவைப்பவனை பொறாமைக் கண்கொண்டு பார்த்தான். குயவன் துணிதுவைப்பவனை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் எனத் தீர்மானித்தான்.

ஒருநாள் அவன் அந்நாட்டு அரசனிடம் சென்று, நயவஞ்சகமாகப் பேசி அவரைத் தன்பக்கம் இழுத்து, அழுக்குத் துணிகளை வெள்ளை வெளேரென வெளுக்கும் துணி துவைப்பவனை அரண்மனையில் இருக்கும் பட்டத்து யானையை வெள்ளை வெளேரென ஆக்கும்படி கேட்டுக்கொண்டான். அரசரும் குயவனுடைய பேச்சில் மயங்கி, துணி துவைப்பவனை அழைத்துக்கொண்டு வரச் சொல்லி அவனை யானையை வெள்ளையாக வெளுக்கும்படி கேட்டுக்கேட்டான். இதைக் கேள்விப்பட்ட துணி துவைப்பவன் இவையெல்லாம் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் குயவனின் வேலையாகத் தான் இருக்கும் எனப் புரிந்துகொண்டான். எனவே அவன் அரசனிடம், “மன்னா! இந்த யானையை வெள்ளையாக ஆக்கவேண்டுமென்றால், அதற்கு ஒரு பெரிய மண்பானை தேவைப்படும். அந்த மண்பானையில் வைத்துத்தான் இந்த யானையை குளிப்பாட்டி, வெள்ளையாக்க முடியும்” என்றான்.

உடனே அரசன் குயவனிடம், யானையைக் குளிப்பாட்டும் அளவுக்கு ஒரு மண்பானையை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். குயவனும் ஒருமாத காலம் கடுமையாகப் போராடி, யானை குளிக்கும் அளவுக்கு ஒரு மண்பானையைக் கொண்டுவந்தான். பின்னர் அரசன் அங்கே இருந்த சேவகர்களிடம், யானையை தூக்கி மன்பானைக்குள் இறக்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டான். சேவகர்களும் மன்னர் சொன்னதற்கு இணங்க யானையைக் கட்டி, மண்பானையில் இறக்கி வைத்தார்கள். ஆனால் அந்தோ பரிதாபம் யானையின் எடை தாங்காமல் மண்பானை உடைந்து போனது. இதைப் பார்த்த அரசன் குயவனிடம் இன்னொரு மண்பானை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு குயவனோ, “அரசே! என்னால் இன்னொரு மண்பானை செய்யமுடியாது. துணி துவைப்பவன் மீது கொண்ட பொறாமையினால்தான் நான் இப்படி யானையை வெள்ளையாக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அது எனக்கே வினையாகும் என்று நினைக்கவில்லை என்று சொல்லி, தன்னுடைய தவற்றை உணர்ந்து வருந்தி அழுதான்.

பொறாமையோடு வாழ்பவன் தன் பொறாமையினாலே அழிவான் என்பது இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே, பிறர் வளர்ச்சியடையும்போது பொறாமைப்படாமல், மகிழ்ச்சியுறுவோம். ஆண்டவர் எப்படி எளியவர்மீது அதிகமாக அன்பும், இரக்கமும், கரிசனையும் கொண்டு வாழ்கிறாரோ அதைப் போன்று நாமும் எளியவர், வறியவர்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.

No comments:

Post a Comment