இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழாவைக் கொண்டாட ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் இரவில் நற்கருணையை தமது இறுதி இராவுணவின்போது ஏற்படுத்தினார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல் எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.
அன்று முதல் இன்றுவரை திருப்பலியில் இதையே நாம் நினைவு கூறுகிறோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை நினைவு கூறும் நாம் வசீகரிக்கப்பட்ட அப்பமும் இரசமும் புதிய உடன்படிக்கைக்கான இயேசுவின் உடலும் இரத்தமும் என நம்புகிறோம். இயேசுவே அதில் கடவுளாகவும், மனிதனாகவும் எழுந்தருளியிருக்கிறார். தம்மைப் பின்பற்றும் திருச்சபையுடன் இறுதிவரை இருந்து போதிக்கவும், பலப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் விரும்பியதால் நற்கருணையை கிறிஸ்து நமக்கு வழங்கினார்.
மனிதக் குலத்தைத் தனியாய் விட்டுச் செல்ல மனமில்லாதவராய்த் தன்னை அப்பத்திலும் இரசத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். மானிட சமூகத்தின் மீது கொண்ட அன்பின், உறவின், பகிர்வின் உச்சகட்டமே இயேசு தன்னேயே கொடுத்த நிகழ்வாகும்.
நற்கருணை:-
# இறைத்தந்தையின் உறவில் எப்போதும் நிலைத்திருக்க உதவுகின்றது.
#அன்பு செய்து வாழத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
#நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கிறது.
#நமது விசுவாசத்தைப் புதுப்பிக்கின்றது.
#நமது வாழ்வைப் புதிய நிலைக்கு உட்படுத்துகிறது.
#உளநலமும் ஆறுதலுமளிக்கிறது.
# சமாதானமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை தருகின்றது.
"நற்கருணை எம்மை பாவத்திலிருந்து விடுவிக்கின்றது. நற்கருணை விருந்தில் நாம் உண்ணும் கிறிஸ்துவின் உடல் எங்களுக்காகவே கையளிக்கப்பட்டது. இரத்தம் பாவமன்னிப்பிற்காக சிந்தப்பட்டது. இதனிமித்தம் நற்கருணை கடந்த கால பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து பாதுகாத்து கிறிஸ்துவோடு இணைக்கிறது." - என திருச்சபையின் மறைக்கல்வி போதிக்கிறது.
இந்த மகத்தான அருள்வரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் நற்கருணையை வெற்று சடங்காக அல்லாமல் தகுந்த ஆயத்தத்துடன், மிகுந்த மரியாதை பயபக்தியுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக நமது பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெற்றப்பின்பே நற்கருணையை பெற முயற்சிப்போம்.
பாலைவனத்தில் மன்னாவை உணவாகக் கொடுத்த இறைவன் பரிசுத்த திருச்சபைக்கு இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தை வாழ்வளிக்கும் உணவாகக் கொடுத்தார். கொடுக்கும் போதும் பகிரும் போதும், கொடுப்பவனும் பெறுபவனும் மனநிறைவுப் பெறுகின்றனர். அந்த நிறைவில் மகிழ்வைத் தேட இறைவன் நம்மை இன்று அழைக்கின்றார். இதனை உணர்ந்து இந்த உன்னத திவ்விய திருப்பலியில் உளமாறப் பங்குக்கொள்வோம்
No comments:
Post a Comment