உடல்நலம் அருளும் திவ்விய நற்கருணை
எருசலேம் நகர் புகுந்த அதே கிறிஸ்து, இன்று கதிர்பாத்திரத்திலும் பிரவேசிக்கிறார், ஒரு கதிர்விடும் சூரியனாக! அவரது ஒளிச்சுடரை அணுகுவோர் உண்மையான உடல்நலம் பெற்று இறும்பூது எய்துவர்.
சூரியனிடமிருந்து வரும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளாமல் பூமியில் எதுவுமே உயிர்வாழ முடியாது. “ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கிறான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது” (சீரா 42:16) என திருவிவிலியத்தில் நாம் வாசிக்கி றோம். சூரிய ஒளியிலிருந்தே தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. அவை அங்ஙனம் தயாரிக்கவில்லையென்றால் இந்த பூமியிலுள்ள விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ உண்ண எதுவும் கிடைக்காமற் போகும். இச்செயலினால் சூரியனுக்கோ சூரிய ஒளிக்கோ எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆயினும் சூரியன் இல்லாமல் யாதொன்றும் நடைபெறுவதும் இல்லை. இதைப் போன்றே திவ்விய நற்கருணை என்னும் சூரியனும் விளங்குகின்றார்.
திவ்விய நற்கருணையை வெளிக் காட்டுவதற்கு சூரியனை விட மேலான உருவகம் வேறொன்றும் இல்லை. இயற்கையில் உதய சூரியன் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதே முக்கியத்துவம் ஆன்மீக வாழ்வில் தேவ நற்கருணையும் பெறுகின்றது. அது ஆன்மாக்களை ஒளிரச் செய்கிறது. நம்முடைய மனச்சான்றைத் துயிலுணர்த்துகிறது. இதயங்களில் வெப்பத்தை உண்டாக்குகிறது. நமது வளர்ச்சியைக் கடவுள்பால் இட்டுச்செல்கிறது. அந்த நீதியின் கதிரவன் உடலையும் ஆன்மாவையும் உள்ளத்தையும் நலம்பெறச் செய்கிறது.
இதைப்பற்றி புனித ஜெர்த்தூதுவிடம் ஆண்டவர் கூறியதாவது : “இங்கே, திவ்விய நற்கருணையில், எனது அருள் நிறைந்த திரு இருதயத்தில் நான் அனைவரது காயங்களையும் சுகப்படுத்துகின்றேன். பாவிகளின் ஆன்மாக்களை எழுப்பி, அவர்களின் ஆன்மீக வறுமையைப் போக்கி நன்மைகள் செழிப்பாக்குகின்றேன். அவர்களின் துயரங்களில் நான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறேன்” திவ்விய நற்கருணை நலமாக்கும் என்ற உறுதியைக் கொண்டிருந்த புனித ஜாண் கிறிசோஸ்தோம் கூறுவதாவது: “திவ்விய நற்கருணையை அணுகிவரும் போது ஒவ்வொருவரும் அவரவர்களின் நோய்நொடிகளுடன் வரட்டும். ஏனெனில் திவ்விய நற்கருணை அவர்களை முற்றிலும் நலமாக்கும்”.
அற்புதங்கள் பற்பல
திவ்விய நற்கருணையாகிய தெய்வீகக் கதிரவனிடமிருந்து புறப்படும் அற்புதச் சுடரொளிகள் எண்ணற்றவை. அது திருச்சபைக் குள்ளே மட்டுமல்ல, திருச்சபைக்கு வெளியிலும் கண்கூடாகக் காணலாம். சுமார் கால் நூற்றாண்டளவாக நற்செய்தித் திருப்பணிகளிலும், குருக்களுக்கான பரிந்துரை வேண்டுதல்களிலும் கால்பதித்த அருட்சகோதரி பிரிஜ் மெகன்னா என்னும் ஐரீஷிய பெண்துறவி எழுதிய ஒரு நூலில், தேவநற்கருணை வாயிலாக உலகம் பெற்ற எண்ணற்ற வியத்தகு அற்புதங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஒரு ‘நோய் நீக்கும் அற்புத நற்செய்திக் கூட்டத்தில்’ அமர்ந்திருந்த ஒரு சிறுவன், தன்னுடைய மூளையில் வளர்ந்திருந்த ஒரு கட்டியிலிருந்து அற்புதமாகச் சுகம் பெற்றான். குருவானவர் தேவநற்கருணையை எடுத்து உயர்த்திய போது அவனுடைய நோயிலிருந்து அவன் நலம் பெற்றான்.
