திவ்விய நற்கருணைப் பெருவிழாவும் இறைவனுடனான நமது உறவும்
கத்தோலிக்கத் திருச்சபை எதிர்வரும் ஞாயிறு தினத்தில் திவ்விய நற்கருணைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது.
தவக்காலத்தோடு ஆரம்பித்த நிகழ்வுகள் திருநாட்கள் நிறைவடைந்து பொதுக் காலம் இதனோடு ஆரம்பமாகின்றது.
நம்பிக்கை ஆண்டாக இந்த ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திவ்விய நற்கருணை மீதான விசுவாசம் நம்பிக்கை மற்றும் ஒன்றிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இம்முறை திவ்விய நற்கருணைப் பெருவிழா விசேட பல அம்சங்களுடன் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்படவுள்ளது.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து நம்முடன் வாழ்கின்றார். திவ்விய நற்கருணையில் வாழ்கின்ற நம் ஆண்டவர் ஒவ்வொரு திருப்பலியின் போதும் நாம் நற்கருணை பெற்றுக் கொள்ளும் போது அவர் நமக்குள் வாசம் செய்வது மட்டுமன்றி நமது இரத்தத்தோடும் மாம்சத்தோடும் கலக்கின்றார். இத்தகைய அனுபவத்தையே புனித சின்னப்பர் “வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்” என்று குறிப்பிடுகின்றார்.
நம்மைப் பலப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் வாழ்விக்கவும் அன்றாடம் நமது குறை நிறைகளுடன் நம்மை வழிநடத்துபவராகவும் நம் ஆண்டவர் நம்முடனே வாழ்கிறார் என்பதை நாம் உறுதியாக விசுவாசிக்க வேண்டும்.
திவ்விய நற்கருணை என்பது வெறும் சடங்குகளுக்கு மட்டும் மட்டுப்படுத் தப்பட்ட ஒன்றல்ல. நற்கருணை ஆண்டவரின் தரிசனம் அதுவாகும். இதன் முக்கியத்துவத்தை ஆலயங்கள் திருப்பலிகள் உணர்த்தினாலும் தனி மனித வாழ்வில் இதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவானது.
நற்கருணை மீதான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்க இம்முறை நற்கருணைப் பெருவிழா வழிவகுக்கட்டும்.
இம்முறையும் வழமை போன்று சகல பங்குகளிலும் திவ்விய நற்கருணைப் பெருவிழாவை யொட்டி பல வழிபாடுகளும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திவ்விய நற்கருணை திருமணித்தியால வழிபாடுகள், நற்கருணைப் பவனிகள் திருவிழா திருப்பலிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
யாழ். மறை மாவட்டத்தில் ஜூன் 2 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். நகரில் நற்கருணைப் பேரணியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மறை மாவட்டம் அறிவித்துள்ளது. கொழும்பிலும் மற்றும் சகல பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அத்துடன் பரிசுத்த திருத்தந்தையோடு இணைந்து உலகம் முழுவதும் இணைந்து ஒரே நேரத்தில் நற்கருணை ஆராதனையில் ஈடுபட மாபெரும் நிகழ்வொன்றுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நம்பிக்கை ஆண்டை பிரகடனப்படுத்திய எமது முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ற் இதன் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக இவ்வாண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்ற இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அன்று உலகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒரு சிறப்பான நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டுமென்று கேட்டிருந்தார்.
எமது நம்பிக்கை வாழ்வின் ஊற்றும் உறைவிடமுமாகிய நற்கருணைப் பிரசன்னத்தில் எமது நம்பிக்கையை ஆழப்படுத்தி வளர்ச்சிபெறுவதே இதன் நோக்கமாகும்.
இதன் பிரகாரம் எமது திருத்தந்தை பிரான்சிஸ் அன்றைய தினத்தில் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் இறைமக்களோடு ஒன்றுகூடி உரோம் நகர நேரடிப்படி மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை நற்கருணை ஆராதனை நடாத்தவுள்ளார்.
திருத்தந்தை ஆராதனை செய்யும் அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மறை மாவட்டங்களினதும் பேராலயங்களிலும், எல்லாப் பங்குகளின் ஆலயங்களிலும் இறைமக்கள் ஒன்று கூடி திருமணி ஆராதனையில் ஈடுபட அழைப்பு விடுத்து செயற்படுத்துமாறு நம்பிக்கை ஆண்டின் நிகழ்வுகளுக்கான செயலகம் எல்லா ஆயர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தலில் கேட்டு நிற்கின்றது.
மறை மாவட்ட இறை மக்களும் திருத்தந்தையோடு இணைந்து நற்கருணை ஆராதனையில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுக்கின்றார். இதன்படி வருகிற ஜுன் மாதம் 2 ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை (உரோம் நகர நேரம் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை) எல்லா பங்குகளிலும் இறை மக்கள் ஒன்று கூடி நற்கருணைப் பிரசன்னத்தில் திருமணி ஆராதனை செய்ய ஆவன செய்யுமாறு பங்குத் தந்தையர்களை கேட்டுக் கொள்வதோடு, இவ் ஆராதனையில் பங்கு பற்றி திருத்தந்தை யோடும் உலகெங்குமுள்ள எல்லா இறைமக்களோடும் இணைந்து உலகத் திருச்சபை நம்பிக்கையில் உறுதிபெறுமாறு செபிக்க ஆர்வத்தோடு ஒன்று கூடுமாறு குருக்கள், துறவியர், பொது நிலையினர் அனைவரையும் அழைத்து நிற்கின்றார்.
No comments:
Post a Comment