இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்
உடலும், இரத்தமும்...
ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம்.
அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத் தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், ஆண்டவர் இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். “கிறிஸ்’து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எனவே, நான் கூறியது: உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்””“ (எபி 10: 5-7) என எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம். “இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறி’ஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்”“ (எபி 10: 10).
இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். “இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை”“ (எபி 9:22). நமது பாவமன்னிப்புக்காக இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார். “உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல: மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தாமாகும்“ (1 பேது 1: 18-19) என்கிறார் பேதுரு.
எனவே, இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக இன்று நன்றி செலுத்துவோம். நமது உடலையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நமது இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன் வருவோம்.
“உண்மையான உணவு. உண்மையான பானம்” (யோவான் 6:55)
கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு முக்கிய கூறு நற்கருணை ஆகும். இயேசு தம்மையே நமக்கு உணவாகவும் பானமாகவும் அளித்துள்ளார் என்பதே அந்நம்பிக்கை. யோவான் நற்செய்தி இந்த உண்மையை விரிவாக விளக்குகிறது (யோவா 6). இயேசு தந்தையாம் கடவுளிடமிருந்து பெற்ற வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொள்கின்ற கருவியாக நற்கருணை உள்ளது (யோவா 6:57). இயேசு நமக்குத் தம் உடலை (''சதை''யை) உணவாகவும், இரத்தத்தைப் பானமாகவும் தருகிறார் (யோவா 6:55). மனித இறைச்சியை யாராவது உண்டால் அது சரியே என நாம் ஏற்பதில்லை. அப்படியிருக்க, இயேசு தம் சதையை நமக்கு உணவாக்குவது எப்படி முறையாகும்? இக்கேள்வியை இயேசுவிடமே கேட்டனர் அக்கால மக்கள். அதற்கு இயேசு அளித்த பதில்: ''எனது சதை உண்மையான உணவு; என் இரத்தம் உண்மையான பானம்'' என்பதே (யோவா 6:55). உடலை வளர்க்க உதவும் உணவு நமக்கு நிலையான வாழ்வை அளிக்க முடியாது. ஆனால் இயேசு வழங்குகின்ற அவருடைய ''சதை'' என்னும் உணவு நமக்கு நிலை வாழ்வை அளிக்கும் (யோவா 6:51,54,58).
எனவே, இயேசு தருகின்ற உணவு முற்காலத்தில் வழங்கப்பட்ட மன்னா என்னும் உணவை விடவும் உயர்ந்தது. அவ்வுணவை உண்டவர்கள் மீண்டும் இறந்தார்கள். ஆனால் இயேசுவின் உடலை உண்போர் எந்நாளும் உயிர்வாழ்வர். இயேசு வழங்குகின்ற உயிர் இம்மண்ணகத்தைச் சார்ந்ததல்ல, மாறாக, எந்நாளும் நிலைத்துநிற்கின்ற விண்ணகத்தைச் சார்ந்தது. தந்தையாம் கடவுள் இயேசுவோடு எந்நாளும் இணைந்து வாழ்வதுபோல நாமும் கடவுளின் உயிரை நம்மில் கொண்டு அவர் வழியாகவே வாழ்வோம். அந்த வாழ்வுக்கு ஒருநாளும் முடிவு இராது.
வாழ்வு தரும் வழிபாடு
இந்த உலகத்தில் நமது உழைப்பு அனைத்துமே இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் என்று பொதுவாக சொல்வார்கள். மனிதரின் அடிப்படைத்தேவைகளாக இந்த உணவை, முதன்மைப்படுத்துவார்கள். அந்த உணவுத்தேவை நிறைவடைகிறபோது, மற்ற தேவைகள் தலைதூக்குகிறது. ஆனால், கடவுளைப்பற்றியும், அவருடைய மாட்சிமைபற்றியும் நாம் சிந்திக்கிறபோது, உணவு ஒரு பொருட்டாகவோ, தடையாகவோ இருக்க முடியாது. கடவுளைப்பற்றி சிந்திப்பதே நமக்கு நிறைவைத்தரும் என்று லூக்கா 9:11-17 நமக்கு விளக்கம் தருகிறது.
இயேசுவைத்தேடி அங்கே பல ஊர்களில் இருந்து மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இயேசு சொல்வதைக்கேட்பதற்காகவே வந்திருக்கிறார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இயேசு வந்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு, அடுத்த வேளையைப்பற்றி எண்ணாமல், அந்த பாலைநிலத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே வந்தபிறகும், அவர்களுக்கு எந்த தேவையும் எழவில்லை. அந்த பாலைநிலத்தில், பகல் முழுவதும் இயேசுவோடு அமர்ந்திருந்தார்கள் என்பது நிச்சயம் நமக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது. அதுதான் இறைவார்த்தையின் மீதுள்ள தாகம். அதுதான் கடவுளின் மீது நாம் வைத்திருக்கிற ஆழமான விசுவாசத்தின் வெளிப்பாடு.
