நற்கருணை நாதரே! எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்.
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றோ பணக்காரர், ஏழைகள் என்றோ வேண்டுபவர், வேண்டாதவர் என்றோ பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கப்படும் வான் உணவு நம் நற்கருணை. இந்த நற்கருணை என்னும் விதை விதைக்கப்பட்டதோ கல்வாரி மலையில்.
என் தாய்......
கருவிலும் சொல்லி வளர்த்தாள். தினம் நற்கருணை உண்டு, கருவில் என்னையும் உண்ணச் செய்தாள். காலமும் ஊட்டி வளர்த்தாள். தினம் காலையில் உண்டு மகிழ்ந்தாள் திருப்பலியில். கவலையின்றி உழைத்தே மகிழ்ந்தாள் வாழ்க்கை என்னும் பெரும் பலியில். அதுதான் நற்கருணை என்னும் சிறப்பு திருப்பலியில்........
என் வாழ்வில் இயேசுவே, நற்கருணை நாதரே, எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக வேண்டும். எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும். ஆம்! என் அன்பு இயேசுவே எந்தன் எல்லாமும் நீயாக மாற நான் பல நாட்கள் காத்திருந்தேன். காலங்கள் பல சென்றாலும், கவலைகள் என்னை சூழ்ந்தாலும், கலக்கங்கள் என்னை வதைத்தாலும், காலம் அறிந்து காத்திருந்த நான், அந்த ஒரு நாளே...... எந்த நாள் அந்த நாள்? நற்கருணை இயேசுவை என் உள்ளத்தில் முதன்முதலாக சுமந்த நாள் என் புதுநன்மை நாள். என் இயேசு என் உள்ளத்தில் வந்த நாளில் நான் இன்ப வெள்ளத்தில் மிதந்தேன். அந்த நாள் தான் என் வாழ்வின் பெருநாள். நான் அகமகிழ்ந்த நாள். நற்கருணையும் முதன்முதலாக சுவைத்து அனுபவித்த நாள்.
கல்வாரி மலையில் கள்வர்கள் நடுவில் கொல்கொத்தா மலை உச்சியில் காணிக்கையாக்கப்பட்ட இயேசுவின் திருவுடல் என் உள்ளத்தில் ஊறியதை என்னால் மறக்க முடியவில்லை. தேவகுமாரனை தெய்வீக உறவோடு அழைத்தால் தேடி ஓடி வந்து நமக்காக பலியாவார். தேடுவோம், ஓடுவோம், இயேசுவை கண்டடைவோம். வயிற்றுக்காக வாழ்பவர்கள் எல்லாம் நிலைத்து நிற்பதில்லை. இன்முகத்தோடு நான் வாழ்ந்து வந்தாலும் என்னுள் இருந்த துன்பம் தெரிந்ததில்லை. சிறு தவறுகள் செய்த போது என்னுள் உறக்கமில்லை. என் ஆன்மாவின் நோக்கம் உம்மை அடைவதன்றி வேறு ஏதுமில்லை.
ஒன்றும் இல்லாத என்னை உம் தேவ அன்பினால் உயர்த்தி வைத்த நல்ல தெய்வமே என் இயேசுவே, காரிருளில் தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட அன்பு தெய்வமே, கல்வாரி பலி உன்னதமான பலி என்பதை அனைவருமே உணர்ந்து வாழ வரம் அருளும் நற்கருணை நாதனே!
மனசாட்சியோடு நான் என் இயேசுவுக்கு சாட்சி கூறுகின்றேன் மறுபிறவி எடுத்து வாழ்ந்து வருகின்றேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவின் இரத்தம் ஜெயம்!!
ஒரு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் கேட்கும் மருத்துவர்களின் பாசம் எங்கே? வாழ்நாள் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரக்கத்தோடு கண்ணும் கருத்துமாய் காத்துவரும் நற்கருணை நாதனின் பாசம் எங்கே?? நமக்கு கிடைத்த வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என நாம் உணர்ந்தால் நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லத் தயங்க மாட்டோம்.
கல்வாரி பலியின் நற்கருணை நண்பரின் உன்னதத்தை எடுத்துச்சொல்வோம். காலத்தையே இரண்டாக்கிய (கி.பி.., கி.மு..) வெற்றியின் வீரர். நற்கருணை நாதர், சாவை வென்ற சாதகர், உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சரித்திரம் படைத்த தர்மசீலர் நற்கருணை நாதர் இயேசுவே.
இறை இயேசுவின் வழி வந்தவர்களாகிய நாம் நற்கருணை ஓர் உன்னதமான உணவு. கல்வாரி பலி என்பதனை உலகில் உரக்கக் கூவி பறை சாற்றுவோம்.
மாபரன் இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் நடுநாயகராக வைத்து எந்நாளும் வணங்கி ஆராதித்து நன்றி கூறுவோம். சாட்சியாக வாழ்ந்து காட்டுவோம்.
திரு.மரிய ஜான் பெனடிக்ட்.
நன்றி: சந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தல முரசு மாத இதழ்.
No comments:
Post a Comment