நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!
'மானிட மகனின் உடல் மற்றும் இரத்தம்' பற்றிய போதனை யோவான் நற்செய்தி 6ல் காணக்கிடக்கிறது. 'நிலையான உணவு' - 'நிலையற்ற உணவு,' 'அழியாத உணவு' - 'அழிந்து போகும் உணவு,' 'மானிட மகனின் உடல்' - 'பாலைவனத்தில் மன்னா' என்று வாதம் தொடங்கித் தொடரும் இந்த நிகழ்வின் இறுதியில் அவருடைய சீடர்களில் சிலர்,
'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று பேசிக்கொள்கின்றனர் (யோவா 6:60). இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் இயேசுவை விட்டு விலகுகின்றனர் (6:66). அந்நேரம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று இயேசு தம் திருத்தூதர்களிடம் கேட்க, 'நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' (6:68) என்று பதிலுரைக்கிறார் பேதுரு. போதனையும், விவாதமும் முடிவுக்கு வருகிறது.
'ஆண்டவரின் வார்த்தையே உணவு’
'இயேசுவே ஆண்டவரின் வார்த்தை’
ஆக, 'இயேசுவே உணவு!'
இதுதான் இன்று நாம் கொண்டாடும் திருநாளின் மறைபொருள்.
முதல் ஏற்பாட்டில் மன்னா உண்கின்றனர் இஸ்ராயேல் மக்கள் (காண். விப 16:14-15). இந்த நிகழ்வில் இறைவன் வேறு, மன்னா வேறு என்ற நிலை இருக்கிறது. அதாவது, உணவைக் கொடுப்பவரும், கொடுக்கும் உணவும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கக் கூடியவை. ஆகையால்தான் அந்த உணவுக்கு நிலைப்புத்தன்மையும், அழியாத்தன்மையும் இல்லை. ஆனால், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு தரும் உணவு அப்படி அல்ல. 'இது என் உடல், இது என் இரத்தம்' என்று இயேசு சொல்லும் போது, இங்கே 'நான் வேறு,' 'இது வேறு' என்று இரண்டு கூறுகள் இல்லை. மாறாக, 'இதுவே நான்!' என்ற நிலை இருக்கிறது. இங்கே கொடுக்கும் இறைவனும், அவர் கொடுக்கும் உணவும் ஒன்றே ஆதலால் இந்த உணவு அழியாத் தன்மை பெறுகிறது. ஆகையால்தான் இயேசுவும், 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்' (யோவா 6:58) என்கிறார்.
உணவு அழியாத்தன்மை கொண்டிருக்கிறது என்றால், இதைக் கொடுத்தவரும் அழியாத் தன்மை கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஏனெனில், உணவும் கொடுத்தவரும் இங்கே ஒன்றுதானே!
இதைக் கொடுத்த இயேசுவின் அழியாத்தன்மையை நமக்குக் காட்ட இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 14:18-20) நமக்கு மெல்கிசெதேக்கு என்னும் கதைமாந்தரை அறிமுகம் செய்கிறது. இன்றைய முதல் வாசகப்பகுதியில் 'டைரிக்குறிப்பு நடை,' 'நாடக நடை' என்னும் இரண்டு இலக்கியக்கூறுகள் உள்ளன. ஆபிராமின் வாழ்வில் ஓர் நாளில் நடந்த நிகழ்வைக் குறிப்பிடுவது போல தொடங்குகிறார் ஆசிரியர். மெல்கிசெதேக்கை 'சாலோமின் அரசர்' என அறிமுகம் செய்கின்றார். 'சாலேம்' என்னும் சொல்லாடலை 'எருசலேம்' என்றும் எடுக்கலாம். 'அமைதி' என்றும் எடுக்கலாம். ஆபிராம் தன் மற்றும் தன் சகோதரன் லோத்தின் சொத்துக்களை சண்டையிட்டு மீட்கின்றார். ஆக, போருக்குப் பின் ஆபிராமிற்கு அமைதி தேவைப்படுகிறது. மேலும், ஆபிராம் ஓர் அரசனைப் போல தன் அருகில் இருக்கிறவர்களை எல்லாம் அழித்து, ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றிக்கொண்டே முன்னேறுகிறார். இதைப்பற்றிக் கேள்வியுற்ற சாலேம் அரசரும், அடுத்த ஒருவேளை ஆபிராம் நம் நாட்டிற்கே வந்துவிடுவார் என்று நினைத்து முன்னதாகவே ஆபிராமுடன் சமரச நடவடிக்கையில் இறங்குகிறார். ஆகையால்தான், அவர்கள் சந்திக்கும் இடம் 'அரசர் பள்ளத்தாக்கு' என வழங்கப்படுகிறது.
