இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா
தருவதில் உயர்ந்தது தன்னையே தருதல்
சில ஆண்டுகளுக்கு முன்பாக தென் அமெரிக்க நாட்டின் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த வீரர்கள் விமானம் வழியாக அண்டை நாட்டிற்கு விளையாடச் சென்றனர். ஆனால், போகின்ற வழியில் அவர்கள் சென்ற விமானமானது விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த பாதிக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். ஒருசிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
அப்படி உயிர்பிழைத்தவர்களால் வெளியுலகைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அங்கேயே இருந்து, பயணத்திற்காகக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, அதில் உயிர்வாழ்ந்து வந்தனர். ஒருசிலரோ போதிய உணவு கிடைக்காமையால் பட்டினியில் மடிந்தார்கள். வெகுசிலரே உயிரோடு இருந்தார்கள். அப்போது உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒருசிலர் தங்களது நண்பர்களைப் பார்த்து, “தோழர்களே! இன்னும் ஒருசில மணித்துளிகளில் நாங்கள் எங்களது உடலில் வலுவில்லாமல் இறந்துவிடுவோம். அப்போது நீங்கள் எங்களது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அதை உணவாக உட்கொண்டு உயிர்பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் சொன்னதுபோன்றே இறந்தார்கள். உயிரோடு இருந்தவர்கள் தங்களுக்குப் பசி எடுத்தபோது தங்களது நண்பர்களது உடலைத் துண்டுதுண்டாக வெட்டி, வெயிலில் காயவைத்து, அதை உண்டு உயிர்வாழ்ந்து வந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினர் அங்கே வந்தபோது, அங்கே ஒருசிலர் உயிரோடு இருப்பதைக் கண்டு, அவர்களை மீட்டுவந்து சொந்த நாட்டில் கொண்டுபோய் சேர்ந்தனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம், “இத்தனை நாட்கள் உங்களால் எப்படி உயிரோடு இருக்க முடிந்தது?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், “எப்படி ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலைத் தந்து நம்மை மீட்டுக்கொண்டாரோ, அதேபோன்று எங்களது நண்பர்கள் தங்களது உடலைத் தந்து எங்களை மீட்டார்கள். அவர்களது உடலால் நாங்கள் வாழ்ந்தோம்” என்றார்கள்.
இன்று இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். நாம் அனைவரும் வாழ்வுபெற, அதுவும் நிறைவாகப் பெற தன்னுடைய திருவுடலையும், இரத்தத்தையும் இயேசு உணவாகத் தந்ததை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். இந்த நல்லநாளில் இன்று நாம் படிக்கக்கேட்ட வாசங்களின் அடிப்படையில் “நம்மிடம் இருப்பதை மட்டுமல்ல, நம்மையே தரவேண்டும்” என்ற ஒரு கருத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுள் நமக்கு எத்தனையோ கொடைகளைத் தந்திருக்கிறார். அந்தக் கொடைகளில் எல்லாம் சிறந்த ஒரு கொடைதான் நற்கருணை (இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்). ஆகவே, இப்படிப்பட்ட கடவுளின் கொடைக்கு நாம் எந்தவிதத்தில் மதிப்பளிக்கின்றோம், அது (நற்கருணை) உணர்த்தும் உண்மையை நாம் எந்தளவுக்கு வாழ்வாக்குகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் சாலேம் அரசரும், தலைமைக் குருவுமாகிய மெல்கிசெதேக்கு அப்பமும், திராட்சை இரசமும் முதுபெரும் தந்தை ஆபிரகாமிடத்தில் கொண்டுவருகிறார். இந்த நிகழ்வு இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தர இருப்பதன் முன்அடையாளமாக இருக்கின்றது.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் (11:23-26) ஆண்டவராகிய இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் செய்ததைப் பற்றி பவுலடியார் இவ்வாறு எழுதுகிறார். இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கிறார். அதேபோன்று உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” என்கிறார். இவ்வாறு இயேசு தன்னுடைய திருவுடலையும், திரு இரத்தத்தையும் நமக்கு ஆன்மீக உணவாகத் தருவதை பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
நற்செய்தியில் ( 9:11-17) இயேசு இன்னும் ஒருபடி மேலே போய், அப்பங்களைப் பலுகச் செய்வதன் வழியாக, நமது உடலுக்கும் உணவளிக்கிறார்; “நீங்களே அவர்களுக்கு உணவளியுங்கள்” என்று சொல்லி வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அழைப்புத் தருகின்றார். ஆகவே, இயேசுவின் திருவுடலையும், இரத்தத்தையும் உணவாக உட்கொள்கின்ற நாம் ஒவ்வொருவரும் நற்கருணையில் இயேசு உண்மையாக இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். அதேபோன்று நம்மோடு வாழக்கூடிய வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.
நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையாக இருக்கிறார். இதுதான் நமது விசுவாச சத்தியம். இதனை நாம் பல்வேறு உண்மைச் சம்பவங்களின் வழியாகவும் விளக்கலாம். கி.பி. 1400 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டின் பாக்ஸ்மீர் என்ற இடத்தில், புனித பேதுரு, பவுல் ஆலயத்தில் அர்னால்டஸ் க்ரோயன் என்ற குரு திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது இரசம் இரத்தமாக மாறி இரசப் பாத்திரத்தில் இருந்து பொங்கி வழிந்தது. அந்த இரத்தம் சிந்திய துணி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கி.பி. 1730 ஆகஸ்ட் 14ந்தேதி இத்தாலியின் சியன்னா நகரில், புனித பிரான்சிஸ் ஆலயத்தில் நுழைந்த கொள்ளையர்கள் நற்கருணை பேழையில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை அப்பங்கள் இருந்த தங்கப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த கொள்ளையர்கள் வீசியெறிந்த நற்கருணை அப்பங்கள், இரண்டு நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 17ந்தேதி மீண்டும் கண்டெடுக்கப்பட்டன. அந்த நற்கருணை அப்பங்கள் இன்றளவும் அழியாமல் இருக்கின்றன.