இரண்டு கைகளும் சூம்பிப்போன ஒரு பெண்ணும் அங்கிருந்தாள். அவள் கிறிஸ்தவளாயினும் சில மூடநம்பிக்கைகளைக் காப்பாற்றி வந்த மோர்மண் என்னும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவள். திவ்விய நற்கருணையில் உயிருடன் எழுந்தருளியிருக்கும் இயேசுவைக் கண்ணோக்குமாறு அந்த அருட்சகோதரி அனைவரிடமும் கூறினார். அப்போது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல் அப்பெண் இயேசுவின் பால் தன் கைகளை நீட்டினாள். ஆச்சரியமான முறையில் நலம் பெற்றாள். இங்ஙனம் எத்தனையோ அற்புதங்களால் திவ்விய நற்கருணையின் வல்லமை உலகம் முழுவதும் எண்பிக்கப்பட்டிருக்கிறது!
மெய்யியலாளர் வாள்ட்டயர் என்பவர் ஒரு நாத்திகர். கடவுள் மீது அவருக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால் திவ்விய நற்கருணையினால் ஏற்பட்ட ஓர் அற்புதம் அவரையும் ஆத்திகராய் மாற்றியது. அன்னா லாப்போஸ் என்ற ஒரு பெண்மணி இருபது ஆண்டுகளாகப் பெரும்பாட்டினால் வருந்திக் கொண்டிருந்தாள். இயேசு தேவநற்கருணையில் வீற்றிருக்கிறார் என்னும் உண்மையை முதலிலில் அவள் நம்பவில்லை. இருப்பினும் தேவநற்கருணையின் திருநாளன்று அவள் இயேசுவிடம் மனமுருகி மன்றாடுவதென்று தீர்மானித்துக் கொண்டாள். அந்தத் திருநாளும் வந்தது. அன்று தேவ நற்கருணைப் பவனி தனது வீட்டு முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அவள் களைப்புற்ற நிலையில் இருந்தாலும் அந்தப் பவனியில் அவளும் சேர்ந்துகொண்டாள். எருசலேம் வீதிகளில் பொடிநடையாய் நடந்துசென்றவர், இதோ இந்தக் கதிர்ப்பாத்திரத்தில் பிரசன்னமாய் இருக்கிறார் என அவள் உள்ளூர நம்பினாள். அந்தப் பவனி முடிவுற்றதும் அவள் அற்புதமாக நலம்பெற்றாள்.
தெய்வக் கதிரவனின் சுடரொளியில்
இதுபோன்ற எண்ணற்ற அற்புதங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் வெளிப்படையான அற்புதம் எதுவும் நடக்கவில்லையே என நினைத்து மனந்தளர வேண்டாம். ஏனெனில் சூரியக் கதிர்களால் எங்ஙனம் ஒரு காய் கனியாக மாறுகின் றதோ அதுபோலவே, தேவநற்கருணை என்னும் திவ்விய சூரியனால் நாமும் ஒவ்வொரு நாளும் பதப்படுத்தப்படுகிறோம். ஒவ்வோர் ஆன்மாவும் நித்திய வாழ்வை நோக்கி இக்கதிரவனால் வழி நடத்தப்படுகின்றன. நாம் சில தனிப்பட்ட அருள்வரங்களால் நிரப்பப்படவில்லையென்றாலும், நம்முடைய கதிரவன் நம்பால் இரங்குவதற்கு நாம் உகந்த வாய்ப்பை அளித்துத்தான் ஆக வேண்டும். இவ்வுண்மையை உணரவேண்டுமானால் நாம் முழுமனதோடு காத்திருக்க வேண்டும். ஆம். திவ்விய நற்கருணை ஆராதனையில் காத்திருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெல்ஜியம் நாட்டு அரசரான போதின் என்னும் மன்னர், கருச்சிதைவுக்கு ஆதரவாகக் கையெழுத்திடுவதினும் நல்லது தமது மன்னர் பதவியை விட்டுவிலகுவதுதான் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவர் தேவநற்கருணை சன்னிதியில் பலமணிநேரம் ஜெபத்தில் ஆழ்ந்திருப்பார். தமது ஜெப வாழ்வை அவர் குறிப்பிடுகையில், “தேவ நற்கருணைக்கு முன்னால் நாம் அமர்ந்திருக்கும் ஒரு நொடிப்பொழுதும் வீணானதாகக் கருதக்கூடாது. அப்போது நமக்குள்ளே எந்த அதிசயமும் நிகழாமல் போகலாம். ஆயினும், அது நிகழ்வதற்காக நாம் நம்மையே அந்தக் கதிரவனின் மலரடியில் விட்டுவிட வேண்டும். அதற்குத் தேவை நீடிய பொறுமை” என்கிறார்.