அரசராக வந்தவர் சட்டென்று மாறும் வானிலைபோல குருவாக மாறுகின்றார். அவரைக் குருவாக உருவகிக்கும் காரணிகள் இரண்டு: (அ) அரசருக்குரிய அடையாளமான வாள் அல்லது பணமுடிப்பு போன்றவற்றை ஆபிராமிற்குக் கொடுப்பதற்குப் பதிலாக, காணிக்கைப் பொருள்களான அப்பமும் திராட்சை இரசமும் கொடுக்கின்றார். (ஆ) ஆபிராமை வாழ்த்தி ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகின்றார். இவரின் குருத்துவ நிலையை உறுதி செய்யும் விதமாக ஆபிராமும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கு கொடுக்கின்றார். பத்தில் ஒரு பாகம் கொடுக்க வேண்டிய கட்டளை இணைச்சட்ட நூல் காலத்தில் (அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி, மோவாபு பாலைநிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது) கொடுக்கப்பட்டாலும் (இச 14:22), இங்கே ஆசிரியர் மெல்கிசெதேக்கை குரு என்று அடையாளப்படுத்துவதற்காக, ஆபிராமும் இதைச் செய்ததாக எழுதுகின்றார்.
மெல்கிசெதேக்கின் ஆசீர் முதலில் கீழ்நோக்கியும் (ஆபிராமை நோக்கி), இரண்டாவதாக மேல்நோக்கியும் (ஆண்டவரை நோக்கி) இருக்கிறது. இந்த இரண்டு குணங்களை எடுத்து இறையியல் கட்டுரையாக வடிவமைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'இயேசுவே தனிப்பெரும் தலைமைக்குரு' (எபி 7) என்று முன்வைப்பதோடு, இயேசுவின் கீழ்நோக்கிய தன்மையை 'சகோதரர்களுக்கு இரக்கம்' என்றும், மேல்நோக்கிய தன்மையை 'கடவுளுக்கு பிரமாணிக்கம்' எழுதுகிறார் (காண். எபி 2:17). மேலும், மெல்கிசெதேக்கைப் போல இயேசுவும் 'அப்பமும்,' 'திராட்சை இரசமும்' தன் சீடர்களுக்குத் தருவதால் அவருக்கும், மெல்கிசெதேக்கிற்கும் உள்ள ஒற்றுமை இன்னும் வலுக்கிறது.
இந்த மெல்கிசெதேக்கு நிகழ்வில் கவனிக்க வேண்டிய இறுதி, ஆனால், முக்கியமான கூறு என்னவென்றால், மெல்கிசெதேக்கு எங்கிருந்து வந்தார் என்றும், ஆபிராமை சந்தித்த அவர் எங்கே சென்றார் என்றும் குறிப்பிடப்படவில்லை. முதலும், முடிவும் இல்லாமல் வந்த இவர் ஆண்டவராக இருக்கலாம் என்கின்றனர் சிலர். வந்தவர் ஆண்டவராக இருந்ததால்தான், ஆபிராம் பத்தில் ஒருபாகம் (காண். இச 14:22) கொடுத்தார் என்கின்றனர் இவர்கள்.
மெல்கிசெதேக்கின் 'நீடித்த,' மற்றும் 'குருத்துவ' என்னும் இரண்டு குணங்களை எடுத்து, அரசர்களுக்குப் புகழ்பாடுவது முதல் ஏற்பாட்டு அரசர்கள் காலத்தில் இருந்தது. ஆகையால்தான், ஆண்டவரே தாவீதிடம், 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' சொல்வதாக, திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார் (காண். 110:1-4. இன்றைய பதிலுரைப்பாடல்).
தாவீதின் மகனாக வந்தார் இயேசு என தன் நற்செய்தியில் எழுதும் லூக்கா, தாவீது 'தலைமைக்குரு' என்று ஆண்டவரால் அழைக்கப்பட்டதை மனத்தில் வைத்து, இயேசுவையும் ஒரு குருவாக முன்வைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 9:11-17) நாம் வாசிக்கும் அப்பம் பலுகுதல் நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் காணக்கிடக்கிறது (காண். மத் 14:13-21, மாற் 6:30-44, யோவா 6:1-14). மற்ற நற்செய்தியாளர்களைப்போல, குறிப்பாக மாற்குவைப் போலவே, லூக்கா இந்நிகழ்வை எழுதியிருந்தாலும், அப்பம் பலுகுதலுக்கு முக்கியத்துவம் தராமல், இயேசு என்ற கதைமாந்தரை மையப்படுத்தி எழுதுகின்றார். இந்நிகழ்வின்படி இயேசுவை மெசியா என்றும், குரு என்றும் மற்றவர்கள் அறிந்து கொள்ளச் செய்கின்றார்.