அதே போன்று, கி.பி. 1990களில் இருந்தே தென் கொரியாவின் நாஜூ பகுதியைச் சார்ந்த ஜூலியா கிம் என்ற பெண்மணி நற்கருணை வாங்கிய பல நேரங்களில், நற்கருணை அப்பம் உண்மையான சதையாக மாறியதை பலரும் பார்த்திருக்கின்றனர். திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த அற்புதத்தை ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறார். பல ஆய்வுகளும் இந்த அற்புதங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கின்றன.
ஆகவே, பல்வேறு உண்மைச் சம்பவங்களின் வழியாக இயேசு நற்கருணையில் உண்மையிலே பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை அறிந்த நாம், அதனை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும்; அதோடு மட்டுமல்லாமல் அதற்குத் தகுந்த வணக்கமும், மரியாதையும் செலுத்தவேண்டும்.
இந்தவேளையில் நற்கருணை (இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்) நமக்கு உணர்த்தும் சமூகக் கடமைகளை நாம் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சீடர்களைப் பார்த்துக் கூறுவார், “நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்” என்று. இயேசு சீடர்களுக்கு கொடுத்த அழைப்பைத் தான் இன்றைக்கு நமக்கும் தருகிறார். எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் ஏழை எளியவரின், வறியவரின் தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டும். குறிப்பாக அவர்களுக்கு உணவிடவேண்டும்.
தமிழ் இலக்கியத்தில் வரும் புறநானூற்றில் “உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்” என்று சொல்லப்படுகின்றது. ஆம், ஒருவருக்கு உணவு கொடுக்கின்றபோது, அது உயிர்கொடுப்பதற்குச் சமமாகின்றது. ஆண்டவர் இயேசு சொல்லும் இறுதித் தீர்ப்பு உவமையில்கூட பசியாய் இருப்பவருக்கு உணவு கொடுப்பதன் வழியாக நாம் இறைவன் அளிக்கும் விண்ணகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் பசியால் வாடும் ஏழை எளியவருக்கு, வறியவருக்கு உணவிடுவதற்கு முன்வருவோம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் சொல்கிறது, “உணவு உற்பத்தில் இந்திய இரண்டாம் இடம் வகிக்கிறது” என்று. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இங்கே இருக்கும் மக்களுக்கு போதிய உணவு கிடைக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றைக்கும் மக்கள் போதிய உணவில்லாமல் வறுமையில் வாடக்கூடிய நிலைதான் தொடர்கின்றது. இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். எல்லாரும் எல்லா வளமும் பெற்று மகிழவேண்டும். அதற்கு நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்.
ஹென்றி வார்டு பீச்சர் என்ற மறைபோதகர் சொல்வார், “ஒவ்வொரு நன்கொடைச் செயலும், சொர்க்கத்திற்க்குச் செல்லும் வழியின் படிக்கட்டுகள்” என்று. ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்துவாழ்வோம். நம்மாலான உதவிகளை பிறருக்குச் செய்வோம்.
பத்மநாபன் கோபாலன் என்பவர் கோவையைச் சேர்ந்த ஒரு பொறியாளர். இவர் மற்ற மனிதர்களைப் போன்று தான் உண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று வாழாமல், ஏழை, எளிய மக்களுக்குப் பயன்தரும் ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கிறார். அது என்னவென்றால், “NoFood Waste” என்ற இயக்கத்தைத் தொடங்கி திருமண விழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், இன்னும் பல்வேறு விழாக்களில் தேவையற்ற விதத்தில் வீணாகும் உணவுப் பொருட்களைச் சேகரித்து, கோவைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றிற்கு அவ்வுணவை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தொடக்கத்தில் இத்தகைய ஓர் அறப்பணியில் தனி ஒரு மனிதராகச் செயல்பட்ட பத்பநாபன், இன்றைக்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறார். ஏதாவது ஒரு விழாவில் உணவு வீணாகிறது என்றால், இவருடைய அலைபேசிக்கு அழைப்பு வரும், உடனே இவர் தன்னுடைய நண்பர்களுடன் சென்று, அந்த உணவைச் சேகரித்து வந்து, தேவையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பார்.
ஒவ்வொரு மாதமும் இவரால் இரண்டாயிரம் பேருக்கும் மேல் பயன்பெறுகின்றனர். இதுவரைக்கும் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றிருன்றனர் என்று பத்மநாபன் மகிழ்வோடு தெரிவிக்கின்றார். இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள “Polimation Project” என்ற நிறுவனம் ‘சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் உன்னத மனிதர்’ என்ற ஓர் உயரிய விருதை வழங்கி, அவரைக் கௌரவித்திருக்கிறது.
அடுத்தவருக்குச் செய்கின்ற உதவியெல்லாம் ஆண்டவருக்கே செய்கின்ற உதவியாகும். அப்படிப்பட்ட ஒரு அறப்பணியை, இறைப்பணியைச் செய்துகொண்டிருக்கும் பத்மநாபன் கோபாலன் என்பவரின் செயல் பாராட்டுக்குரியது.
ஆதலால், இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், நாம் நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை உணர்ந்து, அவரைப் போன்று பிறருக்காக நம்மையே தரும் மக்களாவோம். வறியவருக்கு உணவிடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.
No comments:
Post a Comment