கதிர்ப்பாத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை நாம் மிகுந்த பொறுமையுடன் ஆராதிக்கும் வகையில் அதனுடைய திவ்வியமான கதிர்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. ஒருவேளை நம் கண்கள் இதனை நேரிடையாகப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் கடவுளின் கருணையால் இவ்வற்புதத்தைக் கண்கூடாகக் கண்டவர்களின் சாட்சியங்கள் இவ்வுண்மையை அரண்செய்கின்றன.
புனித பவுஸ்தீனாள் ஒருநாள் ஒரு காட்சி கண்டாள். அவள் கோவிலில் பாவசங்கீர்த்தனம் செய்வதற்காக அமர்ந்திருந்த நேரம். அப்போது கதிர்ப்பாத்திரத்திலிருந்து திவ்விய கதிர்கள் விளக்கமுற்று ஆலயம் முழுவதும் பரவுவதைக் கண்டாள். ஆலயத் திருச்சடங்கு முடியும் வரை இது தொடர்ந்தது. பின்னர் அக்கதிர்கள் கதிர் பாத்திரத்தில் சென்று ஒடுங்குவதையும் அவள் கண்டாள். திவ்விய நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசு இத்துணைக் கருணை வாய்ந்தவராய் இருக்க, அவரிடமிருந்து மானிடர்கள் ஓடிப்போக விழைவது ஏனோ? எனக் கேட்கிறார் சிஸ்டர் மரிய தெரேசா டியூபக்.
எதிர்பார்ப்புகள் முடிவு பெறும் போது
எல்லா எதிர்பார்ப்புகளும் முடிந்து இருள் நம்மை மண்டி நிற்கும்போது தேவநற்கருணை மட்டுமே நம்முடைய வெளிச்சமாக இருக்க முடியும். மேலும், புனித பவுஸ்தீனாள் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தாள். “மக்கள் தங்கள் வீடுகளில் திருவுடைகள் அணியாமலேயே திவ்விய இரகசியங்களுக்குக் குற்றேவல் புரிவதைக் கண்டேன்.
ஆனால் திவ்விய நற்கருணையாகிய தூவெள்ளை அப்பத்திலிருந்து தெய்வீக சோபை ஒன்று உதித்து எழுவதைக் கண்டேன்”. இந்தக் காட்சியின் அர்த்தம் புனிதைக்குப் பிடிபடவே இல்லை. ஆனால் அவருடைய மரணத்திற்குப் பின் இக்காட்சி மெய்யாயிற்று. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த அந்நாட்களில் கோவில்களும் கோவிலின் திருக்கருமங்களும் இல்லாமற்போயின. எனினும் ஆண்டவர் தமது திருச்சபையைக் கைவிடவில்லை. நீதியின் கதிரவன் மகாசோபையுடன் எழுந்து உலகத்தைக் காத்தார். ஆதிக்கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தி மடிவதற்கும் தங்களையே பலியாக ஒப்புக்கொடுப்பதற்கும் நற்கருணை பக்தியே வழிசெய்தது.
தீமையை எதிர்த்து நிற்க விரும்பும் கிறிஸ்தவர்களை தேவநற்கருணை வலுப்படுத்துகிறது. தேவநற்கருணையாலல்லாமல் வேறு எதனாலும் திருச்சபையைத் தாங்கி நிறுத்த முடியாது என்பது நிதரிசனம். “என் பெயருக்கு அஞ்சும் உங்களுக்காக நீதியின் கதிரவன் தோன்றும். அதனுடைய இறக்கைகளில் உடல் நலமும் இருக்கும். தொழுவத்திலிருந்து வெளிவரும் கன்றைப் போல் நீங்கள் துள்ளிக்குதிப்பீர்கள்” (மலாக்கி 4:2) என்னும் இறைவாக்கு நிறைவேறட்டும்.
– அரு. தந். ஆந்த்ரே துரோஜனோஸ்கி Schr.
No comments:
Post a Comment