அ. இயேசுவே மெசியா
முதல் ஏற்பாட்டில் மெசியாவின் வருகையின் போது நடைபெறும் மாபெரும் விருந்தைப் பற்றி எசாயா எழுதுகின்றார் (காண். 25:6-9). மலையின்மேல் நடக்கும் அவ்விருந்தில் 'சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படுகின்றன' (25:6). 'இவருக்காகவே நாம் காத்திருந்தோம். இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்' (25:9) என்ற இறைவாக்கின் நிறைவாக இயேசு வருகின்றார். இயேசு தரும் விருந்தும் அபரிவிதமாக இருக்கின்றது. எல்லாரும் உண்டு நிறைவுபெற்றாலும், எஞ்சிய துண்டுகள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்படுகின்றன.
ஆ. இயேசுவே குரு
எம்மாவு சீடர்களுக்கு இயேசு தோன்றியபோது, அவரை அப்பம் பிட்கும் நிகழ்வில் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். எம்மாவு நிகழ்வில் (காண் லூக் 24:30), இயேசு, அப்பத்தை எடுத்து, கண்களை உயர்த்தி, இறைவனைப் புகழ்ந்து, உடைத்து, கொடுக்கின்றார். இந்த ஐந்து வினைச்சொற்களையும் அப்பம் பலுகுதல் நிகழ்விலும் பயன்படுத்துகின்றார் இயேசு. உயிர்த்தெழுந்த இயேசுவை தலைமைக்குருவாக உருவகிக்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல். ஆனால், இயேசுவை அவரின் பணியின்போதே குருவாக உருவகிக்கின்றார் லூக்கா.
இவ்வாறாக, முதல் ஏற்பாட்டு தலைமைக்குரு, இரண்டாம் ஏற்பாட்டில் தாவீதின் மகன் இயேசு என்று மாறி நிற்கின்றார்.
இந்தத் தலைமைக்குரு இயேசு தான் இறப்பதற்கு முன் என்ன செய்தார் என்பதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம் (1 கொரி 11:23-26).
அப்பம் பிட்குதல் என்பது தொடக்கக் கிறிஸ்தவர்களின் முதன்மையான வழிபாட்டு நிகழ்வு (காண். திப 2:42). இயேசு தான் இறப்பிற்குக் கையளிக்கப்படுமுன் செய்த, தன் உயிர்ப்புக்குப் பின் எம்மாவு சீடர்கள் நடுவில் செய்த இந்நிகழ்வு அவர்களுக்கு மூன்று விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழி அறிந்து கொள்கின்றோம்:
அ. 'காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்'
இந்த வார்த்தைகள் இயேசுவின் கல்வாரிப் பலியை வாசகருக்கு நினைவூட்டுகின்றன. இயேசுவின் கல்வாரிப் பலியின், மீட்பின் பலியின் முன்னோட்டமாக இருந்தது அவரின் இறுதி இராவுணவும். தான் சிலுவையில் தன் உடலையும், இரத்தத்தையும் மனுக்குலத்தின் மீட்பிற்காக கையளிக்குமுன், அப்பம் மற்றும் இரசத்தின் வடிவில் அதை முந்திய இரவே தன் சீடர்களிடம் கையளித்துவிடுகின்றார்.
ஆ. 'என் நினைவாகச் செய்யுங்கள்'
அப்பம் பிட்குதல் என்பது ஒரு 'நினைவு' (memorial). 'நினைவுகூறுங்கள்' என்பது முதல் ஏற்பாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். குறிப்பாக, யாவே இறைவன் எகிப்தில் செய்த அறிகுறிகளையும், முதல் பாஸ்கா நிகழ்வையும் 'நினைவுகூறுமாறு' இஸ்ரயேல் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 'நினைவுகூறலில்' இறந்த, நிகழ், எதிர்காலம் என மூன்று காலங்களும் அடங்கியுள்ளன. ஏனெனில் நாம் நடந்த ஒன்றை (இறந்த காலம்), நடந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் (நிகழ்காலத்தில்), ஆண்டவர் வரும் வரை (எதிர்காலம்) அறிக்கையிடுகின்றோம்.
