நற்கருணையின் கருவூலம் மாமரியன்னை!
சேசுவை வயிற்றில் கருவாய் சுமந்ததால் மாமரியன்னை நற்கருணையின் கருவூலம் என்றழைக்கப்படுகிறார்கள் ஒவ்வொரு மனிதனும் உருவாகும்போது தாய் வயிற்றில் அவளின் உதிரத்தில் கலந்து தோய்ந்து மனித வளர்ச்சி பெற்று இவ்வுலகில் பிறக்கிறான்.
வார்த்தையால் பேசப்பட்டு வந்த சேசு சுவாமி, மாமரியன்னையின் வயிற்றில் மாமிசமாகி, அன்னையின் உதிரத்தில் உருபெற்று இரத்ததை தாய் மதுரமாக்கி அருந்தி வளர்ந்தார். அப்படியானால் தாயின் கருவிலே அன்னை மாமரியன்னையின் சத்தை சேசுவும், அவரின் சத்தை மாமரியன்னையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆகவே தான் எவ்வாறு மாமரியன்னை சேசுவை சுமக்கும் நற்கருணை பேழை ஆனாரோ, அதே போல் சேசுவும், அனைவரையும் சுமக்கும் பேழையாக மாறினார்.
"உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று (லூக்.11:27) சேசுவை தாங்கிய மாமரியன்னையை இறைவன் தனது கருவூலமாக தயார் செய்தார்.
"உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்." அவள் உன் தலையை நசுக்குவாள். "நீயோ அவளுடைய குதிங்காலை தீண்ட முயலுவாய்" (ஆதி.3:15)
"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்.1:28) என்ற வாக்குறுதிகள் நிறைவேறும் பொருட்டு மாமரியன்னை, இறைவன் கையில் செயலாற்றும் கருவியாகி, மீட்பின் கருவாக மாறி, தன் கருவூலத்தில் கர்த்தரைத் தாங்கினார்.
ஆக மாமரியன்னை, சேசுவை மட்டுமல்லாமல் திருச்சபையையும் சேர்த்து சுமந்த ஓரு நற்கருணையின் கருவூலம். தனது பணிவாழ்வை துவங்கும் போது சேசு "ஆண்டவரின் ஆவி என்மேலே.." (லூக்.4:18-21) என தனது மதிப்பீடுகளை, கொள்கைகளை பிரகடனப்படுத்தும் போது அன்னையின் கருவூலத்திலிருந்து கற்றதை பரீட்சைபடுத்தி காண்பிக்கிறார்.
மாமரியன்னையின் பாடலின் வரிகள் கூட அந்த விடுதலைத் தாகத்தை எடுத்து சொல்கிறது. தாயும் மகனும் ஒருசேர சிந்தித்து, செயல்படுவதைப் பார்க்கிறோம். தாயின் கருவில் சேசு அனைத்தையும் தன் நாடி, நரம்புகளில், இரத்த நாளங்களில் தாங்கி இருக்க வேண்டும். எனவே மாமரியன்னையின் வாழ்வு, சேசு கருவிலே உருவாகுமுன்பே நற்கருணை வாழ்வின் பரிமாணங்களை வாழ்ந்து காட்டியவர்கள்.
ஆகையால் தான் கடவுள் நற்கருணை சேசுவை தாங்க அருள் நிறைந்த, பெண்களுள் பேறு பெற்றவர்கள் இவர்கள்தான் என்பதை முன்னுணர்ந்து செயலாற்றியிருக்க வேண்டும். சேசுவை கருவிலே சுமந்திருக்கையிலும் ஒய்ந்திருக்காமல் புனித எலிசபெத் என்ற முதிர்ந்த வயது பெண்ணின் துயர்துடைக்க ஓடியது கூட கருவில் காத்திருந்த கர்த்தரை பாதித்திருக்க வேண்டும்.
எனவேதான், துயருற்றோரின் துயர்துடைக்க சேசுவும் தனது நிலைபாட்டை நிலையாக எடுத்து வைத்தார். சேசுவின் வாழ்வில் காண்கிற பண்புகள் பாடுகள் மாமரியன்னையின் வாழ்விலும் காணப்பட்டன. ஆகவே மாமரியன்னை நற்கருணையாகவும் நற்கருணையின் கருவூலமாகவும், கடவுளால் முன்குறித்து வைத்து தயார் செய்யப்பட்டார்கள்.
மாமரியன்னையும் அத்தகைய மேலான வாழ்வால் தான் அந்த நற்கருணை அன்னையாக வாழ்ந்து காண்பித்தார்கள். 'மாமரியன்னை என்ற கருவூலம்" சேசுவை தாங்கியது. நமது இதயம் என்னும் கருவூலத்தில் கர்த்தரை தாங்கும் போது நமது வாழ்வும் நற்கருணை வாழ்வாகட்டும்.
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை
No comments:
Post a Comment