அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, August 17, 2019

பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!

பேதைமையை விட்டுவிடுங்கள்; வாழ்வடைவீர்கள்!

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சேசு சபைத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை பெட்ரோ அருப்பே என்பவர். அவர் ஜப்பானில் உள்ள ஹீரோசிமாவுக்கு அருகில் இருந்த குருமடத்தில் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வு.

 அருட்தந்தை அருப்பே குருமாணவர்களுக்கு அதிபராக இருந்த சமயத்தில் பக்கத்து ஊர்களில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதும் மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதும் நோயாளிகளைச் சந்தித்து திவ்விய நற்கருணை வழங்குவதும் அவர்களுடைய ஆன்மீகக் காரியங்களைக் கவனித்துக் கொள்வதுமாக இருந்தார். இப்படிப்பட்ட தருணத்தில்தான் அமெரிக்க இராணுவம் ஹீரோசிமாவில் அணுகுண்டு வீசி, 80,000  பேருக்குள் மேல் கொன்றுபோட்டது, நிறையப் பேர் கை கால்களை இழந்து போனார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி குண்டுவீச்சில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஒருவேளை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றால், அவர்களுக்கு மருத்துவ உதவியைச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்காக ஜெபித்து, திவ்விய நற்கருணையையும் வழங்கி வந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய குருமடத்திற்கு அருகில் இருந்த ஒரு குடிசையில் சாகும் தருவாயில் இருந்த நகமுரா சன் (Nakamura San) என்னும் பனிரெண்டு வயது சிறுமிக்கு மருத்துவ உதவிகள் செய்து, திவ்விய நற்கருணை வழங்கச் சென்றார். அவர் அந்த சிறுமி இருந்த குடிசைக்குச் சென்று, அவளைப் பார்த்தபோது அவரை அறியாமலே அவருக்கு கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. ஏனென்றால் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள், அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்தச் சிறுமி அருட்தந்தை அருப்பே அவர்கள் தன்னைச் சந்திக்க வருகின்றார், தனக்கு திவ்விய நற்கருணையை வழங்க இருக்கின்றார் என்பதை அறிந்து எழுந்து உட்காரத் தொடங்கினார். ஆனால், முடியவில்லை.

அப்போது அந்தச் சிறுமி அருட்தந்தை அவர்களைப் பார்த்து, “தந்தை அவர்களே! எனக்கு திவ்விய நற்கருனையைத் தாருங்கள். இதற்காகதான் நான் இவ்வளவு நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருகின்றேன்” என்றாள். உடனே அருட்தந்தை அருட்பே அந்தச் சிறுமியின் அருகே அமர்ந்து, அவளுடைய உடலில் இருந்த காயங்களில் மருந்து தடவி கட்டுப்போட்டார். அவ்வாறு அவர் சிறுமியின் உடலில் இருந்த காயங்களைத் துடைத்தபோது, சதைகள் எல்லாம் பிய்த்துகொண்டு வந்தன. ஆனாலும் அவள் அந்த வேதனைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டாள். பின்னர் அவர் சிறுமிக்கு திவ்விய நற்கருணை வழங்கியபோது அவ்வளவு பயபக்தியோடு வாங்கினாள். அவள் நற்கருணை ஆண்டவர்மீது காட்டிய பக்தியைக் கண்டு, அருட்தந்தை அருப்பே அவர்கள், “பனிரெண்டு வயதே நிரம்பிய இந்த சிறுமிக்கு நற்கருணை ஆண்டவர்மீது இவ்வளவு பக்தியா?” என்று ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார். அவள் திவ்விய நற்கருணையை வாங்கிய சில நிமிடங்களுக்குள் அவளுடைய உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. இருந்தாலும் அவள் நற்கருணை ஆண்டவரை உட்கொண்ட நிறைவில் மனநிம்மதியோடு தன்னுடைய உயிரைத் துறந்தாள்.

சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தி, நற்கருணை ஆண்டவருக்கு அவள் செலுத்திய வணக்கம் எல்லாம் உண்மையிலே நாம் அனைவரும் வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ‘நாங்கள் அதிகம் படித்த மனிதர்கள், நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்’ என்று தங்களைக் காட்டிக்கொள்ளும் ஒருசிலர் நற்கருணையில் ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கேள்விக்குள்ளாகும்போது பனிரெண்டே வயதான சிறுமி நகமுரா சன் நற்கருணை ஆண்டவர் மீது கொண்ட பக்தியும், அவள் அவருக்குச் செலுத்திய வணக்கமும் நாம் என்றுமே நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘பேதைமையை விட்டுவிடுங்கள், வாழ்வடைவீர்கள்’ என்னும் சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பேதைமையை விட்டுவிடுங்கள் என்றால் எதைக் குறித்த பேதைமையை  விட்டுவிடவேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய இறைவார்த்தையின் படி சிந்தித்துப் பார்த்தால் - நற்கருணையை - ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் குறித்த பேதைமையை விட்டுவிடவேண்டும் என்பதுதான் மிகவும் பொருத்தமான பதிலாக இருக்கும். ஏனென்றால் நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஞானம் “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தை பருகுங்கள்; பேதைமையை விட்டு விடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்” என்று சொல்வதாக வாசிக்கின்றோம். ஆம், நம்மிடம் இருக்கின்ற ‘நற்கருணை குறித்த பேதைமையை விட்டுவிட்டு, நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்புகின்றபோது வாழ்வடைவோம் என்பது உறுதி.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, “ஞானமற்றவர்களாய் ஞானத்தோடு வாழுங்கள்; அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்” என்றுதான் வாசிக்கின்றோம். அப்படியானால், ஆண்டவர் இயேசு நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அறிவதே ஞானம், அந்த நற்கருணை ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதே வாழ்விற்கான வழி என்பதைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். இன்றைக்குப் பலர் (அன்றைக்கும் கூட ஒருசிலர்) நற்கருணையில் ஆண்டவர் இருக்கின்றா? அல்லது இயேசு எப்படி தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் இரத்தமாகவும் தருகின்றார் என்றதொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் அனைவரும் பேதைமையில், அறிவிலிகளாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. எனவே, அவர்கள் நற்கருணையில் ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும் பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பவதுதான் வாழ்விற்கான வழி என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்று நம்பினால் மட்டும் போதுமா? அதுவே நமக்கு வாழ்வினைப் பெற்றுத் தந்துவிடுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகின்றார், “மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடைய மாட்டீர்கள்” என்று. இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தல் என்பது, இயேசுவாகவே வாழ்வதாகவும். இயேசுவாகவே நாம் வாழ்கின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘You are what you eat” என்று. அதாவது நாம் எதை உட்கொள்கின்றோமோ அதுவாகவே  மாறுகின்றோம் என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்கின்றது. இயேசுவின் உடலை ஒவ்வொருநாளும் நற்கருணை வடிவில் உட்கொள்ளக்கூடிய  நாம் இயேசுவாகவே மாறி இருக்கவேண்டும். ஆனால், நாம் இயேசுவாக மாறவில்லை என்பது இங்கே பிரச்சனையாக இருக்கின்றது. இயேசுவின் உடலை உட்கொண்டு இயேசுவாக மாறாததற்கு நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப வாழாததுதான் காரணமாக இருக்கின்றன. ஆகவே. நம் நம்முடைய பலவீனங்களை, குற்றங்குறைகளைப் போக்கி ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குகின்றபோது நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை வாழ்வாக்குகின்றோமா என்பது  சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.

மிகச் சிறந்த மறைபோதகரான பில்லி கிரஹாம் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒருசமயம் பில்லி கிரஹாம் தில்லிக்கு வந்திருந்தபோது, அங்கு அவரைச் சந்தித்த இந்து சமயத்தைச் சார்ந்த ஒரு நபர், “நான் மட்டும் இயேசுவின் போதனைக்கேற்ப வாழ்கின்ற ஒரே ஒரு மனிதரைப் பார்த்தால் போதும், உடனே நான் கிறிஸ்தவராக மாறிவிடுவேன்” என்றார். அதற்கு பில்லி கிரஹாம் அவரிடம், “யாராவது ஓர் உண்மையான கிறிஸ்தவர் உங்களுடைய பார்வைக்குக் கிட்டாமலா போய்விடுவார், அப்போது நிச்சயம் நீங்கள் கிறிஸ்தவர் ஆவீர்கள்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.

நாட்கள் நகர்ந்தன. பில்லி கிரஹாம் சில மாதங்கள் தில்லியில் தங்கியிருந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். அவரைக் கூர்ந்து கவனித்து வந்த அந்த இந்து நபர், அவருடைய வாழ்க்கையால் தொடப்பட்டார், ‘இவரல்லவா உண்மையான கிறிஸ்தவர், இவரைத்தானே நாம் இத்தனை நாட்களும் தேடிக்கொண்டு இருக்கின்றோம்’ என்று மனதிற்குள்ளே நினைத்தவராய், அவரிடம் சென்று, “நான் இத்தனை நாட்களும் தேடியலைந்த உண்மையான கிறிஸ்தவர், வாழும் நற்செய்தி நீங்கள்தான்” என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று  கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார். நாம் இயேசுவின் போதனைகளை வாழ்வாக்குகின்றபோது, அவ்வாழ்க்கை பலரையும் இயேசுவுக்குள் கொண்டு வந்துசேர்க்கும் அப்போது நாம் மட்டுமல்லாமல், அவர்களும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.

ஆம், இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பது அவராக வாழ்வது, அவரோடு இணைந்திருப்பது, நிலவாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு இணையானது.

எனவே, நாம் நற்கருனையைக் கருத்த ஐயத்தை, பேதைமையான எண்ணங்களைத் தவிர்ப்போம். ஆண்டவர் இயேசு நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

No comments:

Post a Comment