இ. புதிய உடன்படிக்கை
பழைய உடன்படிக்கையில் (விப 24) கடவுளுக்கும், மக்களுக்கும் இடையே தூரம் இருந்தது. கடவுளின் கட்டளைகள் மனிதருக்கு வெளியே இருந்தன. எரேமியா முன்னுரைத்த புதிய உடன்படிக்கையில் (எரே 31:31-34) அந்த இடைவெளி இல்லை. கட்டளைகள் மனிதர்களின் மனத்திலேயே எழுதப்பட்டன. புதிய உடன்படிக்கையில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்குப் பதிலாக, மானிட மகனின் இரத்தமே இணைக்கும் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
மூன்று வாசகங்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மெல்கிசெதேக்கின் வழி வந்த என்றென்றும் தலைமைக்குருவாம் இயேசு, மெசியாகவும், குருவாகவும் நின்று ஏற்படுத்திய நிலையான பலியே நற்கருணைப் பலி என்றும், இந்தப் பலியின் வழியாக அவர் நம்மை மீட்டதோடு, தன்னையே உடலாகவும், இரத்தமாகவும் நாம் வாழ்வு பெறக் கொடுத்தார் என்றும் சொல்லலாம்.
ஆக, இயேசுவைப் போலவே அவரின் உடலும், இரத்தமும் அழியாத் தன்மை கொண்டிருப்பதால், அவை நமக்கு அழியா வாழ்வைக் கொடுக்க வல்லவை.
இன்றைய நாள் நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?
1. நம் கொடுத்தலும், இறைவனின் கொடுத்தலும்
நம் இந்து சமய சகோதரர்கள் வழிபாட்டிற்குக் கோவிலுக்குச் செல்கிறார்கள். கடவுளுக்குக் காணிக்கையாக தேங்காய், பழம், அகர்பத்தி, சூடம் என வாங்கிச் செல்கின்றனர். வழிபாடு செய்தபின் இவர்கள் கொண்டு சென்ற பூசைக்கூடையில் அர்ச்சகர் பழம், திருநீறு, இனிப்பு என திரும்ப வழங்குகின்றார். கடவுளுக்கு நாம் கொடுப்பதும், கடவுள் அதைத் திரும்ப நமக்கே கொடுப்பதும், இந்து மதத்திலும் இருக்கும் ஒரு கூறு. கடவுள் அல்லது அர்ச்சகர் கொடுப்பதை அவர்கள் பிரசாதம் என அழைக்கின்றனர். இந்த பிரசாதமும், நற்கருணையும் ஒன்றா? நாம் அப்பம், இரசம் ஆகியவற்றைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம். அதைக் கடவுள் தன் மகனின் உடல் மற்றும் இரத்தமாக மாற்றி நமக்கே திரும்பக் கொடுக்கிறார். அவர்கள் செய்வது போலத்தானே நாம் செய்கிறோம்? இல்லை. பிரசாதமும் கடவுளும் ஒன்றல்ல. கடவுள் பிரசாதத்தின் உருவை மேற்கொள்வதில்லை. ஆனால், நற்கருணையில் இரண்டும் ஒன்று. இயேசு அப்பம் மற்றும் இரசத்தின் வடிவை ஏற்கின்றார்.
நற்கருணை சொல்லும் முதல் பாடம் இதுதான்: 'நம் கடவுள் அளவற்ற விதத்தில் கொடுக்க வல்லவர்!’
முதல் வாசகத்தில், 'ஆபிரகாம் பத்தில் ஒரு பங்கு கொடுத்தார்'. ஆனால், 'மெல்கிசதேக்கு தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுத்தார்.' நற்செய்தி வாசகத்தில், 'சீடர்கள் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொடுத்தனர்.' ஆனால், 'இயேசு எல்லாரும் உண்டபின்னும் பன்னிரண்டு கூடைகள் எஞ்சும் அளவுக்குக் கொடுத்தார்.' இன்று நாம் அழியக்கூடிய குணங்களைக் கொண்ட அப்பத்தையும், இரசத்தையும் கொடுத்தாலும், கடவுள் அவற்றை அழியாத உணவாக மாற்ற வல்லவர்.
ஆக, இன்று நாம் கடவுளைப் போல கொடுப்பவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.
இயேசுவின் ஒட்டுமொத்த வாழ்வும், பணியுமே கொடுத்தலாகவே இருந்தது. எந்த நிலையிலும் தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தார் அவர்.