இன்றைக்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக திருப்பலியோ, வழிபாடோ நடக்க ஆரம்பித்தாலே, நாம் நெளிய ஆரம்பித்து விடுகிறோம். ஞாயிற்றுக்கிழமை திருப்பலி என்றாலும், நமது பிள்ளைகளை சிறப்புப்பயிற்சிக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஏதோ ஒப்புக்கு ஆலத்திற்கு நாம் வருகிறோம். இது நமது விசுவாசத்தை எந்த விதத்திலும் வளர்க்கப்போவதில்லை. இறைவார்த்தையின் மகிமையை, மகத்துவத்தை நமக்கு உணர்த்தப்போவதில்லை. வழிபாட்டை ஏதோ கடமையாக எண்ணாமல், வாழ்வாக உணர்வோம்.
வாழ்வு தரும் உணவு!
நற்கருணை என்னும் அருமையான மறைபொருளைப் பற்றிச் சிந்திக்க இன்று ஒரு சில நொடிகள். இயேசு தன் உடலையே நமக்கு உணவாகத் தந்திருக்கிறார். மிகப் பெரிய பேறு பெற்றவர்கள் நாம். காரணம், வானதுதர்களுக்குக்கூட கிட்டாத பேறு அது. எனவே, நிலைவாழ்வு தரும் அந்த உணவை நாம் ஆவலுடன், ஆர்வமுடன், பற்றுறுதியுடன் பெற வேண்டும்.
வாடிக்கையாக, வழக்கமாக இந்தத் திருவுணவைப் பெறாமல், ஒவ்வொரு முறையும் புதிய ஆர்வத்துடன், புதிய உற்சாகத்துடன் இந்த விருந்தில் பங்கு பெறுவோம். அத்துடன், இறைவன் தந்த இந்த வானக உணவுக்காக சில மணித்துளிகள் நன்றி சொல்லவும் நாம் மறக்க வேண்டாம். நற்கருணை என்றாலே நன்றி என்றுதானே பொருள். நன்றி கூறுவோம். நன்றியை வாழ்வாக்குவோம்.
'உலகு வாழ்வதற்காகவே'
நற்கருணை வாழ்வை நமக்குத் தருவது. அதுவும் நிலையான நிம்மதியான நிறைவான வாழ்வைத் தருவது. 'என்றும் வாழ்வர்', 'நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்', 'உலகு வாழ்வதற்காகவே', என்றெல்லாம் நற்கருணையை முன்னிறுத்திச்; சொல்லப்பட்ட இத்தகைய வார்த்தைகள், நற்கருணையின் சிறப்பையும் தேவையையும் உறுதிசெய்கிறது. நற்கருணையின் முழு ஆற்றலையும் பெற்றிட:
1. நம்பிக்கை வேண்டும். இயேசுவே வாழ்வு. அவரது உடலும் இரத்தமும் நிலை வாழ்வு தருவது என்ற நம்பிக்கை வேண்டும். "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்ற நம்பிக்கையற்றவர்கள், முணுமுணுப்பவர்கள் இவ் வாழ்வைப் பெற முடியாது. 'பலர் அவரை விட்டு விலகினர்'.
2. நிறைவான மனம் வேண்டும். கிடைத்ததில் நிறைவடைய வேண்டும். இறைவன் தந்தது போதும். இறைவன் தந்தது நல்லது என்ற நிறைவு வேண்டும்.ஆசைப்பட்டு அவதிபடக்கூடாது. கையில் இருப்பதில் நிறைவடையாமல் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது. இருப்பதையும் இழப்பற்கு ஏதுவாகும்.
3. இணைந்திருக்க வேண்டும். "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." (யோவா 6:56) "நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது."(யோவா 15:4) "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்."(யோவா15:7)
4. வாழ்வாக்க வேண்டும். நற்கருணையை வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது நிலை வாழ்வை அனுபவிப்போம். பிறருக்காக வாழும்போது, தியாகத்தில், இழப்பதில், கொடுப்பதில் இந்த நற்கருணையை நாம் வாழ்கிறோம். அப்போது நிலை வாழ்வை, நிறை வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறோம். நிறை வாழ்வைப் பெறுவோம்.
மன்றாடுவோம்; வானக உணவான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது திருவுடல், திருஇரத்தம் என்னும் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். நிலைவாழ்வு தரும் உணவாக உம்மையே எங்களுக்குத் தந்திருப்பதற்காக உம்மைப் போற்றுகிறோம். நிறைவு தரும் உம் திருவுடலை நான் மதிப்புடன் பெற அருள் தாரும். இறைவா, நாங்கள் உம்மில் இணைந்து உயிர் வாழ எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, எங்களை ஆசிர்வதித்தருளும், ஆமென்.
No comments:
Post a Comment