இன்று நம் உலகம் நமக்கு 'எடுக்கவே' கற்றுத்தருகிறதே அன்றி, 'கொடுக்க' கற்றுக்கொடுப்பதில்லை. நான் பயன்படுத்தும் ஒரு கணிணி அல்லது அலைபேசி சேவை என்றாலும் சரி, என் உற்ற நண்பராக இருந்தாலும் சரி, 'என்னால் முழுமையாக எடுக்க முடிகிறதா?' என்பதே என் நோக்கமாக இருந்தால், நான் கடவுளின் இயல்பிலுருந்து தூர இருக்கிறேன் என்றே அர்த்தம். சில நேரங்களில், நான் கொடுப்பதற்கேற்ற எடுத்தல் இருக்கிறதா என்றும் கணக்குப் போடுகிறேன். போட்டதை எடுக்க, அல்லது போட்டதிலிருந்து அதிகம் எடுக்க உறவுநிலை ஒன்றும் ஷேர் மார்க்கெட் அல்லவே! ஆக, எடுக்க முடியாது என்றாலும் கொடுக்கும் மனம் வேண்டும். நற்கருணையின் மறைபொருளே அதுதான். 'அப்பமும், இரசமும்,' 'இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும்' மாறிய பின் திரும்ப நாம் அவற்றை அப்பமாக அல்லது இரசமாக மாற்ற முடியுமா? அதற்க எந்த ஃபார்முலா இருக்கிறது? மாற்ற முடியாது. அது ஒருவழிப்பயணம். நம் கொடுத்தலும் ஒருவழிப்பயணமாக இருக்கலாமே!
2. ஐந்து வினைச்சொற்கள்
ஒரு குறிப்பிட்ட பலிபீடத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு ஃபார்முலாவை, ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் நின்று சொல்லிக் கைகளை விரித்தால், அப்பமும், இரசமும், இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிவிடும் என்ற மேஜிக் சிந்தனையை நாம் விட வேண்டும். இந்த மேஜிக் சிந்தனை பல நேரங்களில் அருட்பணியாளரையும், மக்களையும் இயேசுவிடமிருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அதாவது, அருள்பணியாளராகிய நான், உடல் அல்லது மனதளவில் என் வாழ்க்கை நிலைக்குத் தகுதியற்று இருந்தாலும், கைகளை விரித்து மந்திரம் சொன்னால் அப்பம் இயேசுவின் உடலாகிவிடும் என்றால், என்னில் மாற்றம் வருவது சாத்தியமா? இல்லை. நான் எப்படி இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மந்திரம் சொல்லி, கைகளை விரித்தால் எல்லாம் நடந்துவிடும் என்று நான் நினைப்பது தவறல்லவா? அதேபோலவே, இந்த அப்பம் பிட்குதலில் பங்கேற்கும் மக்களும் இதை ஒரு மேஜிக் நிகழ்வாகக் கருதக் கூடாது. அப்படி மேஜிக்காக நினைக்கும்போது, நாம் நம் வழிபாட்டு முறைமைகள் மட்டும் சடங்குகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். ஒன்பது நாள் நற்கருணை உட்கொண்டால் நான் கேட்டது நடக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுகின்றோம். நற்கருணை விடுதலையின் விருந்து. அதை நாம் ஒரு சடங்காகப் பார்த்து அந்தச் சடங்கிற்கு அடிமையாகிவிடக்கூடாது.
நற்கருணை வழிபாட்டை நடத்தும் அருள்நிலை இனியவரும், அதில் பங்கேற்கும் பொதுநிலை இனியவர்களும் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஐந்து வினைச்சொற்களை வாழ்வாக்குபவர்களாக இருக்க வேண்டும்.
அந்த ஐந்து சொற்கள் எவை?
'எடுத்தல்,' 'அண்ணாந்து பார்த்தல்,' 'ஆசிகூறுதல்,' 'உடைத்தல்,' ‘கொடுத்தல்'
இந்த ஐந்து சொற்களும், இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு என்னும் மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இயேசு மனுவுரு 'எடுத்தார்.' 'அண்ணாந்து பார்த்து' தன் தந்தையோடு இணைந்திருந்தார். எந்நேரமும் 'இறைவனைப் புகழ்ந்து அவரை ஆசீர்வதித்தார்.' தன் வாழ்வு முழுவதும் தன்னை மற்றவர்களுக்காக 'உடைத்தார்.' இறுதியில், தன்னையே நமக்காகக் 'கொடுத்தார்.’
இந்த ஐந்து சொற்களில் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுவது 'அண்ணாந்து பார்ப்பது.' ஏன்?
இன்றைய நம் தொடுதிரைக் கலாச்சாரம் நம்மை 'குனிந்தே பார்ப்பவர்களாக' மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் சின்ன சின்ன செயலிகளைக் (apps) கொண்டு செய்து முடிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ஸ்மார்ட்ஃபோன். 'உனக்கு யார் துணையும் வேண்டாம் - கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம். என்னையே பார்த்துக் கொண்டிரு. உனக்கு எல்லாம் நடக்கும்' என்று சொல்கிறது தொடுதிரை என்னும் மாயக்கண்ணாடி. அந்த மாயக்கண்ணாடியில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், குனிந்து பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், நாம் கடவுளுக்கும், மற்றவர்களுக்கும், ஏன், நமக்கு நாமே அந்நியமாகிவிடுகின்றோம். இக்கண்ணாடியை விட்டுவிட வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்பப்போ அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.
அழியா உணவை நற்கருணை என உட்கொள்ளும் நாம் அழிந்து போகும், அல்லது நிலையற்ற இன்பத்தின்மேல் நம் கண்களைப் பணித்தல் சால்பா?
3. 'யாரைப் போல பேசுகிறேன்?’
'எல்லாரையும் போகச் சொல்லுங்க!' 'இருட்டாயிடுச்சு!' 'இது பாலை நிலம்!' 'பாம்பு, பல்லியெல்லாம் வந்துடும்!' 'இங்க சாப்பாடு ஒன்றுமில்லை!' என்று இயேசுவுக்கு ரிமைண்டர் கொடுக்கின்றனர் சீடர்கள். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று கட்டளை கொடுக்கின்றார் இயேசு.
இன்று நாம் இயேசுவைச் சந்தித்தபின், உட்கொண்டபின் அவரிடம் செபிக்கின்றோம். நம் செபங்கள் எல்லாம் ரிமைண்டர்களாகவே இருக்கின்றன. 'எனக்கு அது இல்லை. இது இல்லை. அவன் சரியில்லை. இவள் சரியில்லை. க்ளைமேட் சரியில்லை. சாப்பாடு சரியில்லை. சுகர் கூடிடுச்சு. பிரஷ்ஷர் கூடிடுச்சு. காசு இல்லை' - இப்படிப்பட்ட ரிமைண்டர்களை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அவர் சொல்லும் பதில் என்ன தெரியுமா? 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!' நாம்தான் பார்க்க வேண்டும் நம் வாழ்க்கையை. ஆனால் அதில் என்ன அற்புதம் என்றால், நாம் நம் வாழ்வைப் பார்க்கத் தொடங்கிய உடனே அவர் அற்புதம் செய்யத் தொடங்குகிறார். 'ஆண்டவரே, இங்க பாருங்க ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் இருக்கு!' என்று சொன்னவுடன், அவர் 'எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்' என அற்புதம் செய்கின்றார்.
ஆக, நற்கருணையை உண்டபின் நம் பதிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்: 'ஆண்டவரே, இங்க பாருங்க சுகர் மாத்திரை இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க பர்சில் கொஞ்சம் பணம் இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க, கொஞ்சம் அரிசி இருக்கு!' என நம்மிடம் இருப்பவற்றை அவர்முன் கொண்டுவர வேண்டும். இல்லாத ஒன்றிலிருந்து புதிதாக புறப்பட்டு வருவது அல்ல நற்கருணை. ஏற்கனவே இருக்கும் அப்பமும், இரசமும் உருமாறுவதே நற்கருணை. ஆக, நம்மிடம் இருக்கும் ஒன்றிலிருந்துதான் அவரின் அற்புதம் தொடங்கும்.
இறுதியாக,
உணவு - மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு.
பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும். இந்த அடிப்படை உணர்வுகளை நிறைவு செய்யத் தேவையான உணவு என்ற குறியீட்டையே தன் நிலையான உடன்படிக்கையின் அடையாளமாகத் தெரிந்துகொள்கிறார் இயேசு.
நமக்குப் பசி இருக்கும் வரை இந்த உணவின் தேவை இருக்கும்!
கையை நீட்டி இவரை உணவாகக் கொள்ளுமுன்,
என் கையை நீட்டி மற்றவருக்கு என்னையே உணவாக நான் தந்தால்,
நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!
அருள்பணி இயேசு கருணாநிதி
No comments:
Post a Comment